எதையும் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியமில்லை. குடியுரிமை
சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது என்பதால் நாமும்
குத்துமதிப்பாக அதோடு ஒத்திசைக்க வேண்டியதில்லை.
குடியுரிமை சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய எல்லையை
ஒட்டியிருக்கும் இஸ்லாமிய தேசங்களிலிருந்து, புலம்பெயர்ந்து இந்தியாவில்
வாழ்ந்துகொண்டிருக்கும் இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கிடும்
சட்ட திருத்தமாகத்தான் இது முன்மொழியப்பட்டிருக்கிறது. இதில் குழப்பம் எதுவும்
இல்லை அல்லவா? அவை அதிகாரப்பூர்வ இஸ்லாமிய நாடுகள்; மற்ற மதத்தவருக்கு அங்கே
ஒடுக்குமுறையோ, அரசியல் அழுத்தமோ இருக்குமாயின் அவர்கள் அங்கிருந்து வெளியேறும்
நிர்பந்தம் நேரலாம். அப்படி இங்கு தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கிட
ஏதுசெய்யும் ஆணையாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
பிரச்சனை இப்போது
அந்த செளகர்யம் ஏன் இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படுகிறது என்பதுதான்.
அவர்களுக்கேயான நாட்டிலிருந்து ஏன் அவர்கள் இங்கு தஞ்சம் புக வேண்டும் என்ற
கேள்விக்கு, ஹிந்துத்துவர்களால் ஆளப்படும் இந்த தேசத்தில் ஹிந்துக்கள் எல்லோரும்
நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா? என்ற கேள்வி மட்டும்தான் பதிலாக
இருக்கமுடியும். இஸ்லாமியர்களுக்குள் பிரிவினைகளால் ஒடுக்கப்பட்டவர்கள் இங்கே
தஞ்சம் புகுந்தால், அவர்களை இந்தியா ஏற்காது.
இந்தியா இந்து நாடு;
ஏன் அவர்களை இங்கே அனுமதிக்க வேண்டும்? என்ற உளவியல் சிக்கல் இருப்பவர்கள்
மேற்கொண்டு இதனை வாசிக்கவேண்டாம். அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கும்
கிறிஸ்தவர்கள் அல்லாத இந்திய பூர்வக்குடிகளுக்கு, அங்கே குடியுரிமை அந்தஸ்து ரத்து
செய்யப்பட்டாலும் அதையும் இவர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த சட்டத்தை நாம்
ஈழத்திலிருந்து வந்திருக்கும் அகதிகளுக்கு பொருத்தி யோசித்து, அதிலிருக்கும்
இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்குமா என்றால் அதுவும்
இல்லை. ஏனென்றால் இலங்கை இஸ்லாம் நாடில்லை. அது இந்து நாடா? அதுவுமில்லை.
அங்கிருந்து இங்கு வந்திருக்கும் இந்துக்கள் இவர்கள் சொல்லும் இந்துக்கள் இல்லை.
அதுதான் முக்கியம். போதாக்குறைக்கு தமிழர்கள் வேறு.
இதனால்
இங்கிருப்பவர்கள் ஏன் கொந்தளிக்கிறார்கள்?
இந்தியாவின் சமத்துவ முகம் ஏதோ புதிதாக
சீர்கெடுவதாக ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று ‘அதுவே பழகிரும்’
பாணியில் வாழ்பவர்களின் குரல் ஆங்காங்கே கேட்கிறது. இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த
இஸ்லாமியர்களுக்கு இதனால் என்ன பாதிப்பு; இது தேசத்தின் பாதுகாப்பு நடவடிக்கைதானே?
என்றும் அவர்கள் சொல்வதில் தர்க்கம் இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், அஸ்ஸாமின்
கதையை முதலில் கேளுங்கள்.
National Register
for Citizens (NRC) என்ற குடிமக்களின் பதிவுதான் அஸ்ஸாம் பிரச்சனையின் அஸ்திவாரம்.
1951ல் வங்கதேச எல்லையை ஒட்டிய அஸ்ஸாமில் இருக்கும் ஊடுறுவல் குளறுபடிகளைத்
தவிர்க்க அம்மாநிலத்தில் மட்டும் இந்த பதிவு உருவாக்கப்பட்டது. இந்தியா குடியரசாக
மாறுவதற்கு முன்பிருந்து அங்கிருப்பவர்களை மட்டும் இந்திய குடிமக்களாக அந்த பதிவு
ஏற்றுக்கொண்டது. இப்போது 2019ல் மீண்டும் அந்த பதிவேட்டை மேம்படுத்தும் ஆணை
பிறப்பிக்கப்படுகிறது. எந்த அடிப்படையில்? - 1951 பதிவேட்டிலோ, 1971க்கு
முன்பிருந்த வாக்காளர் பதிவேட்டிலோ பெயர் இருப்பவர்களின் வம்சாவழியினர் மட்டுமே
இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். வம்சாவழியினர் என்று நிரூபிக்க
ஒரு சில ஆவணங்களை மட்டும் அரசு ஏற்கிறது. இறுதி பட்டியல் அறிவிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட மூனேகால் கோடி மக்கட்தொகை இருக்கும் அஸ்ஸாமில் 20லட்சம் பேர் அந்த
பட்டியலில் வரவில்லை.
குடியுரிமை
சட்டத்தின் நீட்சியாக இந்த என்.ஆர்.சி’யை தேசிய அளவில் அமல்படுத்தப்போகிறார்கள்.
அஸ்ஸாமிலாவது ஒப்பிடுவதற்கு முன்பு ஒரு பதிவு இருந்தது. மற்ற மாநிலங்களில்
அதுவுமில்லை. 1985க்கு முன்னர், (இப்படி உத்தேசமாக ஒரு வருடத்தை சொல்லி) உன்
பாட்டனுக்கு இங்கே ஓட்டுரிமை இருந்தால், நீ அவனது பேரன்/பேத்தி என்று நிரூபிக்கும்
ஆவணம் வைத்திருந்தால் உன் பெயர், பதிவில் கணக்கிலெடுக்கப்படும். அப்படி
நிரூபிக்கமுடியாதவர்களுக்கு வாக்குரிமை இல்லாமல் செய்யலாம்.
‘நடப்பதற்கு முன்
யூகித்து அச்சுறுத்தாதே’ என்று சொல்லலாம். இங்கு எல்லாவற்றிற்கும் ஆழம்
பார்க்கப்படுகிறது. எதிர்வலைகளை கொஞ்சம் நோட்டம் பார்க்கிறார்கள். குடியுரிமை
சட்டம் இறக்கப்பட்டிருக்கிறது. இப்போதே என்.ஆர்.சி’யைப் பற்றிய முன்னறிவிப்பை
முன்மொழிந்திருக்கிறார்கள். வலிமையான எதிர்குரல்கள் இல்லாத பட்சத்தில்,
சத்தமேயில்லாமல் அடுத்தடத்த அஸ்த்திரங்களைப் பாய்ச்சத்தான் போகிறார்கள்.
என்.ஆர்.சி வரவில்லையெனில் குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவேண்டியதில்லையா? என்ற
கேள்வி உங்களுக்குள் இப்போது தோன்றினால், உங்களுக்குள் ஒரு சங்கி
உறங்கிக்கொண்டிருக்கிறான் என்பதையும், உங்கள் நாக்கின் நுனியில் மட்டும்
மேலோட்டமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சமத்துவம், சங்கித்தனங்களை சுவைக்கும்போது
உதிர்ந்துவிடும் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.
மீண்டும்
சொல்கிறேன். குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே போராட்டம்
நடந்துகொண்டிருக்கிறது என்பதால் நாமும் குத்துமதிப்பாக அதோடு ஒத்திசைக்க
வேண்டியதில்லை. எதையும் புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவசப்படவேண்டிய அவசியமில்லை.
புரிந்துகொண்டு தீர்க்கமாக உணர்ச்சிவசப்படுங்கள்.
- மருத்துவர். மயிலன் சின்னப்பன்