அன்பழகனார் என்றே உச்சரிக்கட்டும்! - கனிமொழி ம.வீ
திருவாரூர் தந்திட்ட கலைஞரின்
மனசாட்சியே;
திராவிடர் புதுவாழ்வு தரணியில்
பெற்றிட புதுவாழ்வு ஏடு
நடத்திய புன்னகை வேந்தனே;
துரோகிகள் சூழ்ந்து கழகத்தைச்
சூறையாட நினைத்தபோதும் சூரனாய்
சுழன்றடித்த கலைஞரின்
கைகோர்த்து அரணமைத்தாய் ;
உதயசூரியனின் வெப்பத்தை
அடைகாத்த தாய்க்கோழியின்
குஞ்சுகளில் நீயும் ஒன்றன்றோ ?
அதனால்தான் பின்னாளில் பருந்துகள்
வட்டமிட்ட போதெல்லாம்
விரட்டிய தாய்க் கோழி நீயானாய்!!
நட்பின் இலக்கணம் வரைந்த
வள்ளுவர் கூட மீண்டு(ம்) வரின்
கலைஞரோடு நீ கொண்ட நட்பைக் கண்டு
நட்பின் இலக்கணம் அன்பழகனார்!!
என்றே குறள் எழுதி வைப்பார்;
கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும்
பார்த்து, சிரித்து, பழகி, நட்பு கொண்டனர்
கலைஞரும் பேராசிரியருமாய் என்றே
வரலாறும் செதுக்கி வைக்கும் ;
முதுமையிலும் கலைஞர் தேடியது
உன் கரம்;
அவரின் இறுதிப் பயணத்தில்
நிலைத்த உன் கண்கள் பேசியது
நீங்கள் சேமித்த நட்பின்
ஆழத்தை முத்துக்களாய்;
சனாதனத்தை வெட்டும் சூட்சமத்தைத்
தந்தையிடமிருந்து கற்ற தளபதிகளில்
நீயும் ஒருவரன்றோ?அதனால்தான்
வேத விற்பன்னர்கள் உன் வாசலை
மிதிக்கக் கூட அரண்டனர் ;
உன் பேச்சின்
ஆழமும் அழுத்தமும்
ஆழிப் பேரலையாய்
அச்சுறுத்தி ஓட்டியது
அகத்திய ஜீயர்களை;
வாழ்வெனில் திராவிடர்க்கே
என முழங்கிய உன் குரலொலி
உறங்க விடுவதில்லை
அக்கிரகார முதலைகளை இன்றும் !!
தமிழ் கடல் அலை ஓசை
பரவும் தமிழர் மாட்சி என்றாய்;
உன் புகழ் இசை என்றும் அலைகடல் போல்
நிலைத்திருக்கட்டும்;
தமிழ் ஏந்தி மன்றத்தில் ஓடிவரும்
தென்றலும் அன்பழகனார் என்றே
உச்சரிக்கட்டும் !!
வாழ்க பேராசிரியர் அன்பழகனார்!!
No comments:
Post a Comment