Thursday 23 January 2020

திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி-1) - சண். அருள் பிரகாசம்


திமுகவும் திருவள்ளுவரும் (பகுதி-1) - சண். அருள் பிரகாசம்

வள்ளுவப் பெரியார்

முன்னுரை:

தினா முனா கனா – அப்படின்னா
திருக்குறள் முன்னணி கழகம்” ...... தி..........மு............க
என்று கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன்  அவர்கள் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பணம்’ என்கின்ற திரைப்படத்தில்  பாடி இருப்பார்.
திமுக என்பது திருக்குறள் முன்னணி கழகம் என்று விளக்கம் அளித்த அந்த புகழ்ப் பெற்ற பாடலை எழுதியவர் கவிஞர் உடுமலை நாராயண கவி அவர்கள். அப்போதெல்லாம் திரைப்படத்தில் பெயர்ப் பட்டியலில் பாடலாசிரியர் பெயர்கள் இடம் பெற்றது இல்லை. கலைவாணர் பாடிய பல பாடல்களை உடுமலையார்தான் எழுதி இருக்கிறார் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த பாடலை எழுதியவர் என்று கவிஞர் கண்ணதாசன் அவர்களை சிலர் குறிப்பிடுவது ஏனோ தெரியவில்லை.
அந்தத் திரைப்படம் மதராஸ் பிக்சர்ஸ் தயாரித்த - பணம் -  கதை வசனம்: மு.கருணாநிதி என்றுதான் துவங்கும். அப்பாடல் இடம்பெற ஒரு அருமையான ‘சிச்சுவேஷன்’ உண்டாக்கி கொடுத்தவர் கலைஞர்.
திருவள்ளுவரைத் தம் கட்சிக்காரராகவே நினைக்கும் திமுகக்காரர்கள் உண்டோ இல்லையோ எதிரணியில் இருப்போர் அப்படி எண்ணுகின்றனர். அதற்குக் காரணம் திருவள்ளுவரை அவர் எழுதிய திருக்குறளை அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கொண்டு சென்றது திராவிட இயக்கம். அதற்கு அடித்தளம் அமைத்தவர் தந்தைப் பெரியார். அதில் பெரும் பங்காற்றியது அறிஞர் அண்ணாவும் அவர் கண்ட அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும். அதில் தலைவர் கலைஞரின் பங்கு மகத்தானது. அது மறக்கவோ மறைக்கவோ முடியாதது.
கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வடக்கே சென்னையில்   தலைநகரில் வள்ளுவர் கோட்டம் அமைத்ததும் தென்கோடியில் குமரி முனையில் கடல் பாறையின் மீது வானுயர சிலை அமைத்ததும்தான் பலருக்குத் தெரியும். ஆனால் திருவள்ளுவர் புகழையும் திருக்குறள் சிறப்பையும் திசை  எங்கும் பரப்பிட திமுகவும் கலைஞரும்  செய்த செயல்கள் பல்வேறு நடவடிக்கைகள்  பற்றிய  தகவல்கள் அது தொடர்பான செய்திகள் முழுதும் தெரிந்தால் வியப்பாக இருக்கும். முதலில் திருக்குறளையும் திருவள்ளுவர் பெயரையும் தெருவெங்கும் ஒலிக்கச் செய்ததில் பெரும் பங்காற்றியவர்  பெரியார் என்பதை தமிழர் என்றும் நினைவில் கொண்டு நன்றி பாராட்ட கடமைப் பட்டுள்ளனர்.  

வள்ளுவப் பெரியார்:
திருவள்ளுவரையும் திருக்குறளையும் உலகம் உவந்து உயர்த்திப் பிடிக்கும் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமானவர் தந்தைப் பெரியார் அவர்கள் என்றால் மிகையல்ல. முன்பே குறிப்பிட்டது போல் அதற்கான அடித்தளம் இட்டவர் அவர்தான்.  கற்றோர் இடையிலும் புலவர்கள் மத்தியிலும் மட்டும் திருக்குறள் தெரிந்ததாக இருந்தது. அறியப்பட்டது. மக்கள் இடையே திருக்குறளைக் கொண்டு சென்று அதன் பெருமையும் புகழையும் அனைவரும் அறியும் படியாகவும் அதனைப் படிக்க ஆவலுட்டும் விதமாக பரப்புரை செய்ததும் தந்தை பெரியார் செய்த அரும் முயற்சியினால் என்பதை யாரும் மறுக்க இயலாது.

சென்னையில் 1949 ஆண்டு சனவரித் திங்கள் 15-16 இரு நாட்கள் திருவள்ளுவர் – குறள் மாநாடு தந்தைப் பெரியார் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. இப்படியான ஒரு மாநாடு திருக்குறளை முன்னிறுத்தி திருவள்ளுவர் பெயரைச் சொல்லி மக்களைத் திரட்டி தமிழ் சான்றோர்களை அழைத்து பேச வைத்து பெருமை சேர்த்த நிகழ்வு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தே பல்வேறு அமைப்புகள் திருக்குறளைப் பற்றிய ஆய்வு அரங்கங்களும் சொற்பொழிவுக் கூட்டங்ககளும் ஆங்காங்கு நடத்துகின்றன என்றால் அதற்கு முன்னோடியாக அமைந்தது வழிகாட்டியது பெரியார் கூட்டிய இந்த மாநாடுதான். திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் அரசியல் இயக்கம் அறிஞர் அண்ணாவால் துவக்கப்படுவதற்கு முன்பு தந்தையும் தனயனும் சமுதாய இயக்கமாம் திராவிடர் கழகத்தில் ஒன்றாக பணியாற்றிய காலகட்டத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டின் சிறப்புகளை அறிதல் வேண்டும்.

விடுதலை 10-01-1949 நாளேட்டில் நாட்டு மக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவென்று பார்த்தால் பெரியாருக்கு திருக்குறள் மீதான கருத்து என்ன என்று எளிதில் விளங்கும். இன்றைக்கு பெரியார் திருவள்ளுவரைத் திட்டினார் திருக்குறளை தீயது என்றார் என்று தப்புத் தப்பாகப் பேசும் தறுதலைகள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கூற்றை நம்பி அப்படியா ஐயோ என்று ஆயாசப்படும் நம் அன்பர்கள் தெளிந்தறிதல் வேண்டும். திருவள்ளுவர்-குறள் மாநாட்டிற்கு தந்தைப் பெரியார் அழைப்பைக் காணீர்.

“திருவள்ளுவர் மாநாடு சென்னையில் பிரபலமாய் பல அறிஞர்கள் தலைமையையும், சொற்பொழிவுகளையும் கொண்டு இம்மாதம் 15,16 சனி,ஞாயிறுகளில் நடக்கின்றது.

திராவிடர் கழகம் அதில் நல்ல பங்கு கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை. ஏனென்றால், தமிழர்களுக்கு ஆரியக் கலைகள், ஆரிய நீதிநெறி ஒழுக்கங்கள் அல்லாமல் வேறு இல்லை என்பது மாத்திரமல்லாமல், இவைகளில் ஆரியர் வேறு - தமிழர் வேறு என்று பாகுபடுத்துவது தவறு என்றும் கூறுவதோடல்லாமல்; குறள் முதலிய தமிழர் பண்பு, ஒழுக்கம், நெறி ஆகியவைகளைக் காட்டும் தமிழ்மறைகள் பலவும் ஆரியத்தில் இருந்து ஆரிய வேத, சாஸ்திர, புராண, இதிகாசங்களில் உள்ளதைத் தொகுத்து எழுதப்பட்டவையே என்றும் பெருமளவுக்கு ஆரியர்கள் பிரசாரம் செய்வது மாத்திரமல்லாமல் பலவகைத் தமிழர்களைக் கொண்டும் அப்படிப்பட்ட பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

குறளைப் பொறுத்தவரை என்னுடைய கருத்து ஆரிய கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்கு தலைகீழ் மாறுபட்டதென்பதும், அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாக குறள் உண்டாக்கப்பட்டது என்பதும் உறுதியான கருத்தாகும். குறளிலும் சிற்சில இடங்களில் ஆரியப் பண்பு கலப்பு இருக்கின்றது என்று இன்று பல பெரியார்கள் கருதுகிறார்கள். அதற்கேற்றப்படி சில எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார்கள். ஏதோ சில இருக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்டவைகளை நாம் இக் காலத்துக்கும், குறளாசிரியரது பெரும்பாலான கருத்துக்கும், ஒப்பிட்டுப் பார்த்து நல்ல கவலையுடன் சிந்தித்தோமேயானால் ஏதாவது நம் கருத்துக்கு ஏற்ற தெளிபொருள் விளங்கும் என்றே கருதுகிறேன். விளங்காவிட்டாலும் அவை குறளின் தத்துவத்துக்கு முரண்பாடானது என்றாவது தோன்றலாம். அதுவும் இல்லாவிட்டால் நம் பகுத்தறிவுப்படி பார்த்து, கொள்வதைக் கொண்டு,விலக்குவதை விலக்கலாம்.
நீண்ட நாள் நம் கலைகள், பண்புகள் எதிரிகளின் இடையிலேயே பாதுகாப்பு அற்றும், நாதி அற்றும் கிடந்ததாலும் அன்னிய கலை, பண்பு ஆட்சிக்கு நாம் நிபந்தனை அற்ற அடிமைகளாக இருந்ததாலும், நம் கலைகளில் இப்படிப்பட்ட தவறுதல்கள் புகுவது, நேருவது இயற்கையே யாகும். ஆதலால் அப்படிப்பட்ட ஏதோ சிலவற்றிற்காக நம்முடைய மற்றவைகளையும் பறி கொடுத்துவிட வேண்டும் என்பது அவசியமல்ல.
எனவே, குறள் தத்துவத்தை விளக்கிட வென்றே நடத்தப்படும் இம் மாநாட்டில் நாம் பங்கு கொண்டு தத்துவங்களை உணர்ந்து, தமிழ்ப் பாமர மக்கள் இடையில் அந்தத் தத்துவங்கள் புகும்படி செய்ய வேண்டியது நம் கடமையாகும். திராவிடர் கழகம் என்பது சமுதாய முன்னேற்றத்திற்காகவே இருப்பதால், அதன் சமுதாயக் காரியங்களுக்கு குறள் தத்துவம் பெருமளவுக்கு அவசியமாகும். ஆதலால், குறள் மாநாட்டைத் தமிழர்கள், திராவிடர்க் கழகத்தார் நல் வாய்ப்பாகக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.”  (விடுதலை 10.01.1949)
பத்தாயிரம் பேர் அமர்ந்து பங்கேற்கும் படியாக மாநாட்டுப்பந்தல் அமைத்து அதற்கு ‘வள்ளுவர் பந்தல்’ என்று பெயரும் இட்டார் பெரியார்.
முதல் நாள் மாநாடு 15-01-1949 அன்று மிகச் சிறப்பாக துவங்கியது.
அன்று மாநாட்டில் கருத்துரை ஆற்றிய தமிழ்ச் சான்றோர் யார் யார் என்று கண்டால் மிக வியப்பாக இருக்கும். இறை மறுப்பாளரான பெரியாரின் அழைப்புக்கு இணங்கி மாநாட்டிற்கு தலைமையேற்று நடத்தித் தந்தவர் திருவாளர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள். மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார் நாவலர் சோமசுந்தர பாரதியார். பெரும்புலவர் திரு டி. எஸ்.கந்தசாமி முதலியார் நீதிக்கட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த்தபோது இடவொதுக்கீடு முறை கொண்டுவந்து சமூக நீதிக்கு வித்திட்ட திரு எஸ்.முத்தையா முதலியார், திருக்குறள் எஸ்,முனுசாமி மற்றும் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.
இவற்றில் தனிச்சிறப்புடன் குறிப்பிட வேண்டியது திரு முத்தைய்யா முதலியார் அவர்களின் பேச்சின் ஒரு பகுதியை. அவர் அன்று கூறியது நம் சிந்தனைக்கு உரிய நற்கருத்தாகும்.
“அந்தணர் என்பதும், பார்ப்பனர் என்பதும் வெவ்வேறு வார்த்தைகள் என்பது எடுத்துக் காட்டப்பட்ட உண்மை. அந்தணப்பேட்டையும், பார்ப்பனச்சேரியும் அடுத்தடுத்து இருப்பதே இதற்குப் போதுமான சான்றாகும். திருக்குறள் வழிப்படி யாவரும் நடந்து வருவோமானால் நம்மை யாரும் குறை கூற மாட்டார்கள். கடவுள் உண்டா? இல்லையா? என்பது பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் ஒழுக்கமுடன் நடந்து கொண்டால் அதுவே போதுமானது”
இரண்டாம் நாள் மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கி நடத்தியவர்கள் இருவர். முதலில் ராவ் பகதூர் ஏ. சக்ரவர்த்தி நாயனார்  பிறகு நாவலர் சோமசுந்தர பாரதியார். வரவேற்புரை ஆற்றியவர் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் அவர்கள்.
‘கற்றறிந்த மக்களிடையே ஒளியுடன் விளங்கி நிற்கும் பெரியவர், பதவி விருப்பமற்றவர், ஆராய்ச்சி வல்லுநர் என்று கூறி சக்ரவர்த்தி நாயனார் அவர்களை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி அவரைத் தலைமை ஏற்கும்படி கேட்டுக் கொண்டார். அதை வழி மொழிந்தவர் பிற்காலத்தில் நாவலர் என்று புகழப்பட்ட இரா. நெடுஞ்செழியன் ஆவார். ராவ்பகதூர் ஏ. சக்ரவர்த்தி நாயனார் அவர்கள் தலைமையேற்று சொற்பொழிவாற்றினார்.
பல்லாயிரம் மக்களோடு கோவை ராவ்சாகிப், திரு.சி. எம். ராமச்சந்திரன் செட்டியார், விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் போன்ற சான்றோர் பெருமக்கள் மற்றும் கோர் ஆபிசர் தோழர் ரா. ஜெகதீஸ்வரன் தலைமையில் இருபது பேர் கொண்ட செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் படையினரும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார், இராவண காவியம் படைத்த புலவர் குழந்தை, இராசிபுரம் அரங்கசாமி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்,  நாவலர் இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், அறிஞர் அண்ணா ஆகியோர் சிறப்பாக உரையாற்றிய பின்னர்  இறுதியாக தந்தைப் பெரியார்  பேருரை ஆற்றினார். அதன் பிறகு அன்று இரவு அண்ணா எழுதி நடித்த சந்திரமோகன் நாடகம் நடத்தப்பட்டு இரவு 2.30 மணிக்கு மாநாடு நிறைவடைந்தது.
பெரியார் தன பேருரையில் பேசுகையில்,   
“திருக்குறளின் மேன்மை நம் அருமை நண்பர் மாணிக்க நாயக்கர் காலத்திலேயே நமக்கு ஓர் அளவுக்குப் புலப்பட்டது என்றாலும், இன்றைய நாள் வரை அதைப்பற்றி அதிகம் பேசாமல் இருந்தமைக்குக் காரணம், நீண்ட நாள்களாகவே நம்மிடையே ஆரியத்தால் புகுத்தப்பட்டு நம் வாழ்வைக் கெடுத்துக் கொண்டு வரும் கடவுள், மதம், இவை சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கைகள், அறவே ஒழிக்கப்படும் வரை திருக்குறளை மக்களிடையே பரப்புவதால் பயனில்லை என்பதை தெளிவாக உணர்ந்ததன் காரணத்தினால்தான்
இன்று சுயமரியாதைப் பிரச்சாரத்தால் மூட நம்பிக்கைகளும், ஆரிய முறையும் பெருமளவுக்கு நீங்கி நாம் எடுத்துக் கூறும் சீர்திருத்தக் கருத்துகளை ஒப்புக்கொள்ளவும் அவற்றை மக்களிடையே பரப்பவும் போதுமான ஆதரவாளர்கள் ஏற்பட்டு விட்டனர். நமது பிரசாரம் வெற்றி பெற்றுவிட்டது. ஆரியம் அழியும் காலம் மிக நெருக்கத்திற்கு வந்து விட்டது என்பதை உள்ளபடி அறிந்த பிறகே அதைப் பரப்பத் துணிவு கொண்டு மாநாட்டைக் கூட்டும்   முயற்சியுள் ஈடுபட்டேன்
மேலும் தொடர்ந்து அவர் பேசும் போது சொல்கிறார்
“சமுதாயத்தின் ஒழுக்கமும், நாணயமும் மிகவும் கெட்டுவிட்டது, மனிதனை மனிதன் வஞ்சித்து வாழும் கொடுமை மிகமிக மலிந்துவிட்டது. இத்தகைய ஒழுக்கக் கேட்டிற்குக் காரணமான கடவுளும், மதமும் மாற்றப்பட்டாக வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். காந்தியார் வணங்கிய கடவுளும், போற்றிய அகிம்சையும், சத்தியமும், மதமும் அவருக்கே பயன்படாது போய் விட்ட காரணமாகவேணும் இவ்வுண்மை மக்களுக்குப் புலப்பட வேண்டும்”
என்று சொன்னவர் அடுத்து சொல்வதைக் கேளுங்கள்
“குறளை யார் எழுதியது, அவர் காலமென்ன என்ற விசாரத்தை எல்லாம் ஆராய்ச்சி வல்லுநர்களான சரித்திரப் பேராசிரியர்களுக்கே விட்டு விட்டோம். குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகளை மட்டுமே கவலையோடு ஆராய்ந்து பார்த்து அவற்றின் படி நம் வாழ்க்கையை செப்பனிட்டுக் கொள்ள வேண்டும்”
இன்றைக்கு பெரியார் அப்படி சொன்னார் இப்படி சொன்னார் என்று பொய்யும் புரட்டும் பேசித் திரியும் புல்லர்கள் தெளிவு பெரும் விதமாக மேலும் அவர் சொல்கிறார்.
“கடவுள் வாழ்த்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று எடுத்துக் கூறுமுகத்தான் வள்ளுவர் எங்கும் உருவக் கடவுளைப் பற்றிக் குறிக்கவே இல்லை. அவர் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் மனிதன் இன்னின்ன உயர்வான குணங்களைப் பெறுதல் வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடுகிறார். உயர்வான மனிதத் தன்மை எதுவென்பதே அவ்வதிகாரத்தில் கூறப்பட்டிருக்கிறது.”
என்று சொன்னபிறகு அடுத்த அதிகாரமாகிய வான் சிறப்பைப் பற்றிப் பேசுகையில்,
“மழை பெய்தால் தான் மக்கள் கஷ்டமின்றி வாழ்தல் கூடும். கஷ்டமின்றி வாழ்தல் கூடுமானால்தான் மக்களிடையே ஒழுக்கம் நிலவ முடியும்”
என்று மக்கள் ஒழுக்க மாயிருந்தால் மழை பெய்யும் என்ற மதவாதிகளின் கருத்தைக் கண்டித்து அப்போதே வள்ளுவர் குறிப்பிட்டிருப்பதை பெரியார் எடுத்துக் காட்டுகிறார்.
திருவள்ளுவர் பெண்களைப் பற்றி பெண் வழிச் சேரல் என்ற பகுதியில் கூறியிருப்பது சிலரின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டுப் பேசுகிறார் ,
“திருவள்ளுவர் பெண்களை தாய் தகப்பன் பாதுகாப்பில் கல்யாண மாகாமல் கன்னிகளாக இருந்துவரும் பெண்கள், கல்யாணமாகி இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வாழும் பெண்கள், விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்துவரும் விலைமகள், கல்யாணம் செய்து கொள்ளாமல் தான் தோன்றித்தனமாக சுதந்தரமாக வாழ்ந்து வரும் பெண் என்று பிரித்தே பேசியிருக்கிறார். பெண் வழிச்சேரல் என்ற பகுதியில் குறிப்பிடப் பட்டிருக்கும் பெண்டிர் கடைசியாகக் கூறப்பட்ட சுதந்தரர்கள் என்றும் அவர் வழி சேர்ந்த ஆடவர்களுக்கு கேடு சம்பவிக்கும் என்றுதான் திருவள்ளுவர் கூறியிருக்கிறாரே ஒழிய பெண்களைப் பற்றி இழுக்காக ஒரு வார்த்தை கூட திருவள்ளுவர் பேசவில்லை”
என்று சொன்ன பெரியார் வள்ளுவரை பொதுவுடமைக்காரர் என்கிறார்.
“திருவள்ளுவர் காலம் பொது உடைமைக்காலமோ, சமதர்மக் காலமோ அல்ல. ஆனால், வள்ளுவர் சிறந்த பொது உடைமைக்காரராகவே விளங்குகிறார்.
அதனால்தான் நம் போற்றுதலுக்கு ஆளாகிறார். இத்தகைய தனிச் சிறப்பு வாய்ந்த திருக்குறளை அனைவரும் போற்றி அதன்படி நடந்து நல்வாழ்வு வாழ வேண்டும். நாட்டின் மூலை முடுக்குகள் தோறும்கூட திருவள்ளுவர் கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, திருக்குறள் கருத்துகள் பரப்பப்பட வேண்டும். ஆண்டுதோறும் இது போன்ற வள்ளுவர் மாகாண மாநாடுகளும், ஒவ்வொரு ஜில்லாவிலும் தனி மாநாடும் கூட்டப்பட வேண்டும்.
குறள் ஆரியத்தை ஒழிக்க ஒப்பற்ற நல்லாயுதம் ஆதலால் திருக்குறள் பிரச்சாரக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, விரைவில் செயலாற்றத் தொடங்கும். அதற்கான ஆதரவைப் பொது மக்கள் தந்துதவ வேண்டும் என்று கூறிக்கொண்டு மாநாட்டில் கலந்து கொண்ட புலவர்களுக்கும், அறிஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
என்று பேசி முடித்த பெரியார் தன்னுடைய உரையின் தொடக்கத்திலேயே ஒன்றை முன்னுரையாகவும் முடிவுரையாகவும் குறிப்பிட்டு கூறியது என்னவென்றால்
“மனிதன் ஒவ்வொருவனும் தன் வாழ்வுக்குத் தானே எஜமானன் என்பதை உள்ளபடி உணர்ந்து செயலாற்றி வருதலே நன்மை பயக்கத் தக்கது. தன்னறிவு தனக்கு காட்டிக் கொடுக்கும் வரை சற்று சங்கடம் ஏற்படினும் அதனால் கேடொன்றும் நேர்ந்து விடாது. இன்று திருக்குறளை நான் புகழ்ந்து கூறுவதற்கு என்னுடைய கருத்துகள் அதில் காணப்படுவதால்தானே ஒழிய, அது வள்ளுவரால் கூறப்பட்டது என்பதற்காகவோ அல்லது அதில் கூறப்பட்டுள்ளது யாவுமே பகுத்தறிவுக்கு ஏற்றது என்ற கருத்தினாலுமே அல்ல. அதில் என் முன்னேற்றக் கருத்துக்கு ஒவ்வாதன இருப்பின் அவற்றை விலக்க நான் எப்போதும் தயங்கப் போவதில்லை”
இப்படியான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி திருக்குறளை திருவள்ளுவரை பெரியார் ஏற்று போற்றிய பாங்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும். பெரியார் குறளை ஏந்தியது ஏன் என்று வரவேற்புரையில் தமிழ்த்தென்றல் திரு.வி.க. தந்த விளக்கம் அவ்வியப்பிலிருந்து நம்மை விடுக்கும்.
“திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு திருக்குறளே. திருக்குறளைப் பயின்று பயின்று அதன் உள்ளுரையை உணர உணர திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு நமக்கு மேலும் மேலும் விளங்குவதாகும்.

திருவள்ளுவர் தமிழர். திருக்குறளைத் தமிழில் எழுதினார். இது உறுதி. மிக உறுதி. முழு உறுதி. அய்யமில்லை. இது உண்மை என்பதை அறுதியிட்டுக் கூறலாம். ஆனால், குறள் தமிழ் நூலன்று. தமிழர் நூலன்று. உலக நூல். உலகப் பொது நூல், சமதர்ம நூல்.

குறளைப் படிக்கும் முன்னர், படிப்பவர் (Sexual Science) பால் அறிவு பெற்ற வராதல் வேண்டும். ஆண்-பெண் சேர்க்கை பற்றிய விஞ்ஞான அறிவின்றி திருக் குறளைப் பயின்றால் குறளின் முழு உண்மையையும் உணர்தல் அரிது. அரிது.
குறளைப் பயிலும் முன் மார்க்சிசமும் அறிந்திருத்தல் வேண்டும். மார்க்சிசம் அறியாமல் குறளைப் பயின்றால் பயனில்லை. மக்கள் கூடி வாழப் பிறந்தவர்கள். பிரிந்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். இதுதான் மார்க்ஸ் தத்துவத்தின் அடிப்படை. குறள் நூலின் அடிப்படையும் இதுதான்.
தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் அவர்களே ஆவார். இந்த மாநாட்டின் இயற்கை வரவேற்புத் தலைவர் பெரியார் அவர்களே தான். என்னைச் செயற்கை வரவேற்புத் தலைவராக்கிற்று.
சில சமயங்களில் நான் (Thesis) தத்துவம் ஆக இருந்திருக்கிறேன்; அவர் எதிர்த் தத்துவமாக இருந்திருக்கிறார். சில சமயங்களில் நான் Anti-thesis ஆக இருந்திருக்கிறேன். அவர் Thesis ஆக இருந்திருக்கிறார். ஆனால், இது போதோ தத்துவம் (Thesis)  எதிர் தத்துவம் (Anti-Thesis) இரண்டும் மறைந்து (ஒருமைப்பாடு) Synthesis ஏற்பட்டிருக்கிறது.
பெரியாருடைய அறிவியக்கம் புரட்சி இயக்கம்; பகுத்தறிவு இயக்கம் தோன்றியது, வளர்ந்தது. எப்படி எப்படியோ சென்றது. நானும் பெரியாரும் பலமுறை போரிட்டோம். ஆனால், அக் காலத்திலேயே நான் சொல்லியது உண்டு. இத்தகைய ஒருமைப்பாடு Synthesis  ஏற்படப் போவது உறுதி, உறுதி என்று. யார் என்ன கூறினாலும் கூறுக. பெரியாருடைய இயக்கம் - அறிவியக்கம், நாடுகளின் எல்லையை, மொழிகளின் எல்லையை, சமயங்களின் எல்லையை, சாதிகளின் எல்லையை, இனங்களின் எல்லையை எல்லா எல்லைகளையும் கடந்தது. அது உலகப் பொது இயக்கம்.

பெரியார் இன்று குறளைக் கையில் ஏந்தியுள்ளார். பலப்பல நூல்களை ஒதுக்கிக் கொண்டே வந்த பெரியார் குறளை மட்டும் கையில் ஏந்தியிருக்கும் காரணம் என்ன? திருக்குறள் உலகப் பொதுநூல். பெரியாரின் உலகப் பொது இயக்கத்திற்கு ஏற்ற உலகப் பொது நூல் திருக்குறளே. எனவேதான் அது பெரியாரின் கையிலே வீற்றிருக்கிறது.

யார் யாரோ குறளைப் பாராட்டினார்கள். போற்றினார்கள். ஆனால், அவர்கள் தொண்டின் பயனாகவெல்லாம் குறள் தனக்கு உரிய இடத்தை அடைந்ததில்லை. இன்று பெரியார் குறளை ஏந்தியிருக்கிறார். இனி மிக விரைவில் குறள் தன் சிறப்பிடத்தை எய்துவது உறுதி உறுதி”
சைவ சமயப் பற்றாளராகவும் தமிழறிஞராகவும் திகழ்ந்த திரு.வி.க அவர்கள் அன்று தந்தைப் பெரியாரைப் பற்றி உரைத்தது இன்றைக்கு சிலருக்கு முதுகில் விழுந்த சாட்டையடியாக உறைக்கும் என்று கருதலாம். 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மாநாட்டில் தம்முடைய சமூக நீதிக்கான இடஒதிக்கீடு முறைக்கான ஆதரவு கோரும் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை விட்டு பெரியார் வெளியேறியது அறிந்ததே. அந்த மாநாட்டுத் தலைவராக இருந்தவர் திரு.வி. க அவர்கள் என்பதை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.
அதேபோன்று நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசியபோது
“திருக்குறள் என்னும் இந்த ஒப்பற்ற தமிழ்க் கருவூலத்தின் பெருமையை, சால்பை, அருமையை, சிறப்பை தமிழ் மக்களை விட வேற்றவரே அதிகம் உணர்ந்துள்ளனர். நாம் திருக்குறளைப் போற்றுவதெல்லாம் ஒரு சடங்காக, ஒரு போலிக் கவுரவ வீண் பிதற்றலாகத்தான் இருக்கிறதே தவிர, திருக்குறளை எம் முறையில் போற்ற வேண்டுமோ அம் முறையில் இல்லை.
குறளாசிரியர் காலத்திலேயே தமிழரிடை ஆரியர் தொடர்பு ஏற்பட்டு விட்டது. ஆனால், தமிழகம் ஆரிய மயமாகவில்லை. தமிழர் ஆரியர் கருத்துகளை அறிய லாயினர். ஆனால், ஆரியக் கருத்துகளுக்கு அடிமைகளாகி விடவில்லை. தமிழகம் ஆரியத் தொடர்பு கொண்டு, ஆனால் ஆரியத்திற்கு அடிமைப்படாமல் வாழ்ந்து வந்த கால நிலையிலே தான் திருக்குறள் என்னும் இத்தமிழ்ப் பெருநூல் எழுவதாயிற்று. ஆரியர் கருத்துகளில் சிறந்தன உண்டேல் ஏற்றுக் கொண்டு, தனித்தமிழ்த் துறைகளை சிறிதும் விட்டுக் கொடாமல் வலியுறுத்திய தமிழ்ப் பெரியார்களுள்ளே தலைசிறந்த பெரியாரே திருவள்ளுவனார்.
இப்போது சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் நூல்கள் பல வற்றிலும் திருக்குறள் பாக்கள் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன. இதுவும் குறளின் பழைமைக்குத் தக்க சான்று.
எவ்வளவுக் கெவ்வளவு எதெது தங்கட்குத் தெரியாதோ, அவ்வளவுக்கவ்வளவு அவற்றைப் பற்றி தெரிந்தது போல் பாவித்து தெரியாததை எல்லாம் உளறி வைக்கும் அறியாமை இடைக்காலப் புலவர்களைப் பிடித்தாட்டிற்றே. அந்தப் பேதமை திருவள்ளுவரிடம் சிறிதும் கிடையாது.
திருக்குறள் தொன்மை மிகுந்த தமிழ்ப் பண்பு வடிவான, ஆரியமயம் ஆகாத தொல்காப்பிய நெறிவழி நிற்கும் உயர்ந்த நூல் என்பதற்கு இதுவே தக்க சான்று.
நம் அருமைத் தமிழை அறியாத ஆண்டவன் ஒருவன் இருப்பானாகில் அந்த ஆண்டவன் நமக்குத் தேவையே இல்லை. பிற்காலப் புலவர்கள் ஆண்டவனைப் பற்றிக் கூறியுள்ள இழிந்த முறையோடு திருவள்ளுவர் கூறியுள்ள உயர்ந்த முறையை ஒப்பிட்டுப் பாருங்கள். திருவள்ளுவரின் சிறப்பு எளிதில் புலனாகும்.

திருக்குறளைப் படிப்பவர் யாராயினும் அவர் திருக்குறளைப் படிக்கும் முன்னர், ஆரிய நாகரிகம் கலவாத தமிழ் நாகரிகம் ஒன்று தமிழகத்தில் தலை நிமிர்ந்தோங்கித் தழைத்திருந்தது என்பதையும், திருக்குறள் அந்தத் தமிழ் நாகரிகத்தின் வழி வந்த உயர்தனிச் சிறப்பு நூல் என்பதையும் உணர்ந்து ஆக வேண்டும். இவற்றை உணராதவர் திருக்குறளைப் படித்துப் பயன் இல்லை.”
நாவலர் சோமசுந்தர பாரதியார் 1937 ஆண்டு நடைபெற்ற முதல் இந்தித் திணிப்பு போராட்டத்தில் தந்தை பெரியாருடன் இணைந்து செயல்பட்டவர். அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சோமசுந்தரபாரதியார் இந்தி கட்டாயப்பாடமா என்ற வினாவைக் கேட்டு இந்தியை தமிழ்நாட்டில் கட்டாயப் பாடமாகக் கொண்டுவந்த திரு சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதி வெளியிட்டவர்.
14-03-1943 அன்று பெரியாரின் சுயமரியாதை இயக்கம் நடத்திய புராண ஒழிப்பு செயல்பாடுகளில் ஒன்றான கம்பராமாயணம் பெரியபுராணம் எரிப்புப் போராட்ட காலகட்டத்தில் சேலத்தில் நடைபெற்ற சொற்போரில் கம்பராமாயணத்திற்கு ஆதரவாக அண்ணாவுடன் வாதம் செய்தவர். அவர்தான் “நம் அருமைத் தமிழை அறியாத ஆண்டவன் ஒருவன் இருப்பானாகில் அந்த ஆண்டவன் நமக்குத் தேவையே இல்லைஎன்று இந்த மாநாட்டில் முழக்கமிட்டதை இந்நாளில் நாம் எண்ணிப் பார்க்கத்தக்கது.
உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் தமிழும் தமிழரினமும்தான் என்னும் கருத்தை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தவர் பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார். அவர் இந்த மாநாட்டில் பேசிய போது
“வடநாட்டில் முதன் முதலாக ஆரியத்திற்கு எதிர்ப்புத் தோன்றியது வங்காளத்தில்தான். அவ்வெதிர்ப்பின் தோற்றம்தான் பவுத்த மதமும், சமண மதமும். வங்காளிகளும் திராவிடர்களே. திராவிட நாட்டு மக்களாகிய நாம் தொடர்ந்து திராவிட கலாச்சாரத்துக்கு மறுமலர்ச்சியளிக்கப் பாடுபட்டு வருவோமானால் விரைவில் வடநாட்டிலுள்ள திராவிடர்களின் ஆரிய மோகமும் மாய்ந்து, பரந்ததோர் திராவிட நாட்டைக் காணலாம்”
என்று குறிப்பிட்டார். கார்கா சட்டர்ஜீ (Garga Chatterjee) போன்ற வங்காள கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் இன்றைக்கு இந்தித் திணிப்பிற்கு எதிராக தமிழகத்தின் மொழிப் போர்முனையில் களப்பணி ஆற்றும் ஆழி. செந்தில்நாதன் போன்றவர்களுடன் கரம் கோர்த்து தமிழகம் வருவதும் அறிஞர் அண்ணாவை அறிந்து அவர் மீளாத்துயில் கொள்ளும் சென்னைக்  கடற்கரை சதுக்கம் சென்று மரியாதை செய்கிறார் என்பதும் அறியும் போது பன்மொழிப் புலவர் அப்பாத்துரையாரின் கூற்று மெய்படும் நாள் நெருங்குவதை காணமுடிகிறது.
“குறளுக்குத் தற்போது வழங்கிவரும் உரைகள் யாவும் சாதாரண மக்களுக்குச் சிறிதும் பயன்படாததாக இருக்கிறது. நல்லதோர் உரையை உண்டாக்கிக் கொடுப்பதற்கான முடிவு இம் மாநாட்டின்கண் ஏற்பட வேண்டும். திராவிடன் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்ற ஒரே கருத்தை உட்கொண்டு தான் பெரியார் அவர்கள் பெருந்தொண்டாற்றி வருகிறார். அவர் வாழ்நாளிலேயே அவர் அகமகிழ அவர் வழிப்படி நடந்து இன்பத் திராவிடத்தை உண்டாக்கித் தர வேண்டும். இடுக்கண் வருங்கால் நகுகஎன்று குறளையும் எடுத்தோதி கஷ்ட நஷ்டம் பாராமல் பெரியார் வழி பின்பற்றி நடக்க வேண்டும்”
என்று கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன் அவர்கள் இம்மாநாட்டில் பேசியதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இம்மாநாட்டில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ஆண்டுக்கொருமுறை குறள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். குறளுக்கு நல்லதோர் உரை காண ஒரு குழுவை நியமித்து இன்றைய நடப்புக்கேற்ப ஒரு நல்லுரை உண்டாக்கித் தர ஒரு செயற்குழு திரு.வி.க. அவர்களைத் தலைவராக இருக்கவும், திருக்குறள் முனுசாமி அவர்களைச் செயலாளராகவும், தோழர்கள் நெடுஞ்செழியன், கா. அப்பாதுரை, புலவர் இலக்குவனார் ஆகியோர் அங்கத்தினர்களாகவும் கொண்டு இருக்க வேண்டும். அவர்களும் மேலும் சிலரையும் சேர்த்துக் கொள்ள அதிகாரம் அளித்தும் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக திருக்குறள் உரைகள் பல பகுத்தறிவுச் சிந்தனைகளுடன் எழுதப்பட்டு வருகின்றன. திருக்குறள் என்னும் ஆழ்கடலில் அறிய முத்துக்களை அள்ளிக் கொணரும் அரும்பணியில் அறிஞர்கள் ஆர்வமுடன் ஈடுபடும் நிலை உருவானது குறிப்பிடத்தக்கது.  
அறிஞர் அண்ணா அவர்கள் இந்த மாநாட்டில் பேசியதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியது மிகத்தேவையானது ஆகும்.
“மக்கள் வாழ்வு நலிந்திருக்கக் கண்ட பெரியார் அவர்தம் வாழ்வை நலப்படுத்த நூற்கள் பல தேடிப் பார்த்த போது தான்கண்ட பாரதம், பாகவதம், பகவத் கீதை, இராமயணங்கள், வேதங்கள் உபநிட­த்துகள் இவையாவும் பல கேடுகளைத் தம்மிடத்தே கொண்டு ஆரியப் பிரச்சாரத்தால், புரட்டுகள் வெளித்தோன்றாமல் இருந்து வருபவைகள். திராவிடர் வாழ்வுக்கு உண்மையில் பெரிதும் கேடு செய்து வருபவை இவைகளே என்று கண்டுதான் இதுகாறும் அவற்றிலுள்ள புரட்டுகளை எடுத்தோதி வந்து இன்று மக்களுக்கு அவற்றின் மீதுள்ள பற்றுதல் வெகுவாகக் குறைந்திருக்கும் இந்த வேளையில் திருக்குறள் என்ற ஒப்பற்ற நீதி நூலை மாநாடு கூட்டி திராவிடர்களுக்கு எல்லாத் தமிழர்களுக்கும் தருகிறார் தந்தை பெரியார்.
இனித் திராவிடன் ஒவ்வொருவன் கையிலும் குறள் எப்போதும் இருத்தல் வேண்டும். திராவிடன் கையில் குறள் இருப்பதை, பகவத் கீதை ஏந்தித் திரியும் பார்ப்பனர்கள் காண்பார்களாகின் பார்ப்பனியம் படுகுழியில் புதைக்கப்படப் போவது நிச்சயம் என்பதை உணர்ந்து நமக்கும் மேலாக திருக்குறளைப் போற்றிப் புகழ முற்படுவதோடு அல்லாமல் தம் அகம்பாவத்தையும் மூடநம்பிக்கைகளையும் கைவிட்டேயாக வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்து விடுவார்கள்.
பெரியார் இம்மாநாட்டின் மூலம் நல்லதோர் செயல் திட்டத்தைத் தருகிறார். பெரியார் கொடுத்த எத்திட்டத்தையும் இதுவரை கைவிட்டறியாத நாம், பெரியார் ஒரு நல்லுழவர் என்பதை நன்குணர்ந்துள்ள நல்பண்ணையாளர்களாகிய நாம் அவர்தம் முயற்சி வெற்றி பெற எல்லா வகையாலும் பாடுபடுவோம்.
திருக்குறளைத் துணைக் கொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நம் வாழ்வைக் கெடுக்க வேண்டி ஆரியம் நம் பாதையில் வெட்டியுள்ள படு மோசப் படுகுழிகள் யாவும் நம் அறிவுக் கண்களுக்குத் தெற்றெனப் புலப்படும். கம்பருக்குத் திருவிழாக்கள் கொண்டாடும் புன்மதியாளர் காது செவிடுபடும்படி திருக்குறள் இனி ஓதப்படும். விரைவில் வெற்றி முரசு கொட்டிய நமது பெரும்படை, போர் பல நடத்தி நற்பயிற்சி பெற்றுள்ள நம் பெரும் படை திக்கெங்கணும் புறப்படும். வெற்றி கொண்டு பெரியாரின் பேரிதயம் மகிழச் செயலாற்றும்”
இம்மாநாட்டில் இவ்வாறு பேசிய அறிஞர் அண்ணா அவர்கள் அப்போதிருந்து ஒன்பது மாதகாலதிற்குள்ளாகப் பெரியாரை பிரிந்து தனிக் கழகம் காணும் நிலை ஏற்பட்ட போதிலும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் அவரும் அவர் கண்ட அரசியல் இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகமும் தூக்கிக் கொண்டாடியதில் தவறவில்லை என்பது வரலாறு காட்டும் காட்சிகளாகும். அதனை மெய்யென நிறுவி கட்டியம் கூறும் விதமாக கலைவாணர் என். எஸ் கிருஷ்ணன் அவர்கள் பாடிய அந்த தீனா ... மூனா.. கானா பாடலை முழுதும் கேட்போம். இதோ அந்த பாடல் வரிகள்.......
“தீனா... மூனா... கானா. எங்க தீனா... மூனா... கானா.
அப்பிடின்னா
திருக்குறள் முன்னணிக் கழகம் – ஓகோ
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா
அறிவினைப் பெருக்கிடும் உறவினை வளர்த்திடும்
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா

பகுத்தறிவோடு நாட்டினர் வாழ
திருக்குறள் தந்தார் பெரியார் வள்ளுவப் பெரியார்!
அந்தப் பாதையில் நாடு சென்றிடவே  
வழிவகுப்பதும் அதன்படி நடப்பதும்
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா.

கருப்பு சிவப்பு என்ற பேதத்தை நீக்கும் தலைக்
கனத்தைக் குறைத்து நல்லதன்மையை யுண்டாக்கும்
கள்ளர் மறவரோடு பள்ளுப் பறைகளென
உள்ள பேதங்களை ஒழித்துக் காட்டும்
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா

காந்தியடிகளின் அஹிம்சையும் - வள்ளுவன்
கருணையும் ஒன்றெனக் கொள்ளுவதும்
சாம்பசித்தார்த்தன் கொள்கையும் திருக்குறள்
தர்மமும் ஒன்றெனக் கொள்வதும் 
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா

தனயன் மாருக்கொரு தந்தையைப் போலே
தங்கைகளுக் கொரு தமக்கையைப் போலே
தம்பிமாருக் கொரு அண்ணா... போலே
சரியும் தவறும் இதுவெனக் காட்டும்
தமிழன் பெருமைதனை நிலை நாட்டும்
தீனா... மூனா... கானா.... எங்க தீனா... மூனா... கானா
தி.... மு.....க .....

அருள்பேரொளி                              
செல்பேசி +91 94444 46579
(சண். அருள்பிரகாசம்)
1.கருணாம்பிகை காலனி
வேளச்சேரி, சென்னை-600042