Wednesday 19 August 2020

வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் இரட்சகனுக்காக! - கனிமொழி கருணாநிதி

 வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் இரட்சகனுக்காக! - கனிமொழி கருணாநிதி

 

“நீ இல்லாத தெருக்களில்

உன் உடன்பிறப்புகளின் குருதி,

ஆறாய் ஓடுகிறது.

உயிரற்ற உடல்களை

பழந்துணி போல்

இழுத்து வருகிறார்கள்.

கிடத்தப்பட்ட உடல்களை

வட்டமிடும் கழுகுகள்,

உணர்வற்ற உடலில்

தன் பங்கு தேடும் ஓநாய்கள்.

தெருவெங்கும் இரத்தம்.

சாதி மதம் கடந்து கலந்து

காய்ந்த இரத்தம்.

ஊர்கூடி வடமிழுக்கிறோம்,

தேர் நகரவில்லை

கைகள் சோர்ந்து நம்பிக்கை

இற்று விழும் முன் வா!

உன் கரகரத்த குரல் வாளெடுத்து

எழுத்துக் கேடயம் ஏந்திவா!

வீதிகளெங்கும் காத்திருக்கிறோம் இரட்சகனுக்காக.”

 

- கனிமொழி கருணாநிதி

June 3 2018

 

 

 

மௌனம் - கனிமொழி கருணாநிதி

 

பேசுவதை நிறுத்திக் கொண்டாய்

உங்களிடம் பேசி என்ன ஆகப்போகிறது

என்று நினைத்துவிட்டாயா?

பேசி பேசி அலுத்துவிட்டதா?

சொல்வதற்கு இருந்ததை எல்லாம்

சொல்லிவிட்டேன் என்றா?

உன் வார்த்தைகளின் எஜமானர்கள்

நாங்கள் என்று உனக்குத் தெரியாதா

 

மெளனம் கனத்துக் கிடக்கிறது

எங்கள் பாதையை அடைத்துக் கிடக்கும்

அசைக்க முடியாத பாறையாய்,

வெடித்துக் கிடக்கும் வறண்ட வயலின்

வரப்பில், செய்வது அறியாது

நிலைகுலைந்து நிற்கும் குடியானவனைப் போல

நாங்களும் காத்துக் கிடக்கிறோம்

கார்முகிலாய் திரளும் சொற்களுக்காக.

 

கடல் பிளந்து மறூகரை சேர்கிறேன் என்ற

கிழவனை, பறித்துச் சென்றது யார்?

உன் சக்கர நாற்காலி உருளும் சத்தம்…

வண்டியில் இருந்து இறங்கி நீ

வீசும் சினேகப் புன்னகை…

அதற்குப் பின்னால் எப்போதும்

ததும்பும் நகைச்சுவை…

மேடையில் இருந்து, ‘உடன்பிறப்பே’ என்று

அழைக்கும் போது ஒரு கோடி

இதயங்கள் ஒரு வினாடி உறைந்து

துடிக்குமே அந்தக் கணம்…

இதற்கு மாற்றாய் எதைத் தருவாய்,

நாளை முதல் சூரியன் உதிக்காது

என்றால் இந்த பூமி எப்படி சுழலும்.

 

எங்கள் கேள்விகளாய், தேடும் பதிலாய்

சிந்தனையாய், சிந்தனையின் ஊற்றாய்,

மொழியாய், மொழியின் பொருளாய்,

செவிகளை நிறைந்த ஒலியாய்,

குரலாய் இருந்தது நீ.

எங்களோடு தானே எப்போதும்

இருப்பாய், இருந்தாய்

திடீர் என்று எழுந்துபோய் கதவடித்துக்

கொண்டால் எப்படி?

 

உன் நாவை எங்களுக்கு வாளாக

வடித்துக் கொடுத்தாய்

அதைப் புதுப்பொலிவு மாறாமல்

பாதுகாத்து வைத்திருக்கிறோ…

இருண்மையும் எதிர்களும் சூழ்ந்த

நேரத்தில் எங்கள் தோள்அளின் மீது

ஏறி படை நடத்திட காத்திருக்கிறோம்…

நீயோ, போதி மரத்து புத்தனைப் போல்

அமைதி காக்கிறாய்.

 

உன் ஆளுமையை துவேஷித்தவர்கள்

வசை பாடியவர்கள்

தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம்

நீயே காரணம் என்றவர்கள்

எல்லோரும் இன்று

காத்துக் கிடக்கிறார்கள் எங்களோடு,

புழுதிக் காற்று வீசும் திசையறியா காட்டில்

தெளிந்த தடம் காட்டும் உனது

சில வாக்கியங்களுக்காக,

 

நீ பேசுவதில்லை

ஆனால் நாங்கள்

உன்னைப் பற்றியே தான்

பேசிக் கொண்டிருக்கிறோம்

வா,

வழியெங்கும் பூத்துக் கிடக்கிறது

நீ வருவாய் எனற நம்பிக்கை…

நீயின்றி இயங்காது எம் உலகு.

 

- கனிமொழி கருணாநிதி

June 3 2017

 

 

No comments:

Post a Comment