அறுவை சிகிச்சை போல் வரும் முரசொலி - பிரேம் முருகன்
புதுவையில் நடந்த கலகத்தில் அடிப்பட்டு மடியாத நிலையில் இருந்த கலைஞரை பெரியார் அழைத்துக்கொண்டு ஈரோடு குடியரசு அலுவலகத்தில் தங்கி பணியாற்ற செய்தார். இதனை கலைஞர் “குடியரசில் பணியாற்றி கல்வி கற்கும் மாணவனாக இருந்தேன்” என்று தனது நெஞ்சுக்கு நீதியில் குறிப்பிடுவார்.
பிறகு அங்கிருந்து கோவைக்கு ASS சாமி அவர்களின் அழைப்பின் பேரில் ஜூப்பிட்டர் ப்ரோடக்சனால் வெளிவந்த ராஜகுமாரியில் உதவி ஆசிரியராக பணியாற்றியவர் கலைஞர்.
அடுத்து ஒரு படத்தில் தான் உழைத்து எழுதியதற்கு தனது பெயர் வராததை எண்ணி கோபித்துக் கொண்டு, அந்த கம்பெனி மனிதரிடம் வாதாடியதற்கு வேடிக்கையாக “உனக்கு விளம்பரம் வரட்டும்; பெயர் போடுகிறேன்” என்ற பதில் வர, இவரும் கோவையிலிருந்து திருவாரூர் வர முடிவெடுத்து தனது மனைவியுடன் ஆரூர் வந்தடைந்தார்.
படத்திற்கு எழுதுவதை கடந்து பத்திரிக்கைக்கு நாடகத்திற்கு என வரிசையாக எழுதினார். இந்த சூழலில் தான் இலக்கிய நயம் சிறிதும் மாறாமல் ‘குண்டலகேசிக்கு மந்திரகுமாரியாக’ வடிவம் கொடுத்தார்.
துண்டுத் தாளாக வந்துக்கொண்டிருந்த முரசொலி வார இதழாக மாற்றம் பெற்ற காலம். அது திருவாரூரில் இருந்துதான் ஆரம்பித்தது. வீட்டிலிருந்த நகைகளை விற்று, திருவாரூர் கரினை ஜமாத் அவர்களின் கருணாநிதி அச்சகத்தின் மூலம் முரசொலி வார இதழாக வந்து கொண்டிடுந்தது.
அனைத்தும் சீராக இயங்க, பிரதிகளும் ஓரிரு வாரங்கள் நன்றாக செல்ல, விற்பனையாளர்களிடம் இருந்து பணம் தான் வரவில்லை. சில வாரங்கள் பொறுத்துக்கொண்ட அச்சகத்தாரும் வாய் திறந்து கேட்டவுடன், தன் மனைவியின் தாலியை விற்று மாற்றியதாக கூறுகிறார். “என் கழுத்தில் தொங்கிய தாலி சங்கிலியை, தாலி கயிறாக மாற்றினேன்” என்று கூறுகிறார்.
அவ்வாறு செய்து தான் அடுத்த வாரத்திற்கான முரசொலியை பெற்றுள்ளார். அப்படி பெரும் இதழ்களை கலைஞரும், அவரது பத்திரிகை மேனேஜர் கனகசுந்தரமும் தலையில் தூக்கிக் கொண்டு, ஆற்றை மூங்கில்பாலத்தின் உதவியுடன் கடந்து வந்து, சந்தாதாரர் மற்றும் விற்பனையாளர்களுக்கு அஞ்சல் மூலம் அனுப்பும் செய்தி நமக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை விவரிக்கும் “கலைஞர் வாரம்தோறும் பத்திரிக்கை வெளியிடுவது என்பது அறுவை சிகிச்சையாகத் தான் இருந்தது” என்கிறார்.
பத்திரிக்கை வாழ்வதா..? சாவதா..? என்ற நிலையில் தனது வாழ்விலும் அப்படிப்பட்ட போரட்டம் குடிகொள்ள, கலைஞர் முரசொலியை அச்சடிப்பதை பல நாட்கள் நிறுத்திவைத்துவிட்டு, சில ஆண்டுகள் கழித்து அதே வார இதழாக அச்சடித்து, பிறகு நாளிதழாக மாற்றி, அதற்கு ‘பவள விழா’ கொண்டாடிய பெருந்தகை தான் கலைஞர் கருணாநிதி.
இன்று செய்தித் தாள்கள் whatsapp மூலம் எளிமையாக களவாடப்பட்டு கிடைக்கும் சூழலில், இப்படிப்பட்ட ஒரு போராட்டம் கண்டு 75 ஆண்டுகளுக்கு மேல் வெற்றியுடன் ‘இன்றைய செய்தி; நாளைய வரலாறு’ என்ற முழகத்தோடே இருக்கிறது முரசொலி…
- பிரேம் முருகன்
No comments:
Post a Comment