Tuesday 31 August 2021

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! - ராஜராஜன் ஆர்.ஜெ

 

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்! - ராஜராஜன் ஆர்.ஜெ  



ள்ளி அணைத்து வளர்த்த அண்ணனின் 

மறைவுக்கு பின்னால்..


அடுத்து கழகத்திற்கு யார் என்ற பதைபதைப்பு 

திராவிடர்களுக்கு,


இன்னொரு பக்கமோ, இனி திமுக இல்லை 

என்ற கொக்கரிப்பு..


மெல்ல எழுந்தான் தலைவன் ஒருவன்,

நான் அண்ணா வல்ல.

ஆனால், அண்ணாவின் பாதை தான் 

என் பாதையும் என்றான்.


அதன் பிறகு அவன் வாழ்ந்தான் 

அரைநூற்றாண்டிற்கு மேல்..

ஆனால், அவன் என்றுமே உச்சரிக்க மறந்ததில்லை 

அண்ணா அண்ணா என்ற சொல்லை...


அண்ணாவிற்கு பிறகு திராவிடர்களின் எதிர்காலம் என்ன 

என்ற கேள்வி எழுந்தபோது..

இது அண்ணாவின் ஆட்சி மட்டுமல்ல..

இது தான் தமிழர்களின் ஆட்சி என்று எடுத்துக்காட்ட 

தந்தான் கழகத்தின் ஐம்பெரும் முழக்கத்தை..

 

அண்ணா வழியில் என்றும் நடப்போம்,

ஆதிக்கமற்ற சமூகம் அமைத்தே தீருவோம்,

இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்,

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்,

மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி 

என்று நீண்ட பாதைக்கான வித்தை இட்டான்.


அண்ணா வழியில் நடப்போம் என்பது 

புத்தம் சரணம் கச்சாமி என்கிற கோட்பாட்டை போன்றது.

தலைவன் வழியில் நடப்போம் என்பதே அது..


ஆதிக்கமற்ற சமூகம் அமைத்தே தீருவோம் என்பது 

இந்தியாவின் ஏற்றத்தாழ்வு நிறைந்த சாதிய சூழலை எடுத்துக்காட்டி 

சாதியை ஒழிப்பது எங்கள் கொள்கை என்றுரைப்பதே அது..


வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம் என்பது..

பொதுவுடைமை கொள்கையின் தாக்கத்தில் தோன்றியது..

அதே நேரத்தில் திராவிடம் எங்கே வேறுபடுகிறது என்பதை காட்டுவதே அது..


மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது தான் 

நமது முக்கிய அரசியல் நிலைப்பாடு. 

அண்ணா தொடங்கி கலைஞர் முன்னெடுத்து 

இன்று தளபதி உரக்க பேசிக்கொண்டிருக்கிறார்.


இப்படி கொள்கைகளை உரக்க பேசும் முழக்கத்தில்..


இந்திக்கு இடம் எதற்கு? ஒரு மொழியை எதிர்ப்பது ஒரு கொள்கையா?


விவரம் அறியாதோர் யாரேனும் கேட்கக்கூடும்.


இல்லை. நாங்கள் மொழியை எதிர்க்கவில்லை. மொழி ஆதிக்கத்தை எதிர்த்தோம் என்பதே பதில்..


எத்தனை காலம் நாம் பதில் சொன்னாலும், அவர்கள் கேட்பதை நிறுத்தப்போவதில்லை. 


அவர்கள் நிறுத்தும் வரை, நாம் பேசாமல் இருக்கப்போவதில்லை.


இந்தி ஆதிக்கம் என்பது வெறுமனே 

மொழியின் ஆதிக்கம் மட்டுமல்ல..


அது ஒரு பண்பாட்டு ஆதிக்கம், 

அது ஒரு அரசியல் ஆதிக்கம்,

அது ஒரு ஏகாதிபத்தியம் 

இதை உணர்ந்தவர்கள் திராவிட தலைவர்கள்.


அதனால் தான் 1938 ல் முதல் மொழிப்போர் நடந்தது.


குலக்கல்வி திட்ட புகழ் 

இராஜகோபால் என்கிற ராஜா கோபாலச்சாரி 

கொண்டுவந்தார் "கட்டாய இந்தி" திட்டம்.


அதன் ஆபத்தை உணர்ந்தார் தந்தை பெரியார்.

அறைகூவலிட்டார் தமிழ் சமூகத்திற்கு..

தமிழர்கள் ஒன்று திரண்டனர், 

தமிழரிஞர்கள் கொள்கை முழக்கமிட்டனர். 


அன்று 14 வயது கலைஞர் 

திருவாரூர் வீதிகளில் 

கையில் தமிழ் கொடியுடன் 

இந்தி திணிப்பை எதிர்த்து ஊர்வலம் சென்றது வரலாறு.


கலைஞர் எழுதிய கவிதை 

மிகப்பிரபலம்..


கவிதையின் தலைப்பு 

அணிவகுப்பு பாடல்.


1938 ஆம் ஆண்டு

வாருங்கள் எல்லோரும் இந்திப் 

போருக்கு சென்றிடுவோம். வந்திருக்கும் 

இந்திப்பேயை விரட்டி திரும்பிடுவோம்.


ஓடிவந்த இந்திப்பெண்ணே கேள்! நீ 

தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!


வீரத்தமிழ் கொஞ்சும் நாட்டிலே - நாங்கள் 

சாரமில்லா சொற்கள் ஏற்கமாட்டோம் - ஏட்டிலே!  


14 வயதில் நீ ஏந்திய 

போர்க்குணம் 

90 வயது வரை இறங்கவே இல்லையே!


நெஞ்சுரத்தை ஈரோட்டு பள்ளியிலும் 

கனிவை காஞ்சியிலும் கற்றவனாயிற்றே நீ!


அந்த நெஞ்சுரத்தை தானே நீ வடவர் ஆதிக்க வாதிகளிடம் 

காட்டினாய்.


அந்த கனிவை தானே நீ காலம் முழுவதும் 

உன்னை தூக்கி எறியும் தமிழர்களை தாங்கும் 

கட்டுமரமாய் காட்டினாய்..


திராவிட இயக்கம் மறக்காது 

இந்தி ஆதிக்க எதிர்ப்பு தீரர்களை..


உன் ஆட்சியில் தானே 

தியாக மறவர்களை பெருமைப்படுத்தினாய்


தமிழர் வாழ்வில் மறக்கமுடியாத பெயர்களான 

நடராஜன் தாளமுத்துவை வரலாறாய் பதிய வைத்தது உன் எழுதும் ஆட்சியும் தானே..


உன் படைப்புகள் தொடர்ச்சியாக இந்தி எதிர்ப்பு வீரர்களை 

சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்குமே..


அவர்களின் பெயர்களை 

நீ என்றுமே மறந்தது இல்லையே..


உனக்கு நன்றாக தெரியும் 

இன்று நாம் தமிழ் பேசி எழுதுவதற்கு பின்னால், 

இத்தனை தியாக மறவர்கள் இருக்கிறார்கள் என்று..


அதனால் தானே, அவர்களுக்கான நினைவு சின்னங்களை 

தமிழ்நாடு முழுவதும் ஏற்படுத்தினாய்..


தாளமுத்து நடராஜன் பெயரில் மாளிகை,

தியாகி அரங்கநாதன் பெயரில் சைதாப்பேட்டையில் சுரங்கப்பாதை அமைத்தாய்,

மொழிப்போர் ஈகியர்களுக்கான மணிமண்டம் 

என அவர்களை பெருமைப்படுத்திக்கொண்டே இருந்தாய். 


இரண்டாம் மொழிப்போரின் முதல் ஈகையரான 

கீழப்பழுவர் சின்னசாமியின் தியாகத்தை 

உன் எழுத்து காட்டியதை மறக்க முடியுமா?


அன்றைய முதலமைச்சர் பக்தவச்சலனாரை ரயில் நிலையத்தில் பார்த்து..


அய்யா.. தமிழை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக்கேட்ட 

சின்னசாமியை "பைத்தியம்" என்று சொல்லிக்கடந்தார் முதலமைச்சர்.


அடுத்தநாள், தன்னுடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு, 

தமிழ் வாழ்க, இந்தி வீழ்க என்று கத்திக்கொண்டே மாண்டான் அந்த மாவீரன்.


உறங்கிக்கொண்டிருந்த தமிழினத்தை தட்டி எழுப்பியது சின்னசாமியின் வீரதியாகம்.


அன்று நீ எழுதினாயே..


அனல் - அவரது அழகுத் திருமேனியில் தாவிய போது..

கனல்..அவரது கண்களை அழித்தபோது...


முத்துப் பற்கள் - மூண்டுவிட்ட தீயால் 'படீர்-படீர்' என்று வெடித்தபோது..


தீ நாக்குகள் - அவரது அழகிய சுருண்ட கேசத்தை தின்றிட்ட போது..


அந்தத் தீந்தமிழ் செம்மல் 'தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!" என்றே முழமிட்டிருக்கிறார் மூச்சினை பிடித்துக்கொண்டு!


இப்படி எழுதிய உன் எழுத்தை கண்டு அஞ்சியது அரசாங்கம்.

விளைவு, உன்னை பாளையம்கோட்டை சிறையில் பூரான், தேள், பாம்புடன் தனிமை சிறையில் அடைத்தார்கள்.


அன்று உன்னை வந்து பார்த்தாரே பேரறிஞர் அண்ணா..

உன்னை உச்சி முகர்ந்து பாராட்டி எழுதினாரே..

"தன்னை வெல்வான் தாரணி வெல்வான்" என்று..

   

கல்லக்குடி எனும் பெயருக்காக 

தண்டவாளத்தில் தலைவைத்த உன் வீரத்தை,

ஆறுமாத கடுங்காவல் அனுபவித்த தியாகத்தை 

நாங்கள் என்றும் மறவோம்!


இருபத்தியேழு வயதில் சின்னசாமி 

மாண்டபோது அவருக்கு இரண்டு வயதில் ஒரு 

பெண்குழந்தை இருந்தது.


அந்த பெண்ணின் பெயர் திராவிட செல்வி.

இன்று திராவிடத்தின் செல்வன்களும், செல்விகளும் 

சிறப்புற்று வாழ, சின்னசாமிகளின் தியாகம் காரணம் 

என்று எங்களுக்கு சொல்லிதந்தாயே.. 


அது மட்டுமா எங்களுக்கு நீ கற்றுக்கொடுத்தாய்..


இந்தி ஆதிக்கத்தை ஒரு பக்கம் எதிர்த்துக்கொண்டு..

தமிழை இன்னொருபக்கம் ஆயுதமாக உயர்த்திப்பிடித்தாயே..


பேருந்துக்குள் திராவிட பாடம் எடுத்தவனாயிற்றே நீ..


ஒரு 12 வயது சிறுவனான எனக்கு திராவிடத்தை 

பச்சக்கென்று ஒட்டவைத்தது உன் மூன்று வரி வாசகம் தானே..


விவேகம் என்னும் வெள்ளி முளைத்து,

சாதிமதப்பித்து என்னும் சனி தொலைந்தால் தான் 

சமத்துவம் எனும் ஞாயிறு பிறக்கும்..


என்று நீ எனக்கு சமத்துவ பாடம் எடுத்தாய்..


அடுத்ததாக, 

நான் நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது,

நாம் என்று சொன்னால் தான் உதடுகள் கூட ஓடும் என்று 

சொல்லி என்னை உடன்பிறப்பாக மாற்றினாயே..


எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என தமிழ்நாட்டில் 

தமிழ் தேசியத்தின் விதையை விதைத்தவன் நீ தானே..


என்னிடம், தமிழ் தமிழ் என்று அதிகம் பேசுகிறாயே..

நீ திமுகவா என்று கேட்ட பார்ப்பன நண்பர் ஒருவர் இருக்கிறார்.


ஆம், திமுக காரன் என்றால் தமிழ் தமிழ் என்று தான் இருப்பான்.

உன் வளர்ப்பு அப்படி தலைவா... 


பாரதம், இராமாயணம் என்று புராண மயக்கத்தில் தமிழர்கள் மிதந்த காலத்தில்..

தமிழில் எழுதாத எதுவும் நமக்கான இலக்கியமில்லை என்றாய்.


இதோ நம்மிடம் இருக்கிறது 

தொன்மையான தொல்காப்பியம், 

அறம் பேசும் சங்கஇலக்கியம்,

மணியான சிலம்பு,

உலகப்பொதுமறை திருக்குறள் 

என அள்ளி அள்ளி தந்தாய்..

 

தமிழை உயர்தனி செம்மொழி என உலகிற்கு 

பறைசாற்றினாய்..


உன் அளவுக்கு தமிழை உயர்த்தியவர் 

வேறு யார் இருக்கிறார்கள்?


இதோ காலம் மாறுகிறது.

எதிரிகள் மாறி இருக்கிறார்கள்.

கதராடை போய் காவியாடை வந்திருக்கிறது.


நேரடியான ஆதிக்கம் தென்பட ஆரம்பித்து இருக்கிறது.

2014 ல் ஆரம்பித்த ஆட்டம்..

இந்தி திணிப்பு, சம்ஸ்கிருத திணிப்பு என 

நாளொரு செய்தி, பொழுதொரு நாடகம் என அரங்கேற ஆரம்பித்தது.


நான் கூட, தலைவன் அமைதியாகிவிட்டான் என்று நினைத்தேன்.

சக உடன்பிறப்புகளிடம் "தலைவர்" பேச மாட்டாரா? என்று சண்டைகூட போட்டேன். 


சண்டை போட்டால் தானே, அவன் கருப்பு சிவப்பு காரன்.


அடுத்தநாள், நீ ஒரே ஒரு அறிக்கை தான் விட்டாய். நாடே அதிர்ந்தது.


நீ சொன்னது, "இந்தி எதிர்ப்பு தியாகத்தின் ஈரம் இன்னும் அடங்கவில்லை" என்றாய். 


எதிரிகள் பதறினார்கள். ஆம், விரலசைவு கூட அவர்களை கதறவைக்கும். நீ இப்படி சொன்னால், அதன் பொருள் அறியாதவர்களா அவர்கள்.


ஆம், இந்தி எதிர்ப்பு ஈரமும் காயவில்லை, நம் வீரமும் ஓய்ந்துவிடவில்லை.


என்றும் உன் வழியில் நாங்கள்...


- ராஜராஜன் ஆர்.ஜெ  




No comments:

Post a Comment