கடந்த சனிக்கிழமை (Feb-1) மும்பையில் நடந்த வானவில் பேரணியில் குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு(CAA, NRC) எதிராக குரல் எழுப்பியதற்காக, கைதுசெய்யப்பட்ட ஜே.என்.யூ (JNU) மாணவர் ஷார்ஜில் இமாமை விடுதலை செய்ய கோரிக்கை வைத்ததற்காக பால்புதுமையினர் சமூகத்தை சேர்ந்த 51 நபர்கள் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மும்பை காவல்துறையின் இந்த நடவடிக்கை நாடெங்கிலும் உள்ள பால்புதுமையினர் சமூகத்திடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் இங்கே கவனிக்கப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய விசயம் மும்பை வானவில் பேரணியை ஒருங்கிணைத்த குழு தங்களுக்கும் வழக்கு பதிவு செய்யப்பட்ட மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று வெளியிட்ட அறிக்கை தான்.
இதோடு மும்பையில் பால்புதுமையினர் மத்தியில் சமூக செயற்பாட்டாளர்களாக வலம் வரும் பலரும் காவல் துறையின் இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக முழக்கமிட்டவர்களை தேச துரோகிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் முத்திரை குத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் அரசுக்கும், இந்துத்துவ அமைப்புகளுக்கும் கணிசமான ஆதரவு பால்புதுமையினர் மத்தியில் இருப்பதும் , மற்ற தளங்களை போல இங்கேயும் பாசிச கொள்கைகளும், வெறுப்பும் தற்போது மேலோங்கி வருவது தெரிந்திருந்தாலும் இந்நிகழ்வு அதிர்ச்சியாகவே இருக்கிறது.
21ஆம் நூற்றாண்டில் முற்போக்கு கொள்கைகளின், முற்போக்காளர்களின் மிக முக்கிய கூறுகளில் ஒன்றாக பார்க்கப்படுவது பால்புதுமையினரின் உரிமை, பாலின, பாலியல் சமத்துவம் சார்ந்த நிலைப்பாடு. அப்படியிருக்க பால்புதுமை சமூகத்தின் முக்கிய நபர்கள் சிலரே பாசிச சித்தாந்தத்திற்கு துணை நிற்பதன் அடிப்படை காரணி என்னவாக இருக்க முடியும். இத்தகைய நிலைப்பாட்டை சிலர் எடுப்பதின் மூலம் பால்புதுமையினரின் சமூக உரிமை எவ்வாறு பாதிக்கப்படும் போன்ற அடிப்படை கேள்விகள் எழுகிறது.
அரசியல் சட்டம் 377க்கு எதிராக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாகிறது. பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே திருநர் சட்டமும் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. பால்புதுமையினர் சமூகத்தின் சமூக உரிமை போராட்டம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டிய இத்தருணத்தில் இத்தகைய கேள்விகளை விவாதிப்பது முக்கியமாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திருநங்கைகளை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்தாலும், தற்பால் ஈர்ப்பாளர்களை பொறுத்தவரை மிகவும பிற்போக்கான நிலையில் தான் இருக்கிறோம். சென்ற வருடம் திராவிட இயக்கம் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதி பாலின சிறுபான்மையினரின் உரிமையை அங்கீகரித்ததும், பால்புதுமை சமூகம் அளித்த பரிசீலனைகளை ஏற்று அறிக்கையை திருத்தி வெளியிட்டதும், கனிமொழி கருணாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் போன்ற தலைவர்களின் ஆதரவு குரல்களும் அடுத்தகட்ட நகர்விற்கான முக்கிய குறியீடுகளாக பார்க்கலாம்.
பாலின சமத்துவ போராளி, சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்பட்ட பால்புதுமை சமூகத்தினர் சிலரே இப்படி வெளிப்படையாக பாசிசத்தின் பக்கம் நிற்பதற்கு அடிப்படை காரணம் அவர்களின் ஜாதிய உணர்வே. சென்ற வருடம் சென்னை வானவில் பேரணியில் பெரியாரின் படத்தை பிடித்ததற்கு எழுந்த சலசலப்பும் இப்படியான ஜாதிய மனநிலையின் வெளிப்பாடே..
கடந்த முப்பது ஆண்டுகளில் நிறுவனமயமும், பொது நீரோட்டத்தில் குறிப்பிடத்தக்க அங்கீகாரமும் அடைந்துள்ள பாலின சிறுபான்மையினருக்கான உரிமைக்குரல் பெரும்பாலும் என்.ஜீ.ஓ களின் செயல் வடிவங்களிலேயே ஒளித்திருக்கிறது. என்.ஜீ.ஓ கட்டமைப்புகள் ஆங்கில வளமையும், அதிகார மையங்களையும் நிறுவனப்படுத்தி தலைமைகளை உருவாக்கியதன், கட்டமைத்ததன்விளைவு நாடெங்கிலும் பார்ப்பனர்கள் பால்புதுமையினர் சமூகத்தின் அடையாளங்களாக வளர காரணமானது. இவர்களில் பலரும் இன்று ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆதரவாளர்கள் என்பது கூடுதல் தகவல். பார்ப்பனர் அல்லாதவர்களும் என்.ஜீ.ஓக்களை எடுத்து நடத்தினாலும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும், வளமும், அதிகாரமும் பார்ப்பன என்.ஜீ.ஓகளோடு ஒப்பிட முடியாத அளவு தான் இருக்கிறது. தொழிற் சங்கங்களும், மக்கள் இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பால்புதுமையினருக்கான உரிமை ஏதோ மேல் தட்டு வர்க்கம் சார்ந்த பிரச்சனை என எண்ணியதும் இதற்கு ஒரு காரணம்.
377 சட்டம் நீக்கப்பட்டாலும் இன்றும் பெரும்பாலான தற்பால் ஈர்ப்பாளர்கள் சமூக புறக்கணிப்பிற்கும், கேலி கிண்டல்களுக்கும் உள்ளாவதே நிதர்சனம். இங்கே குறைந்த பட்சம் மேல் நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கு வாய்ப்பிருப்பவர்களாலேயே சுயமரியாதையான வாழ்க்கையை வாழ முடிகிறது. அதிலும் தற்பால் ஈர்ப்பு கொண்ட பெண்கள் ஆணவ கொலை செய்யப்படுவதும், குடும்ப நபர்களாலேயே (அப்பாக்கள் உட்பட) பாலியல் கொடுமைகளுக்குஆளாவதும் தினமும் நடந்து கொண்டிருக்கிறது. நிலைமை ஒருபுறம் இப்படி இருக்க, மற்றொருபுறம் பன்னாட்டு பெரு நிறுவனங்கள் நுகர்வு சந்தையில் அழகியல் சார்ந்த வணிக யுக்திக்காக பால்புதுமையினரை முன்னிலைப்படுத்தி விளம்பர படங்கள் வெளியிடுவதும் ,வானவில் கொடிகளை கார்பரேட் கம்பெனிகளில் பறக்க விடுவதுமே பால்புதுமை சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
அது மட்டுமின்றி முற்பட்ட ஜாதியை சேர்ந்தவர் ஜாதிய மனநிலையை எந்தவித சுய பரிசோதனைக்கும் உட்படுத்தாமல் பாலின சமத்துவ போராளியாக தன்னை நிலைத்திருவது சாத்தியமானது. சில ஆண்டுகளுக்கு முன் தற்பால் ஈர்ப்புடைய தன் மகனுக்கு தங்கள் ஜாதியை சேர்ந்த மணமகனை தேடினார் இந்தியாவின் ஆதர்ச தாய் ஒருவர். ‘பார்ப்பனர்கள் சமூக சீர்திருத்தத்தில் பிரவேசித்துவருவதன் பலனாக சமூக கொடுமைகள் பலப்பட்டு தான் இருக்கிறது’ என்ற பெரியாரின் பார்வை தான் எத்தனை சரியானது, (குடியரசு 12/8/1928). இப்படி வெளிப்படையான ஜாதிய கூறுகள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உரையாடலையும் ஆங்கிலத்தில் நிகழ்த்துவது, விலை உயர்ந்த தேநீர் விடுதிகளில் கூட்டம் நடத்துவது போன்ற செயல்களின் மூலம் மறைமுகமாகவும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து வரும் மக்களை புறக்கணிப்பதும், இந்த பாகுபாடுகளை சுட்டிக்காட்டும் எந்த ஒரு குரலையும் தங்கள் மனநலத்தை பாதிப்பதாக குற்றம் சாட்டி தள்ளிவைப்பதும் தொடர் கதையாக இருக்கிறது.
உதாரணமாக ஒரு பெண்ணும், ஆணும் வேத முறையில், பார்ப்பன புரோகிதரை வைத்து செய்யும் திருமணதிற்கு பதில் இரண்டு பெண்களோ அல்லது ஆண்களோ அதே முறையை பின்பற்றி திருமணம் செய்வதே பாலின சமத்துவம் என நம்புவது தான் இன்றய பெரும்பாலான பால்புதுமையினரின் நிலைப்பாடு. வேத முறையே அடிப்படியில் ஒடுக்குமுறைதான் என்பதை விவாதிக்க பல தளங்கள் அனுமதிக்காததும், அப்படியான விவாதங்களை தங்கள் நம்பிக்கைக்கு எதிரானதாகவும், மனநலத்தை பாதிப்பதாகவும் கருதுவதுதான் கள நிதர்சனம். பல சவர்ணா பெண்ணியவாதிகள் ஆண் புரோகிதருக்கு மாற்றாக பெண் புரோகிதரை வைத்து வேத மந்திரங்கள் ஓதுவதை புரட்சியாக பார்ப்பது போலான மனநிலை தான் இங்கேயும்.
இதை பார்க்கும் பொழுது, ‘இந்து மதத்தையோ அதன் சாஸ்திரங்களையோ சீர்திருத்தி விடலாம் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமேயாகும்’ என்ற பெரியாரின் கூற்றே நினைவுக்கு வருகிறது. (குடியரசு 13/1/1945). பாலின சமத்துவம் என்பது ஜாதி ஒழிப்பின்றி சாத்தியமில்லை என்பதை பால்புதுமையினர் சமூகம் உணரும் பொழுதே இந்த நிலை மாறும்.
அப்படியான மாற்றத்தை முன்னெடுக்க பால்புதுமையினர் சமூகத்தில் பார்ப்பனரல்லாத பெரியாரிய, அம்பேத்காரிய சிந்தனையுடைய தலைமைகள் உருவாக வேண்டும். அதுமட்டுமன்றி பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்கள் பாலின சிறுபான்மையினருக்கான உரிமைகளை பலமாக முன்னெடுக்க வேண்டும். பாலின சிறுபான்மையினரின் போராட்டம் என்.ஜீ.ஓ வடிவை தாண்டி பொது அரசியல் நீரோட்டத்தில் பேசு பொருளாக வேண்டும். இந்த மாற்றங்கள் நிகழும் பொழுதே, இந்திய சமூகம் பால்புதுமையினருக்கான உரிமை கட்டில் சார்ந்தது அன்று என்றும், அது மானுடம் சார்ந்த சமூக கலாச்சார கூறு என்றும் உணரும். அதுவே ஒரு சமத்துவ சமூகத்தை நோக்கிய பயணத்திற்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க:
- கனகா வரதன்
No comments:
Post a Comment