Tuesday 31 March 2020

அந்தப் பெண்மணி யார்? - கோவை அய்யாமுத்து

அந்தப் பெண்மணி யார்? -  கோவை அய்யாமுத்து 

1943-இல் நான் திருச்சூரில் வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கும்பகோணத்திலிருந்து எனது நண்பர் கா.மு. ஷெரீப் அவர்கள் வந்திருந்தார்கள். கும்பகோணத்துக்கப்பால் காவேரி நதியின் மத்தியில் பெரிய விஸ்தாரமான ஒரு திட்டுப் பூமியை வாங்கி அதிலே ஆட்டுப் பண்ணையும், விவசாயப் பண்ணையும் நடத்தி வருவ தாகவும், அதை நான் காண வேண்டும் என்றும் என்னை அழைத்தார். அவரும் நானும் திருச்சூரிலிருந்து ரயிலேறிப் புறப்பட்டோம்.
ஈரோட்டிலே…
ஈரோட்டிலே ரயில் மாறவேண்டும். திருச்சி செல்லும் வண்டியில் இரண்டாம் வகுப்பில் நுழைந்தோம். கீழ்த்தட்டு ஒன்றில் ஒரு ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு சிறிய பையன் நின்றுகொண்டி ருந்தான். அவனை விசாரித்தபோது நாயக்கருக்காக அவன் காத்திருப்பது தெரிய வந்தது. 
பிளாட்பாரத்தில் காய்கறி அல்லாத சோற்றுக் கடை வைத்திருப்பவனைக் கூப்பிட்டு முதல் தரமான சாப்பாடு கொண்டு வரும்படி சொன்னேன். பிரியாணி, சாப்ஸ், ஆம்லெட், குருமா என்று அவன் தன் கடையில் உள்ளதையெல்லாம் தட்டுகளில் கொணர்ந்தான். அத்தட்டுகளை எல்லாம் ஜமுக்காளத்தின் மீது வைக்கச் சொல்லி விட்டு, நாங்கள் இருவரும் பிளாட் பாரத்தில் நாயக்கரின் வருகைக்காகக் காத்திருந்தோம்.
இதெல்லாம் என்ன?
வண்டியினுள் நுழைந்த நாயக்கர் இதெல்லாம் என்னடாவென்று அருகில் இருந்த பையனைக் கேட்டார்.  நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் செலுத்தி, இவையெல்லாம் தங்களுக்காக வரவழைத்தேன் என்றேன்.
அய்யோ, என் உடல்நிலை முன் போல் இல்லை. பத்திய உணவு சாப்பிட்டு வருகிறேன். இதையெல்லாம் எதற்காகக் கொண்டு வந்தீர்கள்? என்று சங்கடத்துடன் கேட்டார்.
என்ன செய்வது? நீங்கள் பிரியமாகச் சாப்பிடுவீர்கள் என்றெண்ணி ஆர்டர் கொடுத்து விட்டேன். ஓட்டல்காரனுக்குப் பணமும் கொடுத்தாகிவிட்டது என்று இழுத்தேன்.
சரி சாப்பிட்டுத் தொலைக்கிறேன் என்று தட்டுகளையெல்லாம் ஒருவாறு காலி செய்துவிட்டார். நானும் நண்பர் ஷெரீப் அவர்களும் வெளியில் நின்று கொண்டிருந்தோம்.  அப்போது, பின்னல் ஜடையுடன் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.  நான் ஒரு தப்பு செய்துவிட்டேன் என்றார் பெரியார் அப்பெண்ணிடம்.

என்ன அது?

பிரியாணி சாப்பிட்டுவிட்டேன்.

அய்யோ, ஏன் சாப்பிட்டீர்கள்?

எனது மிகப் பழைய நண்பரொருவர் பிரியத்தோடு வற்புறுத்தினார். . . தட்டமுடியவில்லை.

அவருக்கு என்ன தெரியும்?

உங்கள் நண்பருக்கு உங்கள் உடல் நிலை எப்படித் தெரியும்? நீங்கள் மறுத்திருக்க வேண்டாமா?

மேற்கண்டவாறு அப்பெண்ணும் பெரியாரும் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்பென்சர் சிப்பந்தி யொருவன் எங்களைக் கடந்து சென்றான். ஓடிப்போய் ஒரு சோடா கொண்டுவா என்று அவனிடம் நான் கூற, அவனும் வெகு விரையில் சோடாவும் டம்ளருமாக ஓடி வந்தான். சோடாவைத் திறந்து டம்ளரில் ஊற்றி வண்டிக்குள் இருந்த நாயக்கரிடம் கொடுக்கச் சொன்னேன்.

யாருக்கு? என்று பட்லரை விசாரித்து டம்ளரைக் கையில் வாங்கிக் கொண்டு வண்டியை விட்டுக் கீழே இறங்கி எனது பக்கத்தில் வந்து நின்றார் நாயக்கர். அப்பெண்ணும் அருகில் வந்து நின்றாள்.

பெண்ணு யாரு?

இப்பெண் யாருங்க, புதிதாய் இருக்கிறது? அவள் உங்களைப் போடும் போடு எனக்கே பயமாயிருக்கிறது! என்றேன். பெரியார் வேலூரில் ஒரு நண்பரின் மகள். ஸ்கூல் பைனல் வரை வாசித்திருக்கிறது. நமது இயக்கத்தில் அதிக பற்றுதல். எனது காரியதரிசி போல என்னுடன் இருந்து வருகிறது என்றார்.
வண்டி புறப்படும் சமயமாயிற்று. பெரியார் உள்ளே நுழைந்து படுத்துக் கொண்டார். நானும், நண்பர் ஷெரீபும் அதே பெட்டியில் ஏறிப்படுத்துக் கொண்டோம். அதிகாலைக்கு முன்னரே ரயில் திருச்சி ஜங்ஷனை அடைந்தது. நாங்கள் மூவரும் கீழே இறங்கு முன்னர், அப்பெண் எங்கள் வண்டியின் முன்னே வந்து நின்றாள்!

என்ன மணி!  நல்ல இடம் கிடைத்ததா? நன்றாகத் தூங்கினாயா?
ஓ! முதல் தரமான இடம்.  சர்வென்ட்ஸ் கம்பார்ட்மெண்ட் (முதல், இரண்டு வகுப்பு பிரயாணிகளின் வேலைக்காரர்களுக்கென்று அமைக்கப் பட்டிருக்கும் தனிப்பெட்டி) காலியாக இருந்தது. நன்றாகத் தூங்கினேன்.

அதுதான் பொய். இந்தப் பெண் தூங்கவே இல்லை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் வண்டி நின்றதும், ஓடிவந்து உங்களை எட்டிப் பார்த்துவிட்டுப் போனது என்று ஒரு போடு போட்டார் நண்பர் ஷெரீப். இப்படியும் பூலோகத்தில் ஒரு பெண் இருப்பாளா என்று நான் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். அந்தப் பெண் பிற்காலத்தில் மணியம்மையாவார்.

(கோவை அ. அய்யாமுத்து எழுதிய நான் கண்ட பெரியார் என்ற நூலிலிருந்து).

No comments:

Post a Comment