Friday 10 January 2020

குழந்தைகளை பிரிக்கும் எல்லைகள் - இனியன்




நிலப்பரப்பின் வரையறுக்கப்பட்ட எல்லைகள் என்பது உலகலாவிய அளவில் மட்டுமல்ல
உள்நாட்டு மாநில மற்றும் உள்ளூர் மாவட்ட அளவிலும் கூட பெரும் பிரச்சனைதான் போல.
அப்படியான எல்லைப் பிரச்சனைகளை அரசாங்கமும், அரசின் சட்டங்களும், சமூகங்களும் கூட
பெரியவர்களுக்கான பிரச்சனைகளாகதான் கருதுகின்றனரே தவிர அதில் இருக்கும்
குழந்தைகளுக்கான மனோநிலையில் இருந்து பார்ப்பதில்லை என்பதையே எதார்த்தமாக
வைத்துள்ளனர்.

அப்பகுதியில் மொத்தம் நான்கைந்து கிராமங்கள் இருக்கும். அனைத்தையும் இணைத்து 400 – 600
வரையிலான குடும்பங்கள். அவற்றில் 200 – 250 வரையிலான குழந்தைகள் இருப்பார்கள்.
அவர்களில் தந்தையை இழந்தக் குழந்தைகள் என்பது குறைந்தபட்சம் 40 பேர் வரை இருந்திருக்கக் கூடும். இவை அனைத்தும் நான்கு வருடங்களுக்கு முன்பாக. தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை.

அப்போது விசாரித்த வரையில் இத்தனை குழந்தைகளுக்கு தந்தைகள் இல்லாமல் போனதற்கு மிகமுக்கிய காரணமாக அமைந்திருந்தது குடி மட்டுமே. இது குழந்தைகளுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாமல் அவர்களின் அம்மாக்களும் கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தி தான் வந்திருகிருகிறது. அதேபோல் இருப்பவர்களிலும் பெரும்பான்மையான நபர்களுக்கு குடி மட்டுமே
பொழுதுபோக்கு. ஏன் இப்படி இருக்கிறார்கள் எனக் கேட்டால் தலைமுறைகள் தாண்டியும் இப்பகுதியில் இதுதான் நிலை என்றனர் அங்கிருந்த நண்பர்கள்.

அப்படி எந்தப் பகுதி என இனியும் சொல்லாமல் செல்வது சரியில்லை. அந்தக் கிராமங்கள் அனைத்தும் தமிழ்நாடுபாண்டிச்சேரி எல்லைப் பகுதி. இரண்டு அரசுகளும் பெரிய அளவில் கண்டு கொள்ளாத நிலையில் தனியார் தொண்டு நிறுவன அமைப்புகள் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் என உள்ளே நுழைந்து செயல்படத் துவங்கியிருகின்றன.

அந்த அமைப்புகளின் செயல்பாடுகளுக்கு பிறகு குழந்தைகள் மத்தியில் ஓரளவுக்கு பெரும் மாற்றங்கள் தான். படிப்பில் துவங்கி 13 – 14 வயதில் குடியை நோக்கி செல்லும் ஆண் குழந்தைகள், அதே வயதில் திருமணம் நோக்கி நகரும் பெண் குழந்தைகள் போன்ற போக்குகளில் மாற்றம் அடைந்திருப்பது எந்தளவிற்கு உண்மையான நிலையோ அதே அளவிற்கு அந்த நிறுவனங்களால் போதிக்கப்படும் வரட்டு தனமான மத நம்பிக்கைகளுக்குள்ளும் மிக ஆழமான முறையில் இழுத்துச் செல்வது அரங்கேறுகிறது.

குடியை விட பெரும் ஆபாத்தான போக்குத்தான் ஆசிரமங்கள், சர்ச்கள் மற்றும் இன்னும்பிற மத அமைப்புகளின் பின்னணிகளால் வளர்த்தெடுக்கப்படும் அறிவார்ந்த தளத்தில் உருவாக்காடும் மதவாதப் போக்குகள். கூர்ந்து கவனித்தால் பெரும்பாலான எல்லைப் பகுதிகளிலும் மதங்களின் ஆதிக்கப் பணிச்சன்டைகள் குழந்தைகளிடமிருந்து துவங்கி சமூகச் சண்டைச் சச்சரவுகள்
குன்றிவிடாமல் பாதுகாக்கபட்டு வருகிறது காலங்காலமாக. அநேகமாக எல்லைகளில் மதங்கள் என்பது உலகளாவிய அளவில் கூட கவனிக்க வேண்டிய ஒன்றாகக் கூட இருக்கும் என நினைக்கிறன்.

மேலே சொன்னதை போன்று இதுவும் ஓர் உலகளாவிய எல்லைப் பிரச்சனைகளில் ஒன்றுதான்ஆனால், இதற்கு பெயர் மொழி.

எங்க சார், இதுங்களை என்னன்னு சொல்லி நாங்க படிக்க வைக்கிறது.”
ஏன் என்னாச்சி?”
இதோ ரெண்டு கி.மீ ஆந்திரா. முழுக்க தெலுங்கு மட்டுமே பேசும் கிராமங்கள் ஒன்றிரண்டு இருக்கு. அவங்களுக்கு நம்ம ஸ்கூல் தான் பக்கமா இருக்கு. அதனால இங்கே வந்து சேர்த்திடுறாங்க? ஆனா பாருங்க நாம தமிழ்நாட்டு பாடத் திட்டத்தில் வறோம். அவர்களுக்கு பாடம் நடத்துறதுக்காகவே நான் இங்கு வந்த ஆறு மாசத்திலேயே தெலுங்கு கத்துக்க வேண்டியதா இருந்துச்சி. ஏதோ சமாளிச்சி இழுத்து பிடிக்க வேண்டி கிடக்கு. அந்தக் குழந்தைகள் இங்கே படிப்பதால் தமிழில் தான் பரீட்சை எழுதியாகணும் வேறு வழியில்லை. அதனால் நிறைய
குழந்தைகள் அதிகபட்சம் ஐந்தாம் வகுப்பு மேல் கொண்டு செல்லுதல் என்பதே பெரும் சவால் தான். பெரிய அளவில் வருமானமும் எதுவும் இல்லாமல், ஏதாவது ஒன்னை படிக்கட்டும் என்பதை விட மதிய சோத்துக்கும், மாலை வரை இருக்க ஓர் பாதுகாப்பான இடமும் இருக்கும் என்பதால் சேர்த்துட்டு போய்டுறாங்க. எல்லைப் பகுதி என்பதால் ஒரு சிலருக்கு ரெண்டு மாநிலத்துக்கும்
இருப்பிடச் சான்று வச்சியிருப்பவர்களும் இருக்காங்க. அதனால் சேர்க்க முடியாதுன்னும் சொல்ல முடியாது. அதையும் மீறி சொன்னால் குடும்பமே வந்து அழுதுகிட்டு நிப்பாங்க. வேறு வழியிலாம ஏதாவது சமாளிப்போம் ன்னு சேர்த்துக்க வேண்டியது இருக்கு. என்ன பண்ணுறது.”

தமிழ்நாடுஆந்திரா எல்லைப் பகுதியில் இருக்கும் ஓர் தொடக்கப்பள்ளி ஆசிரியருடன்னான உரையாடல் தான் அது. அப்பளிக்கு நான் முதல்முறை சென்ற போது ஏற்பட்ட மொழிச் சிக்கலை உணர்ந்த பிறகு ஏற்பட்ட உரையாடல். ஓர் எல்லையில் இருவேறு மொழிகள் பேசுவதோ அல்லது புழக்கத்தில் இருப்பதோ இயல்பான ஒன்றாக இருந்தாலும் கூட கல்வி மற்றும் அது சார்த்த
வளர்சிகள் என்பது மிகவும் மிகவும் பிரச்சனைகள் மற்றும் சிக்கலுகொன்றான ஒன்றுதான்.

அடுத்ததாக இதை எழுதிக் கொண்டிருக்கும் போது ஓர் எல்லைப் பிரச்னையை கண்டு வருகிறேன் தற்போது தங்கியிருக்கும் ஊரில். இந்த எல்லைகள் என்பது உலகில் வேறெந்த நாடுகளிலும் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம் நாட்டில் கெட்டிதட்டிப் போயிருக்கும் ஜாதிய உணர்வின் பால் உருவாக்கபட்டிருக்கும் எல்லைகள் தான் அவை.

மொத்தமாகவே 2.3 சதுர கி.மீ அளவிலான பரப்பளவைக் கொண்ட சிற்றூர் தான். அதில் தொடக்கப்பள்ளி ஒன்றும் உயர்நிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. பெரும்பான்மயான குழந்தைகள் அவற்றில் தான் படிகிறார்கள் ஒன்றாக. இருந்தும் அவர்களுக்கான தெருக்களுக்கான எல்லை பாகுபாடுகள் வித்திக்கட்டுள்ளது. பள்ளியிலும் கூட அது தொடர்கிறது என்னும் நிலையில் ஊருக்குள் சொல்லவா வேண்டும்.

அனைவரையும் பள்ளிக்கு வெளியே ஒருங்கிணைத்தல் என்பது யார் முயன்றாலும் ஒரேமுறையில் அதனை செய்திட முடியாது என்பது தான் எதார்த்தம். ஏனென்றால் இங்கு ஊருக்கும் தெருவுக்கும்தெருவுக்கும் சேரிக்கும், சேரிக்கும் காலனிக்கும் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன்
ஒரே ஜாதிதான் என்றாலும் கூட அதே ஜாதியின் அந்த வகையறாஇந்த வகையறா என்று எல்லைகள் நிர்னைக்கபட்டுள்ளது. அவசியமின்றி எவரும் எதற்காகவும் நிர்னைக்கபட்டுள்ள எல்லைகளை கடந்து விடுவதில்லை. குழந்தைகள் கடப்பதற்கும் அனுமதிப்பதில்லை.

- பயணங்கள் தொடரும்

திராவிட வாசிப்பு நவம்பர் 2019 இதழில் வெளியான கட்டுரை.

No comments:

Post a Comment