கலைஞர் கவிதைகள்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா... - கலைஞர் கருணாநிதி
பூவிதழின் மென்மையிலும் மென்மையான
புனித உள்ளம்- - அன்பு உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்! - அவர்
மலர் இதழ்கள் தமிழ் பேசும்
மா, பலா, வாழையெனும் முக்கனியும் தோற்றுவிடும்-!
விழிமலர்கள் வேலாகும் - வாளாகும்
தீங்கொன்று தமிழ்த் தாய்க்கு வருகுதென்றால்!
கால் மலர்கள் வாடிடினும் அவர் கடும் பயணம் நிற்காது;
கைமலர்கள் பிணைத்து நிற்கும், தம்பியரை, கழகத்தை
அம் மலரே எதிரிகளை மன்னித்து
நெற்கதிர் போல் தலை நாணச் செய்துவிடும்
மக்களாட்சி மலர் குலுங்க
சமதர்மப்பூ மணக்க
தாய்மொழித் தமிழே வாழ்வுப் பொழிலாக
ஆடிவரும் தென்றல்
நாடிவரும் பூமுடியே! புகழ் முடியே! உமைத்
தேடிவரும் வாழ்த்துக் குவியலிலே - தினம்,
பாடிவரும் வண்டாக நான் பறப்பேன்
உனைக் காக்க எனைத் துறப்பேன்-என், -
ஒரு கோடி தமிழ் இளைஞர்
பாடிநின்ற பாட்டுக்குப் பெருந்தலைவன்.
முடுகிற் செறிந்த தமிழார்வம்
முதிரா இளைஞர் ஆருயிராய்ப்
பெருகச் செய்த செயல் மறவர்
சிறப்பைப் பாடக் கேண்மினோ!
தங்கு கண் வேல் செய்த புண்களை
அன்பெனும் வேது கொண்டொற்றியுஞ்
செங்கனி வாய் மருந்தூட்டுவார்
சீர்மையைப் பாடக் கேண்மினோ!
பொரு தடக்கை வாளெங்கே; மணிமார் பெங்கே;
போர் முகத்தின் எவர் வரினும் புறங்கொடாத
பருவயிரத் தோளெங்கே யெங்கேயென்று
தம்பியரைக் கேட்டானைக் கேண்மின்! கேண்மின்!
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர் கழற் சென்னி
காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடத் திறமினோ என்று
மையல் கொண்ட மாதர் தமைத் துயில் எழுப்பச்
செயங்கொண்டார் பாடினார்,
களப்பரணி.. கலிங்கத்துப் பரணி -
அளப்பரிய வீரத்தின் புகழ்ப்பரணி -- யான்
கவிப் பரணியேறி, காஞ்சிபுரப் பரணி பாடி நின்றேன்
அவலப் பரணி பாடுகின்றேன் இன்று...!
கவியினில் பொருளெனக் கரும்பினில் சுவையெனக்
கதிரினில் ஒளியெனக் காவினில் மலரென
நிலவினில் குளிரென நிலமிசை வளமென
குலவிடும் அருவி குழறிடும் மொழியென
உலவிடும் காற்றில் ஏறிடும் இசையென
அலையெழுங் கடலில் ஆடிடும் நுரையென
கலைமணங் கமழக் கூடிய கவிஞர்
தலைமகன் அண்ணா திருப்புகழ் பாடிட
நிலமகள் வடிக்கும் கண்ணீர் அந்தோ! வெள்ளம்! வெள்ளம்! மாபெரும் வெள்ளம்!
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பத்து எட்டாம்
தாயகத்தில் மொழிப்புரட்சி தோன்றுதற்கு
வித்திட்டார் சிலபேர் என்றால், ஈரோட்டு
நாயகத்தின் இணையில்லாத் தலைமை வீரர்
எங்களண்ணன் களம் புகுந்தார் காஞ்சிபூண்டு!
இருமூன்று திங்கள் வரை சிறையில் வாடி,
தரும் ஊன்று கோலாகத் தமிழைத் தந்து
அருமூன்று எழுத்தாலே அண்ணா வானார்!
அன்றொரு நாள் அய்ம்பத்திரண்டுதனில்
சென்னையிலே சொன்னேனே நினைவுண்டா உங்களுக்கு?
மூன்றெழுத்திலே ஒரு சிறப்புண்டு, முத்தமிழ் மணமுண்டு!
மூவேந்தர் முக்கொடி முக்கனியென
மும்முர சார்த்தவர் தமிழர் -- அவர் வாழ்ந்த
தமிழ் வாழ்வுக்கு மூன்றெழுத்து -- அந்த
வாழ்வுக்கு அடிப்படையாம் அன்புக்கு மூன்றெழுத்து..
அன்புக்குத் துணை நிற்கும் அறிவுக்கு மூன்றெழுத்து
அறிவார்ந்தோர் இடையிலெழும், காதலுக்கு மூன்றெழுத்து..
காதலர்கள் போற்றி நின்ற கடும் வீரமோ மூன்றெழுத்து..
வீரம் விளைக்கின்ற களம் மூன்றெழுத்து...
களம் சென்று காணுகின்ற வெற்றி மூன்றெழுத்து
அந்த வெற்றிக்கு நமையெலாம் ஊக்குவிக்கும்
அமைதி மிகு அண்ணா மூன்றெழுத்து அறிந்திடுவீர் எனச் சொன்னேன்!
திக்கெட்டும் தமிழ் முழக்கம்
திசையெங்கும் சொல் மாரி
வக்கற்றோர் வகையற்றோர்
வாழ்வதற்குத் திட்டம் கோரி
வண்டாகச் சுற்றுகின்றார் மேடையேறி!
எழுதுகின்றார் அண்ணா ஏடெல்லாம் வீடெல்லாம் தமிழ்
நாடெல்லாம்... புதுமை மணக்குதங்கே...
ஏடா தம்பி! எடுடா பேனா
எத்தனை உணர்ச்சி! எத்தனை எழுச்சி!
'கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு'
கருத்துப் பேழை--கற்பூரப் பெட்டகம்!
மரக்கிளையிலே பிணம் --
வெந்த புண்ணிலே வேல்!
மறந்திடப் போமோ; மனங்கவர் வாசகம்?
சாலை யோரத்திலே வேலையற்றதுகள் -
வேலையற்றதுகளின் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள் -
வேந்தே! அதுதான் காலக்குறி!
அண்ணனுக்கன்றி யாருக்கு வரும் இந்த அழகு நடை?
அறிவு நடை?
கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது
தமிழகம் மறவாத் தலையங்கமன்றோ?
இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
தம்பியுடையான் படைக்கஞ்சான்
ஒப்பில்லா வரிகள் உரைத்திடும் பனுவல்
மனோன்மணீயம் எனினும் -- --நம்
மனதில் பதித்தவர் அண்ணா வன்றோ!
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
அரசியல் பண்பினை போதிக்கும் அழகே!
மறப்போம் -- மன்னிப்போம்
மாற்றார் ஏசல் தாங்கிடும் மாண்பே!
எவர் கற்றுத் தந்தார் இதனை?
சுவர் வைத்துச் சித்திரம் எழுதுதல்போல்
நயமிகு பண்புடன் அரசியல் நடாத்தல்
நன்றென்றார் அண்ணா -அதை மறுத்து
நாலைந்து பேர் குதித்திட்டார் என்றால்
அவர் கண்டு சிரித்திட்டார் அண்ணா - அனைவரையும் ஓர் அன்னை பெற்றெடுக்க
வயிறு தாங்காக் காரணத்தால்
தனித்தனித் தாய் ஈன்றெடுத்த தம்பிகளே!
என அழைத்து கனிச் சுவையாய்க் கற்கண்டாய்த் தேன் பாகாய் அன்பு காட்டி
பனிமலர் வீழ் தும்பியதாய்த் தழுவிக்கொண்டார்;
சொலல் வல்லார் சேதுப்பிள்ளைதனை
சோமசுந்தர பாரதியைச் சொற் போரில்
சொக்க வைத்தார் --- பாவம்; சிக்க வைத்தார்!
நீதிக் கட்சியென்று நெடியமதில் சுவருக்குள்ளே --- பணச்
சாதிக்குக் கட்சியாய் இருத்தலாகாதெனும் கொள்கையாலே அதனை
வீதிக்குக் கொண்டு வந்தார்;
வீசிடுக வெள்ளையர்கள் பட்டத்தையென்று
சேலத்து மாநாட்டில் தீர்மானம் போட்டுவிட்டார் --
- அண்ணாவின் போர்க்
கோலத்தை எதிர்க்க மாட்டாமல்,
கோலற்ற குருடர்போலக் கொள்கையற்றோர் வீழ்ந்துபோனார்!
தீரர் அண்ணா திராவிடர் கழகமெனும் பெயர் மாற்றத் தீர்மானம்
வீரர் கூடிய மாநாட்டில் கொண்டு வந்தார்
அண்ணல் காந்தியார் அறவழி கண்டு
ஆங்கில ஆட்சியை அகற்றிய போது
துன்ப நாளெனும் பெரியார் அறிக்கையை மறுத்துத்
தொடங்கினார் போரை!
இன்ப நாளிது! இனிய நாளிது!
என்பு தோலாய் ஆன இந்தியர்
அன்புறு காந்தியின் அருளால் இன்று
எழுந்தனர் அடிமைத் தளையினை அறுத்து
முழங்குவோம் விடுதலை முரசினை எடுத்து
என்றே அண்ணா, அன்றே சொன்னார்...
அன்று முதல் அண்ணன் - அய்யா - உறவினிலே கீறல் விழ
அது நாற்பத்தொன்பதாம் ஆண்டினிலே பிரிவாய் மாறி
முகில் கிழித்து வெளிக்கிளம்பும் முழுமதியாய்
முன்னேற்றக்கழகத்தை முகிழ்க்கச் செய்தார்.
தலைவருடன் கூடி வாழ முடியாமல்
பெரும்பான்மைத் தோழருடன் வெளியே வந்தும்,
நிலைகுலையா நம் அண்ணன் அன்று சொன்னார்
அது, -
நேற்று சொன்னது போல் இருக்குதம்மா!
தலைவரில்லை முன்னேற்றக் கழகத்துக்கு - என்
தலைவர் இருந்த நாற்காலி காலியாக இருக்கும் அதில்
தலைவர் அவர் என்றேனும் வந்தமர்வார்
அதுவரையில் காத்திருப்பேன் என்றார்.
பூத்திருக்கும் மலர்த் தோட்டம்
காலைப் பனிநீர் வடிப்பது போல்
காத்திருந்து கூட்டம் கேட்டோர்
கண்ணீர் வடித்தார்
கண்ணீர்த் துளிகளே! நாட்டின் கண்மணிகளே! என அழைத்துச்
செந்நீர் சிந்துதற்கு அணிவகுத்தார்.
யாரேனும் பகர்ந்ததுண்டா?
யாரேனும் கேட்டதுண்டா?
பதினெட்டு ஆண்டுக்குள் ஓர் இயக்கம்
பதுங்கிப் பாயும் வேங்கையெனப் --- -பாராள வந்த கதை?
ஈராண்டு முடியவில்லை எம் அண்ணா ஆட்சியேற்று -
சீரார்ந்த செயல் பலவும் செய்தலுற்றார்,
ஏராந்த உழவர்க்கெல்லாம் ஏற்றம் தந்து
எழில் வாழ்வு குவிப்பதற்கு எடுத்தார் முயற்சி
உலகத் தமிழ் மாநாடு துவக்க வந்த
ஓங்கு புகழ்க் குடியரசுத் தலைவரவர்
இணையற்ற காட்சி கண்டேன் மாட்சி கண்டேன்.
இதுபோல வாழ்வில் என்றும் கண்டதில்லை யென
ஊர் மெச்சப் புகழ்ந்துரைத்தார் அண்ணன் கீர்த்தி!
ஆந்திரத்துப் பிரும்மானந்த ரெட்டிகாரும்
ஆகா - -நீதானே அசல் காந்தீய வாதியென்று
ஆராதனை செய்திட்டார் -- ஆண்டொன்று கழியவில்லை!
மதுவிலக்கைத் தீவிரமாய் ஆக்குகின்றீர் பல
மாநிலத்தில் கை கழுவி கலயம் கட்டிவிட்டார் மரங்களிலே!
மகாத்மாவின் தோன்றல் நீர்தான் என்று!
கிரியென்றால் மலையன்றோ -- அந்த
மலை தழுவும் முகிலானார் நம் அண்ணா!
வி.வி. கிரி தந்த வாழ்த்துக்கு விளக்கமிது.
பன்னாட்டுப் பேரறிஞர் வாழ்த்தி நின்றார் -- அன்று
தென்னாட்டுச் சிகரமாக இருந்திட்டோர் அண்ணன் பற்றி
என்ன சொன்னார்?
பழந்தமிழ் வித்தகர் பல்லாவரத்தார் -- அண்ணா,
பழந்தமிழ்ப் பேச்சால் மயங்கி நின்றார். - அந்த
மறைமலை தந்த புகழ்மொழி ஆயிரம்
பசுமலை பாரதி -- பாண்டியன் தோற்றம் -- அவரை
நாவலர் என்று நாடே அழைக்கும் -- அவர்
சழக்கரால் வீழ்ந்த தமிழ்நிலம் காக்க -- மன
அழுக்கில்லாத் தலைவன் கிடைத்தான் என்றே
அண்ணன் பெருமை சொன்னார் அன்று!
ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்
இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை
நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு
நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றாள் எனினும்;
கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்
தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.
மலர் என்றால் தாமரை தான்
மன்னன் என்றால் கரிகாலன்
நூல் என்றால் திருக்குறளே அளித்திட்டான் எனப்போற்றும் அறப்பனுவல்
அளித்திட்டான் --- மாந்தரெல்லாம் களித்திட்டார்!
விண்முட்டும் மலையோரம் --- நம்
கண் பட்டும் படாமலும் எழுகின்ற நச்சுமரம் போல
பண்பட்ட தமிழர் வாழ்வில் --- முதுகில்
புண்பட்ட கொள்கையெல்லாம் மூண்டதந்தோ
சாதிகளைக் காணாது குறள் ஒலித்த தமிழ் மண்ணில் பாதியிலே வந்ததம்மா பலகோடி சாதிகளும்!
அறிவு மணங் கமழுகின்ற ஆலயங்கள் அற்றுப் போய் ஆயிரம் தெய்வங்கள் உறைகின்ற கோவில்கள் கண்டுவிட்டார்.
மொழியுணர்வே இல்லாத வாயுணர்வின் மாக்கள் --- தமிழ்
அழியினும் வாழினும் என்னென்று இருந்திட்டார்
அறநெறியே குறிக் கோளாய்த் திகழ்ந்திட்ட பெரு நிலத்தில்
பிறநெறிகள் பயிர் செய்தார் பிழை குவித்தார்.
மழையற்றுப் போன வயல் போல மாறிற்றுத் தமிழர் மனம்;
அழுக்காறு --- அவா --- வெகுளி --- இன்னாச் சொல் நான்குமின்றி
நடக்காது வேலையென்று நடந்திட்டார் சில தமிழர்;
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
பொருள் குவித்து வளம் செழித்த நாட்டில்- -- இன்று
இருள் கவிந்து வாட்டம் கோடி போட்டதங்கே.
வாடினாள் தமிழன்னை -- சோகப் பாட்டுப்
பாடினாள் தமிழன்னை - அடு நெருப்பில்
ஆடினாள் தமிழன்னை
ஓடினாள் - ஓடினாள் - ஒரு வழியும் கிடைக்கவில்லை!
புவியூர் விட்டுப் புகழூரில் வாழுகின்றான்
கவியூரின் பெருவேந்தன் குறளாசான்
ஆண்டு சென்று, அருமை மகனே
வேண்டுகோள் ஒன்று விடுத்தேன் என்றாள்.
என்னம்மா? என்றான் குறளோன்.
தோண்டுகின்ற இடமெல்லாம் தங்கம் வரும் தமிழகத்தில்
மீண்டும் நீ பிறந்திட வேண்டுமென்றாள்.
தங்கம் எடுக்கவா என்றான்
தமிழர் மனம் வாழ்வெல்லாம்
தங்கமாக ஆக்க என்றாள்
இன்றென்ன ஆயிற் றென்றான்.
குன்றனைய மொழிக்கு ஆபத்தென்றாள்;
சென்றடையக் குடிலில்லை ஏழைக்கென்றாள்;
கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல் கொன்றெறியும் கோல் ஓங்கிற்றென்றாள்; அறிவில்
கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்.
அழுதகண்ணைத் துடைத்தவாறு
அமுதமொழி வள்ளுவனும்
அம்மா நான் எங்கே பிறப்பதென்றான்?
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே.. அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமெல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே
கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே!
நீ காஞ்சியிலே பிறந்திடுக! என்றாள்.
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னனாக
பொதிகை மலைத் தென்றலாய் போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்ப் பழந்தமிழர் புறப்பாட்டாய்
வந்துதித்தான் அண்ணன் -- கீழ்
வானுதித்த கதிர் போல
புரியாதார்க்கு ஒரு புதிர் போல -
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை. -
தலைவரென்பார், தத்துவ மேதை என்பார்,
நடிகரென்பார், நாடக வேந்தரென்பார்
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்.
அன்னையென்பார், அருள் மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் -- அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் -நெஞ்சத்து அன்பாலே
அண்ணா என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே -- அவர் அன்னை
பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம் போற்றுதற்கு
ஔவைக்கோர் சிலை
அறம் வளர்த்த கண்ணகிக்கோர் சிலை
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடி பாரதிதாசருக்கும் சிலை
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல் போப்புக்கும் சிலை கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்துச் சிலை வைத்ததினால் -- அண்ணன் தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்தபோது..
ஆட்காட்டி விரல் மட்டும் காட்டி நின்றார்.
ஆணையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப்போகின்றேன் என்று அவர்
ஒர் விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா... இதயமன்னா...
படைக் கஞ்சாத் தம்பியுண்டென்று
பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய்
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீதான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப்போய் விட்டாய்: நியாயந்தானா?
நான்தானடா நன்முத்து எனச் சொல்லி
கடற் கரையில் உறங்குதியோ?...
நாத இசை கொட்டுகின்ற
நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த
விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்?
கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன். இன்று
மண் மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல்
தடுப்பதென்ன கொடுமை,
கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்:
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதுமண்ணா
எழுந்து வா எம் அண்ணா
வரமாட்டாய்; வரமாட்டாய்,
இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ
இருக்குமிடந்தேடி யான்வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தை தந்திடண்ணா...
நான்வரும் போது கையோடு கொணர்ந்து அதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா?
***
வீரனும் கோழையும்
வீரன், ஒரு முறை தான் சாவான்,
கோழை பலமுறை சாவான் என்பார்கள்
ஒரு திருத்தும், வீரன் சாவதே இல்லை
கோழை வாழ்வதே இல்லை
- கலைஞர்
கல்லறையில் எழுதுங்கள்
'ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக்கொள்கிறான்' என்று என் கல்லறையில் எழுதப்பெறும் எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்.
பன்னீர் செல்வமே! - கலைஞர் கருணாநிதி
1940 ஆம் ஆண்டு இலண்டனில் இருந்த இந்திய அமைச்சருக்கு ஆலோசகராகப் பணியாற்ற திராவிடத்தளபதி ஏ.டி. பன்னீர் செல்வம் அவர்கள் இலண்டன் சென்றபோது, விமானம் ஓமான் கடலில் வீழ்ந்து மூழ்கியது. மறைந்த பன்னீர் செல்வம் அவர்களை பற்றி 'முரசொலி' யில் கலைஞர் தமது இளம் வயதில் எழுதிய கண்ணீர்ச் சித்திரம் இது.
இருட்டறையில் இரு கண்கள் மூடிக்கொண்டு
உருட்டுகின்றார் உலகத்தார் என்று சொல்வோர்
அழுந்தட்டும் அறியாமை, அதையுணர்த்த
முழங்கிற்றுப் பெரியாரின் முரச ஒலி
அவ்வழி வந்தோன்...அன்பன்...தோழன்
அருமைச் செல்வன்...அறிவியக்க வீரன்
ஞாயிற்றின் நல்லொளியில்
ஆயிற்றுக் காலமென்று அகன்றுவிடக் கருக்கல்
அங்கே..
கிழக்கினில் கிளம்பிய காலைக் கதிரவன்
வெடுக்கென வீழ்ந்தான் கடலில் என்றால்
வையம் கலங்காதோ? வாடி வதங்காதோ?
இருள் நீங்கி ஒளி பெறவே இந்நாடு முத்துங்கால்
மருள் சூழ்ந்த சாவு மேகம் இளந்திரை மறைத்ததுவே!
குன்றெடுக்கும் நெடுந்தோளன் குலத்தினனே!
கொன்றொழிக்கும் கொடுவாளால் குள்ளநரிக் கும்பலின்
குலை பிடுங்கக் குகைவிட்டு வெளிவந்த சிங்க ஏறே!
மலைத் தோளா! மாணிக்கக் குன்றே!
பழச்சுளை உன் பேச்சு! பார்வையிலே பணி வீச்சு!
நீ போய்விட்டாய்... நின்னொடு நின் புகழ் போமோ?
பன்னீர்ச் செல்வமே! உன் பால்வடியும்
முகமெங்கே? பாண்டியன் மீசையெங்கே?
பசியெறிய வெறிக் கடலின் பாழலைகள்
ஓய்ந்தனவா உனைத் தின்று!
"தின்னட்டும்... தின்று மகிழட்டும்... என்றும்
எண்ணட்டும் திருவிடத்தா " ரென்றே எங்கு ஒழிந்தாய்"
பணத்தினில் பிறந்து பணத்தினில் வளர்ந்தும்
பாட்டாளிக் குணத்தினை எங்கனம் கற்றாய்?
கோமானே! யாம் அழுதழுது உகுத்த கண்ணீர்
ஓமான் கடல் ஆயிரத்தை வெற்றி கொள்ளும்!
பழுதற்ற திராவிடப் பொன்னாடு! பழைமை
மதுவுண்ட மக்கள் எல்லாம் விழித்தெழுதல்
இது காண்டல்... நின் பணிக்குக் காணிக்கையாம்!
சுற்றி எதிர்ப்புகள் சூறாவளியாய்ச் சீறிடினும்
வெற்றி எமக்கென்றே வெளிக் கிளம்பிவிட்டோம்!
பஞ்சைகளல்லர் நாங்கள்...
தஞ்சைக் காவலன் சந்ததியார்!
வீழ்ந்திட நேரிடினும் நின் செயல் பாடி
வீழ்ந்திடுவோம்!”
**
வருணமா? மரணமா? - கலைஞர் கருணாநிதி
சிதம்பரம் வர்ணாஸ்ரம மாநாட்டினைக் கண்டித்து கலைஞர் எழுதியது (1944)
பரணி பலபாடிப் பாங்குடன்
வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்
சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்
சோதாக்கள் சில கூடி
வருணத்தை நிலை நாட்டை
வையின்றிக் கரணங்கள் போட்டாலும்
மரணத்தின் உச்சியிலே மானங் காக்க
மறத்தமிழா போராடு!
***
அணிவகுப்புப் பாடல் - கலைஞர் கருணாநிதி
1938 ஆம் ஆண்டு
வாருங்கள் எல்லோரும் இந்திப்
போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும்
இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்.
ஓடிவந்த இந்துப் பெண்ணே கேள்! நீ
தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!
வீரத் தமிழ் கொஞ்சும் நாட்டிலே - நாங்கள்
சார மில்லாச் சொற்கள் ஏற்க மாட்டோம் ஏட்டிலே!
***
இயக்கத்தின் விழா வாழ்த்து - கலைஞர் கருணாநிதி
1938 ஆம் ஆண்டு
இந்நாட்டான் இங்குப் பிறந்து வாழ்ந்தான்.
எண்ணத்தையும் புறங்காணும் புகழுடையான்.
தமிழ்நாட்டான் தலை குனிந்தான்; இதோ நிமிர்ந்தான் - இனிக்
கொழித்துவிட்ட உமிகள்தாம் குள்ள நரிக் கூட்டத்தார்
பழித்துவிட்டான் பகுத்தறிவால்
பக்தி மதம் கடவுளர் எல்லாம் பாழ்! பாழ்! பாழ்!
***
கற்பனையே கடவுள்
1938 ஆம் ஆண்டு
கற்பனையே கடவுள்.
கால வெள்ளத்தில் கரைந்திடுமே - அந்தக்
கற்பனையே கடவுள்.
(சாந்தா - பழனியப்பன் நாடகம்)
***
பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். - கலைஞர் கருணாநிதி
“இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர்
இடிமுழக்கம் கேட்பதுபோல் - திணறிப் போனார்
பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம்
மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்!
பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம்
ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்.
ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின்
அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்!
அவர்
வெண்தாடி அசைந்தால் போதும்
கண் ஜாடை தெரிந்தால் போதும்;
கறுப்புடை தரித்தோர் உண்டு
நறுக்கியே திரும்பும் வாள்கள் !!"
1945 ஆம் ஆண்டு
தங்கத்தின் உருக்கில்வந்த தனித்ததோர் ஒளியைப் போலச்
செங்கதிர் உதயமாகும் செவ்வானம் வெட்கியோட
மங்கிய தமிழர் வாழ்வை மடத்தனம் மடித்ததென்று
பொங்கியே எழுந்தார் பெரியார்! புதுமைக் காளைகள் கோடி!
உறுதியாய்க் கூறுகின்றார் குருதிதான் பணயமென்று!
கருதியே சொல் தமிழா! களங்கண்டு நாணாதா செவ்வானம்?
***
1945 ஆம் ஆண்டு
சுண்டெலி வந்ததென்று
சூரப்பூனை அடுப்பின்
அண்டையில் பதுங்க,
அரவமொன்றாடியோடக்
கண்ட கீரிப்பிள்ளை
கலங்கியே வியர்த்து நிற்க,
மணடலத்தி லில்லாஇம்
மாபெரும் வேடிக்கைகள்
வண்டமிழ் நாட்டில் வந்தால்
வாகை சூடி வாழ்ந்திருந்து
சண்டைக்குச் சளைக்காத
சிங்கத் தமிழக்காளை யெல்லாம்
நண்டுக்குப் பயந்தொழிந்த
நரியைப் போல் - அந்நிய
வெண்டைக்காய் வீரரிடம்
வெற்றிகளைக் கொடுத்திடுவார்!
***
1945 ஆம் ஆண்டு
புலிநிகர் இளைஞர் புறப்பட்டார்!
எலி நிகர் தோழர் எதிர்பட்டால்?
சிறுத்தையின் உறுமல்! சிங்கத்தின் சீற்றம்!
கறுத்த கழுதையே! அங்கேன் கனைக்கிறாய்?
உறை விட்டெழுந்தது உடைவாள் தோழா!
மறைவிடந் தேடிடு! மடிந்து போவாய்!
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை!
மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று!
***
1945 ஆம் ஆண்டு
*
சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே?
வீரர் பாண்டியர் அரசன் கவிழ்ந்தது?
சோழர் உலவிய சோர்விலா நாட்டில்
கோழைக் கொள்கை குவிந்த தெவ்விதம்?
வெடித்தன வினாக்கள்
வெதும்பிய மனத்தில்
குடித்திடுவோம் உயிர்!
கொடுத்திடுங்கள் நாட்டை.
உரிமைகள் வேண்டாவெனும்
பெரும் உபதேசம்
நரிகளின் ஊளை! நாட்டு
வெறி பிடித்த காளைகளே!
கிலி பிடித்த மனிதர்களைக்
காரி உமிழுங்கள்!
புலி வாழ்வின் உச்சியிலே
புதுமைதனைப் பொறித்திடுவோம்!
***
30.8.1957
கலைவாணர் என்.எஸ்.கே மறைவையொட்டி, கலைஞர் அவர்கள் எழுதிய கவிதை
பனிப்பார்வை, கணிப்பேச்சு, தனித்திறமை
இனிப்போடு எழில் காட்சி தருகின்ற இசைப்புலவன்!
அழைக்கின்ற போதெல்லாம் மக்கட் பணிபுரிய வருகின்ற நற்றொண்டன்!
சிரிப்பு,
தழைக்கின்ற செந்தமிழன்! மழைக் கரத்தால் மாநாடு காக்கின்ற வள்ளல்!
உழைக்கின்ற ஒருபேறே பெரும்பேறு எனக்கொண்ட தமிழேறு
கலையுலகில் தனிவேந்தன் - அலைக்கடலாம் அவன் உள்ளம்
நிலைகுலைய நமைவிடுத்து நீங்காத துயில்கொண்ட கொடுமை என்னே!
"சிரிப்போன்றே மனித வாழ்வுக்கு மருந்து - அதைச்
சிந்தனைத் தேனில் குழைத்து நாள்தோறும் அருந்து -
நான் உள்ளவரை குறையாது அவ்விருந்து!"
என மொழிந்து வாழ்ந்திட்டான் - அந்தோ,
ஏறி நெருப்பில் வீழ்ந்திட்டான்!
ஏழைகளைச் சிரிக்க வைத்தான் -
கோழைகளை நிமிர வைத்தான் -
எமையெல்லாம் கதறவைத்து இறப்புலகு ஏகிவிட்டான்!
படக்கலையில் அறிவுமணங் கமழச் செய்து - நாட்டின்
வலக்கரமாய் அமைத்திருந்த "நல்ல தம்பி!"
முடக்கலாம் பெருநிதியை எனக் கிளம்பும் மூலி எண்ணம்
முனை முறிந்து போகும் வண்ணம் 'பணம்'தந்த பாவாணன்!
விதவைதனை "மணமகளா" ய் ஆக்கி வைத்துக் காதற்
பறவைகளை புதுவானம் மேவ விட்ட கர்மவீரர்!
கல்லடிக்கும் கயவர்தம் சொல்லடிக்கும் மத்தியிலே
கூறிவந்த கொள்கைகளை
வல்லடி வம்பர்களும் பல் இளிக்கும் விதத்தினிலே
வில்லடிப் பாட்டாலே விளக்கி வந்த வித்தகனாம்!
ஆடுகின்ற கோவிலுக்குப் போகின்றான் பழைய நந்தன் - அறிவு
தேடுகின்ற ஆலயத்தை நாடுகிறான் புதிய "கிந்தன்"
ஓடுகின்றார் உனைக் கண்டு ஓதியமிலார் உள்ளத்தாற் என மகிழ்ந்தோம்.
இன்றோ
உனையிழந்து உளம் நெகிழ்ந்தோம்!
இதழ்க் கடையில் புன்னகையைத் தேக்கிக்கொண்டு
மலர்க் கண்ணால் வரவேற்புக் கூறுகின்ற காட்சி எங்கே?
கிளிக் சிறகின் நிறம்காட்டும் இலை எடுத்துப் புதுக்
கிளிஞ்சல் சுண்ணாம்பும் பாக்கும் சேர்த்துக்
குதப்புகின்ற கோலச் செவ்வாய் காட்டுகின்ற
குறுஞ்சிரிப்பு முகத்தான் எங்கே?
புனலிலே மிதக்கட்டும் தமிழர் என்றே
தணலாகிப் போனாயோ, கலைத் தலைவா!
நீரோடை நிலங்கிழிக்கும் நெடிய பெருந்தமிழ் நாட்டில்
சீரோடு வாழ்ந்திருந்த கலையரசே! நீ
வேரோடு சாய்ந்துவிழப் புயல் வீசும் என உணர்ந்தால்
கோடானு கோடி கரம் அப்புயலைத் தடுத்திருக்கும்!
"எதிர்ப்புகளை இள நகைப்பால் இடறிவிட்டு
என் தலைவன் அண்ணாவின் அருகிருப்பேன்"
என உரைத்து எழுந்திட்டாய்! அதற்குள்
சாவின் மடிதனிலே விழுந்திட்டாய்!
என்னுயிரே! இன்னமுதே! என்ன நினைத்து உயிர் விட்டாய்?
"பொன்மலையைக் குவித்திட்டேன்; இன்று புழுதிமலை
அடிவாரத்தில் கிடக்கின்றேன்" எனச் சொல்லிப்
புகழ்மலையின் உச்சிக்குப் போனாயோ?
புது மணியே! புகழ் முத்தே!
பொது உடைமை முளைக்கின்ற "ருசியா" வில்
கலைப் பயணம் நடத்துதற்குச் சென்றாயே;
அதுபோல எண்ணமிட்டோ பெரும்பயணம் மேற்கொண்டாய்;
என் மீது பெரும்பழியைச் சுமத்திவிட்டு?
கலையே! கற்பனையே!
அழகே! அறிவே!
அன்பே! அறமே!
யாருண்டு இனிமேல் உன்போல் நல்லோன்?
நீயுண்டு; நின்புகழுண்டு என்றென்றும் தமிழர் நெஞ்சில்!
***
12-08-1981
உடன்பிறப்பே,
திட்டித் தீர்க்கின்றார் - என்னைத்
திட்டித் தீர்க்கின்றார் - நான்
தீயுலையில் காய்ச்சிய சொல் எடுத்து
கட்டிட மாட்டேனா என எதிர்பார்த்துத்
திட்டித் தீர்க்கின்றார்!
பட்டொளி வீசிடும் பதவியில் அமரப்
பலவழி முயன்று - ஒரு வழி கண்டு
திட்டித் தீர்க்கின்றார் - என்னை!
"எப்படித் தாக்குதல்? இன்னும் பாரீர்!
தப்பிட முடியுமோ - கருணாநிதியால்? உமது
சொற்படி கேட்பேன் பாதமும்
சொறிவேன்!
சுயமரியாதையைக் கனவிலும் நினையேன்!
தயை புரிந்து தந்திடுக பதவி!”
கட்டிப் பிடிக்கிறார்
தோட்டத்தார் காலை - அதனால்
தீட்டித் தீர்க்கின்றார் -
தீ நாக்கு சுழற்றுகின்றார்!
பதர்களுக்குப் பதில் சொல்ல
புதர் வாழ் சிறுத்தைகளா தேவை?
இவர்களுக்குப் பதில் சொன்னால் -
அதைக்கொண்டே பதவி பெற ஓர் திட்டம்!
அதனால்தான்
திட்டித் தீர்க்கின்றார் என்னை;
கட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!
பதவியல்ல பண உதவி போதுமென
"பத்துத் தலையோர்" கைநீட்டுவதும் நானறிவேன்!
போகட்டும் பிழைத்தப் போகட்டு மென்றும்
ஆகட்டும் அவர் காரியம் ஆகட்டும் என்றும்
ஏசட்டும் அதற்காக என்னை யென்றே
எதிர்த்தொரு வார்த்தை சொல்லாது விடுகின்றேன் நான்!
வேழத்தைத் தாக்குதல் வேங்கையின் வீரம் -
"வெண் மூக்குக் குதிரை" யைத் தாக்குதல்
வெட்கக்கேடன்றோ!
எனவே தான் ஏசட்டும் சிலர் என்றே
எதிர்த்தொரு வார்த்தை செல்லாது
விடுக்கின்றேன்!
விரல் கொண்டு நசுக்கின்ற எறும்பை
வேல் கொண்டு வீழ்த்துவது அறிவாமோ?
கிட்டியதைத் தட்டிப் பறிக்காமல் காப்பதற்கும்
எட்டி எட்டிப் பாய்ந்து ஓர் பதவி பெறுவதற்கும்
திட்டித் தீர்க்கின்றனர், என்னை -
கட்டிப் பிடிக்கின்றார் அவர் காலை!
"பழுதுண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்"
எனும் குறட் பொருளை
அன்றுணர நான் தவறிடினும்
இனும் வேதனை சூழாமல் இருந்திடவே
இன்றவர் உணர்வாரோ - யாரறிவார்?
***
என் இனிய நண்பா ஏன் பிரிந்தாய்...?
கவியரசு கண்ணதாசன் மறைந்தபோது 17-10-1981 அன்று கலைஞர் எழுதியது
என் இனிய நண்பா!
இளவேனிற் கவிதைகளால்
இதய சுகம் தந்தவனே!
உன் இதயத் துடிப்பை
ஏன் நிறுத்திக் கொண்டாய்?
தென்றலாக வீசியவன் நீ
என் நெஞ்சில்
தீயாக சுட்டவனும் நீ!
அப்போதும் அன்றிலாக
நம் நட்பு திகழ்ந்ததே அன்றி
அணைந்த தீபமாக
ஆனதே இல்லை நண்பா
கண்ணதாசா என்
எண்ணமெல்லாம் இனிக்கும் நேசா
கவிதை மலர் தோட்டம் நீ
உன்னை காலம் எனும் பூகம்பம்
தகர்த்து தரை மட்டம் ஆக்கிவிட்டதே
கைநீட்டி கொஞ்சுவோர் பக்கமெல்லாம்
கரம்நீட்டித் தாவும் குழந்தை நீ
கல்லறைப் பெட்டி மடியினிலும்
அப்படிதான் தாவிவிட்டாயோ ?
அமைதிப்பால் அருந்தி தூங்கி விட
இயற்கை இசைபாடி களித்த குயில் உன்னை
மயக்க மருந்திட்டுப் பிரித்தார் உன்னை
தாக்குதல்கள் எத்தனைதான்
நீ தொடுத்தாலும்
தாங்கிக் கொண்ட என் நெஞ்சே உன் அன்னை
திட்டுவதும் தமிழில் நீ திட்டியதால்
சுவைப் பிட்டு என ஏற்றுக் கொண்ட என்னை
தித்திக்கும் கனித் தமிழா
பிரிவு மத்தியிலே ஏன் விட்டு சென்றாய்
அடடா அந்த இளமை கழனியில்
அன்பெனும் நாற்று நட்டோம்
ஆயிரம் காலத்துப் பயிர் நம் தோழமை என
ஆயிரம் கோடி கனவுகள் கண்டோம்
அறுவடைக்கு யாரோ வந்தார்
உன்னைமட்டும் அறுத்து சென்றார்
நிலையில்லா மனம் உனக்கு ஆனால்
நிலைபெற்ற புகழ் உனக்கு
இந்த அதிசயத்தை விளைவிக்க உன்பால்
இனிய தமிழன்னை துணை நின்றாள்
என் நண்பா இனிய தோழா
எத்தனையோ தாலாட்டு பாடிய உன்னை
இயற்கை தாய் தாலாட்டி தூங்க வைத்தாள்
எத்தனையோ பாராட்டு பெற்ற உனக்கு
இயற்கை தாய் சீராட்டுத்தான் இனிக்கின்றதா
எனை மறந்தாய் எமை மறந்தாய்
உன்னை மறக்க முடியாமல்
உள்ளமெல்லாம் நிறைந்தாய்!
அருமருந்தே அன்பழக உடன்பிறப்பே!
19-12-1982
கலைஞர் மணிவிழா வாழ்த்து மடல்...
உடன் பிறப்பே,
உனக்கு மணிவிழா!
நமது குடும்பத்தின் திருவிழா - உன்
நாக்குத் தமிழ் மணத்தால்
கழக நந்தவனம் சிறக்கும் - உன்
வாக்குத் திறந்தாலே
வஞ்சினப் பகையனைத்தும் பறக்கும் - உன்
ஆக்கப்பணிகள் கழகத்தைக் காத்து - நெடுந்
தூக்கத் தமிழரை எழுப்பும்!
நீயோர் ஒளி மணி;
ஓயாமல் ஒலிக்கின்ற தமிழ் மணி!
பள்ளந்தான் தமிழர் வாழ்வில்
விழலாமோ என்று,
உள்ளந்தான் கொதித்தெழுந்தால் - புது
வெள்ளெந்தான் உந்தன் பேச்சு!
வெற்றி விளைகின்ற வாளின் மூச்சு!
அகமென்றும் புறமென்றும் அடுக்கிடும் !
அருந்தமிழ் இலக்கியங்கள் தேன் வடித்திடும்!
புலவர் கூட்டமோ,
அதனை உன்பால் பருகத் துடித்திடும்!
பெரியாரின் பிள்ளைகள் நாம் - என்றும்
பேரறிஞரின் தம்பிகள் நாம் - என்றும்
பிரியாத இருவண்ணக் கொடியே நாம் - இந்தப்
பெருங்குடும்பம் பெருமகிழ்வுக் கடலில் துள்ள
அருமருந்தே! அன்பழக உடன்பிறப்பே!
அறுபது நிறை மணிவிழப் போல் - இன்னும்
அடுக்கடுக்காய் பலவிழாக் காண நீ
பல்லாண்டு வாழியவே!..
..
அண்ணாவின் 75 ஆவது ஆண்டு பிறந்தநாளில் 15-09-1983 இல் கலைஞர் எழுதியது.
அண்ணனே!
எங்கள் உயிரே!
உணர்வே!
இனமானக் கோவே!
எழுச்சியின் வடிவே!
எண்ணங்கள் மலரும்
எழிலார் சோலையே!
எஃகுக் கம்பிகலாம்
இனிய தம்பிகளின் இதயத் துடிப்பே!
எழுபத்தைந்து பிறக்கிறது
உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
அழகுதமிழ்ப் பேச்சில்
அருவிகளை வென்றவன் நீ!
ஆங்கிலச் சொல்மழையோ -- உன்
ஆற்றலுக்கு ஆலவட்டம்!
எழுத்துக் கற்கண்டுகளை மலையெனக் குவித்தாய்!
எறும்பென மாறி நாங்கள்
அவற்றைச் சுவைத்தோம்!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
காந்தம் உன் விழியில்!
சாந்தம் உன் மொழியில்!
வீரம் உன் செயலில்!
விவேகம் உன் முறையில்!
பாசம் உன் உடன்பிறப்பு!
பரிவு அதன் மறுபதிப்பு!
இதயமோ எதையும் தாங்கும்!
புதையலாய்த் தமிழர்க்குக் கிடைத்த திருவே!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
அண்ணனே!
நீ வருவதற்கு முன்பே
வரலாறு இருந்தது தமிழர்க்கு! ஆனால்
நீ வந்ததற்குப் பின்தான்
வகையாகத் தமிழன் வரலாற்றை உணர்ந்தான்!
இலக்கியம் இருந்தது தமிழருக்கு!
இருப்பினும் நீ வந்த பின்தான்
இயக்கினாய் அதனை
இப்புவி அறிந்திட!
தனிப்பண்பாடு கொண்ட இனம்தான் தமிழினம்!
தமிழினமே அதனை அறியாதிருந்த நேரம்;
தலைவா! நீ உதித்ததால்தான்
தமிழன் தமிழனானான்!
எழுபத்து அய்ந்து பிறக்கிறது உனக்கு -- ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததன் கணக்கு?
அண்ணனே!
தந்தை பெரியாரின் தளபதி நீ!
விந்தை மனிதர்களால்
விதவிதமாய் விளைந்திட்ட கேடுகளை,
மொந்தை விஷமென்று மொழிந்தவன் நீ!
அறிஞன் நீ!
அறிவாசான் நீ!
வறிஞன் செல்வன் என்று
வரையறுக்கும் வர்க்கபேதம்
வளர்த்தல் தீதென்று சமதர்ம
வழிநின்று உரைத்தவன் நீ!
எழுபத்தைந்து பிறக்கிறது உனக்கு - ஆனால்
அறுபத்து வயதில் முடிந்ததேன் கணக்கு?
எழும் இக்கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவில்லை!
எம்முள்ளத்துயர் இந்நாளிலும் அடங்கவில்லை -
எனினும் நீ அகலாமல் இருக்கின்றாய்
எனும் நினைவில் உன் நிழலாக அசைகின்றோம்!
எம்.ஜி.ஆர் மறைந்த நாளில் அண்ணாசாலையில்
Kalaigner 😍
ReplyDelete