போற்றுதற்குரிய தவத்திரு அடிகளார் அவர்கட்கு! - ஈ.வெ. ராமசாமி
வணக்கம்.
போற்றுதற்குரிய தவத்திரு அடிகளார் அவர்கட்கு! ஈ.வெ. ராமசாமி வணக்கம். அடிகளாரது 26 ஆம் தேதியகடிதம் பெற்றேன். செய்தி உணர்ந்தேன். ஒருவரையறுத்த முடிவிற்கு வருவது நம்மிருவருடையகடமையாகிறது என்று எழுதி இருக்கிறீர்கள்.
எனது கருத்தை என் பிறந்தநாள் விழாவில், அடிகளார் தலைமையில் நான் பேசும் போதுவிளக்கியிருக்கிறேன். அதுவே தான் என் நிலைமையும். மற்றும், திருநெல்வேலி செல்லும்போதும்அடிகளாருக்குத் தெரியும் படி சொல்லியிருக்கிறேன். நிற்க. போராட்டத்தின் இலட்சியம் இரண்டு.
ஒன்று: தமிழ்நாட்டில், தமிழன் கோவில்களில் உள்ள கடவுள் என்பவைகளுக்குத் தமிழில் பூசை செய்யப்படவேண்டும்.
இரண்டு: தமிழ்நாட்டில், தமிழன் கோயிலுக்குள் தமிழரால் பூசை செய்ய-ப்பட வேண்டும்.
இந்த இரண்டு காரியமும் கடவுளையும், வழிபாட்டையும் பற்றியது மாத்திரமல்ல; தமிழ் மொழியின் தன்மானத்தையும், தமிழனின் தன்மானத்தையும் பற்றியதாகும்.
கோவிலிலுள்ள கடவுள் என்பதைத் தமிழில் பூசை செய்யாததற்குக் காரணம், வடமொழியிலேயே பூசை செய்வதற்குக் காரணம் ‘தமிழ் மிலேச்ச மொழி’ என்பதும், வடமொழி ‘தேவமொழி’ என்பதுமேயாகும்.
அதுபோலவே, தமிழன் பூசை செய்யக்கூடாது என்பதற்கு, ‘தமிழன்’, ’சூத்திரன்’, ‘இழிமகன்’ என்பதும்; பார்ப்பான் மேல்மகன் ‘பிராமணன்’ என்பதுமே காரணம். இதை அடிகளார் ஒப்புக்கொள்ளாதிருக்கலாம்; ஒப்புக்கொள்ள மறுக்கலாம்.
அடிகளார் மன்னிக்க வேண்டும். நான், நாம் குறிப்பிடும் கடவுள்களைப் பற்றியதை மத, சம்பிரதாய ஆதாரங்களிலிருந்தும், நடப்பிலிருந்தும் அறிந்ததைச்சொல்கிறேன்.
இவை எப்படியோ இருக்கட்டும். தமிழ்மொழியில் பூசை நடக்கவேண்டுமென்று அடிகளாரும் கூறுகிறார்கள். நானும் கூறுகிறேன். இதற்காகக் கிளர்ச்சியோ, போராட்டமோ நடத்த வேண்டுமென்பதில் அடிகளாருக்கும் மறுப்பு இருக்க நியாயமில்லை.
தமிழன் பூசை செய்யவேண்டும் என்பதிலே அடிகளார் கருத்து எப்படியிருந்தாலும் நான் தீவிரமான ஆசையுள்ளவனாகவே இருக்கிறேன். இவைகளுக்காக நடைபெறும் போராட்டங்களில் அடிகள் எந்த அளவுக்கு அருள் கூர்ந்தாலும் அது எனது பேறு ஆகவே கருதுவேன்.
மற்றபடி, நாம் இருவரும் நட்பு முறையில் அன்பர்கள் ஆவோம். கொள்கைகளில் ஒன்றுப்பட்டவர்களாக இருக்க வாய்ப்பில்லாதவர்கள் என்றாலும், ஒன்றுபட்ட இலட்சியங்களுக்கு மக்கள் நலனையும் தமிழர் தன்மானத்தையும் முன்னிட்டுக் கூடியதைச் செய்வோம்.
இப்படி எது செய்யினும், அடிகளார் அருளையும் ஆணையையும் முன்வைத்தே கூடியதைச்செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆசை.
‘இந்தப் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நம்பிக்கையும்அடிப்படையா? அல்லது இனம், சாதி அடிப்படையா?’ என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள்.அடிகளார் அருள்கூர்ந்து முன்னிற்று செய்யும் போராட்டத்திற்குக் கடவுள் நம்பிக்கையும் வழிபாட்டு நம்பிக்கையும் உடையவர்களையே கலந்துக்கொள்ளும்படி பார்த்துக்கொள்கிறேன்; அதில் அடிகளாருக்குச் சங்கடம் வேண்டியதில்லை.
தவிர, 'தமிழன் என்று யாரைக் கருதுகிறீர்கள்?' என்று அடிகளார் கேட்டிருக்கிறார்கள். நான் 'தமிழன்' என்று கருதுவது பெரிதும் நம் நாட்டில் 'சூத்திரர்கள்' என்று சொல்லப்படுகிறவர்களையே ஆகும். இப்பொழுது கோவிலில் பூசை செய்வது சூத்திரர்கள் என்று ஒரு சாரார் சொல்லக்கூடும். அதாவது 'குருக்கள் சூத்திரர்கள்' என்பதே.
அது வெறும் பேச்சு. காரியத்தில் குருக்கள் எல்லாம் நம்மைத் தீண்டத்தகாதவர்களாகவும் கருத்துவதோடு, நம்முடனிமிருந்து உண்ணக்கூடாதவர்கள் என்றே இருந்து வருகின்றார்கள். பூணூல் அணிந்திருக்கிறார்கள்.
அவர்கள் சூத்திரர்கள் அல்லது நம்மவர்கள் ஆனால், நாம் பூசை செய்வதற்கு என்ன தடங்கல்? நமக்கேன் அந்த உரிமை கிடைக்கும்படி பாடுபடக்கூடாது?
எனவே, அருள்கூர்ந்து எனது முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறேன். குற்றமிருப்பின் மன்னித்தருள்க.
-ஈ.வெ. ராமசாமி
(விடுதலை - 07.11.1957)
No comments:
Post a Comment