தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அனுபவம் - கவிஞர்.சொ.கார்த்திக்
தமிழ்நாடு அரசியலில்
தடுமாறும் அமைச்சர்களே
பணப்பசித் தாகத்தைப்
பருக ஏங்கும் ஆட்சிகளே
கொடுங்கோன்மை ஆட்சி மலர
துணை போகும் இளைஞர்களே
கொடுக்கின்ற பணத்துக்காகக்
கொடி பிடிக்கும் மக்களே
சாதிய அரசியலுக்குள்
சிக்கிக்கொண்ட சிறார்களே
மதவாத அரசியலுக்குள்
மாட்டிக்கொண்ட மாணவ மாணவிகளே
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்
யாம் கண்டுணர்ந்த காட்சியின் உண்மைகளை
எமது கவியினிலே
கர்வத்தோடு எழுதுகிறேன்
கரமுள்ளின் தாளில்
சிறிது மைகளாக!...
முதலில்
பணத்தை நீட்டி படைக்காக
மக்களைத் திரட்டுவதும்
ஊதியமாக உணவு கொடுத்து
உறவை அழைப்பதும்
ஓட்டுக்காக சாதிப்பெயரை
சொல்லிநிற்பதும்
தமிழ்நாட்டுக்காக உழைக்கிறேன்
என்று கதையளப்பதும்
ஓட்டுக்கோட்டுத் தாய்மார்கள்
காலைப்பிடிப்பதும்
போலிக் கோட்பாட்டைத் தந்து
மக்களைப் புலம்ப வைப்பதும்
எதிர்க்கட்சிகளை குறைசொல்லியே
வாய்ப்பு கேட்பதும்
அப்பாவி மக்களின்
உழைப்பை எல்லாம் அபகரிப்பதும்
இதனை அறிந்த மக்களெல்லாம்
அவரை வெறுப்பதும்
அதனை மறைக்க லஞ்சமாகப்
பணத்தைக் கொடுப்பதும்
இரவோடு இரவாக
இவைகள் நடப்பதும்
தேர்தல் நாளில் சாவடிக்குள்ளே
கட்சியாட்கள் கண்ணசைப்பதும்
மக்கள் காலையிலே காத்திருந்து
ஓட்டுப் போடுவதும்
யாமறிந்த அனுபவங்கள்
மேலே சொன்னபடிதான்
தமிழ்நாட்டில் தேர்தலென்றால்
தலைமைக்குப் பெரு இடிதான்
தகுதியான வேட்பாளரை
நியமிக்காத கட்சிக்குத்
தேர்தல் முடிவினிலே
தேடிவரும் தருமடிதான்!...
- கவிஞர்.சொ.கார்த்திக் (போளையம்பள்ளி)
No comments:
Post a Comment