Tuesday 31 March 2020

அன்னை மணியம்மையார் பொன்மொழிகள்

அன்னை மணியம்மையார் பொன்மொழிகள்


இராவணலீலா என்பது வடவரின் இராமலீலாவின் எதிரொலி, தவிர்க்க முடியாத விளைவு என்பதையும், அதன் பின்னால் கோடிக்கணக்கான தமிழர்களின் மானமும், மரியாதையும், கவுரவமும், உணர்ச்சியும், அடங்கியிருக்கிறது என்பதையும், மிக நல்ல வண்ணம் தந்தையின் தனிச்சிறப்பு வாய்ந்த தனயன் என்ற முறையில் தமக்கே உரித்தான தனித் திறமையோடு சுட்டிக்காட்டு இருக்கிறார் அறிஞர் அண்ணா.
- அன்னை மணியம்மையார்

பாரதியாரின் கவிதைகளில் நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று, கலைப்பற்று, கடவுள்பற்று பற்றிய பாடல்களில் ஆரியப் பற்றே காணப்படுகிறது.
- அன்னை மணியம்மையார் 

தமிழர்க்கு மானம் இருந்தால், தமிழ்நாடும், தமிழ் மொழியும் இழிநிலையையும், ஆரியர் ஆதிக்கம் உயர்நிலையையும் அடையுமா? 
- அன்னை மணியம்மையார் 

இந்து மதத்தில் மட்டும்தான் மனிதனை மனிதன் பிரித்துக்காட்டி கீழ்-மேல், உயர்வு-தாழ்வு என்ற இழிநிலை உள்ளது. 
- அன்னை மணியம்மையார் 

இந்து மதத்தில் அன்பு, சமத்துவம், சமரசம் இருப்பதாகச் சொல்வதோடு சரி; அவற்றைக் கடைபிடிப்பது இல்லை. 
- அன்னை மணியம்மையார் 

பஞ்ச பூதங்களையும், கிரகங்களையும், அறியாமையினால் தேவர்கள் என்று எத்தனையோ காலத்துக்கு முன் ஒரு பயித்தியக்காரன் எழுதி வைத்ததையெல்லாம் இந்த இருபதாம் நூற்றாண்டில் நம்பிக்கொண்டும், படித்துக்கொண்டும் இருந்தால் அவரைப்போல் சர்வ முட்டாள் யாரும் இல்லை.
- அன்னை மணியம்மையார் 

நம் இழிவைப் போக்க அல்லும் பகலும் அயராது உழைத்து, மக்களுக்குப் பகுத்தறிவைப் போதித்து, பெரியாரின் கொள்கை பரப்பி தொண்டு செய்வதே  நம் வாழ்நாள் இலட்சியமாகும்.
- அன்னை மணியம்மையார் 

நம்முடைய பொருளாதார இழிவும், நமக்கு நம் நாட்டில் உரிமையற்ற தன்மையும் ஒழிந்து நாமெல்லோரும் நலமுற வாழவேண்டும் என்பதற்காகத்தான் திராவிடர் கழகம் பாடுபட்டு வருகிறது.
- அன்னை மணியம்மையார் 

பெண்களே! அடுப்பூதும் அணங்குகளாக அடைபட்டுக் கிடைக்கும் பெண்டிராகவே காலங்கழிக்கக்கூடாது.
- அன்னை மணியம்மையார் 

தந்தை பெரியார் தமிழர்களின் பொதுச்சொத்து. கூட்டங்களுக்குப் பேசக் கூப்பிட்டால் வந்து விடுவார்.  சாப்பாடு கொடுத்தால் சாப்பிட்டு விடுவார். இந்த இரண்டிலும் அவர் குழந்தையே! 
- அன்னை மணியம்மையார்   

நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதிமுறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும்.
- அன்னை மணியம்மையார் 

வீட்டிற்குள் சிறைப்பறவைகளாய் இருந்த பெண்களை, வெளி உலகிற்கு சுதந்திரப் பறவைகளாய்க் கொண்டுவந்தவர்தான் தந்தை பெரியார்.
- அன்னை மணியம்மையார்  

மந்திரி வேலையைவிட மணியடிக்கிற வேலைக்குப் புத்தி அதிகம் வேண்டியதில்லை.
- அன்னை மணியம்மையார் 

அர்ச்சகர் ஆவதற்கு அறிவு தேவையில்லை பிறவிதான் தகுதி. பார்ப்பனத்தி வயிற்றில் பிறந்தவன் எவனாயிருந்தாலும் அர்ச்சகர் ஆகலாம் என்கிறது பார்ப்பன ஆதிக்கம். 
- அன்னை மணியம்மையார்

திராவிடர் கழகம் - கொள்கைகளில் இருக்கின்ற நியாயங்கள், உண்மைகள் இவைகளால் கவர்ந்து இழுக்கப்பட்ட, பலன் கருதாத, பின் விளைவினைக்கண்டு பயன்படாத வீரர்களாகிய தொண்டர்களின் அயறாதா உழைப்பினால் உருவானதாகும்.
- அன்னை மணியம்மையார்

ஜாதி ஒழியவேண்டுமென்றால்,
ஜாதியைக் காக்கும் அரசியல், சட்டப்பகுதி 
திருத்தப்பட வேண்டியது அவசியம். 
- அன்னை மணியம்மையார்    

பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மத்தை கொளுத்தும் போராட்டம்
- அன்னை மணியம்மையார் 

மேல் ஜாதிக்காரர்களான பார்ப்பனர்களில் தொழிலாளர்கள் எவரும் இல்லை. ஆனால், நம் நாட்டு விசித்திரங்களில் ஒன்று - தொழிலாளர் தலைவர்களாகப் பார்ப்பனர்களே பெரிதும் இருந்து வருவது.
- அன்னை மணியம்மையார் 

திராவிடர் கழகம் பலாத்காரத்திலோ, இரகசிய முறையிலோ, பொதுச்சொத்தை - பொது ஒழுக்கத்தை நாசம் செய்யும் கிளர்ச்சி முறைகளிலோ சிறிதும் நம்பிக்கையற்ற மாபெரும் மக்கள் இயக்கம்.
- அன்னை மணியம்மையார் 

போலி தேசபக்தி, ஒருமைப்பாட்டு ஜம்பம் நம் இளைஞர்களை வயிற்று சோற்றுக்குத் திண்டாடுபவர்களாக்கி பிறகு வன்முறையாளர்களாகவும் காலிகளாகவும் ஆக்கிவிடக்கூடாது.
- அன்னை மணியம்மையார்  

பிரச்சாரத்திற்காகப் போகிற இடத்திலெல்லாம் மாணவர்கள் அடக்கமாக நடந்துக்கொள்ள வேண்டும். போகிற இடங்களிலெல்லாம் சவுரியங்களை எதிர்பார்க்காமல், ஏற்படக்கூடிய அசவுரியங்களை லட்சியம் பண்ணாமல் பணியாற்ற வேண்டும்.
- அன்னை மணியம்மையார் 

நாம் அணியும் கருஞ்சட்டை - நம்மைப் பார்த்தவுடன் இவர்கள் சமுதாயத் தொண்டு செய்பவர்கள், மூடநம்பிக்கையை ஒழிப்பவர்கள், ஜாதியை ஒழிப்பவர்கள் என்பதை அடையாளப்படுத்துவதோடு, பெரியாரின் தொண்டர்கள் என்று பாராட்டுவதாக இருக்கட்டும்! 
- அன்னை மணியம்மையார் 

பெண்கள் மூடநம்பிக்கை மீதுள்ள பற்றுதலை முதலில் விட்டொழிக்க வேண்டும். தாங்கள் பெற்று வளர்க்கும் பிள்ளைகளையும் மூடநம்பிக்கையற்றவர்களாக வளர்க்க வேண்டும்.
- அன்னை மணியம்மையார் 

திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல; அது ஒரு சமுதாய அறிவு இயக்கமாகும்.
- அன்னை மணியம்மையார் 

ஜாதியற்ற சமுதாயம், மூடநம்பிக்கையற்ற சமுதாயம் காண்பதைத் தவிர நமக்கு வேறு இலட்சியம் இல்லை என்பது நமக்கு துணிவும், தெளிவும் தரும் கொள்கைக்கு கலசங்கள்.
- அன்னை மணியம்மையார் 

இந்த நாட்டுக்குரிய பூர்வீக மக்களை பிழைப்பைத் தேடி வந்த ஒரு கூட்டம் தங்களின் இழிபிறவி - வைப்பாட்டி மக்கள் என்று நிலை நிறுத்திய கொடுமை உலகத்தில் வேறு இந்தப் பகுதியிலும் காணமுடியாத ஒரு பெரும் கொடுமையாகும்.
- அன்னை மணியம்மையார் 

எப்படியும் நம்மை ஒழித்துக் கட்டிவிட எதிரிகள் நம்மீது ஒரு கண் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். தோழர்களே, நீங்கள் தற்காத்துக் கொள்ள உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்களாக! 
- அன்னை மணியம்மையார் 

உலக அரங்கில் திராவிடர் கழகம் ஓர் அதிசயமான இயக்கம். ஆனால் அதே நேரத்தில் அது மிகவும் அவசியமான இயக்கமுகாகும்.
- அன்னை மணியம்மையார் 

தந்தை பெரியாரின் தொண்டர்கள் நடத்தும் இந்தக் கிளர்ச்சியும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் அமைதியாகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமலும், பொதுச் சொத்துக்கு நாசமோ, பொது மக்களுக்கு இடையூறோ, பொது ஒழுக்கத்திற்குச் சிறிதும் கேடா இன்றி நடக்கும் என்பது நாடறிந்த உண்மை.
- அன்னை மணியம்மையார் 

அரசியல் கட்சிகளின் ஆயுள் அற்பமானது. இந்தச் சமுதாய இயக்கமோ மனிதப்புல் பூண்டு உள்ளவரை அதன் நிழலோடு நிழலாக நின்று பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடியது. 
- அன்னை மணியம்மையார் 

சர்க்கரைப் பேச்சு பேசி, சாதுர்யமாக மக்கள் கையில் உள்ள வாக்குச்சீட்டைப் பறிப்பது தான் ஜனநாயக அரசியல்வாதிகளின் பொதுத்தொண்டு.
- அன்னை மணியம்மையார் 

பெரியார் எதை எடுத்தாலும் சிந்தித்தே தான் முடிவு எடுத்துச் செயல்படுவார்களே தவிர, எதையும் அவர்கள் கனவாக நினைப்பதே இல்லை.
- அன்னை மணியம்மையார்

கசப்பான மருந்து தந்து, தேவைப்பட்டால் கத்தியை எடுத்து அறுவை சிகிச்சையும் செய்து நோயாளியை எப்படியும் பிழைக்க வைக்கும் எதிர்நீச்சல் தொண்டே எங்கள் இயக்கத் தொண்டு.
- அன்னை மணியம்மையார்

வீட்டார் எதிர்ப்பு, தெருவார் எதிர்ப்பு, ஊரார் எதிர்ப்பு என்றளவில் எங்களுக்கு இருக்கும் எதிர்ப்பின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.
- அன்னை மணியம்மையார் 

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாஸ்திர சம்பிரதாயங்களின் பெயராலும் அறிவு ஆயுள் கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறது.
- அன்னை மணியம்மையார் 


நம்மைப்பற்றி எவ்வளவு கேவலமாகச் சாஸ்திரங்கள் என்ற பெயரில் கூறப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சாஸ்திரங்களைப் பெண்கள் ஒருபோதும் மதிக்கவே கூடாது; ஒழித்துக்கட்ட முன்வரவேண்டும்.
- அன்னை மணியம்மையார் 

ஓர் அரசியல் கட்சியை ஆதரிப்பதும், எதிர்ப்பதும் தம் கொள்கையின் அடிப்படையில் தான். ஒரு கட்சியை ஆதரித்துத்தான் தீர வேண்டும் என்கின்ற அவசியமோ, ஆத்திரமோ, எதிர்த்தே தீர வேண்டும் என்ற வெறியோ, பகைமையோ எங்களுக்கு என்றைக்கும் இருந்தது கிடையாது. 
- அன்னை மணியம்மையார் 

வீட்டில் இருப்பவர்களை முதன் முதலில் நாம் திருத்திவிட்டால் சுலபமாக நாட்டிலும் நம் காரியத்திலும் வெற்றி பெற்றுவிட முடியும். 
- அன்னை மணியம்மையார் 

சுத்த வீரன் எப்பொழுதும் வீரனாக மடிவானே தவிர கோழையாக மடியமாட்டான்.
- அன்னை மணியம்மையார் 

அமைச்சர்கள் வருவார்கள் - போவார்கள். ஆனால், அரசாங்க ஊழியர்கள் அப்படி அல்லவே. ஆட்சியை நடத்திச்செல்லும் இயந்திரம் அரசு ஊழியர்கள் தானே! அத்தகைய இயந்திரத்தைப் பழுதுபடுத்த அந்த இயக்குநரே முயன்றால் அதன் விளைவு - பயணிகள் மீது கோபப்பட்டு வேண்டுமென்றே பேருந்தை மரத்தின் மீது மோதுவது போன்றது. அதனால்வரும் ஆபத்து, பயணிகளுக்கு மட்டுமல்லவே; ஒட்டுநருக்கும்தானே! 
- அன்னை மணியம்மையார் 

தந்தை பெரியாரின் இயக்கம் தன்னலமற்றது. யாரும் தகர்த்தெறிய முடியாதபடி அசைக்க முடியாதது. 
- அன்னை மணியம்மையார்

பார்ப்பனர்கள் எப்போதும் மரத்திற்குப் பின் மறைந்து நின்று செயல்படும் இராமனைப்போல், எதற்கும் பின்னால்தான் இருப்பார்கள். நமது சுக்ரீவர்களும், அனுமார்களும், விபீஷணர்களும் தான் குதியாட்டமும் கும்மாளமும் போடுவார்கள். இது அன்றைய இராமயணக் காலம் தொட்டு இன்றைய இராவணலீலா காலம்வரை பளிங்கு போல் தெரியும் சரித்திர உண்மையாகும்.
- அன்னை மணியம்மையார் 

மணியம்மையாரின் தொண்டு தான் அய்யாவை 60,70,80,90 என்று ஆண்டுகளை கடக்கச் செய்தது.
- பேரறிஞர் அண்ணா 

அம்மா என்னிடம் தொண்டராக வந்த பிறகு தான் என்னுடைய கருத்துகள்பல ஆயிரம் புத்தகங்களாக வெளிவர முடிந்தது. 
- தந்தை பெரியார் 

நம் அறிவு ஆசான் அய்யா அவர்களை 96 ஆண்டு வரை வாழவைத்து அதற்குப்பிறகு ஐந்து ஆண்டுக்காலம் அவர்கள் விட்டுச் சென்ற பணியை அவர்கள்போட்டுத் தந்த பாதையில் எந்த விதச் சபலத்திற்கும் ஆளாகாமல் செய்து முடித்த வரலாற்றில் இப்படிப்பட்ட புரட்சித்தாயை இந்த நாடும் கண்டதில்லை என்று அறிவாளிகளும், ஆய்வாளர்களும் வியக்கும்  வண்ணம் வாழ்ந்தவர் நம் அன்னை ஈ.வெ. ரா மணியம்மை. 
- ஆசிரியர் கி. வீரமணி    

அந்தச் சிறுபெண்ணை அன்னை என்று அழைப்பதிலே என்ன தவறு 
- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 

என் குடும்பத்தைப் பொறுத்தவரையில் பெரிய பணக்காரத்தனம் இல்லையென்றபோதிலும் போதிய கவுரவமும் மதிப்பும் கொண்ட நடுத்தர நிலையில் கஷ்டம் இன்னெதென்று தெரிந்துக்கொள்ள முடியாத தன்மையில் இருந்து வந்ததுதான். வாழ்க்கைக்கும் போதிய வசதியான ஏதோ கொஞ்சம் இருந்தாலும் மனக்குறை இல்லாது மற்றவர்களின் ஆதரவையும் எதிர்பார்க்காது வாழத்தகுதியுடைய நிலையில் இருந்தது தான். 
- அன்னை மணியம்மையார் 

சிறுவயது முதல் என் தந்தையால் சுயமரியாதைக் கருத்துப்பட வளர்க்கப்பட்டுத் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி எங்கள் இல்லத்தில் தங்குவதில் அன்போடு பழகி, அவரது கருத்துக்களாலும், கொள்கையாலும், கவரப்பட்டதால், என் தந்தையார் மறைவுக்குப் பிறகு நான் ஒரு திடமான முடிவுக்கு வந்து அய்யா அவர்களின் தொண்டுக்கு நம்மால் ஆனதைச் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்து, இயக்கத்தில் தீவிரப்பணியில் சேர்ந்தேனே தவிர வேறில்லை. 
- அன்னை மணியம்மையார் 

தமிழ்ச் சமூதாயம் என்னும் குழந்தையை மடியிலே தூக்கிப்போட்டு மருந்தைப் பாலாடையில் குழைத்து வாயிலே புகட்டிய அன்னை மணியம்மையார். (கலைஞர் மு. கருணாநிதி)

அய்யா அவர்களிடம் நான் வந்து சேரும்போது இப்பொழுது எனக்கு என்ன வயதோ, அதே வயதுதான் அப்போது அய்யாவுக்கு. இப்பொழுது எனது உடலில் என்னென்ன கோளாறுகள் உள்ளதோ, அதைவிட அதிகமான கோளாறுகள் அய்யாவுக்கு இருந்தன. அப்படியிருந்த அய்யாவை கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி, உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை மணியம்மையாரையே சேரும்
 - பேரறிஞர் அண்ணா


1 comment:

  1. சிறப்பான தொகுப்பு...👏👏👏👏❤❤❤

    ReplyDelete