Wednesday 19 August 2020

தன்னை வெல்வான் தரணியை வெல்வான்! - பேரறிஞர் அண்ணா

 தன்னை வெல்வான் தரணியை வெல்வான்! - பேரறிஞர் அண்ணா

 

 

பாளையங்கோட்டைச் சிறையில் கருணாநிதி

பாதுகாப்புச் சட்டப்படி மாறனும் கைது

கருணாநிதிக்கோ தருமபுரித் தேர்தல் பற்றியே கவலை

விரிவாகிவிட்டது இந்தி எதிர்ப்பு உணர்ச்சி

கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் தருமபுரி வெற்றியே!

 

தம்பி!

 

இலைகள் உதிர்ந்த நிலையில் சில மரங்கள்; இது முழுவதும் வெட்டவெளி அல்ல என்பதைக் காட்டுவதற்காக இருந்துகொண்டிருந்தன - மற்றபடி அந்த இடம் இயல்பாகவே வெப்பத்தை அதிகமாக்கிக் காட்டக்கூடிய இடம்.

 

முப்பது அறைகளுக்குமேல் இருக்கும் - அதிலே ஒரு அறையில் தம்பி கருணாநிதி - மற்ற அறைகள் எல்லாம் பூட்டிக் கிடந்தன. மொத்தத்தில் ஒருவிதமான வெறிச்சோடிய நிலை. ஆள் நடமாட்டம் இல்லை என்பது மட்டும் அல்ல; பேச்சுச் சத்தம் கூடக் காதிலே விழ முடியாத இடம், அத்தனை தனிமை! அவ்வளவு "பாதுகாப்பு!' பக்தவத்சலனாரின் அரசு என்ன இலேசுப்பட்டதா! அவர்தானென்ன சாமான்யமானவரா - இந்தியப் பேரரசின் போலீஸ் அமைச்சர் நந்தாவினாலேயே பாராட்டப்பட்டவர் - கற்பாறைபோல் நின்றார் என்பதாக!

 

பாதுகாப்புச் சட்டப்படி சிறைபிடித்து வைத்திருப்பதால், மிக்க பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் திட்டம்போலும். அதனால்தான், பக்கத்திலேயே உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சிறைக் கட்டடத்தில் பல நூறு பேர் இருக்க, கருணாநிதிக்காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி, அதிலேயும், தனியாக வைத்திருக்கிறார்கள்.

 

மக்களைப் பெற்றவர்கள் மனம் நொந்து, ஏனோ இந்தக் கொடுமை என்று கண்ணீர் மல்கிடும் நிலையில் இருந்தபடி கேட்பார்கள். கேட்டால் என்ன! பக்தவத்சலனாரா இதற்கெல்லாம் அசைவார்! கற்பாறைபோல நின்றார் என்று சிறப்புப் பட்டம் பெற்றுவிட்டாரே!! தீக்குளித்து இறந்தவர்களை எண்ணி எண்ணி இந்த நாடே பதறுகிறது, கதறுகிறது; நல்லோர் அனைவரும் நெஞ்சு நெக்குருகிப் போயினர்; இந்திக்காரர்களிலே கூடச் சிலர், செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்; ஆனால், முதலமைச்சர் மட்டும்தான், இதயத்தை எடுத்துத் தனியாக வைத்துவிட்ட நிலையினர் போலாகி, துளியும் ஈவு இரக்கம், மனிதத்தன்மையற்றவராகி. தோழர் மதியழகன் மெத்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளதுபோல, தீக்குளித்த தீரர்களின் பிணங்களின்மீது தூற்றல் சேற்றினை வாரி இறைக்கிறார். எதிர்காலக் காவியமாகப் போகிற எழுச்சிமிக்க தியாகத்தை, இன்று கிடைத்துள்ள இடம் என்றென்றும் தமக்கு என்ற ஏமாளித்தனம் மிகுந்த இறுமாப்பு உணர்ச்சியுடன் எண்ணிக் கொண்டு, இழித்துப் பேசுவதும், பழித்து உரைப்பதும், தமிழ் மண்ணின் மாண்பினையே மங்கிடச் செய்திடும் மாபாதகச் செயல். ஆனால், துணிந்து செய்கிறார்கள் துரைத்தனம் நடாத்துவோர்.

 

சென்னையிலிருந்து நானூறு கல் தொலைவில், பாளையங் கோட்டையில் தனிமைச் சிறையில் போட்டடைத்துக் கொடுமை செய்வதனைத் தமிழகம் கேட்டுத் தத்தளிக்கிறது; விம்மிடுகின்றனர் தாய்மார்கள்; இப்படி ஒரு ஆட்சியா என்று கேட்டுத் துடிக்கின்றனர் முதியோர்கள்; நம்மை இத்தனை துச்சமாக எண்ணிவிட்டனரே என்றெண்ணி வேதனைப்படுகின்றனர் இளைஞர்கள்; அறம் அறிந்தவர்கள் பதறுகின்றனர்; சட்டம் தெரிந்தவர்கள் இதற்குப் போதுமான நியாயம் இல்லை என்று எடுத்துரைக்கின்றனர்; கழகத் தோழர்கள் கலக்கமடைந்துள்ளனர்; முதலமைச்சர் மட்டும் நிற்கிறார் கற்பாறைபோல!

 

காலை மணி பத்து இருக்கும், நான் அங்குச் சென்றபோது; உடன் வந்திருந்த நெல்லை நகராட்சி மன்றத் தலைவர் மஜீத், வழக்கறிஞர் இரத்தினவேலு பாண்டியன் மற்றும் பலரையும் தனியே இருக்கச் செய்துவிட்டு, என்னை மட்டும், சிறை அதிகாரிகள் மூவர், கருணாநிதி இருந்த சிறைக்கூடம் அழைத்துச் சென்றனர்.

 

சந்தித்துப் பேசுவதற்காக ஒரு அறை தயாரிக்கப்பட்டிருந்தது; இரு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

கருணாநிதி அழைத்துவரப்பட்டபோது, முன்பு பல முறை ஒருவரை ஒருவர் சிறையினில் சந்தித்ததுண்டு என்றபோதிலும், இம்முறை தனியானதோர் தவிப்புணர்ச்சி எழுந்து வாட்டியது. அதனை அடக்கிக்கொள்வது கடினம் என்றபோதிலும், கலக்கம் காட்டுவது நமது உள்ளத்தின் உறுதிப்பற்றி மற்றவர்களுக்கு ஐயப்பாடு ஏற்படுத்திவிடுமே என்ற அச்சம் துணை செய்தது; தவிப்புணர்ச்சியைத் தள்ளிவைத்துவிட்டு, அரைமணி நேரத்திற்கு மேல் பேசிக்கொண்டிருந்தோம்.

 

கொடுமைகள் இழைக்கப்படும்போது, அநீதி தலை விரித்தாடும்போது, அக்கிரமம் தன் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடியவில்லை. காரணம், நாம், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்; பாசத்தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக்கிறோம். அதனால் நம்மில் சிலருக்கு இழைக்கப்படும் கொடுமை நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனையில் ஆழ்த்திவிடுகிறது.

 

கவலை கப்பிய நிலையில் கருணாநிதியுடன் பல விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். கருணாநிதியோ, இடையிடையே, தருமபுரித் தேர்தல் பற்றியே பேசிடக் கண்டேன்; உடல் நலத்தைக் கவனித்துக்கொள், ஏதேனும் உடல் நலக் குறைவு இருப்பதாகத் தோன்றினாலும் உடனே மருத்துவர் தேவை என்பதைத் தெரியப்படுத்து என்று நான் கூறிக்கொண்டிருப்பேன், இடைமறித்து கருணாநிதி, தருமபுரித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணத்தை அள்ளி வீசுவார்களே அண்ணா! அங்கு நாம் வெற்றிபெற வெகு பாடுபடவேண்டுமே! என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? யாரார் தருமபுரி சென்று வந்தனர்? நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்? என்ற இவைபற்றிக் கூறுவார், எனக்குக் கவலையைப் பிய்த்துக்கொண்டு புன்னகை கிளம்பும்.

 

சிறை மிகச் சக்தி வாய்ந்தது என்று ஆணவம் பிடித்த நிலையில் உள்ள எந்தச் சர்க்காரும் எண்ணிக்கொள்ளுகிறது. சிறையிலே போட்டு அடைத்ததும், வேதனை வென்றுவிடும், உணர்ச்சிகள் மங்கிவிடும், உறுதி தளர்ந்துவிடும் என்ற நினைப்பு; நிலைகெடப்போகும் கட்டத்தை நோக்கி நடைபோடும் எந்தச் சர்க்காருக்கும். சிறை அவ்விதமானதல்ல; அந்த இடம், உறுதியைக் கெட்டிப்படுத்தி வைக்கும் உலைக்கூடம்; சிந்தித்துச் சிந்தித்துத் தமது சிந்தனைச் செல்வத்தைச் செம்மையாக்கிக்கொள்ள வைக்கும் பயிற்சிக்கூடம், இதனை அறிய முடிவதில்லை, அடக்குமுறைச் சுவையால் நினைவு இழந்துவிடும் அரசுகளால். நெல்லையில் சிறைப்பட்டிருக்கும் கருணாநிதியின் நினைவு முழுவதும் எதன்மீது என்பதனை அறிந்துகொள்வாரானால், முதலமைச்சர் தமது முறை தவறு என்பதனை உணர்ந்து கொள்வார். மக்களின் நலனுக்காகக் கழகம்; கழகத்தின் சார்பிலே செயலாற்றினோம்; அந்தச் செயலைத் தவறானது என்று திரித்துக் கூறிச் சர்க்கார் நம்மைக் கொடுமைப்படுத்துகிறது; நமக்கு இழைக்கப்படும் கொடுமையினைக் கண்டும் கேட்டும் இலட்சக் கணக்கானவர்கள் இதயம் துடிக்கிறது; அந்தத் துடிப்பிலிருந்து கிளம்பும் மிகப் பெரிய வலிவு எத்தனை பெரிய ஆணவ அரசினையும் வீழ்த்தவல்லது; அந்த வலிவினை நாடு பெற நாம் நமது வலிவிலே ஒரு பகுதியைச் சிறை வாழ்க்கை காரணமாக இழப்பது தேவை, முறை, அறம் என்ற எண்ணம், சிறையில் உள்ளவர்களுக்குச் செந்தேன். அந்தச் சுவையில் திளைத்திருக்கக் கண்டேன், உடல் இளைத்தாலும் உள்ளம் களைத்திடாது என்ற நிலையில் உள்ள கருணாநிதியிடம். ஒரே ஒரு கவலைதான் இருக்கிறது; தருமபுரி பற்றி! ஆனால், அதிலேயும் கவலையை விரட்டியடிக்கக்கூடிய ஒரு நம்பிக்கையும் இருக்கிறது; எப்படியும் கழகம், தருமபுரித் தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை கருணாநிதியைச் சிறையில் போட்டடைத்து வைத்திருக்கிறதே என்பதனை எண்ணி ஏக்கம் கொண்டுள்ளவர்கள், தங்கள் வல்லமையினை, உழைப்பினை, வசதியினை, நேரத்தை, நினைப்பை, தருமபுரிக்காக என்று அனுப்பிக் கொடுத்திடின், வெற்றி பற்றிக் கவலை ஏது! வெற்றி நிச்சயம்! அந்தச் செயலினைச் செம்மையாகச் செய்வார்களா என்ற ஐயப்பாடு அல்ல, கருணாநிதிக்கு; அந்தச் செயலிலே தனது பங்கினைச் செலுத்த முடியாதபடி பக்தவத்சலனார் செய்துவிட்டாரே என்ற கவலைதான். அந்தக் கவலை வேண்டாம், தோழர்கள் திறமையாக, சுறுசுறுப்பாக, மெத்த ஆர்வத்துடன் தேர்தல் காரியத்தைக் கவனித்துக்கொள்கிறார்கள் என்று உறுதி அளித்தேன்.

 

அதிகாரிகள் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டனர்; அதன் பொருள் விளங்கிற்று; நான் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டேன்; நான் வெளிப்புற வாயிற்படி நோக்கி நடந்தேன்; தம்பி தனக்கென அரசு தந்துள்ள அறைநோக்கிச் செல்வதைப் பார்த்தபடி.

 

சென்றேன், கண்டேன்; செய்தியை உங்களிடம் கூறினேன்; ஆனால், இதுதானா நாம் ஒருவருக்கொருவர் தந்துகொள்ள வேண்டிய செய்தி? எவ்வளவு முறையாகச் செயலாற்றி வருகிறோம், கழகம் அமைத்து; நமக்கு இத்தகைய கொடுமை களைக் காங்கிரஸ் அரசு செய்தபடி இருப்பதா! நாடு எத்தனை காலத்துக்குத் தாங்கிக்கொள்ளப்போகிறது இவ்விதமான கொடுமைகளை? எத்தனை எத்தனை கொடுமைகள் நடந்து விட்டன இன்பத் தமிழகத்தில். மகனை இழந்த மாதாக்கள் கதறுகின்றனரே! எங்கெங்குச் சென்றாலும், நடைபெற்ற துப்பாக்கிச் சூடுபற்றியும், துடிதுடித்து மக்கள் செத்ததுபற்றியும், ஊரெல்லாம் சுடுகாடுகள் போலாகிக் கிடப்பதுபற்றியும், நண்பர்கள் கூறிடக் கேட்டுக்கேட்டு வேதனை மேலும் வளருகிறது. எத்தனை எத்தனை வழக்குகள்! எத்தனை விதமான கொடுமைகள்! நள்ளிரவிலே கைதுகள்! பிடிபட்டவர்கள் நையப்புடைக்கப்படும் இழிதன்மை! ஏன் நமக்கு இழைக்கப் படுகின்றன இவ்வளவு கொடுமைகள்? நிகழ்ச்சிகள் நடைபெற்று நாட்கள் பலப் பல ஓடியபின், ஒரு திங்களுக்குப் பிறகும் கழகத் தோழர்கள் வேட்டையாடப் படுகின்றனர்; வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. நெல்லைக்குச் சென்று அங்கிருந்து மாயவரம், பிறகு ஆத்தூர், ராசிபுரம், பிறகு சேலம், தருமபுரி ஆகிய இடங்கள் சென்று வந்தேன். வழிநெடுக இதே செய்தி, ஊரெங்கும் இதே கொடுமை. சித்திரவதையைவிட, ஒரே அடியாகக் கொன்றுபோட்டுவிடுவதுமேல் என்பார்கள்; அதுபோல இப்படிக் கழகத் தோழர்களைக் கண்டகண்ட இடங்களில் விதவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்குவதைவிட, ஒரே அடியாகக் கழகத்தைத் தடைசெய்துவிடலாமே, ஏன் இத்தனை பழிவாங்கும் உணர்ச்சி - வெறித்தனம், புரிய வில்லையே, என்று கழக நண்பர்கள் கேட்கின்றனர். காரணம் இருக்கிறது காட்டு முறையை நாட்டினை ஆள்வோர் கட்டவிழ்த்து விட்டிருப்பதற்கு.

 

காங்கிரஸ் ஆட்சிக்குப் பலத்த எதிர்ப்பு மூண்டு விட்டிருக்கிறது, சமூகத்தின் பல முனைகளிலுமிருந்து. இங்கேயே உள்ள நிலை என்ன? முன்பு கழகம் கிளர்ச்சி நடத்தியபோது, காங்கிரஸ் அமைச்சர்கள் கெம்பீரக் குரலில் முழக்கிவந்தனர், கழகத்தின் கிளர்ச்சிக்கு மக்கள் ஆதரவு இல்லை; மாணவர்கள், வழக்கறிஞர்கள், இதழ் நடாத்துவோர், அறிவாலயம் நடத்துவோர் ஆகியோரின் ஆதரவு இல்லை; ஒரு சமூகத்தின் மதிப்புமிக்க முனைகள் இவை; இந்த முனைகளில் கழகத்தின் பேச்சுக்கோ செயலுக்கோ துளியும் ஆதரவு இல்லை; எனவே, கழகத்தின் கிளர்ச்சிக்கு அரசினர் மதிப்பளிக்கத் தேவையில்லை; அது தன்னாலே மங்கி மடிந்துவிடும் என்று மார்தட்டி வந்தனர். இப்போது? எந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சியினைக் கழகம் பல ஆண்டுகளாக நாட்டிலே எடுத்துக்காட்டிக்கொண்டு வந்ததோ, எந்த இந்தி எதிர்ப்புக்காகக் கழகம் அறநெறிக் கிளர்ச்சியில் ஈடுபட்டு இன்னல்களையும் இழப்புகளையும் ஏற்றுக்கொண்டு வந்ததோ, அந்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி மாணவர் உலகினில் பொங்கிடக் கண்டனர் ஆட்சியினர். வழக்கறிஞர்கள் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ஆதரவு தந்திடுவது கண்டனர்; இதழ்கள், இனியும் ஏதும் நடைபெறாததுபோல் இருப்பது கூடாது என்ற உணர்வுடன் இந்தி எதிர்ப்புணர்ச்சியின் வேகத்தையும் வடிவத்தையும் அரசினர் அறிந்துகொள்ளச் செய்யும் அரும்பணியினை ஆர்வத்துடனும் திறமையுடனும் நிறைவேற்றி வருவதனைக் காண்கின்றனர்; காண்பதனால் கிளர்ச்சிக்கு மதிப்பளிக்க முடியாது என்று கூறிவந்த போக்கு சுக்கல்நூறாகி விட்டது. மாணவர்களுமா! ஆசிரியர்களுமா! வழக்கறிஞர்களுமா! இதழ் நடாத்துவோருமா!! என்று கேட்டுக்கேட்டு அரசினர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். இப்போது அரசினருக்கு ஆதரவாளர் எவர்? என்பதே புரியவில்லை. அவ்வளவு விரிவாகி விட்டது இந்தி எதிர்ப்புணர்ச்சி.

 

காங்கிரஸ் கட்சியிலேயே ஒரு பகுதியினர், இந்தி எதிர்ப்புணர்ச்சி கொண்டுள்ளது மட்டுமல்ல, அதனை வெளியே காட்டிக்கொள்வதிலே தயக்கம் காட்டவில்லை, ஆர்வத்துடன் பேசுகின்றனர்.

 

இந்நிலையில், காங்கிரஸ் அரசு கலக்கம் கொண்டு விட்டிருக்கிறது; எந்த நேரத்திலும் தனது செல்வாக்கு சரிந்து போய்விடக்கூடும் என்ற அச்சம் பிடித்தாட்டுகிறது.

 

இத்தனைக்கும் காரணம் இந்தக் கழகம் அல்லவா! தேசியக் கட்சி, சுயராஜ்யத்துக்காகப் போராடிய புனிதக் கட்சி என்ற பாசத்துடன் ஆதரித்து வந்த மாணவர்கள், இன்று எதிர்ப்புச் செய்கிறார்களே! நாட்டின் பெரிய கட்சி, நிலையான ஆட்சியை நடாத்திடும் திறமை பெற்ற கட்சி என்பதற்காக நம்மை ஆதரித்து வந்தவர்கள் வழக்கறிஞர்கள் - அவர்கள் அல்லவா வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டிருக்கிறார்கள், இந்தியை எதிர்க்க!!

 

நிர்வாகத் திறமைக் குறைவு, ஊழல் ஊதாரித்தனம், ஆகாத சட்டங்கள், ஆர்ப்பரிப்பு அமுல்கள் என்பவைகளைக்கூடப் பொறுத்துக்கொண்டு, இன்றைய நிலையில், அமைதியான ஆட்சி நடத்திச் செல்லக்கூடிய பக்குவம் பெற்றுள்ள கட்சி காங்கிரஸ் கட்சிதான், மற்றவை நாட்டைக் கெடுத்திடும் நச்சுக் கொள்கை கொண்டவை என்று கூறி ஆதரவு அளித்து வந்த இதழ்கள் இன்று இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு திரட்டிடும் பணியிலே மும்முரமாகி விட்டுள்ளனவே! இந்த முனைகளிலே கிடைத்துக்கொண்டு வந்த ஆதரவை இழந்துவிட்டோமே! இனி எதிர்காலம் எவ்விதமோ!! என்று எண்ணும்போது பதவிச் சுவையைப் பருகிப் பழகிவிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மனம் பதறுகிறது, பார்வையில் பொறி பறக்கிறது, பேச்சிலே தடுமாற்றம் ஏற்படுகிறது.

 

இத்தனைக்கும் காரணம்? கழகம்! கழகம் ஒழிக்கப்பட்டால், மற்ற முனைகளில் கிளம்பியுள்ள எதிர்ப்பு தன்னாலே முறிந்து விடும்; ஆகவே, பிடி! அடி! சுடு! என்ற ஆர்ப்பரிப்பு முறையில் அரசு, கழகத்தைத் தாக்கும் செயலில் முனைந்து நிற்கிறது.

 

கழகம் கூறிடும் பேச்சை யார் மதிக்கிறார்கள்? எவர் பொருட்படுத்துகிறார்கள்? எவர் ஏற்றுக் கொள்கிறார்கள்? என்று பேசிய இறுமாப்பு இன்று இல்லை; எதை எதையோ பேசுகிறார்கள், மக்கள் நம்பித் தொலைக்கிறார்களே! எப்படி எப்படியோ பேசுகிறார்கள்; மக்கள் மனம் மாறிவிடுகிறார்களே!! என்ற அங்கலாய்ப்பு ஏற்பட்டுவிட்டது.

 

கழக ஏடுகளிலே வரும் சொற்கள், ஆட்சியாளர்களின் ஆணவக்கோட்டைமீது வீசப்படும் வெடிகுண்டுகள் என்றாகி விட்டன, இன்று. அன்று? சொற்களா? பொருளற்ற பிதற்றல் என்று பேசினர் ஆளவந்தார்கள். அன்று கழகம் எழுப்பிய முழக்கங்களைக் காட்டி, எந்தப் பிரிவின்படி வழக்குத் தொடுக்கலாம் என்று துடித்தபடி உள்ளனர்.

 

இன்று காங்கிரஸ் அமைச்சர்களின் மேஜைமீது, காந்தியாரின் ஏடுகளும், பண்டித ஜவஹர்லாலின் சுய சரிதமும் இல்லை, பாதுகாப்புச் சட்டத்தின் பிரதிகள்!

 

பிடி 30லில்! தொடு 41லில்! போடு 54! ஆகட்டும் 147, 148 வீசுக! - இவ்விதம் உள்ளனர்.

 

கழகத்தின் ஒவ்வொரு அசைவும் அச்சம் தருகிறது ஆட்சியாளர்களுக்கு.

 

இவர் இவ்விதம் பேசியது எதற்காக? இவர்மீது என்ன விதமான வழக்குத் தொடரலாம்? என்ற இதே நினைப்புடன் உள்ளனர் இன்று - அன்று? கழகமா? தூ! தூ! அதை ஒரு பொருட்டாக மதிப்போமா! யார் இருக்கிறார்கள் கழகத்தில்? ஒரு பத்துப் பேர்! இவர்களை நாடு சீந்துமா!! என்று பேசிக் கிடந்தார்கள். கழக ஏடுகளிலே வெளியிடப்படும் கேலிப் படங்கள், ஆட்சியாளர்களின் கண்களைக் குத்துகின்றன, மனத்தைக் குடைகின்றன; நெஞ்சை அச்சம் பிய்த்து எடுக்கிறது.

 

இருக்கவே இருக்கிறது பாதுகாப்புச் சட்டம் - அதனை வீசு! பிடித்துப் போடு உள்ளே!! என்கிறார்கள்.

 

கருணாநிதியை ஏன் சிறைபிடித்தீர்கள்?

 

அவர் வெளியே இருந்தால் அமைதியைக் கெடுத்து விடுவார்; அதனால்!!

 

இப்படி அஞ்சி அஞ்சிச் சாவார்பற்றிப் பாரதியார் அழகாகப் பாடுகிறார்:

 

அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்

அஞ்சாத பொருளில்லை அவனியிலே!

 

என்றார். கழக ஏட்டிலே வரும் ஒவ்வொரு எழுத்தும், கவிதையும், படமும் கண்டு அஞ்சி அஞ்சிச் சாகின்றார். யார்? எம்மை வீழ்த்தவல்லாரும் உளரோ! நாடே எமது பக்கம் திரண்டு நிற்கிறது! எமது வீரதீர பராக்கிரமம் எப்படிப்பட்டது! வெள்ளைக்கார ஏகாதிபத்தியத்தையே கிடுகிடுக்க வைத்தவர்கள் நாங்கள்! பிரிட்டிஷ் சிங்கத்தை அதனுடைய குகைக்குள்ளேயே நுழைந்து அதன் பிடரியைப் பிடித்தாட்டியவர்கள்! நாங்களா இந்தக் கழகப் "பொடியன்'களின் பேச்சுக்கும் எழுத்துக்கும் பயப்படுவோம்? சிற்றெறும்பைக் கண்டு சிங்கம் அஞ்சுமோ! எலிக் கூட்டம் கண்டு புலி கிலி கொள்ளுமோ!! என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று என்ன ஆனார்கள்? கழகப் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையினராகி, சட்டத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, அதிலும் பாதுகாப்புச் சட்டத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு காப்பாற்று! காப்பாற்று! என்று கதறி நிற்கின்றார்கள். அச்சம் விடுக! அலறலை நிறுத்துக! இதோ உமது பக்கம் யாம் நிற்கிறோம், - என்று அபயம் அளித்துக்கொண்டு, நிற்கிறது அடக்குமுறை! அதன் துணையுடன் துரைத்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; எமது காங்கிரஸ் அரசு, அன்பு வழியை, அகிம்சை வழியை, காந்தியின் சாந்தி வழியைக் கடைப்பிடிக்கும் என்று கூறி வந்தவர்கள்.

 

உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!!

 

என்று கூறிவந்தவர்கள். . . பாடி வந்தவர்கள் - இன்று கழகத்தின் அச்சகங்களிலிருந்து வெளிவரும் எழுத்துக்களைக் கண்டு, கிலிகொண்டு, பாதுகாப்புச் சட்டத்தின் துணையைத் தேடிக்கொண்டு ஓடுகிறார்கள்.

 

எங்கே போனார்கள், ஆட்சியாளர்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட, ஆற்றல் மிக்க எழுத்தாளர்கள்? இம்மென்றால் இருநூறு ஏசலைக் கக்கக்கூடிய பேச்சாளர்கள்! அவர்களிடம் இருந்த "சரக்கு' தீர்ந்துபோய்விட்டதா! மகாப் பிரபோ! அம்பறாத்தூணியில் கணைகள் இல்லை! வில்லும் ஒடிந்து விட்டது! இனி உமக்குத் துணை நிற்க இயலாது! ஆகவே மணிமுடியை மறைத்துக்கொண்டு மறைவான இடம் சென்று விடும்; சிக்கினால் சீரழிவு ஏற்படும்; சென்றுவிடும் பாதுகாப்பான இடம்! என்று களத்திலே நின்று படை நடாத்தியவன் கை பிசைந்துகொள்ளும் காவலனுக்குக் கூறிய கதை போலாகி விட்டதோ! இந்த ஆட்சியாளர்களுக்கு அவர்களை ஆதரிக்கும் எழுத்தாளர்கள் அவ்விதம் கூறிவிட்டார்கள் போலிருக்கிறது.

 

கழகத்தாரின் பேச்சையும் எழுத்தையும் வலிவற்ற தாக்க, பொருளற்றதாக்க நாங்கள் எங்களால் ஆனமட்டும் பார்த்தோம்; உரத்த குரல் எடுத்தோம், உருப்போட்டவை களை ஒப்புவித்துப் பார்த்தோம், உருட்டி மிரட்டிப் பார்த்தோம், இழிமொழி பொழிந்து பார்த்தோம், பழிச்சொற்களை வீசிப் பார்த்தோம், இட்டுக்கட்டிப் பார்த்தோம், பொய்யும் புனை சுருட்டும் பொழிந்து பார்த்தோம், கலகப் பேச்சை மூட்டிப் பார்த்தோம். வன்முறையைத் தூண்டிடும் பேச்சையும் கொட்டிப் பார்த்தோம்; இத்தனையும் பயன்படவில்லை; இத்தனைக்கும் கிடைக்காத மதிப்பு, அந்தக் கழகத்தாரின் பேச்சுக்கும் எழுத்துக்கும் கிடைத்து வருகிறது; எங்கள் பேச்சை மக்கள் ஏற்க மறுக்கிறார்கள். கழகப் பேச்சும் எழுத்தும் மக்களிடம் எழுச்சியை, விழிப்பை, வீரத்தை, தியாக உணர்வை ஊட்டிவிட்டிருக்கிறது, மேலும் ஊட்டியபடி இருக்கிறது; ஆகவே, இனி எமது பேச்சையும் எழுத்தையும் நம்பிவிடுவது கூடாது; அவை உம்மைப் பாராட்ட, வாழ்த்துக்கூற, வரவேற்பளிக்க மட்டும் வைத்துக்கொள்ளலாம் இப்போது உடனடியாக எந்தச் சட்டத்தைக் கொண்டாகிலும் கழகப் பேச்சும் எழுத்தும் தடுக்கப்பட வழி செய்யுங்கள்! உடனே! அவசரம்! அவசரம்!

 

என்று ஆளவந்தார்களின் அன்புக்குத் தம்மைப் பாத்திரமாக்கிக் கொண்ட சண்டமாருதப் பேச்சாளர்களும் வழுக்கி விழும் அளவுக்கு ஆத்திரப் போதையினை ஏற்றிக் கொண்டுவிட்டுள்ள எழுத்தாளர்களும், முறையிட்டுக்கொண்டார்கள் போலும்!

 

இல்லையென்றால், கழக எழுத்துக்கு மறுப்பளித்து மக்களைத் தமது பக்கம் அழைத்துச்செல்ல காங்கிரஸ் கட்சி ஏன் தமது ஆதரவாளர்களான எழுத்தாளர்களைப் பயன்படுத்தாமல், பாதுகாப்புச் சட்டத்தைத் தூக்கி வீசுகிறது!

 

மற்றெல்லாப் படைக்கலன்களும் தீர்ந்துபோய்விட்டன என்பதையன்றோ இந்தப் போக்கு காட்டுகிறது?

 

நிலபுலம் விற்றுச் செலவாகியான பிறகு, தட்டு முட்டுச் சாமான்களை விற்றாகிலும் வயிறு கழுவிக்கொள்ள முனைவது போன்ற நிலைக்கல்லவா காங்கிரஸ் கட்சி வந்து விட்டிருக்கிறது.

 

சாதாரணச் சட்டம் போதவில்லையே காங்கிரஸ் அரசுக்கு! பாதுகாப்புச் சட்டமே அல்லவா தேவைப்படுகிறது, நிலைமையைச் சமாளிக்க!! நெறித்த புருவமே போதும் எதிரிகளை முறியடிக்க என்று முடுக்குடன் பேசித் திரிந்தவன், பிறகு அடி ஆட்களைத் தேடி அலைந்த கதை போலாகிவிட்டதே.

 

முரசொலியில் வெளிவந்த கட்டுரை, படம், இவைகளைக் கண்டு மக்கள் கொண்டிடும் எண்ணத்தைப் போக்கிடவும் மாற்றிடவும், வக்கு வழியற்றுப் போன நிலைக்குக் காங்கிரஸ் பிரச்சார யந்திரம் வந்துவிட்டதைத்தானே காட்டுகிறது கருணாநிதி, மாறன் ஆகியோர்மீது பாதுகாப்புச் சட்டத்தை வீசியிருக்கும் செயல்.

 

எண்ணிப் பார்த்தாரா, எழுபதாம் ஆண்டுக்கு நடைபோடும் பருவத்தினரான பக்தவத்சலனார்; கருணாநிதியைச் சிறை வைத்திருப்பது பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது பற்றி!

 

என்ன குற்றம் செய்தான் அந்தப் பிள்ளை? குற்றமா! இவர்களின் குணத்தை அம்பலப்படுத்தினான். எழுதினான்.

 

எழுதினால் என்ன? ஆட்சியாளர் குடியா முழுகிவிடும்.

 

ஆட்சியாளர்களுக்கு அவ்வளவு வெறுப்பு, பயம், கோபம். .

கருணாநிதி எழுதினால் என்ன? அதை மறுத்து இவர்கள் எழுதுவதுதானே! மக்கள் இருசாராரின் எழுத்தையும் பார்த்து எது நியாயமோ அதனைக் கொள்ளட்டுமே.

 

எழுதியும் பார்த்தார்கள், காங்கிரசிலே உள்ள எழுத்தாளர்கள். . .

 

மக்கள் சீந்தவில்லை போலிருக்கிறது!!

இப்படியும் இதுபோல வேறுபலவும் பேசிக்கொள்வார்களே! இது ஆட்சியில் உள்ளவர்களின் புகழினையா வளர்த்துவிடும்!! ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பார்கள். அதன் விளைவோ இந்த அடக்குமுறை!!

 

இவைபற்றி எண்ணிடும்போது, சிறையில் தம்பி அடைக்கப்பட்டிருப்பது குறித்து இயற்கையாக எழும் சோகம்கூட மறைகிறது; கருணாநிதியின் பேச்சுக்கும் எழுத்துக்கும் ஆட்சியாளர் எத்துணை அஞ்சுகிறார்கள் என்ற நினைப்பு எழுகிறது; ஒரு வெற்றிப் புன்னகை தன்னாலே மலருகிறது.

 

கழகத்தின் வளர்ச்சி கண்டு காங்கிரஸ் அரசு கதிகலங்கிப் போயுள்ளதை எடுத்துக்காட்டி, கழகத் தோழர்களுக்கு மேலும் எழுச்சியைத் தரவல்ல நிகழ்ச்சி, கருணாநிதியைச் சிறைப்படுத்தி இருப்பது என்பது புரியும்போது மகிழ்ச்சிகொள்ளக்கூட முடிகிறது,

 

கழக வளர்ச்சியை அரசினர் கண்டு கலங்கிடும் வண்ணம் பேச்சாலும் எழுத்தாலும் பணியாற்றியதற்காக கழகம் என்ன விதத்தில் நன்றியைத் தனது கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்வது?

 

ஒன்று இருக்கிறது. கற்கோட்டையில் அடைக்கப்பட்டுள்ள கருணாநிதிக்குக் கழகத் தோழர்கள் காட்டக்கூடிய நன்றியறிவிப்பு! தருமபுரித் தேர்தலில் கழகம் வெற்றி பெறவேண்டும் அந்தச் செய்தி செந்தேனாகி எத்தனை கொடுமை நிறைந்த தனிமைச் சிறையினையும் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலையாக்கிடும். அந்த வெற்றிச் செய்தி, காடு மலை வனம் வனாந்திரங்களைக் கடந்து, காவல்கட்டு யாவற்றினையும் மீறி கருணாநிதியின் செவி சென்று மகிழ்ச்சி அளித்திடும். அப்போது முதியவர் முதலமைச்சர் பக்தவத்சலனார் யோசிப்பார், இதுவும் பயன்தரவில்லையே என்பதாக.

 

இந்த நோக்கத்துடன் கழகத் தோழர்களும் ஆதரவாளர் களும், தருமபுரி இடைத்தேர்தலில் கழகம் வெற்றி பெற உடனடியாக முனைந்திட வேண்டும்.

 

கவலையுடன் தம்பி என்னைத் தருமபுரி பற்றிக் கேட்டபோது, நான் மிகுந்த நம்பிக்கையுடன் கூறிவிட்டு வந்திருக்கிறேன், தருமபுரியில் கழகம் நிச்சயம் வெற்றிபெறும் என்று.

 

அந்த வெற்றியைப் பெற்றுத் தருவதைவிட, அடக்கு முறையால் தாக்கப்பட்டு நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டுத் தனிமைச் சிறையில், பாஞ்சாலங்குறிச்சிச் சீமையில், அடைக்கப் பட்டிருக்கும் கருணாநிதிக்குக் கழகம் தரக்கூடிய மகிழ்ச்சிப் பொருள் வெறெதுவும் இருக்க முடியாது.

 

அடக்குமுறையை வீசி அறப்போர் வீரர்களை அடக்கி விடவோ, அவர்தம் பாசறையை ஒழித்துவிடவோ முடியாது. இது மிக எளிதாக எவருக்கும் புரிந்திடும் உண்மை என்றாலும், அரசாள்வோர், அதிலும் தமது பிடி தளர்ந்து வருவதை உணர்ந்து பீதிகொண்டுள்ள நிலையிலுள்ள அரசாள்வோர், உண்மையினை மறந்துவிடுகின்றனர்.

 

சிறைக்கோட்டம் தள்ளப்படும் இலட்சியவாதிகளோ, உறுதி பன்மடங்கு கொண்டவர்களாவது மட்டுமல்ல, தன்னைப் பற்றிய எண்ணம், தனது நலனைப் பற்றிய நினைப்பு, தனது குடும்பம்பற்றிய எண்ணம், இவைகளைக்கூட மறந்துவிடவும், தான் தனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவே என்ற நெறியினை உணர்ந்து மகிழ்ந்திடவும், தன்னைப்பற்றிய எண்ணம் எழுப்பி விடும் ஆசை, அச்சம், கவலை, கலக்கம், பிரிவாற்றாமை போன்ற உணர்ச்சிகளை வென்றிடவுமான ஒரு துறவு நிலையைப் பெற்றளிக்கிறது, இதுபற்றியே ஆன்றோர், சிறைச்சாலையை அறச்சாலை என்றனர்.

 

பாளையங்கோட்டைச் சிறைவாயிலில், கண்டேன், இந்தப் பேருண்மையை உணர்த்தும் எழுத்தாரத்தை. அங்குப் பொறிக்கப்பட்டிருப்பது என்ன? "தன்னை வெல்வான் தரணியை வெல்வான்!''

அண்ணன்

4-4-1965

No comments:

Post a Comment