நில முதலாளித்துவம் – Feudalism - பேரறிஞர் அண்ணா (ஜமீன் இனாம் ஒழிப்பு)
பல முதலாளித்துவத்தைவிட நிலமுதலாளித்துவமிருக்கிறதே அது மனிதத் தன்மையைமாய்ப்பதிலே, முதல்தரமானது.
குடும்பம் குடும்பமாக இந்த முதலாளித்துவத்துக்குஅடிமையாகி,தலைமுறை தலைமுறையாக, காலில் வெள்ளெலும்பு முளைத்த நாள் முதலாய் அடிமைக்காரனையே என்று நந்தனார் பாடினார் என்கிறார்கள் கதையில்.
வாழ்க்கையிலே இதைப் பாடிச் சொல்வதில்லை. ஆனால் உண்மைநிலை என்னவோ இதுதான். கிராமத்திலே உள்ள விவசாயிக்கு, பண்ணையாரிடம் இருக்கும் பயம், பத்ரகாளியிடம் இருக்கும் பயத்துக்குச் சமம்!
ஐயா--சாமி--ஆண்டே--எஜமான்--அவுர--என்றுஅர்ச்சனை செய்வான். கோயிலுக்குப் போவதுபோலவேதான், அடக்க ஒடுக்கமாகப் பண்ணைவீட்டுக்குப் போய் வருவான்.
இடுப்பிலே வேட்டியைக் கட்டிக்கொண்டு, காலிலேமுள்தைத்தாலும் பரவாயில்லை என்று செருப்புஇல்லாமல்தான் போவான்.
பண்ணையாரைக் கண்டவுடன் அடியற்றநெடுமரம்போல் வீழ்வான் ஒரு மனு என்பான் ! அவ்வளவுஅடிமைத்தனம்.நிலச்சுவான்தார் முறையின்மூலம் ஏற்பட்டிருக்கிறது. ஜமீன்களில் மட்டும் அல்ல; பெரியபண்ணைகளிலெல்லாம் இதே நிலைதான் இருக்கும்.
இதனை ஆங்கிலத்திலே ப்யூடெலிஸம் என்பார்கள். ஏன் என்ற கேள்விக்கே இடமில்லாத அளவுக்கு, மனதிலே அச்சத்தை நிரப்பிவிட்டு, மனிதர்களைஅடிமைகளாக்கும் முறை அது.
நிலத்தை உழுவதுமட்டுமல்ல- எஜமான் காரியம் எதுவானாலும் செய்யவேண்டியவன் --எடுபிடிக்கு அவன் தான்- அடி ஆள் அவன்தான்--நல்லது-பொல்லதுக்குஅவன்தான் உழைக்கவேண்டும்.
தன் வீட்டிலே ஒரு கலியாணம் ஒரு இழவு, எதற்கும் எஜமானிடம் உத்திரவு வாங்கியாகவேண்டும். கிராமத்திலே எந்தக் காரியம் செய்வதானாலும், எஜமானிடம் கேட்டுவிட்டுத்தான் செய்ய வேண்டும்.
எஜமான் சொன்னால் அதைச் செய்தாகவேண்டும்.ஒருவன் தலையைவெட்டிக்கொண்டு வா? என்றாலும் செய்யத்தான் வேண்டும். இந்த மாதிரியான மனப்போக்கு, இந்த நிலமுதலாளித்துவமுறையினால்,பரம்பரை பரம்பரையாகப் புகுத்தப்பட்டிருக்கிறது.
எனவேதான் நகரப்புறத்திலே வீசும் கொஞ்ச நஞ்சம் விடுதலையும், சுயமரியாதை உணர்ச்சியும், கிராமப்புறத்திலே தலை நீட்டத் தயங்குகிறது.
- பேரறிஞர் அண்ணா
No comments:
Post a Comment