Saturday 30 May 2020

திராவிட காணொளிகள்

திராவிட காணொளிகள்

திரு. ஜெயரஞ்சன் அவர்களுடன் ஓர் உரையாடல்



பெரியாரிய வாழ்வியல் இன்பமா? துன்பமா?


எழுத்தாளர் பூ.கொ. சரவணன் உடன் ஓர் உரையாடல்



சுயமரியாதை இயக்கமும் பெண்களும் - திரு. கொளத்தூர் மணி


திராவிட நாட்காட்டி - மே

திராவிட நாட்காட்டி

மே 1
தொழிலாளர் நாள் (1886 முதல்)
1935 - “பகுத்தறிவு” மாத இதழ் தொடக்கம்
2007 - “பெரியார்” திரைப்படம் வெளியான நாள்
மே 2
1925 - “குடிஅரசு” கிழமை இதழ் துவக்கம்
2010 - டில்லி பெரியார் மய்யம் திறப்பு விழா (ஜசோலா)
மே 3
பத்திரிக்கை சுதந்திர நாள்
உலக சூரிய நாள்
மே 5
1818 - காரல்மார்க்ஸ் பிறப்பு
1914 - கா. அயோத்திதாச பண்டிதர் மறைவு
1953 - சர். ஆர்.கே. சண்முகம் மறைவு
1976 - தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்றம்
வணிகர் நாள் (1983)
மே 6
1836 - உளவியல் தந்தை சிக்மன் பிராய்டு பிறப்பு
மே 7
1814 - ராபர்ட் கால்டுவெல் பிறப்பு (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்)
1883 - தமிழவேள் உமா மகேசுவரனார் பிறப்பு
உலக ஆஸ்துமா நாள்
மே 8
சர்வதேச பறவைகள் இடப்பெயர்ச்சி நாள்
உலக செஞ்சிலுவை நாள்
1948 - தூத்துக்குடி திராவிடர் கழக மாநாடு
1980 - பெரியம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
1980 - மயிலை சீனி. வேங்கடசாமி மறைவு
மே 9
1930 - ஈரோட்டில் 2ஆவது மாகாண சுயமரியாதை மாநாடு
1941 - தமிழவேள் உமா மகேசுவரனார் மறைவு
மே 10
1921 - நீதிக்கட்சி அரசு பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாள்
2000 - கழக சார்பில் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் (28 கோயில்கள் முன்)
மே 11
1933 - அன்னை நாகம்மையார் மறைவு
1946 - மதுரை கருஞ்சட்டைப்படை மாநாட்டுப் பந்தல் பார்ப்பனர் தூண்டுதலால் எரிப்பு
1971 - இராவண காவியம் நூலுக்குத் தடை நீக்கம்
செவிலியர் நாள்
1998 - தேசிய தொழில்நுட்ப நாள்
மே 12
1933 - திருச்சியில் கிறித்துவ திருமணத்தைத் தடையை மீறி நடத்தி வைத்ததற்காகப் பெரியார் கைது.
2005 - தேசிய தகவல் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மே 13
2008 - கலைஞர் மு. கருணாநிதி 5 ஆவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்பு.
தேசிய ஒருமைப்பாட்டு நாள்
மே 14
1796 - எட்வர்ட் ஜென்னர் பெரியம்மை நோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு.
உலக பன்னாட்டு அன்னையர் நாள்
1958 - கோவில் தேவராயன்பேட்டை நடேசன் ஜாதி ஒழிப்பு போரில் மறைவு
மே 15
உலக தந்தையர் தினம்
1998 - ஈரோடு - சமூகநீதி மாநாடு
மே 16
1998 - ஈரோடு - திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு
2006 - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - திமுக அரசு அமைச்சரவையின் முடிவு
மே 17
1981 - தமிழகமெங்கும் மனுதர்ம நகல் எரிப்புக் கிளர்ச்சி
2005 - உலக தகவல் தொடர்பு நாள்
மே 18
1872 - பெர்ட்ரண்ட் ரசல் பிறப்பு
மே 19
2001 - எஸ். தவமணிராசன் மறைவு
1881 - துருக்கி கமால்பாஷா பிறப்பு

மே 20
1845 - கா. அயோத்திதாச பண்டிதர் பிறப்பு
1921 - மாநிலக்கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களை சேர்க்க கமிட்டி அமைக்கப்பட்டது
மே 21
1959 - டாக்டர் தருமாம்பாள் மறைவு
பயங்கரவாத எதிர்ப்பு நாள்
மே 22
1772 - ராஜா ராம்மோகன்ராய் பிறப்பு
1939 - இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற தந்தை பெரியார் விடுதலை
மே 23
1958 - திருவையாறு மஜித் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் மறைவு
1981 - உடுமலை நாராயணகவி மறைவு
மே 24
காமன்வெல்த் நாள்
1958 - இடையாற்றுமங்கலம் நாகமுத்து ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு மறைவு
1967 - திருவாரூர் அருகில் உள்ள விடயபுரத்தில் கடவுள் மறுப்பு ஆத்மா மறுப்பு வாசகம் தந்தை பெரியாரால் உருவாக்கம்
மே 25
1866 - மூ. சி. பூரணலிங்கம் பிள்ளை பிறப்பு
மே 26
1989 - பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் மறைவு
மே 27
1953 - தமிழகமெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைப்புக் கிளர்ச்சி
1963 - ஜவஹர்லால் நேரு மறைவு
மே 28
1928 - அருப்புக்கோட்டை அடுத்த சுக்கில நத்தத்தில் பார்ப்பனியம் ஒழிந்த (முதலாவது) சுயமரியாதைத் திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைப்பெற்றது.
மே 30
1778 - வால்டேர் மறைவு
மே 31
1981 - இலங்கையில் யாழ் பொது நூல் நிலையம் எரிப்பு
புகையிலை எதிர்ப்பு நாள்.
தொகுப்பு: இராஜராஜன் ஆர்.ஜெ

அண்ணல் அம்பேத்கரின் தேசியம் - டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே

அண்ணல் அம்பேத்கரின் தேசியம் - டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே 

ண்ணல் அம்பேத்கர் குறித்து பல்வேறு கட்டுக்கதைகளும் அவதூறுகளும் இந்துத்துவவாதிகளால் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுக்கதைகள், அவதூறுகளை தொடர்ச்சியாக அம்பேத்கரியவாதிகளும் மறுத்து எழுதி வருகிறார்கள். அண்ணல் அம்பேத்கரை சரியாக வாசித்தாலே இந்துத்துவத்தை தோலுரிக்க முடியும். ஆனால், அண்ணல் அம்பேத்காரை பற்றிய பொய் தகவல்களையும் அவரது சிலையை ஒரு பிம்பமாக வைத்து வழிபடவைத்து அவரை இந்துத்துவம் செரிக்க பார்க்கிறது. ஆனால், அது என்றும் நடக்காது.

அண்ணல் அம்பேத்கர் குறித்த இந்துத்துவ கட்டுக்கதைகளுக்கு அறிஞர் டாக்டர். ஆனந்த் தெல்தும்ப்டே எழுதிய "முஸ்லிம்கள் குறித்து அம்பேத்கர் - கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும்" என்ற புத்தகம் முக்கியமானது. 2003 ஆண்டு வெளியான இந்த புத்தகம், இந்துத்துவத்தின் பொற்காலமான இன்றைய மோடியின் காலத்திலும் அப்படியே பொருந்திப்போகிறது. அதுவே இந்த புத்தகத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

இந்தப்புத்தகத்தில் அம்பேத்கர் குறித்து இந்துத்துவம் பரப்பிவரும் 11 கட்டுக்கதைகளையும் அதன் உண்மை விவரங்களையும் எடுத்துக்காட்டும் கட்டுரைகள் இடம்பெறுகிறது. அந்த கட்டுக்கதைகளில் ஒன்று அம்பேத்கர் இந்துத்துவம் சொல்லும் பண்பாட்டு தேசியத்தை நம்பினார் என்பதே. அதனை பல ஆதாரங்களுடன் ஆசிரியர் மறுக்கிறார். இதனை வைத்து அம்பேத்கரின் தேசிய பார்வை எப்படி இருந்தது என்பதை நம்மால் ஓரளவுக்கு உணர்ந்துக்கொள்ள முடியும்!   

முதலில் இந்துத்துவம் சொல்லும் "பண்பாட்டு தேசியவாதம்" என்றால் என்ன என்பதை விளங்கிக்கொண்டால் தான் அம்பேத்கார் அதை நம்பினாரா? எதிர்த்தாரா? என்பதை புரிந்துக்கொள்ள உதவும்.

பண்பாட்டு தேசியவாதம் என்பது இந்து தேசியவாதத்தின் - இன்னும் சரியாகச் சொன்னால் பார்ப்பன தேசியவாதத்தின் மென்மையான பெயர் தான் என்பதை நாம் அறிவோம். இந்துத்துவ சொற்றொடர் அகராதியில் உள்ள வேறெந்தத் தொடரையும் போலவே இதுவும் தன் உருவாக்கத்திலேயே மேலாதிக்கத் தன்மை உடையதாகவும், தன் பொருளில் தெளிவற்ற - நம்பமற்ற தன்மை உடையதாகவும் இருக்கிறது.

ஒரு தேசம் - ஒரு மக்கள் - ஒரு பண்பாடு என்பது தான் பண்பாட்டு தேசியவாதத்தின் சாரமாகும் என பாஜக அறிக்கையில் விளக்கம் தரப்பட்டுள்ளது. "நமது தேசியவாத தரிசனம் வெறுமனே பாரதத்தின் புவியியல் அல்லது அரசியல் அடையாளத்துக்குக் கட்டுப்பட்டது அல்ல; மாறாக, காலம்காலமாகவுள்ள நமது பண்பாட்டுப் பாரம்பரியத்தாலேயே அது குறிக்கப்படுகிறது என்கிறது பாஜகவின் தேர்தல் அறிக்கை. மேலும் அது கூறுவதாவது: "எல்லா பிரதேசங்களுக்கும் மதங்களுக்கும் மொழிகளுக்கும் மையமான இந்த பண்பாட்டுப் பாரம்பரியம், ஒரு நாகரிகத்தின் அடையாளமாகும். அதுவே இந்தியாவின் பண்பாட்டுத் தேசியவாதமாகும். அதுவே இந்துத்துவத்தின் அச்சாணியாகும்." சனாதன தருமமும் இந்திய தேசியவாதம் என்பதும் ஒரே பொருளுடையது என்கிறது அது.

ராமஜென்ம பூமி என்பதையும், ராமரையும் இந்த தேசியவாதத்தின் முக்கிய குறியீடாக இந்துத்துவம் கருதுகிறது. "இந்திய உணர்வின் மைய பொருளாக ராமனே இருக்கிறான்" என்கிறது பா.ஜ.க. வின் பண்பாட்டுத் தேசியவாதச் சொல்லாடல்!

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரக்கணக்கான உயிர்கள் படுகொலை செய்யப் பட்டதற்கும் இந்தியர்களின் இயல்பான நற்குனம் பற்றிய லட்சக்கணக்கானவர்களின்
நம்பிக்கை ஒழிக்கப்பட்டதற்கும் காரணமான ராமஜென்மபூமி இயக்கமானது, பண்பாட்டு தேசியவாதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்தி உள்ளது என சங்கப்பரிவாரம் பெருமை பொங்க வருணிக்கிறது. இப்படிப்பட்ட குரூரமான பண்பாட்டு தேசியவாதத்தை டாக்டர் அம்பேத்கர் ஆதரிப்பார் என கற்பனை செய்யவும் முடியுமா?

இனி அம்பேத்கார் இந்த பண்பாட்டு தேசியத்தை எப்படி பார்த்தார் என்பதை பார்ப்போம்.

-     பண்பாடு என்பது ஒரு வாழ்க்கை முறை. அரசியலில் இருந்தும் மிகவும் மாறுபட்ட ஒன்று என்பதை நாம் அறிவோம். பழங்காலத்திலிருந்தே ஒரு ஆற்றோட்டம் போல் அது தொடர்ந்து வருகிறது. தான் வரும் வழியில் பலவற்றையும் உள்வாங்கி கொண்டு வற்றாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது. பண்பாடு இடையறாதது.

-     இந்த மாதிரியான பண்பாட்டுத் தேசியவாதம் பற்றி டாக்டர் அம்பேத்கார் என்ன கூறுவார்? இந்தியா பல தேசம் மற்றும் பண்பாடுகளின் கூட்டமைப்பு ஆகும் என வாதிடுகிறது அம்பேத்காரிய உலகப் பார்வை (weltanschauung)

-     பண்பாட்டு தேசியவாதம் என்னும் கட்டுமானத்தை அம்பேத்காரிய உலகப்பார்வையின் மீதான கருத்தியல் தாக்குதல் என்றே வரையறுக்க முடியும். எடுத்துக்காட்டாக, பண்பாட்டு தேசியவாதத்தின் சாரமாக அமைந்துள்ளதாகக் கருதப்படும் "ஒரு தேசம் - ஒரு மக்கள் - ஒரு பண்பாடு" என்பதை எடுத்துக்கொள்வோம். இட்லரின் நாஜி முழக்கமான "ஜன் வோக், ஜன் ரைக், ஜன் பியூரர்" (ஒரு இனம், ஒரு   பேரரசு, ஒரு மக்கள்) என்பதை இது எதிரொலிக்கிறது. 

-     டாக்டர் அம்பேத்கர் "இந்துமதத்தின் புதிர்கள்" என்ற தன் நூலில் ராமன் - கிருஷ்ணன் பற்றிய புதிரைப் பற்றி எழுதுகிறார். இந்த நூலை எழுதியதன் நோக்கத்தை விளக்கி முகவுரையில் அவர் எழுதினார் "இந்துமதம் சனாதனமானது (மாற்றமில்லாதது, என்றுமுள்ளது) அல்ல என்பதை மக்கள் அறியும்படிச் செய்ய விரும்புகிறேன். இந்நூலின் இரண்டாவது நோக்கம், பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை இந்து மக்கள் திரளினரின் கவனத்துக்கு கொண்டு வருவதும், தங்களை பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றி தவறாக வழிகாட்டி வந்திருக்கிறார்கள் என்பதை அவர்களே சுயமாகச் சிந்திக்கும்படித் தூண்டுவதும் ஆகும். 

-     தன் சாதியைக் கடந்துவிட்ட ஒரே குற்றத்துக்காகவே சம்பூகன் என்ற சூத்திரரைக் கொன்ற ராமன், இந்தியாவின் மனசாட்சி எனப்படுகிறான். இத்தனைக்கும் இன்றும் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சூத்திரர்களும் தலித்துகளுமாகவே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு ஒழுக்கங்கெட்ட, நன்னடத்தையற்ற, பிற்போக்கான, நியாயமற்ற, சாதிவெறி பிடித்த ஒருவனை நாயகனாகச் சித்தரிக்கும் ராமாயணத்தை வால்மீகி எழுத என்ன தேவை என்று வியக்கிறார் டாக்டர். அம்பேத்கர்.

-     இந்திய அரசியல் சட்ட அமைப்பில், மற்றவர்களுடன் சேர்ந்து, மிகுந்த முயற்சி எடுத்து அவர் சேர்ந்திருந்த தாராளவாத, மதச்சார்பற்ற கட்டுமானங்களை இந்த இயக்கம் தகர்த்துள்ளது. அப்படி இருந்தும் அவரை இந்த கேடுகெட்ட வழிமுறையின் ஆதரவாளர் எனத் தீட்டுகிறார்கள்! அவர்களின் சனாதன - சனாதன சன்ஸ்கிருதியை - அம்பேத்கர் அறவே அருவருத்தார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? தன் நடை - உடை - வாழ்க்கைப் பாணிகளில் கூட ஒரு நவீன பகுத்தறிவாளராக விளங்கிய டாக்டர் அம்பேத்கர், 'சனாதனம்' (மரபு, பழமை) என்பதற்குள் அடக்கப்படக்கூடிய ஒவ்வொன்றையும் எதிர்ப்பதில் இரும்பு போல உறுதியாக நின்றார்.

-     அவர் எழுதுகிறார் "ஐயம் கொள்வதற்கு பார்ப்பனர்கள் இடமே தரவில்லை. மிகவும் கயமைத்தனமான பிடிவாதக் கருத்தை பொதுமக்களிடையில் அவர்கள் பரப்பி உள்ளார்கள். வேதங்கள் ஒருபோதும் தவறாவதில்லை என்பதே அக்கருத்து. இந்துக்களின் அறிவு நின்றுவிட்டதென்றால், இந்து நாகரிகமும் பண்பாடும் தேக்கமுற்று முடைநாற்றமெடுக்கும் ஒரு குட்டையாக ஆகியுள்ளது என்றால் அதற்கு இந்தக் கருத்தே காரணம். இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தக் கருத்தை வேரோடும் மண்ணோடும் சேர்த்து அழித்து ஒழிக்க வேண்டும். வேதங்கள் என்பவை ஒரு உதவாக்கரை நூல் தொகுதி. அவற்றைப் புனிதமானவை என்றோ பிழையற்றவை என்றோ கூறுவதற்கு ஒரு நியாயமும் இல்லை. பிற்காலத்தில் வேதத்துக்குள் செருகப்பட்ட புருஷ - சூக்தம் எனப்படும் பகுதி, பார்பனர்களைப் பூமியின் அதிபதிகள் எனக்குறிக்கிறது. இதனால் மட்டுமே பார்ப்பனர்கள் வேதங்களை புனிதமானவை என்றும் ஒருபோதும் பொய்க்காதவை என்றும் உருஏற்றி வைத்திருக்கிறார்கள்.

-     தேசியவாதத்தை பொறுத்தவரை தேசம் - தேசிய இனம் - தேசியவாதம் என்பவற்றை கூட்டு உணர்ச்சி, உளவியல் உணர்ச்சி என்ற முறையில் தெளிவாக வரையறுக்கிறார் டாக்டர் அம்பேத்கர். இவற்றுக்கான காரணங்கள் எண்ணென்ற காரணிகளில் அமையலாம். பண்பாடு என்பது அவற்றில் ஒன்று மட்டுமாகவே இருக்க முடியும். 'இந்தியாவில் சாதிகள்'என்ற தன் கட்டுரையில் அவர் இந்தியாவின் பண்பாட்டு ஒருமைபாட்டைத் தெளிவாக விவரிக்கிறார்: "அதன் பண்பாட்டு ஒருமைப்பட்டைப் பொறுத்தவரை இந்திய தீபகற்பத்தை விஞ்ச எந்த நாடும் கிடையாது. அது புவியியல் ஒருமுறைப்பாட்டை மட்டும் கொண்டிருக்கவில்லை. மாறாக, எல்லாவற்றுக்கும் மேலாக அதிக ஆழமும் அடிப்படையும் கொண்ட - ஒருமைப்பாட்டை இந்த நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை பரவியிருக்கும் ஐயத்துக்கிடமில்லாத பண்பாட்டு ஒருமைப்பாட்டை - அது பெற்றுள்ளது." ஆனால் உடனடியாகவே, இந்த வெளித்தோற்ற அளவிலான 'ஒரே சீர்மை' யில் சாதிகள் என்ற சிக்கல் நிலவுவதை எடுத்துக்காட்டுகிறார். "ஏற்கனவே ஒருபடித்தாய் இருக்கும் அமைப்பு பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது தான் சாதி" என அவர் குறிப்பிடுகிறார். இவ்வாறு சாதியானது, இந்தியாவின் பண்பாடு ஒருமை/ ஒரே சீர்மை தானாகவே பல கூறுகளாகப் பிரியும் படி செய்கிறது; 'எல்லோரும் ஒன்று' என்ற உளவியல் உணர்ச்சி வளராதபடி செய்கிறது. அனால் அந்த உணர்ச்சி இருந்தால்தானே அது "தேசம்" ஆகும்? 

-     தன் “சாதிகள் ஒழிப்பு"நூலில், "ஒரு சமுதாயத்தை அமைக்கும் அடிப்படைக் கூறுகளை" அவர் ஆராய்கிறார்; "ஒருவர் ஒருவருடன் கலந்து உறவாடுவது தான்" அந்த அடிப்படைக் கூறு எனக் காண்கிறார். ஒரு சமுதாயம் உருவாவதற்கு ஆன அடிப்படைக் காரணி என்பதில் பண்பாட்டை அவர் தெளிவாகப் புறக்கணித்துவிடுகிறார்.

-     மனிதர்கள் அருகருகில் வசிப்பதாலேயே அவர்கள் ஒரு சமுதாயமாக ஆகிவிடுவதில்லை.  அவ்வாறே, சக மனிதர்களிடமிருந்து, நெடுந்தொலைவு சென்று வாழ்வதாலேயே ஒருவர் தான் சார்ந்த சமுதாயத்தின் உறுப்பினராக இல்லாமல் போய்விடுவதும் இல்லை. இரண்டாவதாக பழக்க வழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் ஆகியவற்றில் காணப்படும் ஒத்த தன்மை மனிதர்களை ஒரு சமுதாயமாக ஒன்றிணைக்கப் போதுமானது ஆவதில்லை. செங்கற்களை ஒருவர் மற்றொருவருக்கு கைமாற்றித் தருவதைப் போலவே பழக்கவழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் போன்றவற்றையும் ஒரு கூட்டத்தாரிடமிருந்து மற்றொரு கூட்டத்தார் எடுத்துக்கொள்ளலாம்; இதனால் அவ்விரு கூட்டத்தாருக்கும் இடையில் ஒத்தத்தன்மை இருப்பது தோன்றலாம். எப்புறமும் விரிவுறுதல் மூலமே பண்பாடு பரவுகிறது. அதனால் தான் வெவ்வேறு பழங்குடி இனங்கள் ஒன்றுக்கொன்று அருகருகாக வசிக்காத போதும் அவற்றின் பழக்கவழக்கங்கள் - நம்பிக்கைகள் - சிந்தனைகள் முதலியவற்றில் ஒத்த கூறுகள் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், பழங்குடியினரிடையே இந்த ஒத்தத்தன்மை காணப்படுவதால், பழங்குடியினர் எல்லாருமே ஒரே சமுதாயமாக இருப்பதாக எவரும் கூறமுடியாது. குறிப்பிட்ட அம்சங்களில் ஒத்தத்தன்மை பெற்றிருப்பதே ஒரு சமுதாயமாக அமைவதற்குப் போதுமென்று ஆவதில்லை என்பது தான் இதற்குக்   காரணம்.

-     மனிதர்கள் தமக்குப் பொதுவான தன்மைகளைப் பெற்றிருப்பதால்தான் ஒரு சமுதாயமாக உருக்கொள்கிறார்கள். ஒத்த தன்மைகளைப் பெற்றிருப்பது என்பதும் பொதுவான தன்மைகளை பெற்றிருப்பது என்பதும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டதாகும். ஆயின், மக்கள் ஒருவரோடொருவர் கலந்து உறவாடுதல் மட்டுமே தமக்குப் பொதுவான தன்மைகளை அடைந்து கொள்ளமுடியும். இதையே இன்னொரு விதத்தில் கூறுவதானால், கலந்துறவாடுவதலையே சமுதாயம் நடைமுறை உண்மையாக ஆகிறது - அதைவிடவும், கலந்துறவாடுவதிலேயே சமுதாயம் நடைமுறை உண்மையாக ஆகிறது எனலாம்.

-     இந்துக்களில் உள்ள வெவ்வேறு சாதியினர் கொண்டாடும் திருவிழாக்கள் ஒரேவிதமாகவே இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். வெவ்வேறு சாதிகள் ஒரேவிதமான திருவிழாக்களை இணையாகக் கொண்டாடினாலும், அது அவர்களை ஒரே ஒருங்கிணைந்த முழுமையாக ஒன்றுபடுத்தவில்லை.  ஒன்றுபட வேண்டுமானாலும் ஒருவர் ஒரு பொது நடவடிக்கையில் பங்களிப்பதும் பங்கு கொள்வதும் - தேவையாகும் - அப்போது தான் மற்றவர்களைத் தூண்டும் அதே உணர்ச்சிகள் தன்னிலும் எழும்பும். கூட்டு நடவடிக்கைகளில் தனிமனிதர் பங்கு கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு நிலவும் போதுதான், அந்த பொதுநடவடிக்கையின் வெற்றியைத் தன் வெற்றியாகவும் அதன் தோல்வியைத் தன் வெற்றியாகவும் அதன் தோல்வியை தன் தோல்வியாகவும் அவர் உணர்வார். இத்தகைய பொதுச்செயல்பாட்டை சாதிமுறை தடுக்கிறது. இவ்வாறு கூட்டிசெயல்படுவதை சாதிமுறையானது தடுப்பதால், இந்துக்கள் ஒருங்கிணைந்த வாழ்வையும் தமக்குப் பொதுவானதொரு உணர்வையும் கொண்ட ஒரு சமுதாயமாக உருவாவதையும் சாதிமுறை தடுக்கிறது.

-     இந்துத்துவப் பிரபலங்கள், இந்து நாகரிகமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது எனக் கொண்டாடுகிறார்கள். அண்ணல் அம்பேத்கார் இவர்களுக்கு பதில் சொல்லுகிறார். "தானும் தன் இனத்தாரும் தொடர்ந்து உயிர் பிழைத்திருப்பதில் ஒரு இந்து ஆறுதல் அடைந்து பயனில்லை. தன் பிழைப்பின் தரம் எத்தகையது என்பதைத்தான் அவர் எண்ணிப்பார்க்க வேண்டும். அதை அவர் செய்வதில்லை என்றால் வெறும் உயிர்தரிப்பு பற்றிப் பெருமை கொள்வதை அவர் நிறுத்திவிட நேரும் என்பது உறுதி. ஒரு இந்துவின் வாழ்க்கை தொடர்ச்சியான தோல்விகளைக் கொண்ட வாழ்க்கையாகவே இருந்து வந்துள்ளது. முடிவற்ற வாழ்வாக அவருக்கு காட்சியளிக்கும் வாழ்க்கை, முடிவற்று வாழ்ந்து கொண்டிருப்பதல்ல, முடிவற்று நசிந்து கொண்டிருப்பதே ஆகும். உண்மையை ஏற்க அஞ்சாத சரியான மனம்படைத்த எந்த ஒரு இந்துவும், இப்படிப்பட்ட பிழைப்பைக் குறித்து வெட்கித் தலைகுனியவே செய்வார்.”
   
-     இந்திய தீபகற்பத்தில் பண்பாட்டுப் பொதுத்தன்மை இருப்பதாக 'இந்தியாவில் சாதிகள்' என்ற தன் தொடக்க கால எழுத்துகளில் ஒப்புக்கொண்ட அம்பேத்கர் பின்னர் அந்த முந்திய கருத்தையும் மறுக்கும் நிலைக்கு வருகிறார். "பொதுவான இந்திய பண்பாடு என ஒன்று ஒருபோதும் இருந்ததில்லை என்பதையும் வரலாற்றில் பார்ப்பனிய இந்தியா, பவுத்த இந்தியா, இந்து இந்தியா என மூன்று இந்தியாக்கள் இருந்து வந்துள்ளன. ஒவ்வொன்றும் அதனதன் பண்பாட்டைக் கொண்டுள்ளன என்பதையும் கண்டுணர வேண்டும். இரண்டாவதாக முசுலீம்களின் படையெடுப்புக்கு முற்பட்ட இந்தியாவின் வரலாறு, பார்பனீயத்திற்கும் புத்த சமயத்துக்கும் இடையிலான தீராத மோதலின் வரலாறாகவே இருந்து வந்ததை அறிந்துக்கொண்டாக வேண்டும். இந்து இரு மெய்விவரங்களையும் அறிந்தேற்காதவர், இந்தியாவின் மெய்யான வரலாற்றை - அதனூடாகத் தொடர்ந்து வரும் பொருளையும், நோக்கத்தையும் வெளிப்படுத்தும் வரலாற்றை ஒருபோதும் எழுதமுடியாது


-     இந்துத்துவ சக்திகள், இந்தியாவை ஒரு தேசம் என வலியுறுத்தி வரும் நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஏளனம் செய்கிறார்: "இந்தியாவை ஒரு தேசமாக மதிப்பிடுவது உண்மையில் ஒரு கற்பனைக் கருத்தை வளர்த்துவிடுவதே ஆகும்" வரலாற்று ரீதியாக இந்த மனிதர்கள் சாதிகளின் இருப்பைக் கண்டுகொள்ளாததன் மூலம், இந்திய தேசம் என்ற கற்பனையை ஊதிப் பெருக்கி வந்திருக்கிறார்கள்.  

-     தேசியவாதத்தை சாதியம் தடுக்கிறது என்பதை வன்மத்துடன் மறுக்கிறார்கள் இந்துத்துவவாதிகள். இந்தியா ஒரு தேசம் என அவர்கள் கற்பித்துக்கொள்கிறார்கள். எனவே இந்திய தேசம் என்று பேசாமல், இந்திய மக்கள் என்று எவரேனும் பேசினால் அவர்கள் மிகவும் வெகுண்டெழுகிறார்கள். இந்த மனப்பான்மையை நன்றாகவே புரிந்துக்கொள்ள முடிகிறது. அரசியல்வாதிகளிலும் வரலாற்றாளர்களிலும் பெரும்பாலோர் பார்பனர்களாய் இருக்கிறார்கள். எனவே இவர்கள் தம் முன்னோரின் குற்றங்களை வெளிப்படுத்தவோ அவர்கள் இழைத்த தீமைகளை ஒப்புக்கொள்ளவோ துணிவுற்றவர்களாக இருக்கமாட்டார்கள்.


-      நடைமுறையில் தீண்டப்படாதவர்களும் சாதி இந்துக்களுக்கும் இடையில் எந்த கலந்துறவாடலும் இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பண்பாட்டு தேசியவாதம் என்று சங்கப்பரிவாரத்தின் கோயபெல்ஸ் பாணி புழுகுணித் திட்டங்களுக்கு மட்டுமே சேவை செய்யமுடியும்.

-     பட்டியல் சாதிகள் இந்து சமூகத்தின் மதச் சடங்குகளையே கடைபிடிக்கிறார்கள். இந்துக்களின் மதச்சார்பான - மதசார்பற்ற விதிமுறைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்து திருவிழாக்களையே அவர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால், இவற்றிலிருந்து அவர்களுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. அதற்கு நேர்மாறாக, அவர்களின் உடல்ரீதியாகவும், வசிப்பிடமாகவும் தள்ளியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஊருக்கு நடுவில் அவர்கள் வசிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஊருக்கு வெளியே சேரிகளில் - புறம்போக்குகளிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு சிற்றூருக்கும் தீண்டத்தகாத ஒரு பகுதி இருக்கிறது. அப்பகுதிகள் ஊருடன் இணைக்கப்பட்டிருந்தாலும் ஊரின் பகுதியாக இருப்பதில்லை. இந்து மக்கள் கூட்டத்திலிருந்து ஒதுக்கி - தனிப்பிரித்து அவர்கள் ஒரு நடத்தை முறைக்குள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் - அதுவோ ஒரு அடிமை நிலைக்கே பொருந்தக்கூடியது.


-     உண்மையில் வரலாற்றில் வெகு தொடக்கத்தில் இருந்தே புவி முழுவதிலும் பெரும் புலப்பெயற்சிகள் நடந்தேறியுள்ளன. எனவே, நவீன உலகில் புகுந்துள்ள எந்த தேசமும் தனித்தன்மையை கூறமுடியாது. தம் இன்றைய பண்பாட்டின் கூறுகள் தம் மண்ணிலேயே பிறந்தன என்றும் எனவே அவை ஒரு தேசத்திற்குரியவை என்றும் எந்த தேசமும் உரிமை கொண்டாட முடியாது. சங்கப்பரிவாரம் தன் பாணி பண்பாட்டு தேசியவாதத்தை நிறுவவதற்கே இந்தியப்பண்பாட்டின் தனித்தன்மை பற்றி பேசுவதானால், இந்தியரின் தனித்தன்மை என்ன என்பதை அது விளக்கியாக வேண்டும்.

-     நம் பண்பாட்டு மூலவளத்தைப் கூர்ந்து பார்வையிட்டோமானால் அதில் பல வெளிநாட்டுப் பண்பாடுகளின் பங்களிப்புகளைக் காண்போம். நமது எழுத்துகளின் வரிவடிவங்கள், நம் கலைவடிவங்கள், கல்விக்கழகங்கள், சிற்பம், நடனங்கள், உணவு வகை, இசை, மொழி, ஆடை என ஏறக்குறைய எல்லாமே இந்த துணைக்கண்டத்துக்கு வெளியிலுள்ள பகுதிகளில் தோன்றி வந்துள்ளன. அசிரியர், பொனீசியர், கிரேக்கர், ரோமர், பாரசீகர், மத்திய கிழக்கைச் சேர்ந்த ஷகர்கள், துருக்கிய - சீன குஷானர்கள், அகிர்கள். குர்ஜார்கள், ஆப்கனியர், அராபியர், இறுதியாக ஆகிய எல்லோருமே நம் வரலாற்றின் போக்கில் தம் பண்பாட்டைப் பிரிக்க முடியாதபடி ஆழமாக பதிந்து சென்றிருக்கிறவர்கள் தான்; அவர்களில்லாத இந்தியப்பண்பாடு என்பதைக் கற்பனை செய்யவும் முடியாது. இந்த முடிவற்ற பண்பாட்டுபாரம்பரியம் மொத்தத்தையும் முற்றிலும் இந்தியப்பண்பாடு எனது தோன்ற செய்வதற்காக அதை சங்கப்பரிவாரம் தன் "சனாதன தருமத்தின்' முற்றுடைமையாக ஆக்கிக்கொள்ள முயலும் போது அவர்களின் பண்பாட்டுத் தேசியவாதம் என்னும் மேல்கட்டுமானம் முழுவதும் ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது.    

மீண்டும் சொல்வதானால், அண்ணல் அம்பேத்கரை பொறுத்தவரை தேசியவாதம் என்ற நவீனக் கருத்தாக்கம், மக்களிடையே நம்பிக்கையைத்தூண்டுவதும் அதன்மூலம் தாம் ஒருவருக்கொருவர் உறவுமுறையினர் என்ற கூட்டுணர்வை அவர்களிடத்தில் உண்டாக்குவதுமான சமுதாய - பொருளியல் அமைப்பைச் சார்ந்தே நிலவுகிறது. மனிதத்தன்மையற்ற அதன் (பண்பாட்டு தேசியவாதம்) நடைமுறையைப் பொறுத்தமட்டில் அது, அம்பேத்கர் எந்த கோட்பாடுகளுக்காக உறுதியாக நின்றாரோ அந்த அடிப்படைகளை நேர் எதிரான நிலையிலேயே உள்ளது.

- ராஜராஜன் ஆர். ஜெ
மூலம்: முசுலீம்கள் குறித்து அம்பேத்கர், கட்டுக்கதைகளும் உண்மை விவரங்களும் (ஆனந்த் தெல்தும்ப்டே)  

பெரியாரின் அன்றைய நீதிக்கட்சி ஆதரவும் , இன்று நாம் திமுகவை ஆதரிக்க வேண்டிய காலச்சூழ்நிலையும் - ஒரு வரலாற்று மீளாய்வு - இரா.வாஞ்சிநாதன்

பெரியாரின் அன்றைய நீதிக்கட்சி ஆதரவும்
இன்று நாம் திமுகவை ஆதரிக்க வேண்டிய காலச்சூழ்நிலையும் - ஒரு வரலாற்று மீளாய்வு
- இரா.வாஞ்சிநாதன்

ன்று 1920களின் இறுதியிலிருந்து பெரியார் தொடர்ந்து நீதிக்கட்சியை ஆதரித்ததற்கும், பாசிசப்பாம்புகள் நம் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நாம் திமுகவை ஆதரிக்க வேண்டியதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்னிருந்த வரலாற்றை ஏன் தற்போதைய சூழலோடு தொடர்புபடுத்திப்பார்க்க வேண்டுமென்றால், 'HISTORY WILL REPEAT ITSELF'. வரலாறும் வரலாற்று நிகழ்வுகளும் ஏதோ ஒருவகையில் மீண்டும் நிகழும்தன்மையுடையது. வரலாற்றின்மூலம் பாடம் கற்றுத்தெளிவுறுவது அவசியம். 'திராவிட ஞாயிறு' தோழர் ப.திருமாவேலன் அவர்களின் வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  "வாருங்கள் கடந்த காலம் தெரிவோம். கடந்த காலம் தெரியாதவருக்கு நிகழ்காலம் புரியாது, நிகழ்காலம் புரியாதவர்க்கு எதிர்காலம் இல்லை!"

நீதிக்கட்சிதான் சுயமரியாதைக் கொள்கைகளை அரசாங்கமாக நின்று செயல்படுத்திய முதல் கட்சி. சுயமரியாதை இயக்கத்துக்கு முன்பாகவே பார்ப்பனரல்லாதார் பிரச்னையை பேசியது அவர்களுக்கான உரிமைகளுக்காகப் பாடுபட்டது. ஆனால் பிட்டி தியாகராய செட்டியாரும், டி.எம்.நாயரும் மறைந்த பின்னர் நீதிக்கட்சியின் வலுவான பார்ப்பன எதிர்ப்பு கொள்கையில் கொஞ்சம் தளர்வு ஏற்பட்டது. அது பெரியாரின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. இருப்பினும் பார்ப்பனரல்லாதாருக்கான உரிமைகளை நீதிக்கட்சி விட்டுத்தரவில்லை. ஆனால் ஒரு புறம் சமதர்மிகள் (பொருளாதார சமதர்மமே விடுதலை என்று பேசியவர்கள்; அன்றைய கம்யூனிஸ்ட்கள்) நீதிக்கட்சி ஜமீன்தார்களின் கட்சி எனவும் பணக்காரர்களின் கட்சி எனவும் அது சமதர்மத்தை பேசவில்லை எனவும் தூற்றினார்கள். பெரியார் நீதிக்கட்சிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் வாங்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் பெரியார் தன் நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார். நீதிக்கட்சி தவறு செய்தபோதெல்லாம் தயவு தாட்சண்யம் பாராமல் அக்கட்சியை கண்டித்த அதே வேளையில், வாக்கரசியல் என்று வந்தபோது தனது ஆதரவை நீதிக்கட்சிக்கே வழங்கினார். அது ஏன் என்பதைப் பார்ப்போம்.

பெரியார் நீதிக்கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவு ஒருகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தில் இருந்த கம்யூனிஸ்ட் சிங்காரவேலருக்கு பிடிக்கவில்லை. நீதிக்கட்சி ஜமீன்தாரர்களின் கட்சியாகவும் பணக்காரர்களின் கட்சியாகவும் உள்ளது எனக்கூறி பெரியார் அக்கட்சிக்கு கொடுத்துவரும் ஆதரவை திரும்பப்பெற வேண்டும் என்று விமர்சிக்கிறார். அது 30.09.1934 தேதியிட்ட  'பகுத்தறிவு' இதழில் வெளியாகிறது. அதே இதழில் பெரியார் அதற்கு எழுதிய பதிலும் வெளியாகிறது. முற்போக்கு ஜோடனைகள் ஏதுமின்றி பெரியார் கூறிய கருத்துகளாவன:

"1) சரியாகவோ தப்பாகவோ ஜஸ்டிஸ் கட்சி சம்பந்தம் 6, 7 வருட காலமாக இருந்து வருகிறது. அதோடு ஜஸ்டிஸ் கட்சி காங்கிரசை விட மோசமானது என்று எனக்கு எந்தத்துறையிலும் தோன்றவில்லை. காங்கிரஸ் ஜாதி ஆதிக்கம் வேண்டுமென்கிறது. ஜஸ்டிஸ் பண ஆதிக்கம் வேண்டுமென்கிறது. காங்கிரஸ் தலைவர்களுக்கு எப்படித்தங்கள் பூணூலைக் கழற்றி எறிய முடியவில்லையோ அப்படித்தான் ஜஸ்டிஸ் கட்சித்தலைவர்களுக்கு பணத்தை வீசி எறியவோ பணம் சம்பாதிப்பதை தியாகம் செய்யவோ முடியவில்லை. நான் என்னைப் பொறுத்தவரை பணக்கொடுமையைவிட பூணூல் கொடுமையே பலமானதும் மோசமானதுமென எண்ணுகிறேன்.

2) பொப்பிலி ராஜா பெரிய பணக்காரர். தோழர் ஷண்முகம் பெரிய பணக்காரர். இருவரும் இன்னமும் பணமும் பதவியும் பெற ஆசைப்படலாம் என்றே முடிவு செய்து கொள்ளுவோம். ஏனெனில் அவர்கள் இருவரும் துறவிகள் அல்ல. பணமும் பதவியும் ஆசைப்படுவது இன்றைய உலக வாழ்க்கை முறையில் பாதகமான காரியமும் அல்ல. ஆனால் இவர்கள் காங்கிரஸ் தலைவர்களான சத்தியவாதிகள், சத்தியாகிரகிகள் , அஹிம்சாவாதிகளை விட மோசக்காரர்களா? சூட்சிக்காரர்களா? ஏமாற்றுக்காரர்களா? என்பதை யோசித்துப் பார்க்கும்படி கேட்கிறேன். "

இங்கே ஜஸ்டிஸ் கட்சி இடத்தில் திமுகவையும் , அன்றைய காங்கிரஸ் இடத்தில் இன்றுள்ள பாஜக/ அடிமை அதிமுகவையும் ஒப்பிட்டு பார்க்கவும். திமுக முன்புபோல் இல்லை அது பணநாயக கட்சியாக உள்ளது, பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை நீர்த்துபோய் விட்டது என எப்படிப்பட்ட விமர்சனம் வைத்தாலும், திமுகவை விட பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூகநீதியை நிலைநாட்டும், வெகுமக்கள் அபிமானம் பெற்ற வேறொரு கட்சி இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் நிதர்சனம். ஏறக்குறைய எவ்வகையான நுழைவுத்தேர்வுகளும் இல்லாமல் செய்து அடிப்படை பள்ளிக்கல்வியின் மூலம் பெறப்படும் மதிப்பெண்களை வைத்தே கல்லூரியில் சேரலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது திமுக அரசு. இதனால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை பல லட்சம். 

பலதரப்பட்ட சமூக மக்களுக்கு உயர்கல்வி கிடைக்கச் செய்யும் இந்த ஏற்பாடு சமூக ஏணியில் கீழே இருப்பவர்களை மேலே கொண்டு வருவதற்கான அச்சாணி. தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என்பது அடித்தட்டு மக்கள் மேலே வருவதற்கும் மொழி வாழவும் வழிவகைச் செய்தது. இதுவா நீர்த்துப்போன பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை? ஜெயலலிதா நுழைவுத்தேர்வு வைத்தே தீர வேண்டுமென துடித்தாரே. கலைஞர் இடத்தில் ஒருவேளை ஜெயலலிதா இருந்திருந்தால் நுழைவுத்தேர்வு இல்லாத நிலை ஏற்பட்டிருக்குமா? எந்த வகையில் திமுகவை விட அதிமுக சிறந்த கட்சி? இதேதான் அன்று பெரியாரின் நிலைபாடும் எந்தவகையிலும் நீதிக்கட்சியை விட அன்றைய காங்கிரஸ் சிறந்த கட்சி அல்ல. 

அதிமுக மதவெறி பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டு தற்போது மாபெரும் துரோகத்தை மக்களுக்கு செய்துவருகிறது. பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கை என்கிறாயே,  பாஜகவோடு திமுக கூட்டணி வைத்ததேயில்லையா என்று கேட்டால், ஆம் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் திமுக 1999 முதல் 2003 வரை இருந்தது. மத்திய அமைச்சரவையிலும் பங்குபெற்றது. 

1998 முதல் 1999 வரை 13 மாதங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஜெயலலிதா, தன் மேல் உள்ள வருமான வரி தொடர்பான வழக்குகளை திரும்பப்பெறவும் அன்று மாநிலத்தில் இருந்த திமுக அரசை கலைக்குமாறும் மத்திய பாஜகவிடம் கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கைக்கு பாஜக மறுக்க , அதிமுக தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதனால் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்துதான் பாஜகவுடன் திமுக கூட்டணியில் இணைந்தது. ஆனால் அப்போதும் பாஜகவின் குடுமியை கையில் வைத்துக்கொண்டிருந்தது திமுக. பாஜகவின் அடிநாதக் கொள்கையாக , அவர்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது மூன்று விஷயம்:
1. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து முற்றிலும் இந்தியாவுடன் இணைப்பது,
2. ராமர் கோயில் கட்டுவது
3. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது.

'மேற்சொன்ன மூன்றில் எதாவது ஒன்றை வைத்து அரசியல் செய்தால் கூட அல்லது அதற்கான நகர்வை எடுத்தால்கூட கூட்டணியில் இருந்து வெளியேறிவிடுவோம்' என்று பாஜகவிடம் written guarantee வாங்கிவிட்டுதான் கூட்டணியில் இணைந்தனர். நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் படத்தை மாட்டிய நிகழ்வு, 2002ல் நடந்த குஜராத் கலவரங்கள் ஆகியன காரணமாக திமுக பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தது. பின்னர் திமுக கூட்டணியில் இருந்து விலகியது. (கலைஞர் சாகும்வரை பாஜகவின் அடிநாதக் கொள்கை எவற்றையும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.) ஆனால் இந்த அடிமை அதிமுக அரசு தன்னுடைய ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது. 

இந்த பாசிச ஆட்சி 2019ல் ஆட்சிக்கு வந்தவுடன் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்துவிட்டது. 'தேசிய குடியுரிமைச் சட்டம்' மூலம் இஸ்லாமியர்களை அகதிகளாக்கும் வேலையை முன்னெடுத்து வெற்றிகரமாக செய்துவருகிறது. சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் இவை அனைத்தையும் ஆமோதித்தது அடிமை அதிமுக அரசு. இவை அனைத்தையும் எதிர்த்து நாடாளுமன்றத்தில் சண்டை செய்து கொண்டிருப்பது திமுக எம்.பி.க்கள். மாநிலத்தில் இவற்றுக்கு எதிராக போராட்டங்களை நடத்துவது திமுக தலைமை. இப்போது சொல்ல முடியுமா அதிமுகவும் திமுகவும் ஒன்று என?    

7.6.1934 அன்று பொப்பிலி இல்லத்தில் நடந்த நீதிக்கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையின் முக்கிய கருத்துகள் கீழ்வருமாறு:

1) "நீதிக்கட்சி பதவிக்காகச் சண்டை போட்டுக்கொண்டிருப்பவர்களின் கட்சி என்பதுதான் பொதுமக்கள் கருத்து. அக்கருத்து அகற்றப்பட வேண்டும்.

2) நீதிக்கட்சி ஜமீன்தாரர்கள், முதலாளிமார்கள் கட்சியே அன்றி பொதுமக்கள் கட்சி அல்ல என்று கூறப்படுவதைப் பொய்யாக்கிக் காட்டாவிட்டால் கட்சியிலுள்ள உண்மையான உழைப்பாளிகளுக்கு அதைவிட வேறு அபாயம் இருக்க முடியாது. ஏழைப் பொது மக்களுக்குப் பயன்படத்தக்க முறையில் உழைத்தாக வேண்டும்.

3) நீதிக்கட்சியினருக்கு மாநிலச் சட்டமன்றத்தில் மட்டும்தான் அக்கறையும் ஆர்வமுமிருக்கிறது, ஏனெனில் அங்குதான் அமைச்சர் பதவியும், சலுகைகளும் கிடைக்கின்றன என்று பொதுவாகக் கருதப்படுவதில் பொருளுண்டு. மத்திய சட்டமன்றத்தை அவர்கள் புறக்கணிப்பதால் தென்னிந்திய மக்களின் பிரதிநிதிகளாக பார்ப்பனர்களே அங்கு செல்கிறார்கள். அவர்கள் தேசநலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடியவர்கள், தேசபக்தர்கள் நாங்கள்தான் என்று கூறிக்கொள்வதுடன் பார்ப்பனரல்லாதார் என்பவர்கள் தேசத்துரோகிகள் , அந்நிய ஆட்சிக்கும் அதன் கொடுங்கோல் தன்மைக்கும் துணை போகிறவர்கள் என்ற பிரசாரத்தைச் செய்கின்றனர். ஆர்.கே.சண்முகமும், ஏ.ராமசாமியும் இந்திய சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து சிறந்த சாதனை புரிந்திருக்கிறார்கள். எனவே மேலும் பல பார்பனரல்லாதார் அங்கு செல்வது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார்களுக்கு செய்யும் கெடுதியைத் தடுக்கும்." (புரட்சி 10.06.1934).

'திமுக பதவி மோகம் பிடித்தவர்கள், மத்திய அமைச்சரவையில் பங்குபெற என்னவேண்டுமானால் செய்வார்கள்' என்பவர்களுக்கு விளக்க பெரியார் மேற்சொன்ன மூன்றாவது கருத்தை எடுத்துக்கொள்வோம். பெரியார் நீதிகட்சியினரை மத்திய சட்டமன்றத்தில் பங்கெடுக்கும்படி வலியுறுத்துகிறார். மத்திய சட்டமன்றத்தில் பங்கெடுக்காத நீதிக்கட்சியினரை விமர்சிக்கிறார். தென்னிந்திய பிரதிநிதிகளாக நீதிக்கட்சியினர் சென்றதால்தான் பார்ப்பனரல்லாதார்களுக்கு பார்ப்பனர்கள் செய்யும் தீங்கைத் தடுக்கமுடியும் என்று கூறுகிறார். இவற்றை அப்படியே நாம் திமுகவோடு இணைத்து பார்ப்போம். இந்திய ஒன்றிய அமைச்சரவையில் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, மூன்றாவது அணி ஆகிய மூன்று முற்றிலும் வெவ்வேறு கூட்டணியில் பங்குபெற்று மத்திய அமைச்சரவையில் பங்குவகித்த ஒரே கட்சி இந்தியாவிலேயே திமுக மட்டும்தான். தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

பாஜக கூட்டணியில் திமுக இருந்தபோது, முரசொலி மாறன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2001ல் 142 நாடுகள் ஒன்றுகூடிய உலக வர்த்தக அமைப்பின் (WTO) மாநாடு கத்தார் நாட்டிலுள்ள தோஹாவில் நடந்தது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்ட முரசொலி மாறன் இந்தியாவின் உரிமைகளை மட்டுமில்லை ஒட்டுமொத்த மூன்றாம் உலக நாடுகளின் உரிமைகளையும் மீட்டெடுத்தார். அமெரிக்க போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாக முன்மொழியப்பட்ட வரைவு தீர்மானத்தில் மூன்றாம் உலக நாடுகளுக்கு பாதகமான அம்சங்கள் இருந்தன. நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம். அது, விதிமுறைகளைச்  சார்ந்து இயங்க வேண்டும், அதிகாரத்தைச் சார்ந்து அல்ல,’ என அதிகார வர்க்க மேடையிலேயே நின்று முழங்கினார் முரசொலி மாறன். 

பாகிஸ்தான், இலங்கை , வங்கதேசம், மலேசியா ஆகியோரின் அமைச்சர்களுக்கு பிரச்னையை விளக்கி , வரைவு தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும்படி செய்தார். அமெரிக்க அதிபர் புஷ் வாஜ்பேயியிடம் "உங்கள் அமைச்சர் முரண்டு பிடிக்கிறார் , வரைவுக்கு ஒப்புதல் அளிக்க சொல்லுங்கள்" எனக்கேட்டபோது, "முரசொலி மாறனின் நிலைப்பாடுதான் இந்தியாவின் நிலைப்பாடு. அவர் முடிவுக்கு எதிராக செயல்பட்டால் என் அரசே கவிழ்ந்துவிடும்" என்பதை வாஜ்பேயி தெரிவித்தார். இந்தியா கேட்டுக்கொண்ட திருத்தங்களை செய்தபிறகே அந்த வரைவு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

"வளர்ந்த நாடுகள் விவசாய மானியத்தை குறைக்காமல், வளரும் நாடுகளை ஏன் குறைக்கச் சொல்ல வேண்டும்" என்று கேட்டார். இது அப்போது இந்தியாவை வளரும் நாடுகளின் ஹீரோவாக உயர்த்தியது. 'தமிழ்நாட்டின் ஒரு சினிமா கதாசிரியர் உலக வர்த்தக அமைப்பின் ஸ்க்ரிப்டையே மாற்றி எழுதிவிட்டார்' என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிஸ்னஸ் லீக் ஆகிய பன்னாட்டு ஊடகங்கள் முரசொலி மாறனின் நிலைபாட்டை வெகுவாக பாராட்டியது. இவ்வாறு வளரும் நாடுகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. அமெரிக்க சர்வாதிகாரம் உடைக்கப்பட்டது.

 காங்கிரஸ் கூட்டணியில், ஆ.ராசா மத்திய தொலைதொடர்புத்துறை  அமைச்சராக  ஆன பின்புதான்,  அவுட்கோயிங் 1 ரூபாய், இன்கம்மிங் இலவசம் என்றானது. கடைக்கோடி மக்களுக்கும் தொலைத்தொடர்பு சென்றுசேர்ந்தது. 0.7 சதவிகிதம் இருந்த கிராம தொலைத்தொடர்பு அடர்த்தியை 70 சதவிகிதம் ஆக்கியது ஆ.ராசா. டி.ஆர் பாலு மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் பல்வேறு சாலைகள் , மேம்பாலங்கள் தமிழகத்துக்கு வந்தது. அவற்றுள் குறிப்பிடத்தக்கது கத்திபாரா மேம்பாலம். இப்படி எந்த கூட்டணியோடு இருந்தபோதிலும் உலக, இந்திய, தமிழக நலன்களை காத்தது திமுக எனும் மக்களுக்கான மாபெரும் இயக்கம். இவ்வளவு நன்மைகளை சாதித்துக்காட்டிய வேறொரு மாநிலக்கட்சி இந்தியாவிலேயே எங்கு தேடினாலும் கிடைக்காது.  "அதிமுக திமுக என யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஒன்று தான்" என இப்போதும் சொல்ல முடியுமா?

தோழர் ப. ஜீவானந்தம் ,புதுக்கோட்டை வக்கீல் தோழர் வல்லத்தரசு ஆகியோர் கீழ்க்கண்ட விமர்சனத்தை ஜஸ்டிஸ் கட்சி மீது வைத்தார்கள்.
"ஜஸ்டிஸ் கட்சிக்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் இல்லை. முதலாளித்துவமும் மதப்பற்றும் இரு கட்சியிலும் இருக்கின்றது. சமதர்மக் கொள்கைகளும் பொருளாதாரச் சமத்துவமும் இரு கட்சியிலும் கிடையாது" .இதனால் பெரியார் ஜஸ்டிஸ் கட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை அவர் திரும்பப்பெற வேண்டுமென மேற்சொன்ன இரு தோழர்களும் பெரியாரை வலியுறுத்தி 1935 அக்டோபரில் திருச்சி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் பேசினர்.

ப.ஜீவானந்தம், வல்லத்தரசு ஆகிய இருவரும் பேசியதற்கு பதில் சொன்ன பெரியார் இவ்வாறு கூறினார்:

"சட்டசபையில் ஜஸ்டிஸ் கட்சியால்தான் ஜாதி ஆணவம் பிடித்த பார்ப்பனர்களும் கொள்கை இல்லாத காங்கிரஸ்காரரும் உள் நுழைந்துவிடாமல் காப்பாற்றி வருகிறார்கள். வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நாம் குறைபேசக்கூடாது. வீராவேசப் பேச்சால் ஒன்றும் முடியாது. பணக்காரர்களை நாம் தற்போதுள்ள நிலைமையில் எப்படி ஒழிக்க முடியும்? எந்த வகையில் அனுபவத்தில் இன்று அது முடியும்? பார்ப்பான் ஒழிவதற்குமுன் பணக்காரத்தன்மை ஒழிந்துவிடுமா? அது சாத்தியமா என்று எண்ணிப்பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சியார் இல்லாவிட்டால் பொட்டுக் கட்டும் வழக்கம் ஒழிந்த்திருக்குமா?

குழந்தை மனம் ஒழிக்க சட்டம் வந்திருக்குமா? தீண்டாமை விளக்குக்கு ஒரு அளவாவது சட்டம் ஏற்பட்டிருக்குமா? இவ்வளவு பார்ப்பனரல்லாதார் உத்தியோகம் பெற்றிருக்க முடியுமா? இவ்வளவு சுயமரியாதையாவது ஏற்பட்டிருக்குமா? என்பதை எண்ணிப்பாருங்கள். 'பாழாய்ப்போன எலெக்ஷன் ' என்று சொல்லிவிடுவதில் பயனில்லை. பாழாய்ப்போன எலெக்ஷனில் வருகிறவன் எவனாயிருந்தாலும் அவனைத்தான் சர்க்காரும் மதிக்கிறார்கள். அவன் வசம்தான் நிர்வாகம் போய்ச் சேர்கிறது. எதிரிகள் வசம் போனால் அதைக்கொண்டு நன்மை அதிகம் செய்யாவிட்டாலும் நமக்குத் தீமை அதிகம் விளைவிக்க முடியும். அங்கு சேர்ந்து செய்யும் சட்டம்தான் நமது வாழ்க்கைக்கு ஆதாரமாகிறது. அவன் செய்வதுதான் நமது தலைவிதியாகிறது. எலெக்ஷனில்தான் நம் பிரதிநிதியை அனுப்ப முடிகிறது.

சமதர்ம முறை என்பதைத் தமிழ்நாட்டு வாலிபருள்ளத்தில் புகுத்திக் கனல் விட்டெரியச் செய்தது நான்தானென்று தோழர் ஜீவானந்தம் சொன்னார்.சமதர்மம் ஒருநாளில் ஏற்படக்கூடியதல்ல.ரஷியாவில் கூட ஒரு நாளில் சமதர்மம் ஏற்பட்டுவிடவில்லை. பல காலத்து வேலையால்தான் அதுவும் சந்தர்ப்பம் சரியாக இருந்ததால்தான் முடிந்தது. முதலில் சமுகத்துறையில் சமதர்மம் ஓங்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி நாம் குறை கூறுவதால் நாம் நன்மையைச் செய்வதாகாது. 

நமது கொள்கைக்கு பலம் ஏற்படுத்தத் தகுந்த நல்ல நிலைமை ஏற்படும் வரை தற்போது நடக்கும் வேலைத்திட்டத்திற்கு தடை ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். நமது இயக்கத்துக்கு இன்று நிர்பந்தம் ஏற்பட்ட காரணத்தினாலேயே நாம் நமது நிலைமையை நன்கு பரிசீலனை செய்து திட்டமொன்றை வகுக்க வேண்டும். எந்த அளவுக்குத் தடையில்லையோ அந்த அளவுக்கு பிரச்சாரம் செய்யலாம்.தடைமீற வேண்டுமென்று நாம் முடிவு செய்த பின்பே அதைப் பற்றி யோசிக்க வேண்டும். சமதர்மத்தில் எனக்குள்ள ஆர்வம் அவசரம் நீங்கள் அறியாததல்ல. படிப்படியான திட்டத்துடன் அதை ஒழுங்கான வழிமுறைகளுடன் கொண்டு செலுத்த வேண்டும்.

சமதர்மமென்பது மதம் மாறுவது என்பது போல வெறும் உணர்ச்சியல்ல காரியத்தில் அனேக மாறுதல்களும் புரட்சிகளும் ஏற்பட வேண்டும். அதற்குத் திட்டங்கள், பிரச்சாரம் செய்யச் சௌகரியங்கள் முதலியவைகளெல்லாம் வேண்டும். அவைகளையும் கால தேச வர்த்தமானங்களுக்குத் தகுந்தபடி செலுத்தக்கூடிய ஆற்றலும் துணிவும் வேண்டும். கண்மூடித்தனமான வெறும் பாமர மக்களின் திருப்தியை எதிர்பார்க்கக்கூடாது. அவர்கள் பின் செல்லவும் கூடாது. நாம் பாமர மக்களைத் திருப்பி நடத்துகிரவர்களாய் இருக்க வேண்டும். சமதர்மத்திற்கு நாம் திட்டம் வைத்திருக்கிறோம். அத்திட்டத்திற்கு இம்மியளவு பின்போகும்படியோ மாற்றிக்கொள்ளும்படியோ நான் சொல்ல வரவில்லை." (குடி அரசு : 27.10.1935)

மேற்சொன்னவற்றில் ஜஸ்டிஸ் கட்சி என்பதற்கு பதில் திமுகவையும்,  அன்றைய  காங்கிரசுக்கு பதில் பாஜகவையும்/ அதிமுகவையும் பொருத்தி பார்ப்போம். திமுக நிச்சயம் புனிதமான கட்சி என்பதை வரையறுக்க நான் முயலவில்லை. பெரியார் புனிதங்களை உடைப்பதில்தான் பெயர்போனவர். ஆனால் உண்மைநிலையை சொல்ல எங்கும் எப்போதும் தயங்கியதில்லை அவர். அதிமுகவும் திமுகவும் ஒன்று என எப்போதுமே வரையறுக்க முடியாது. அத்தகைய கூற்று எப்போதும் எந்தவகையிலும் அய்யோக்கியத்தனமானது. திமுகவைத் தவிர வேறு எந்தக்கட்சியும் இந்தளவு பார்ப்பனாதிக்க எதிர்ப்பு கொள்கைகளை பேசியதில்லை நடைமுறைபடுத்தியதில்லை, அடித்தட்டு மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டியதில்லை என்பதை ஏற்கனவே விளக்கியிருந்தேன். 

என்ன இருந்தாலும் திமுக ஜாதி ஓட்டை வைத்துதானே அரசியல் செய்கிறது? ஜாதி பார்த்துத்தானே வேட்பாளர்களை இறக்குகிறது. பொதுத்தொகுதியில் தலித் வேட்பாளரை ஏன் நிறுத்துவதில்லை
என்பன போன்ற கேள்விகளும் தொடர்ந்து திமுகவை நோக்கி வீசப்பட்டு வருபவை. வர்ணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பனிய ஜாதிய அமைப்புமுறை என்பது 2000 ஆண்டுகாலமாக வேர்விட்டு எல்லோரின் ரத்தத்திலும் ஊறிவிட்டது. ஜாதி ஒரு அவமானம் என்பதும், ஜாதியைத் துறந்த மனிதனாக எல்லோரையும் சமமாக மதிக்கக்கூடிய மனிதனாக நாம் மாறவேண்டும் என்கிற முயற்சி கடந்த நூறாண்டுகளாக கொஞ்சம்கொஞ்சமாக நடந்து வருகிறது. 

2000 ஆண்டுகள் வேர்விட்ட சிக்கலான ஜாதிய அமைப்பு முறை என்பது மன்னராட்சிக் காலம், காலனிய காலம், நிலப்பிரபுத்துவம் வீழும் முன், நிலப்பிரபுத்துவம் வீழ்ந்த பின், உலகமயமாக்கலுக்கு முன், உலகமயமாக்கலுக்கு பின் , என எப்பேர்ப்பட்ட சமூகச்சூழல் மாறிக்கொண்டே வந்தாலும் இந்த ஜாதிய அமைப்பு காலத்திற்கேற்ற வகையில் தன்னை தகவமைத்துக்கொள்ளும், மறுகட்டுமானம் செய்துகொள்ளும் தன்மையுடையது. எனவே சமதர்மம், தலைகீழ் மாற்றம் ஒரு நாளில் ஏற்படக்கூடியதா?. இதைத்தான் பெரியார் சமதர்மம் ஒரே நாளில் ஏற்பட்டுவிடாது என கூறியுள்ளதைப் பார்த்தோம். ஜாதி பார்த்து ஓட்டு போடுவதன் பின்னணியை சரிசெய்ய மக்களின் ஜாதிய மனநிலையை நாம் மாற்ற ஆவன செய்தல் வேண்டும். நடைமுறையில் யாரால் இதைச் செய்யமுடியுமென்றால் தேர்தலில் கலந்துகொள்ளாத இயக்கங்கள் செய்ய வேண்டும். இதனைப் பெரியார் நன்கு புரிந்துவைத்திருந்தார்.இதனால் தான் திராவிடர் கழகம் தேர்தலில் கலந்துகொள்ளாது என்பதை கொள்கையாகவே வகுத்துக்கொண்டார். திராவிடர் கழகம் தேர்தலில் கலந்துகொள்ளாது என்ற நிலைப்பாட்டில் இருந்தாரே தவிர்த்து அவர் மக்கள் யாரையும் ஓட்டு போடக்கூடாது என்றோ தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்றோ எப்போதும் சொன்னதில்லை. 

ஏனெனில் "எலெக்ஷன் மூலம் சர்க்கார் அமைக்கிறவன்தான் சேர்ந்து சட்டம் செய்கிறான். அவன் செய்வதுதான் நம் தலைவிதியாகிறது. " என்கிற அவரின் மேற்சொன்ன கூற்று மூலம் அவரின் நிலைப்பாடு தெளிவாகிறது. இப்போதுள்ள பொதுத்தொகுதியில் பெரும்பான்மை ஜாதியைப் பார்த்துதான் ஏறக்குறைய எல்லாக்கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துகின்றன. (நிச்சயம் இந்த நிலை மாறவேண்டும்தான்). ஒரு தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்கும் நிலை உண்டாகிறது. அப்பொழுது ஜாதியைத் தாண்டி அங்கே எந்தக் கட்சி என்பதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டுப்போடுகிறார்கள். இப்படி திமுகவில் ஜெயித்து வந்தவர்கள்தான் மத்தியிலும் மாநிலத்திலும் சமூகநீதியை நிலைநாட்டி வருகிறார்கள். எனவே பேப்பரில் ஜாதி இல்லை என்று எழுதிவிட்டால் ஜாதி வேற்றுமை ஒழிந்துவிடாது. ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு மூலம் கல்வி , வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொடுப்பதன்மூலம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் சமூகங்களை சமமாய் கொண்டுவருவதற்கான முதல் படிநிலையை எடுத்துவைக்கிறோம்.

இத்தனை பெரிய சமூகச்சிக்கல் கொண்ட ஜாதியமைப்பு முறைநடைமுறையில் உள்ளது. ''வீணாக ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி நாம் குறைபேசக்கூடாது' என்று பெரியார் கூறியுள்ளதைப் பார்த்தோம். அதேதான் இங்கு திமுகவுக்கும் பொருந்தும். 

நீதிக்கட்சியை காங்கிரஸ் பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு என்ன காரணம் என்பதை பெரியார் விளக்கினார்:

"உலகிலே காங்கிரஸ் கொள்கைக்கு முரணானது, பிற்போக்கானது என்று காங்கிரஸ்காரர்களால் சொல்லப்படுகிற கட்சிகள் பல இருந்தும் ... அவைகளையெல்லாம் விட்டுவிட்டு, நம் பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை மாத்திரம் வெட்டிப்புதைக்க வேண்டும் என்று ஆசைபடுவதன் அர்த்தம் என்ன என்று பாருங்கள். சென்ற வாரத்தில் தோழர் பிரகாசம் பந்தலு ...  'ஜஸ்டிஸ் கட்சியாரை விட ஆங்கிலேயர்களும் ஆங்கிலேய ஆத்சியும் மேலானது' என்று சொன்னாரே - அதன் அபிப்ராயம் என்ன? ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியால் இந்த இருநூறு வருஷ காலமாய்ச் செய்யாததையும் செய்ய முடியாததையும் ஜஸ்டிஸ் கட்சியார் செய்து விட்டார்கள் என்றுதானே அர்த்தம்? அது என்ன என்பதைத் தோழர் பிரகாசம் அடுத்த வரியில் சொல்லி விட்டார். அதாவது 'ஜஸ்டிஸ் கட்சியார் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்பாடு செய்து விட்டார்கள்; ஆதலால் அதை ஒழிக்க வேண்டும்' என்று சொல்லி இருக்கிறார்."

எனவேதான் பெரியார் அன்று காங்கிரஸ் கட்சியைவிட நீதிக்கட்சி சிறந்தது என்றும் அதை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்த அரசியல் வாய்ப்பும் சுயமரியாதை இயக்கத்தவருக்கு இருந்திருக்க முடியாது என்றும் கருதினார்.  (குடி அரசு: 19.5.1935)

'50 வருட திராவிட ஆட்சியில் எல்லாம் கெட்டுவிட்டது' என்று பார்ப்பன கூட்டமும் அதன் அடிமைக்கூட்டங்களும் கதறுவது ஏன்? .கல்லூரிகளில், அரசாங்க வேலைகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் உள்ளே வர ஆரம்பித்து அடித்தட்டு மக்களும் மேலே எழுந்துகொள்ள தொடங்கியதால் தான். இந்தியா முழுவதும் இடஒதுக்கீடு 49 சதவிகிதமாக ஆனதற்கு வி.பி.சிங் 'மண்டல் கமிஷனை' அமல்படுத்தியது. அந்த வி.பி.சிங் அரசை அமைப்பதில் பெரும்பங்காற்றியவர் கலைஞர். இதனை நீர்த்துபோகச்செய்யும் அத்தனை வேலைகளையும் தற்போதைய பாஜக அரசு செய்துவருகிறது. அதன் துணையாக அடிமை அதிமுக அரசு நிற்கிறது.

"நீதிக்கட்சியின் குற்றங்குறைகள், அதிலிருந்த பணக்காரர் ஆதிக்கம் , சந்தர்ப்பவாதம் ஆகியவற்றைத் தொடர்ந்து விமர்சித்து வந்த பெரியார் , அதை ஓரளவேனும் சீரமைத்து நவீன அரசியல் கட்சியாக மாற்ற வேண்டும் என்பதற்கான இடைவிடாத முயற்சியில் ஈடுபட்டார். முத்தையாச் செட்டியார்களும் பொப்பிலிகளும்தான் கட்சியில் ஆதிக்கம் வகிப்பார் என்றாலும், அக்கட்சி வெகுமக்கள் தன்மையைப் பெறுமேயானால் , அத்தலைவர்களைச் சில நிர்பந்தங்களுக்குப் பணிய வைக்க முடியுமென்று கருதினார். வர்க்க அடிப்படையில் நீதிக்கட்சிக்கும் காங்கிரசுக்குமிடையே எந்த வேறுபாட்டையும் காணமுடியாது என்றாலும், சாதிய அடிப்படையில் பார்க்கையில் காங்கிரசை விட நீதிக்கட்சியே சிறந்தது என்று கருதினார். அக்காரணத்தினாலேயே நீதிக்கட்சிப் பற்றி காங்கிரசும் பார்ப்பனர்களும் செய்து வந்த விமர்சனங்களுக்குத் தொடர்ந்து பதில் கூறிவந்தார்." (பெரியார் சுயமரியாதை சமதர்மம் - எஸ்.வி.ஆர் & கீதா)

நீதிக்கட்சி மேல் பெரியார் அப்போது மேற்சொன்ன இந்த விமர்சனங்கள் ,  திமுகவுக்கு பொருந்தத்தான் செய்கிறது. UAPA சட்டத்தை ஆதரித்தது, பாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு வலுவான எதிர்வினை ஆற்றாமல் விட்டது, போன்றவைகளில் தவறு இழைத்தது வருந்தத்தக்கதுதான். இவை போன்ற தவறுகளையும் சுயவிமர்சனம் செய்து திருத்தி எதிர்காலத்தில் நிச்சயம் திமுக தன்னை வலுவான சமூக நீதி இயக்கமாக, சிறுபான்மை மக்களின் தோழனாக நிலைநிறுத்திக்கொள்வது அவசியம். 

"சுயமரியாதை இயக்கத்திற்குள் சுயமரியாதை சமதர்ம கட்சி என்ற ஒரு தனிப்பிரிவை உருவாகிச் செயல்படலாம் என்று அதற்கு ஒரு திட்டத்தை வகுத்த பிறகு பெரியார் அதனை ஆதரித்து பேசி வந்ததுடன் அவர் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வந்த பார்ப்பனிய ஒழிப்பு, தீண்டாமையொழிப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை என்பனவற்றைச் செயல்முறைபடுத்த பல்வேறு சக்திகளுடன் தொடர்ந்து ஒத்துழைத்து வந்தார். இந்த விஷயத்தை பொருத்தவரை கட்சி வேறுபாடுகளற்ற "பரந்துபட்ட வரலாற்றணி தேவை" என்ற புரிதலின் அடிப்படையிலேயே செயல்பட்டார். இதனால்தான் ஈரோடு சுயமரியாதை சமதர்ம மாநாட்டிற்கு டாக்டர் வரதராஜலு நாயுடுவையும் திரு.வி.க வையும் அழைத்திருந்தார். ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கர் போன்ற தாழ்த்தப்பட்டோர் தலைவர்களுடனும் உறவுகளைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தார்." (பெ.சு.ச - எஸ்.வி.ஆர் & கீதா )

இங்கே எஸ்.வி.ஆர், கீதா குறிப்பிட்டது போல அன்றைய காலச்சூழலில் பெரியார் பரந்துபட்ட வரலாற்றணியை உருவாக்க வேண்டுமென்பதில் பல தோழமை சக்திகளையும் அரவணைத்து சென்றார். அதே போல் தற்போது பாசிசப் பாம்புகள் நம்மைச் சூழ்ந்த இந்த நிலையில் இடதுசாரிக் கொள்கையுடைய தோழமைகள் அனைத்தும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 2016ல் திமுக தோற்றது வெறும் 1% வாக்கு வித்தியாசத்தில்தான். 2016ல் மக்கள் நலக்கூட்டணியில் இருந்த விசிக, இரு கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தன. இவை அன்று பிரித்த 3.27% வாக்குகள் அன்றைய திமுகவின் தோல்விக்கு ஒரு காரணம். 

இதனால்தான் ஆட்சிக்குவந்த அடிமை அதிமுக அரசு நிகழ்த்திய கொடுமைகள் ஏராளம். நீட் விஷயத்தில் மாணவர்களுக்கு செய்த துரோகம்,  ஸ்டெர்லைட் விவகாரத்தில் 13 பேரைச் சுட்டுவீழ்த்திய கொடூரம் ஆகியவை நடந்தேறின. இப்படியொரு வரலாற்றுத்தவறு மீண்டும் நிகழாமல் இருப்பது அவசியம். அதனால்தான் தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் மீண்டும் இணைந்தார். திமுக மேல் நூற்றுக்கணக்கான விமர்சனங்கள் இருந்தாலும் தற்போதைய நிலைமையில் சமூகநீதி காக்கும் வெகுமக்கள் கட்சி வேறெதுவுமில்லை.

ஜஸ்டிஸ் கட்சி மீது பலர் கூறி வந்த விமர்சனத்துக்கு பெரியார் கூறிய பதிலோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன். இவற்றைத் திமுகவோடு பொருத்திப்பாருங்கள்.   

"இயக்கத்தால் மனிதரானவர்களே தான் இன்று இயக்கம் செத்துபோய்விட்டது என்கிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பதால் நமது யோக்கிதை போய் விட்டது என்பவர்கள் ஜஸ்டிஸ் கட்சி இல்லாதிருந்தால் அவர்களது யோக்கியதை எப்படியிருக்கும்? அவர்களுடைய மேடை ஏது? என்று யோசித்துப்பார்க்கட்டும். ஜஸ்டிஸ் கட்சி இல்லாமல் இருந்தால் சுயமரியாதை இயக்கம் இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு வேலை செய்ய முடிந்திருக்காது. அதை ஒழித்து விட்டாலும் சுயமரியாதை இயக்கம் வேலை செய்ய இவ்வளவு வசதி இருக்காது. அதன் தலைவர்களைப் பற்றி நமக்குக் கவலையில்லை . அன்றியும் அத்தலைவர்களில் யாரும் காங்கிரஸ் தலைவர்களில் சர்வாதிகாரத் தலைவர் முதல் மற்ற எந்தத் தலைவர்கள் யோக்கியதைக்கும் இளைத்தவர்கள் அல்ல.

ஒரு அளவுக்கு அவர்கள் சமதர்ம வேலை செய்து வருகிறார்கள். நமது திட்டங்கள் சிலவற்றை ஒப்புக்கொண்டார்கள். மாமிசம் சாப்பிடுவதால் எலும்பைக் கழுத்தில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள். அது போல் நமது சமதர்மமும் பொதுவுடமையும் போலி புலிவேஷம் போல் விளம்பரத்தில் காட்டுவதில் பயனில்லை. காரியத்தில் முறையாக நடந்து வருகிறது." என்றார். (குடி அரசு: 29.03.1936)

திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்கள் செயல்பாடுகள் போதுமான அளவு இல்லை என்கிற பட்சத்தில் அப்போது நாம் அவர்களை விமர்சிப்போம், அப்போது அவர்களை குறைசொல்லலாம். ஆனால் 9 வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவை இப்போது குறைகூறுவது, விமர்சிப்பது நமது பொது எதிரிக்கே சாதகமாய் முடியும். இதற்கு மேலும் 'திமுகவும் அதிமுகவும் ஒன்று', எனவோ, 'திமுகவின் கொள்கை நீர்த்துபோய்விட்டது' என்றோ கம்பு சுத்தினால், 'திமுகவை விட பன்மடங்கு வலுவான திராவிட கொள்கையுடைய வெகுமக்கள் அபிமானம் பெற்ற தேர்தல் அரசியல் கட்சி ஒன்றை கட்டமையுங்கள்' பிறகு பார்க்கலாம்.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள பெரியாரின் மூல எழுத்துகள் 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பெரியாரை புரிந்துகொள்ள இந்த நூல் பெரிதும் உதவும்.
- இரா.வாஞ்சிநாதன்