Saturday 31 July 2021

உறவுகள்‌உரிமைகள்‌ - கலைஞர் மு.கருணாநிதி

 உறவுகள்உரிமைகள் - கலைஞர் மு.கருணாநிதி



ண்ணாமலைப் பல்கலைக்கழக மெனும் அறிவுக் கடலில் முத்துக் குளித்துத் தேர்ந்தெடுத்த முத்துக்களில் அன்பழகனும் ஓருவர் என்று அண்ணா அவர்களால் வாழ்த்திப் புகழப்பட்டவர் பேராசிரியர் அவர்கள் ! முதல்வர் பொறுப்பை நான் ஏற்ற நேரத்தில் நாடாளுமன்றத்தில் கழக உறுப்பினர் குழுவின் தலைவராக இருந்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றக் கட்சித் தலைவர் (முதலமைச்சர்) தேர்தலில் எந்தக் கருத்தும் கூறாமல் சற்று ஒதுங்கியே இருந்தார்‌.


அண்ணாவை இழந்த சோகத்தில் திக்குத் தெரியாமல் நின்ற கழகத்தை வழி நடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள் என்ற கேள்விக்குறி அவரை மெளனமாக்கிவிட்டது என்றே கூறலாம். எந்தப் பிரச்சினையிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டெனக் கண்டிப்பாகக் கருத்துக்களைக் கூறக் கூடியவர், இந்தப் பிரச்சினையில் தலையிடுவதால் புதிய சிக்கல்கள் தோன்றக்கூடுமென்றும் அதனால் தற்சமயம் ஒதுங்கியிருப்பதே கழகம் எடுத்திடும் முடிவுக்கு ஒத்துழைப்பு தருவதாகப் பொருள் என்றும் அவரைச் சந்தித்த நண்பர்களிடம் மனம் விட்டுச் சொன்னார்‌.


நான் தேர்ந்தெடுக்கப்பட்ட .பிறகு எனக்கு சென்னை நேப்பியர் பூங்காவில் 1969 மார்ச் 9- ஆம் நாள் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில் நான் சென்று கலந்துகொள்வதற்கு முன்பாகவே கூட்டத்திற்குத் தலைமை வகித்திருந்த பேராசிரியர் அவர்கள் உரையாற்றி முடித்துவிட்டார். அன்று அவர் ஆற்றிய உரையினை வைத்துக் கழகத்திற்குள் கலகம் விளைவிக்கலாமா என்று மாற்றார் சிலர் திட்டமிடத் தொடங்கினர்‌.


பேராசிரியர் நெஞ்சில் பட்டதைச் சொல்லக்கூடியவரே தவிர, பிளவு எனும் நஞ்சைக் கழகத்தில் கலந்திடக் கனவிலும் முனையாதவர்; என்னிடம் மிகைபடச் சொன்னவர்களை அமைதிப்படுத்தினேன்


இதனை நான் எழுதும்போது இந்தக் கழகத்திற்கு நான் தலைவர் ! பேராசிரியர் பொதுச் செயலாளர்! நாங்களிருவரும் பிரியாதவர்கள்!. பிரிக்கப்பட முடியாதவர்கள் ! 


தலைவர் என்பதும் ஏற்றுள்ள பொறுப்புக்களை சுட்டிக்காட்டப் பயன்படும் சொற்களே தவிர, எங்களுக்குள் எந்தவித ஏற்றத் தாழ்வும் இருப்பதாக நான் என்றுமே எண்ணியதில்லை.


இடுக்கண்” களையும் நட்பின் இலக்கணமாக – இதய உணர்வுகளால் ஒன்றிக் கலந்துவிட்ட ஓர் உடன்பிறப்பாக- இந்தத் தமிழினம் காக்க உற்ற படைக்கலனாகத் திகழுகிற அவருக்கு ஏற்பட்ட ஐயப்பாட்டை நீக்குவது எனக்கு மிகப் பெரும் கடமையாயிற்று ! 


கழகத் தலைமையேற்று தலைவராக இருந்து வழிநடத்தும் தகுதியை நான் முற்றிலுமாகப் பெற்றிருக்கிறேனா என்பதுதான் பேராசிரியருக்கு அப்போது ஏற்பட்ட. ஐயப்பாடு! அதைத்தான் நேப்பியர் பார்க் பாராட்டுக் கூட்டத்தில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.  அவர் பேசியதற்கும், மற்றும் சிலர் என்னை எல்லையற்றுப் பாராட்டியதற்கும் பதில் அளிக்கும் அவசியத்திற்கு ஆளானேன். 


‌ “முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப்பற்றிக் கூறிப் பலர் வாழ்த்தினார்கள். ஆனால் “முதல் இழந்த“  அமைச்சனாக - என்னை உருவாக்கிவிட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன்னால் நிற்கிறேன்‌.


முதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கில்லை. ‌நாலரைக் கோடி தமிழ் மக்களும் காலால் இடும் கட்டளையை தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் தொண்டருக்குத் தொண்டன் நான் என்ற நினைப்பில் தான் இருக்கிறேன். இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகித்துள்ள பேராசிரியர் அவர்கள், "கருணாநிதியைத் தலைவராக அல்ல; தளபதியாக மட்டுமே ஏற்றுக்கொள்வேன்" என்று கூறினாலே போதுமானது. தளபதியை "தளர் - பதி" ஆகிவிடாத அளவுக்கு அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டுமென்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். 


ஆதித்தனார் அவர்கள் என்னை “இரண்டாவது அண்ணா" என்று அழைத்தமைக்கே நான் அவரிடம் கோபித்துக்கொண்டேன். அண்ணாவைப்போல இன்னொருவர் உருவாக முடியாது என்றும் ஆதித்தனாரிடம் சொன்னேன்.


தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தை, திடீரென தாயை இழந்துவிட்டால் புட்டிப்பால் தான் அருந்த வேண்டி, வரும், அண்ணா அவர்கள் தாய்ப்பால் என்றால் என்னைப் புட்டிப்பால் அளவுக்காவது ஏற்றுக் கொண்டு உடனிருந்து உதவுங்கள்...”


இப்படி அந்தக் கூட்டத்தில் நான் பேசியபோதிலும், பேராசிரியரைப் போலவே சிலர் கொண்டிருந்த ஐயப்பாட்டை நீக்குவதற்கும், தோளில் சுமத்தப்பட்ட பொறுப்பைத் தாங்கக் கூடியவன்தான் என்று நிலைநாட்டுவதற்கும் ஒயாத உழைப்பை நல்கிட வேண்டுமென்பதை உணர்ந்திருந்தேன்‌.


நீ படிக்கிற அழகைப் பார்த்தால் பரீட்சையில் முதல் மாணவனாக அல்ல; கடைசி மாணவனாகத் தேர்வு பெறுவது கூடக் கஷ்டம்தான்!'” என்று தம்பியைப் பார்த்துத் தமையன் சொல்வது அந்தத் தம்பிக்கு ஒரு போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தவேண்டும் என்ற சகோதர பாசத்தாலும் இருப்பது உண்டல்லவா? அந்தப் பாச உணர்ச்சியோடுதான் அன்றைக்குப் பேராசிரியர் பேசினார் என்பது பிற்காலத்தில் அவரது நடவடிக்கைகளின் வாயிலாகத் தெளிவாயிற்று.


மனத் தூய்மையுடன் இடித்துரைப்பதால், நன்மை விளையும்! மனத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு இனிப்பு ஒழுகப் பேசுவதால் அதனை நம்புவோர்க்குத் தீமையே கூழும்! இடித்துரைத்த பேராசிரியர், எனக்கும் கழகத்திற்கும் தாங்கொணாத இடர்கள் வந்துற்றபோது தனது கொள்கை உறுதியையும், நட்பின் ஆழத்தையும் செயல் மூலம் வெளிப்படுத்தினார்‌.


இனிப்புரை வழங்கிய பலரோ இயக்கத்திற்கு இடர் வந்துற்றபோது, படர் கொடியானார், எதிர் வீட்டுக் கொம்பில்! பதவியும், பவிஷுமே அவர்களை ஆட்கொண்டன! அவற்றைத் துச்சமெனக் ' கருதி கால்தூசு எனக் கூறி கழகம் காத்திட எனக்குத் தோள் கொடுத்துத் துணை நிற்கும் பேராசிரியர் அவர்கள் இன்று என்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு நான் ‌உழைத்திருக்கிறேன் என்பதைத் திரும்பிப் பார்த்து ஆனந்தப் பெருமூச்சு விடுகிறேன்‌.


- கலைஞர் மு.கருணாநிதி

(நெஞ்சுக்கு நீதி இரண்டாம் பாகம்)

No comments:

Post a Comment