பெரியாரின் தளபதி அண்ணா - சுமதி விஜயகுமார்
குழந்தை பிறந்து விட்டது. மருத்துவமனையில் குழந்தையின் பெயரைக் கொடுத்தால் தான் பிறப்பு சான்றிதழ் கிடைக்கும். பிறந்த நாள், நட்சத்திரம் பார்த்து என்ன எழுத்தில் பெயர் துவங்க வேண்டும் என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். நானும் என் கணவரும், என்ன பெயர் வைத்தாலும் அது தமிழ்ப் பெயராக மட்டுமே இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். முதல் குழந்தைக்கு மட்டுமில்லை இரண்டாம் குழந்தைக்கும் தூய தமிழ்ப் பெயர் தான் வைத்தோம். 'இந்தியான்னு சொல்ற பின்ன ஹிந்தி தெரியாதா?' என்று பலமுறை என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குக் கொஞ்சமும் தயக்கமின்றி, சில சமயம் கொஞ்சம் பெருமையாய் கூட 'தெரியாது' என்று சொன்னதுண்டு. ஆங்கிலத்தில் பிழை இருந்தால் தவறில்லை , தாய்மொழி தமிழில், இலக்கணம் இலக்கியம் தெரியாவிட்டாலும் பிழையில்லாமல் எழுதிவிட வேண்டும். இதெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் உள்ளத்தில் ஊறிப் போன விஷயம். மீண்டும் படிக்கும் போது தான் தமிழில் ஒரு வார்த்தையை விட்டுவிட்டுப் படித்திருக்கிறேன் என்பது புரிந்தது.
தமிழ்நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் யார் என்று கேட்டல், ஒரு கணம் யோசிக்காமல் உடனே சொல்லி விடுவேன் 'காமராஜர்' என்று. சரி, உனக்கு எத்தனை முதலமைச்சர்கள் பெயர் தெரியும் என்று கேட்டல் MGR, ஜெயலலிதா மற்றும் கலைஞருடன் பட்டியல் நின்று விடும். மீண்டும் படிக்கும் போது தான் வரலாற்றில் ஒரு பெயரை விட்டுவிட்டுப் படித்திருக்கிறேன் என்பது புரிந்தது.
'அண்ணா'. நான் படிக்கத் தவறிய தமிழ். படிக்கத் தவறியவரலாறு.
தமிழ்நாடு பல முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது. நீதிக் கட்சியின் முதலமைச்சர்கள், காங்கிரஸின் முதலமைச்சர்கள், திராவிட கட்சி முதலமைச்சர்கள். கழக ஆட்சியை ஒழித்து முதலமைச்சராகத் துடிக்கும் திரைத்துறையில் ஓய்வு பெறப் போகும் கனவு முதலமைச்சர்கள். ஆனால் அந்த ஒற்றை குரல் மட்டுமே தமிழ்நாட்டைக் கட்டிப்போட்டது, வடநாட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தது, மேலை நாடுகளை வாய் பிளக்க வைத்தது. 'கட்சி துவங்கி 20 வருடங்களுக்குள் எப்படி ஆட்சியைப் பிடித்தீர்கள்?' என்ற கேள்விக்கு, எங்கள் கட்சியின் துவக்கம் நீதிக் கட்சியிலிருந்து துவங்குகிறது என்று அண்ணா சொல்லி இருக்கலாம். அதில் உண்மையும் கூட இருக்கலாம். திமுகவின் அடித்தளம் திராவிடர் கழகத்திலிருந்து துவங்கலாம். ஆனால் அண்ணா என்ற ஒற்றை சொல் இல்லாமல் திமுக ஆட்சியைப் பிடித்திருக்குமா என்பது சந்தேகமே. அண்ணாவின் அரசியல் பயணம் அவ்வளவு சுலபமாய் எல்லாம் அதன் எல்லையை அடைந்துவிடவில்லை.
அண்ணாவிற்குத் தலைமைப் பண்பு புதிதெல்லாம் இல்லை. பச்சையப்பா கல்லூரியிலேயே 1931 ஆம் ஆண்டு, அதாவது அவருடைய 22ஆம் வயதில் மாணவர் அமைப்புச் செயலாளராக இருந்தவர். அதே ஆண்டில் அவரின் முதல் தமிழ் கட்டுரை 'தமிழரசு' பத்திரிகையில் வெளியானது. அவர் எழுதிய அந்த முதல் கட்டுரையின் தலைப்பு 'பெண்கள் சமத்துவம்'.
பேராசிரியர் வரதராஜன் வீட்டில் தங்கி இருந்த அண்ணா, அவரின் சமூக நீதி, பிராமணரல்லாதோர் முன்னேற்றம், அரசியல் கட்சி மூலம் சமுதாய மாற்றம் போன்ற கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அதன் காரணமாக 1934ல் நீதிக் கட்சியில் இணைந்தார். அதிலிருந்து இரண்டு ஆண்டுகளில் சென்னை மாநகராட்சி தேர்தலில் ராஜா முத்தையா செட்டியாரின் பரிந்துரையில் நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அண்ணாவைப் பரிந்துரைக்கக் காரணமாக அவரின் பேச்சு மட்டுமில்லை, அவரின் ஆங்கில தமிழ் மொழி பெயர்ப்பும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. முதல் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார்.
1935 ஆம் ஆண்டு. திராவிட வரலாற்றின் சிறப்பு மிக்க மாநாடு ஒன்று நிகழ்ந்தது. செங்குந்த முதலியார் இளைஞர் மாநாடு. 26 வயதே நிரம்பிய அண்ணாவிடம் ஒருவர் 'தம்பி என்ன படிக்கிறீங்க?' என்று கேட்க அண்ணாவும் பதிலுரைக்கிறார். மீண்டும் அவர் 'படிச்சு முடிச்சுட்டு என்ன உத்தியோகம் பாக்க போகிறீர்கள்?' என்று கேட்க, மக்கள் பணியாற்றப் போகிறேன் என்றார் அண்ணா. 'அப்போ என்னோடு வந்துடுங்க' என்று கேட்டது வரலாற்றுச் சிறப்பில்லை. அண்ணாவின் பேச்சை யார் கேட்டாலும் அப்படிதான் கூப்பிட்டிருப்பார்கள். ஆனால் அப்படிக் கூப்பிட்டது தந்தை பெரியார் என்பது தான் சிறப்பு.
பெரியாரிடம் சேர்ந்த அண்ணா, பெரியாரின் தளபதியாய் மாறுகிறார். குடியரசு மற்றும் விடுதலை இதழ்களின் ஆசிரியராகிறார். பரதன், சௌமியன், ஒற்றன், நக்கீரன், வீனஸ், ஆணி, சம்மட்டி, சமதர்மன், வீரன், குறிப்போன் என்ற புனைபெயர்களில் கட்டுரைகள் எழுதுகிறார். துறையூரில் நடந்த சுயமரியாதை மாநாட்டை அண்ணா தலைமை ஏற்கிறார். திராவிடர் கழகத்தில் அண்ணாவின் செல்வாக்கு கூடுகிறது. எந்த அளவிற்கு என்றால் காங்கிரஸ் தலைவரான வரதராஜுலு அண்ணாவை 'திராவிடர் கழக மூளை' என்று பாராட்டும் அளவிற்கு.
அண்ணாவின் அடுக்கு மொழி பேச்சாற்றல் மிகச் சிறப்பு வாய்ந்தது. பேசுபவரை விட அதை மொழி பெயர்க்கும் அண்ணாவின் பேச்சுக்கே அனைவரும் மயங்கினர்.
ஒருமுறை பெரியாரும் அண்ணாவும் ஹரித்வாருக்கு சென்றிருந்தார்கள். அங்கு சிரத்தானந்த கல்லூரியில் பெரியாரைப் பேச அழைத்திருந்தார்கள். பெரியரின் தமிழ் பேச்சை அண்ணா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, கூட்டமோ அண்ணாவின் பேச்சுக்கு மயங்கியது. அதனை அடுத்து லக்னோ பல்கலைக்கழகத்தில் பெரியார் பேசப் போன போது, அந்த பல்கலைக்கழகம் அண்ணாவையும் பேச அழைக்க. பெரியாரோ 'என்னைத்தானே பேச அழைத்தீர்கள். நான் மட்டும் பேசினால் போதும்' என்றார். பெரியரையே ஒருவர் பொறாமைப்பட வைத்தார் என்றால் அது அண்ணாவாக மட்டுமே இருக்க முடியும்.
இதனை அடுத்து பெரியாருடன் இருந்த மனஸ்தாபத்தில் அண்ணா விலகி காஞ்சிபுரம் வந்தார். அப்போதுதான் திராவிட நாடு இதழைத் துவங்கினார். பெரியருக்கோ அண்ணாவை விட மனதில்லை. 1943, ஏப்ரல் 25 அன்று நிகழ்ந்த திருச்சி மாநாட்டிற்குத் தலைமையேற்க அண்ணாவை அழைத்தார். 1945 ல் நிகழ்ந்த திருச்சி மாநாட்டில் மக்கள் கருப்பு சட்டை அணிய வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்தார் அண்ணா. 'எல்லோரும் கருப்பு சட்டை போடவேண்டிய அவசியம் இல்லை. விருப்பமானவர்கள் போட்டுக்கொள்ளலாம்' என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் எப்போதும் வெள்ளை சட்டையையே அணிந்தார். அதே அண்ணா தான் பின்னாளில் காந்தி படுகொலை பொழுது கருப்பு சட்டை அணியக் கூடாது என்று சட்டம் போட்ட காங்கிரசை எதிர்த்து, அந்த சட்டம் விலகும் வரை கருப்பு சட்டை அணிந்தார்.
அதுவரை நீதிக் கட்சி, பெரியார் என்று தலைவர்களைச் சார்ந்திருந்த அண்ணா, தானே ஒரு தலைவராய் உருவாகிறார். 1949 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் துவங்குகிறார். எவ்வளவு பெரிய தலைவனானால் என்ன, தொண்டர்களுக்கு அவர் அண்ணனாக மட்டுமே இருந்தார். கட்சி துவங்கியதும் தேர்தலில் போட்டியிட்டு விடவில்லை. மக்கள் நாடியைப் பிடித்துப் பார்ப்பதற்கு முன் தன் தம்பிகளின் நாடியைப் பிடித்துப் பார்த்தார். திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் தொண்டர்களிடையே வாக்குப் பதிவு நடத்தியே தேர்தலில் போட்டியிட்டார். பின்பு நடந்ததெல்லாம், அது வரையிலும், அதன் பிறகும் நடந்திராத தேர்தல் வரலாறு.
60 ஆண்டுக் கால திராவிட ஆட்சி என்று சொல்லி அதை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்போருக்குத் தெரியாது இது அண்ணா இட்ட அடித்தளம் என்று. குரலை உயர்த்திப் பேசும் இன்றைய அண்ணனின் பேச்சுக்குக் கைதட்டும் தம்பிகளின் கூட்டம் அண்ணாவின் பேச்சை ஒருமுறை கேட்டால் புரியும் ஒரு அரசியல் மேடைப் பேச்சு என்பது கற்பனையில் வரும் கட்டுக்கதைகள் அல்ல, மக்களின் பிரச்சனையைப் பேசும் பேச்சு என்று. அண்ணா சொன்னதை தான் நானும் சொல்லி முடிக்க வேண்டியதாய் இருக்கிறது. தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் இருக்கும் வரை அந்த அண்ணாதுரை தான் ஆள்வான். அதை எந்த தற்குறிகளாலும் மாற்ற முடியாது.
'மனிதரென்பார், மாணிக்கம் என்பார், மாநிலத்து அமைச்சர் என்பார், அருள்மொழி காவலர் என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், அத்தனையும் தனித்தனியே அழைப்பதற்கு நேரமற்றோர், தன் நெஞ்சத்து அன்பாலே அண்ணா என்பார்'. தமிழ்நாட்டிற்கு எப்போதும் ஆண்டவரோ, சூப்பர் ஸ்டாரோ தேவையில்லை, 'அண்ணா' மட்டுமே தேவை. அண்ணாவின் தம்பி கலைஞர் தேவை. கலைஞரின் தளபதி ஸ்டாலின் தேவை.
தமிழ்நாட்டை என்றென்றும் பெரியாரின் தளபதி அண்ணா மட்டுமே ஆள்வான்
- சுமதி விஜயகுமார்
No comments:
Post a Comment