இனமான பேராசிரியர் புகழ் மாலை - இராம. வைரமுத்து
பேராசிரியர் பற்றிப் பேரறிஞர் அண்ணா:
" பிரச்சினைகளை அலசி, எளிதாக்கித் தொடர்புடையன, தொக்கி நிற்பன, துணை வருவன என்னும் வகையினதான கருத்துகளையும் பிணைத்து, ஆசிரியர் போல எடுத்துக்கூறிக் கேட்போர்க்குத் தெளிவளித்து, நம் பக்கம் அவர்தம் ஆதரவைத் திரட்டிட வேண்டும், என்ற எண்ணம் தோன்றும் போது, பல ஆண்டுகள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணிபுரிந்து, இன்று விடுதலை இயக்கத்தின் வீரர் கோட்டத்திலே திகழும் அன்பழகன் அழைக்கப்பட வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? " - பேரறிஞர் அண்ணா (திராவிட நாடு இதழ் - 02.10.1960)
பேராசிரியர் பற்றித் தலைவர் கலைஞர்:
"காலத்தால் மூத்த மொழி பெற்ற பிள்ளை
ஞாலத்தைத் தொழில் கேட்க வைத்திட்ட
கோலச்சொல் அறிஞர்க்கு வாய்த்த தம்பி
ஆலமர கழகத்தின் ஆணிவேர்த்தொண்டர்க்கு தோழன்
ஓலமிடும் எதிர்ப்புதனை ஒடுக்குகின்ற உடன்பிறப்பு
சீலமிகு பேராசிரியர் அன்பழகர்" - தலைவர் கலைஞர்
பேராசிரியர் பற்றிப் பாவேந்தர்:
" நன்றாண்ட மூவேந்தர்
நாகரிக மேமாற்றி
வென்றாண்ட ஆரியத்தை
வென்றாளத் தோன்றியவர்
குன்றா மறவக் குரிசிலார்
அன்பழகர் என்றோழர்
என்னல் எனக்குப் பெருமையதே '' - பாவேந்தர் பாரதிதாசன்
பேராசிரியர் பற்றி முனைவர் வ. சு. ப. மாணிக்கனார்:
“உலகக் கடல்களெல்லாம் ஓரிடஞ் சேர்ந்தாலும் ஒப்பாகா என்று சொல்லக்கூடிய அத்துணைத் தமிழன்பு மிக்கவர் அன்பழகனார்’’ - முனைவர் வ. சுப. மாணிக்கனார்
பேராசிரியர் பற்றித் தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார்:
"சாதி சமய வேற்றுமைகளைக் களைந்து தமிழ் மக்கள் அனைவரும் ஒரு குலத்தாராக வாழ்தல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோள் பேராசிரியர் அன்பழகனாரின் இளமைப் பருவத்திலேயே நன்கு வேரூன்றியிருந்தது’’ - தமிழறிஞர் க. வெள்ளை வாரணனார்
பேராசிரியர் பற்றிப் பேரா. நெ. து. சுந்தரவடிவேலு:
“மாணவப் பருவத்தில் விரும்பி ஏற்றுக்கொண்ட பகுத்தறிவுப் போக்கினை சமத்துவச் சிந்தனையை, தமிழ்ப் பற்றினை இன்றும் சிறிதும் நழுவவிடாமல் அரும்பாடுபட்டு வரும் சிலரில் பேராசிரியர் அன்பழகனாரும் ஒருவர்’’ - பேரா. நெ. து. சுந்தரவடிவேலு
பேராசிரியர் பற்றித் தளபதி மு.க. ஸ்டாலின் :
"இனப்பால் மொழிப்பால் கழகப்பால் இம்முப்பால் ஊட்டிய பேராசிரியப் பெரியப்பா" - தளபதி மு.க.ஸ்டாலின்
பேராசிரியர் பற்றிப் பேரா. சுப. வீரபாண்டியன்:
"இன்னும் கடந்தால் ஈராண்டு
எங்கள் பேராசிரியருக்கு நூறாண்டு
அவர் தாங்கிப் பிடித்த திராவிடக் கொடி
தாழாமல் தாங்கும் எம் தோள்கள்" - பேரா. சுப. வீரபாண்டியன்
பேராசிரியர் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான்:
"ஒரு புயற்பொழுதில் கலைஞரும் நீயும் இரு கரங்களாகக் காத்திராவிட்டால் திராவிடத் தீபம் அணைந்து போயிருக்கும்" - கவிக்கோ அப்துல் ரகுமான்
பேராசிரியர் பற்றிக் கவிஞர் அறிவுமதி:
"செய்தித்தாள் விற்றவரின் செல்லமகன் வரலாறு அட செத்தாலும் வற்றாது அன்பழகன் புகழாறு" - கவிஞர் அறிவுமதி
தொகுப்பு:
இராம. வைரமுத்து,
கழக வழக்கறிஞர்,
மதுரை
No comments:
Post a Comment