விழாவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு
தி. மு. க. துவக்க விழாவில்
17-09-1949 அன்று மாலை சென்னை, இராயபுரம், இராபின்சன் பூங்காத் திடலில் நடைபெற்ற தி. மு. ௧. துவக்க விழாவில் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவு.
தோழர்களே!
பல நாட்களுக்குப் பின்னர் கூடியிருக்கிறோம். இக்கூட்டம் நமதுநோக்கத்தைத் தெரிவிக்கக் கூடிய கூட்டமாகும். மழையோபலமாகப் பெய்கிறது. வந்திருக்கும் கூட்டமோ ஏராளம்; பேசஇருப்போரும் பலர்.
பல மாவட்டங்களிலிருந்தும் வந்துள்ள தோழர்கள். இயக்கத்தின் முக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்கள் யாவரும் பேசஇருக்கிறார்கள். மழை பலமாகப் பெய்து கொண்டிருக்கிறது. பலர் பேச வேண்டும் சங்கடமான நிலைதான். அடாதுமழைபெய்கிறது; அளவற்ற கூட்டம். தாய்மார்கள் தவிக்கின்றனர், மழையால் நின் நுகொண்டே இருக்கிறீர்கள். சங்கடந்தான்; ஆனாலும் சமாளிக்கிறீர்கள். இதுபோன்ற நிலையில்தான் நாட்டிலே சில காலம் கழகத்தின் வேலைகள் செயலற்றுக் கடந்தன; சங்கடமான நிலை ஏற்பட்டது, சரி செய்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. புதிய அமைப்புஏற்பட்டுவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரால் ஏன் ஏற்பட்டது? எதற்காக ஏற்படுத்தப்பட்டது? என்பவைகளைவிளக்கும் கூட்டமே இது.
இந்நிலைக்கு நானா காரணம்?
நான்தான் காரணம் இந்த நிலைக்கு - ஏற்பாட்டுக்கு - என்றுகூறுவர் சிலர். நான் பேசுகிறேன் இப்போது- நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பலத்த மழை பெய்துகொண்டிருக்கிறது. என்ன நினைக்கிறீர்கள்? இதற்கு நானாபொறுப்பாளி? நானா மழையை வரவேற்கிறேன்? வருவித்தேன்? இல்லை. இப்போது நான் எப்படி பொறுப்பாளியல்லவோ, அப்படித்தான் கழகத்தில் ஏற்பட்ட மந்த நிலைக்கும் செயலற்றுக் கிடந்த நிலைக்கும் நான் பொறுப்பாளியல்லவென்றாலும், என்னை ஏசுவர். கூட்டத்திற்கு வந்துள்ள மக்கள், தாய்மார்கள், “ஏனப்பா! அந்த அண்ணாதுரை கூட்டத்திற்குப் போனேன்? ஒரேமழை, நன்றாக நனைந்து விட்டேன். நீர் சொட்டச் சொட்டக் கேட்டுக் கொண்டிருந்தேன்,” என்றுதான் பேசுவர்.
நான் என்ன செய்து விட்டேன்? தலைவர் தவறினார் கொள்கையினின்றும், பகுத்தறிவுப் பாதையினின்றும். தவறுஎன்று மனதார நம்பினேன் - கூடாது என்று கருதினேன்.
கருதியது குற்றமா? கருத்தைத் தெரிவித்தேன் காரணத்தோடு, வேதனையை வெளிப்படுத்தினேன்; வெளிப்படுத்தியதுகுற்றமாகுமா? கொள்கையைக் கூறுவது குற்றமா? கூறுங்கள் தோழர்களே!
நான் மட்டுமல்ல, என்போன்ற தோழர்கள் பல தாய்மார்கள், பலகழகங்கள், பாட்டாளி மக்கள், தொழிலாளர் தோழர்கள், பட்டி. தொட்டி எங்கும் உள்ளோர் கூறினர். “கூடாது இந்த ஏற்பாடு, திருமணம் என்னும் பேச்சை விட்டுவிடுங்கள்” என்று.
பெரியார் திருமணம் என்ற செய்தி கேட்டதும் அழுதவன் நான். ஆயாசங் கொண்டவன் நான். அதுமட்டுமல்ல, - நான் ஒதுங்கிவிடுகிறேன் என்ற எண்ணத்தை - நான் கொண்ட கருத்தைத் தெரிவித்தவன் நான். பேதம், பிளவு, மனத்தாங்கல், மோதல்கூடாது, நல்லதன்று என்று கருதும் போக்கும், மனப்பண்பும் படைத்தவன் நான். எனவே, என்வரையில் பெருந்தன்மையாகக் கட்சிப் பணியிலிருந்து விலகுவது நல்லதுஎன்று முடிவு கட்டியிருந்தேன்.
என்போன்ற பல தோழர்கள் பெரியாரை, பெரியார் போக்கை, அவர் திருமண ஏற்பாட்டை ஏற்கவில்லை என்பதை மட்டுமல்லகண்டித்தனர்; கதறினர்; வேண்டாம் என்றனர் வேதனைஉள்ளத்தோடு.
நான் மனதாரத் தீமை என்று கருதிய ஒன்றை, நல்லதல்லவென்றுதெரிந்த ஒன்றை, பகுத்தறிவுக்குப் புறம்பானது என்று பாமரரும் ஒப்பும் ஒன்றைத் தெரிவித்தது குற்றமா?
“பெரியார் சமாதானம் சொல்லிவிட்டார் என் சொந்த விஷயம்; எதிர்ப்போர் சுயநலமிகள் - சதிக் கூட்டத்தினர்” என்று.
மனப்புண் ஆறவில்லை. மக்கள், அப்படிப்பட்ட தலைவர் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றமாட்டோம் என்று கூறினர்.
செவிசாய்க்கவில்லை தலைவர். விலகுவார் என்று பார்த்தனர். விலகவும் இல்லை அவரோடு சேர்ந்து பணிபுரிய முடியாதநிலையிலுள்ள மிகப் பெரும்பான்மையினர், கழகமுக்கியஸ்தர்கள், கூடிப் பேசி ஒரு முடிவு செய்தனர். அந்தமுடிவுதான் “திராவிட முன்னேற்றக் கழகத்” தோற்றம் - இதுபோட்டிக் கழகமல்ல.
திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது. திராவிடர் கழகத்திற்குப் போட்டியாக அல்ல - அதே கொள்கைப் பாதையில்தான்; திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான், திராவிட முன்னேற்றக் கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில், கருத்துக்களில், மாறுதல், மோதுதல் எதுவும் கிடையாது.
சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலேசிர்திருத்தம், சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வடநாட்டுஏகாதிபத்தியத்தினின்று விடுதலை - ஆகிய கொள்கைகள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்பாடுகளாகும்.
திராவிடர் கழகம் எதற்காகப் பாடுபட்டதோ, எவருடையநன்மைக்காக - எந்தச் சமுதாயத்திற்காக, ஏழை எளியவர்களைஎளிமையிலிருந்து விடுவிக்க, வாழ வழியற்ற மக்களுக்குவாழ்க்கைப் பாதை வகுத்துக் கொடுக்க, இல்லாமையைஇல்லாததாக்க கொடுமையை ஒழித்துக்கட்ட எல்லாரும் ஓர் குலம் என்ற ஏற்பாட்டை. வகுக்க ஏற்படுத்தப்பட்டதோ, அதேஏற்பாட்டைக் கொள்கை வழி நின்று, குறிக்கோளைப் புறக்கணிக்காது பாடுபட்டுவரும் திராவிட முன்னேற்றக் கழகம்.
கொள்கை பிடிக்காமலோ, கோணல் புத்தி படைத்தோ அல்லநாங்கள் விலகியதும் வெளியேறியதும். கொள்கை வேண்டும், அதுவும் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும்; நாடும் மக்களும் நலம் பெறும் முறையில். பெருந்தன்மை வேண்டுமென்ற ஒரேகாரணத்தினால்தான் மோதுதலைத் தவிர்த்துக் கழகத்தைக் கைப்பற்றும் பணியை விடுத்து விலகினோம். அது மட்டுமல்லாமல் தலைவரோ அனைவரின் மீதும் நம்பிக்கையில்லை - நம்பமுடியாது என்று வேறு கூறியிருக்கிறார்.
சோம்பேறிகள், செயலாற்ற முடியாத சிறுவர் கூட்டம், உழைக்கத் தெரியாதவர்கள் என்று குற்றம் சாட்டி யிருக்கிறார் யாரைப் பார்த்து? உழைத்து உழைத்துக் கட்சியைக் கழகத்தைஉருவாக்கிய உண்மைத் தொண்டர்களை - தம் வாழ்வையும் பாழ்படுத்திக் கொண்ட இளைஞர்களைப் பார்த்து.
ஒரு குடும்பத் தலைவன் சதா தன் மக்களில் ஒருவனைப் பார்த்து, “நீ சோம்பேறி, வேலைக்கு லாயக்கற்றவன், வீண்” என்று தூற்றிக் கொண்டே இருந்தால், மகன் நிலை என்னவாகும்?
உண்மையிலேயே உழைக்கும் மகன் உள்ளம் உடைந்துதானேபோவான்? அது மட்டுமா, சற்று விவேகமும் ரோஷமும் படைத்தமைந்தன் வீட்டை விட்டு வெளியேறித் தொழில் புரிந்து தன் நிலையைப் பலப்படுத்தித் தகப்பனைக் கூப்பிட்டு, “பாரும் அப்பா! வீணன், வேலைக்கு லாயக்கற்றவன், சோம்பேறி என்று கூறினீரே,
பாரும் எனது திறத்தை! செயலாற்ற விடவில்லை நீர்; சதாஎல்லாவற்றையும் தூக்கிப் போட்டுக் கொண்டு எங்களைஎரிச்சலோடு ஏசினீர்! பாரும் எமது வேலையை - வேலையின் திறத்தை - வெற்றியை” என்றுதானே கூறுவான்? காட்டுவான்?
நான்தான் அவரோடு பலத்த கருத்து வேற்றுமை கொண்டேன் என்றும், அவரைப் பிடிக்கவில்லை என்றும் பேசுவது தவறு; உண்மைக்குப் புறம்பானது. எனக்கு அவரோடு தொடர்புஏற்பட்டது 1934ஆம் ஆண்டில்தான். அப்போது நான் பி. ஏ. ஆனர்ஸ் பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சை முடிவு தெரியாதநேரம் அது அப்போது கோவைக்கடுத்த திருப்பூரில் ஒரு வாலிபர் மாநாடு நடந்தது. அங்குதான் பெரியாரும் நானும் முதல் முதலில் சந்தித்தது; எனக்குப் பற்றும் பாசமும் ஏற்பட்டது. அவருடையசீர்திருத்தக் கருத்துக்கள் எனக்குப் பெரிதும் பிடித்தன. பெரியார் என்னைப் பார்த்து “என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். “படிக்கிறேன், பரீட்சை எழுதியிருக்கிறேன்” என்றேன். “உத்தியோகம் பார்க்கப் போகிறாயா?” என்றார்.
“இல்லை உத்தியோகம் பார்க்க விருப்பமில்லை. பொதுவாழ்வில் ஈடுபட விருப்பம்” என்று பதிலளித்தேன். அன்று முதல் அவர் எனதுதலைவர் அனார். நான் அவருக்குச் சுவீகாரப் புத்திரனாகிவிட்டேன். பொதுவாழ்வில் அன்றையத் தினத்திலிருந்துஇன்றுவரை சுவீகாரப் பிள்ளைதான் நான். அவரதுகுடும்பத்தாருக்கும்! இன்னும்கூட அந்தத் தொடர்பு விடவில்லைஎனக்கும் அவருக்கும்; ஏன்? அவருடைய அண்ணார்பிள்ளைசம்பத் என்னுடைய சுவீகாரப் பிள்ளை இப்போது! 14 ஆண்டுகள் அவரோடு பழகினேன்.
14 ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் இருக்கிறேன்.
இத்தனை அண்டுகளிலும் நான் அறிந்த தலைவர் - தெரிந்ததலைவர் பார்த்த தலைவர் இவர் ஒருவர்தான். வேறு தலைவரின் தலைமையில் நான் வேலை செய்தது கிடையாது. செய்யவும் மனம் வந்ததில்லை; வராது. அதே காரணத்தினால்தான் திராவிடமுன்னேற்றக் கழகத்திற்குக் கூடத் தலைவரை ஏற்படுத்தவில்லை; இப்போது அவசியம் என்றும் கருதவில்லை.
நான் மிக மிகத் தெளிவாகவே கூறிவிடுகிறேன். திராவிடமுன்னேற்றக் கழகம் எந்தவிதத்திலும் திராவிடர் கழகத்திற்குஎதிரானதல்ல, எதிர்நோக்கம் கொண்ட துமல்ல. கொள்கைஒன்றே கோட்பாடும் ஒன்றே. அங்கிருந்தவரில் பெரும்பாலோர்தான் இங்கு இருக்கின்றனர். குடும்பத் தலைவரின் போக்குப் பிடிக்காத காரணத்தால் மக்கள் வேறு பண்ணையில் வசிக்கும் பண்பினைப் போல், தன்மையைப் போல்! பகைஉணர்ச்சி சற்றும் இடையாது நமக்கு.
இக்கூட்டத்தின் இடையே மழை பொழிந்து சற்றுச் சங்கடத்தைத் தருவது போல, இடையிடையே சிறு சிறு தூறல்கள் தூறலாம். நம்மிடையே, அது வார்த்தை வடிவிலே வரலாம்; விசாரப்படாதீர்கள். அதுவும் அந்தப் பக்கமிருந்துதான் வரலாம்.
பெரியார்தான் எங்களை மறந்தார், உதாசீனம் செய்தார், உதவாக்கரைகள் என்று கூறினார், மனம் நோகும்படிப் பேசினார், ஏசினார், நடந்தார், நடந்து கொண்டிருக்கிறார். நாம் அவரோடு
மேலும் போராடவோ மோதவோ விரும்பவில்லை; விவேகமல்லஎன்று கருதுவதால்.
அவர் போக்கைக் கண்டித்தால் என்ன திடீர் இலாபம் ஏற்பட்டுவிடும்? எனக்கோ, அல்லது என்னோடு நிற்கும் நண்பர்களுக்கோ? ஒன்றுமில்லை. எனக்குத் தெரியாதா யார் யார் என்ன கூறுவர் என்பது? எனக்குத் தெரியும். பெரியாரைக் கண்டிப்பதால் சிலர் ஏசுவர்; சிலர் தூற்றுவர் பற்பலவிதமாக. நேற்றுவரை அறிஞன் என்று போற்றப்பட்ட என்னைப் பார்த்துஇன்று என்ன அறிந்தான் இவன் என்று சேலி செய்யும் கூட்டம் கிளம்பும் என்பது தெரியும். நான் எழுதிய சினிமாக் கதையைப் பற்பல விதமாய்ப் புகழ்ந்தவர்களும், என்னப்பாஅதிலேயிருக்கிறது என்று நையாண்டி செய்வார் என்பதும் தெரியும். நேற்றுவரை எனது 'கம்பரசத்தை' இனிப்பாகக் கருதியிருந்தோர் இன்று பழைய காடியாகக் கருதுவோராகக்கிளம்புவர் என்பதும் அறிவேன். நான் ரேடியோவில், ஆங்கிலத்தில் பாரதியாரைப் பற்றிப் பல நாள் முன்னரேபேசியிருக்கிறேன், 'மக்கள்கவி பாரதி' என்ற தலைப்பிலே.
அப்போது போற்றினர். “ஆகா எங்கள் அண்ணாவைப் பார், உண்மைப் பாரதியாரைப் படம் பிடித்துக் காட்டுகிறார்” என்றுபோற்றினர். இன்றோ 'பார் பார் பயல் பாரதி விழாவில் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சிக்கு நல்ல பிள்ளையாகிறான்' என்று தூற்றுவர் என்றும் எனக்குத் தெரியும். இதெல்லாம் வரும், சிலர்
செய்வர் என்பதும் தெரியும். தெரிந்தும் கடமையுணர்ச்சி, மனிதப் பண்பு ஆகியவை என்னைப் பெரியார் திருமணத்தைத் தகாததுஎன்று கூறிட வைத்தன.
எனது இடத்தைக் காலி செய்துவிட்டு வந்துவிட்டேன், அங்கிருந்து நானாகவே. நான் விரும்பினால், விரும்பியிருந்தால் அங்கேயே இருந்திருக்கலாம் எல்லாவகை விருதுகளோடும். என் நிலை என்ன அங்கே சாமான்யமானதா? எளிதில் கிடைக்கக்கூடியதா? இல்லையே. அவர் அங்கே கடவுளின் நிலையில் இருக்கிறார் என்றால், நான்தானே அர்ச்சகன்? அவர் தம்பிரான் என்றால், நான்தானே கட்டளைத் தம்பிரான்? அவர் தலைவர் என்றால், நான் தளபதி என்றுதான் போற்றப்பட்டேன் - புகழப் பட்டேன். நான் என்ன இவ்வளவு விருதையும், புகழையும் பாழ்படுத்திக் கொள்ளப் பித்தனா? வரட்டு ஜம்பம் பேசிக் கழகத்தில் நல் வாழ்வைக் கெடுத்துக் கொள்ள - நான் என்னவெறியனா? அல்லது இதை விட்டு வேறு வேலை தேடக் குமாரராஜாவிடம் ஏதாவது அப்ளிகேஷன் போட்டிருக்கிறேனா? அதுவும் இல்லையே! எனக்கு என்ன லாபம் ஏற்படும் என்றுஅவரைக் கண்டிக்க வேண்டும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!
பெரியாரோடு நான் மாறுபட்ட கருத்துடையவன் என்றுகூறப்படுகிறது. சிற்சில விஷயங்களிலே நான் மாறுபட்டகருத்துக் கொண்டிருந்தாலும், நெடு நாட்களாகவே கருத்துவேறுபாடுகள் இருந்து வந்தாலும், அவைகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. முடிந்த அளவு ஒத்துழைத்தேவந்திருக்கிறேன்.
முடியாத நேரத்தில் மிக மிகக் கண்ணியமான முறையில் ஒதுங்கியே இருந்திருக்கிறேன். பெரியார் காலம் வரை அவர் வழிப்படியே கழகம் நடக்கும். பிறகு பார்த்துக் கொள்வோம், என்றபோக்கைக் கொண்டிருந்தவன் நான்.
சில தோழர்கள் இந்தத் திருமண விஷயத்தைக் கேட்டபோதேபெரிதும் ஆத்திரமும், ஆவேசமும் கொண்டனர், துடிதுடித்தனர். உடனே அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டனர். இதில் முக்கியப்பங்கு கொண்டு, முதல்வராய்த் திகழ்ந்தவர் தோழர் எஸ். குருசாமி அவர்கள்தான். அவர் கூறினார் என்னிடம் என்ன அண்ணா! நாம் சும்மாஇருக்கக்கூடாது! உடனே ஒரு கண்டனக் கூட்டம் சென்னையில் போட்டே தீர வேண்டும். கூட்டம் போடுங்கள், நானே தலைமைவகித்து நடத்துகிறேன்” என்று வீர முழக்கமிட்டார். அதனைத் தடுத்து நிறுத்தியது நான்தான். அவ்விதம் ஆத்திரப்பட வேண்டாம். வேண்டுகோள் விடுப்போம்; விளைவைப் பொறுத்திருந்துபார்ப்போம், என்று சமாதானப்படுத்தினேன்.
தூத்துக்குடி, மாநாட்டைக் கண்டவர்கள், ஈரோடு மாநாட்டையும் காணத்தானே நேர்ந்தது. தூத்துக்குடி. மாநாடு நடந்ததும் என்னபேச்சு நடந்தது நாட்டிலே, சிலரிடமாவது!
தூத்துக்குடி. மாநாட்டிற்கு அண்ணாதுரை வரவில்லை, ஒழிந்தான் இத்தோடு - கழகத்தை விட்டு மட்டுமல்ல, பொது வாழ்க்கையேஅவனுக்குக் கிடையாது. அஸ்தமித்து விட்டது பொதுவாழ்வு,என்று எக்காளமிட்டனர். அதுமட்டுமா? தனியாக அவன் வந்தால் அவன் வாழ்க்கையே முடிந்துவிடும் என்ற நிலைதான் என்று கூடப் பேசப்பட்டதாம். அப்படிப்பட்ட நிலை வெகுவிரைவில் மாறிஎனக்காகப் பெரியாராலேயே பெரியாரின் சொந்த ஊரிலேயே“ஈரோடு” நகரிலேயே மாபெரும் மாநாடு எனது தலைமையில் நடத்தப்பட்டது. ஆறுதல் அடையும் நேரத்திலே இந்த வரவேற்புப் பத்திரம் அவர்கள் கண்ணில் படாமலா போகும்? அப்படி. அவரால் அன்பாக நடத்தப்பட்டு வந்த நான் இல்லை! திரும்பிப் பார்த்தால் சம்பத்து இல்லை! கும்பகோணம் போனால் வரவேற்கக் குடந்தைகே. கே. நீலமேகம் இல்லை!
திருச்சியிலே பராங்குசமில்லை. மதுரையிலே முத்து இல்லை! விருதுநகர் அசைத்தம்பி, தூத்துக்குடி. நீதிமாணிக்கம், கே. வி. கே சாமி இவர்கள் யாரையும் காணோம். நம் பக்கம்; கோவில்பட்டி வள்ளிமுத்து, பெத்தாம் பாளையம் பழனிசாமி, சென்னையிலே நடராஜன், கோவிந்தசாமி முதலிய யாவருமேபெரியாரை விட்டு ஏகினரே! என்ன உழைப்பு! எத்துணை உறுதிபடைத்தோர்கள்!
இவர்கள் இல்லையே நம்மிடம் என்ற ஏக்கம் பெரியாருக்குவராமலா போகும்? வந்தே தீரும். அப்போது அவர் மகிழ்ச்சியாஅடைவார்? அவர் வேண்டுமானால் நடிக்கலாம். மகிழ்ச்சியோடுஇருப்பதாகக் காட்டிக் கொள்ளலாம், பிறர் முன்னால்! பலர் என்னைக் கூறுவர் நான் நன்றாக நடிக்கிறேன் என்று. இதெல்லாம் நான் ஐயாவிடம் - பெரியாரிடம் கற்ற பாடத்திலேஒரு சிறு பகுதி. ஐயா மிக மிக நன்றாக நடிப்பார், மகிழ்ச்சியோடுஇருப்பது போல. உண்மையில் மகிழ்ச்சி இருக்காது - இருக்கமுடியாது.
இது மனித உள்ளம் படைத்த எவராலும் முடியாது.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றத் தொடங்கிஇருக்கிறோம். நான் மிகவும் சோம்பேறி, பெரியாரைப் போல் உழைக்க முடியாது என்று கூறுகிறார்கள். நான் ஒப்புக் கொள்ளுகிறேன், பெரியார் போல் உழைக்க முடியாது என்று.
ஏன்? அவருக்கு உழைக்கும் சக்தி, போதுமான வசதிகள் 'இருக்கின்றன. அவ்வளவு வசதியும் சக்தியும் பெற்றவனல்ல நான் என்பது மட்டுமல்ல, பெரியார் போல் உழைப்பது தவறு, கூடாது, தேவையற்றது என்ற கருத்துடையவன் நான். அதுஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல, முரண்பட்டது என்ற கருத்தைக்கொண்டவன்.
ஒரே மனிதர்; தானே எல்லாப் பொறுப்பையும் வகிப்பது தவறு. பிறருக்கும் சந்தர்ப்பம், வசதியளிக்க வேண்டியது கடமை என்றபோக்கைக் கொண்டவன். சோம்பேறி என்று கூறப்படுவது தான் எனக்குப் பொருந்துமா? என்று பாருங்கள். எட்டு ஆண்டுகளாகநான் “திராவிட நாடு' வார இதழை நடத்தி வருகிறேன், காஞ்சியிலிருந்து இதனை நான் ஒருவனே நடத்தி வருகின்றேன். இது சோம்பேறித்தனத்தின் விளைவா என்று கேட்கின்றேன். இந்தப் பத்திரிகையிலே ஓரிரு பக்கங்களைத் தவிர, மற்றவையாவும் என்னாலேயே எழுதப்படுபவை. இதுவும் சோம்பேறித்தனத்தின் விளைவா? “மாலைமணி” சென்னையிலும்
“திராவிட நாடு” காஞ்சியிலும் நடக்கின்றன. “மாலைமணி” தினப் பத்திரிகை. இரண்டுக்கும் நான் ஆசிரியன் வேலை பார்க்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா?
இடையிலே பல பகுத்தறிவுப் பிரச்சார நாடகங்கள் எழுதியிருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? சிலநாடகங்களில் நானே வேஷம் போட்டு நடித்திருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? இரண்டு சினிமாக் கதைஎழுதியிருக்கிறேன். சோம்பேறித்தனத்தின் விளைவா? பத்துப் பதினைந்து புத்தகங்கள் வேறு வெளிவந்திருக்கின்றன.
சோம்பேறித்தனம்தான் காரணமா? இதனிடையே பலமுறை பலபிரச்சாரக் கூட்டங்களுக்கும் போயிருக்கிறேன். சோம்பேறித் தனத்தின் விளைவா? இல்லை என்பதுதானே பதில்!
எதற்காக இதனைக் கூறுகிறேன்? சோம்பேறி என்று எண்ணவேண்டாம். காரியமாற்றுந் திறன் உண்டு. சக்தி இருக்கிறதுஎன்பதைக்காட்டத்தான். வேலை செய்யும் திறமையும் அறிவும் ஆற்றலும், ஆர்வமும் நிச்சயம் உண்டு. சமீபத்தில் தோழர் குருசாமி அவர்கள், இளைஞர், முதியோர் ஆராய்ச்சி நடத்திக் கிழவர்கள் திறமையைப் பற்றிப் பெரிதாக எழுதி இருக்கிறார்கள். நான் துள்ளி விளையாடும் பள்ளிப் பருவத்துப் பாலகனா? அல்லவே! நாற்பது வயதை அடைந்தவன் நான்; இளைஞனின் துடிதுடிப்பும், கிழவரின் பொறுமையும், காரியமாற்றும் கருத்தும் ஒருங்கே கொண்ட வயதுதான். நாற்பதைக் கடந்தவன் ஐம்பதிற்கு உட்பட்டவன். அதாவது இந்தப் பத்து ஆண்டைத்தான் இளமைக்கும், முதுமைக்கும் இடையேயுள்ள காலம் என்றுகூறுவர். பெரியார் தமது சுயமரியாதைக் கோட்பாட்டை இந்தப் பத்து ஆண்டுகளில்தான், அதாவது நாற்பதுக்கும் ஐம்பதுக்கும். இடையேதான் அமைத்தார். என்னாலும் செய்ய முடியும், முறைப்படி. - அவசியத்திற்கேற்ற வகையில்.
மற்றொரு காரணம் கூறப்படுகிறது. அதாவது நான் சுயநலத்துக்காகவே இந்தத் திருமண ஏற்பாட்டை எதிர்க்கிறேன் என்று. எனக்குத் திராவிடர் கழகத்திலே இருந்தபோது எந்தநலன் கெட்டு விட்டது? ஒன்றும் கெடவில்லையே! நாடகம் எழுதாதே!
என்று கண்டித்தாரா பெரியார் என்றாவது? கிடையாதே! சுயநலமாயிருந்தால் - எனக்கு அங்கு இருப்பதால் என்னகெட்டுவிட்டது? ஒன்றும் கெடவில்லை! சிற்சில சமயம் தலைவர் போக்குப் பிடிக்காதிருக்கலாம். அவர் கருத்து எனக்குப் பிடிக்காது இருந்திருக்கலாம். அவர் கருத்து எனக்குப் பிடிக்காதுஇருந்து பொருத்தமற்றதாகத் தோன்றியிருக்கலாம். அப்போதெல்லாம் கூட முடிந்தவரை ஒத்துழைக்கத்தான் செய்தேன். சிற்சில சமயம் நாசுக்காக - பெருந்தன்மையாகஒதுங்கியிருந்தேன். அரசியல் துறவறம் பூண்டுமிருந்தேன் சிலகாலம். இன்று காரணமின்றித் தூற்றப்படுகிறேன். கவலையில்லை. நேற்று நம்மைப் புகழ்ந்தவர்தானே அவர்!
(இன்றும்கூட. என் மனக்கண் முன்னே ஒரு காட்சி ஓடிவந்துநிற்கிறது. ஈரோட்டிலே விடுதலைக் காரியாலயத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ‘விடுதலை'யில் சென்னைக் கார்ப்பொரேஷனைப் பற்றித் தலையங்கம் தீட்டினேன். ரிப்பன் மண்டபத்து மகான்கள்' என்பதுதான் அதன்தலைப்பு. அன்று மாலை நான் ஈரோட்டில், பெரியாரின் மூன்றடுக்கு மாளிகையில், உச்சியில் உலவிக் கொண்டிருந்தநேரத்தில், பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்டத்துடன் படியேறிக் கடந்து வந்து என் முதுகைத் தட்டி. அண்ணாதுரை, உன் தலையங்கம் ரொம்ப நன்றாக இருந்தது; எனக்கு மிகவும்சந்தோஷம்' என்று வெகுவாகப் பாராட்டினார். இதைக் கேட்டநான், 'இதற்காக ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மாடி. ஏறிவரவேண்டும்? சாப்பிடக் கீழே வரும்போது சிரமமின்றிக் கூறியிருக்கலாமே இதனை' என்று தெரிவித்தேன். அதற்குப் பெரியார், என் மனத்தில் நல்லதென்று தோன்றியது; அதை
உடனே கூறிவிடவேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால் நான் பிறரைப் புகழ்ந்து பேசிப் பழக்கப்பட்டவனல்ல. ஆகவேஉடனே சொல்லிவிட வேண்டுமென்று வந்து சொல்லி விட்டேன்” என்று சொன்னார். இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு.
ஆயுள் பூராவும் அவரிடம் இட்டு வாங்கினாலும் பரவாயில்லையே. புகழ்ந்த பிறகுதானே திட்டுகிறார். முதலிலிருந்தே கடைசிவரைதிட்டு வாங்கிக் கொண்டு இன்னும். இருந்துகொண்டிருக்கிறார்களே, அதைவிட நான் மேல். இலாப நஷ்டக் கணக்குப் போட்டுப் பார்த்தேன். அவர் புகழ்ந்தது அதிகம், இகழ்ந்தது கொஞ்சம். எனவேதான் அவர் திட்டுவதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நான் அவரிடம் வெளிப்படையாகக் கொஞ்சம் அதிருப்தி தெரிவித்தது, கோவை மாநாட்டில்தான்.
நான் கேட்டேன், “திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்துப் பேசிய இரகசியம் என்ன? கூறுங்கள் வெளிப்படையாக: என்று. இதைக்கூட நான் கேட்க முதலில் விரும்பவில்லை. ஆனால் நாட்டு நிகழ்ச்சிகள் என்னைக் கேட்கும்படி. வைத்துவிட்டன.
என்னைக் கண்ட பலர், 'என்னப்பா முன்பு வந்தபோதுகருப்புக்கொடி பிடித்துக் கண்டனம் தெரிவித்துஜெயிலுக்குப்போனீர்கள். இப்பொழுது என்ன உங்கள் தலைவர் இரகசியமாகச் சந்திக்கிறார் திருவண்ணாமலையில்' என்று கேலிசெய்தனர்.
நகைப்புக்கு இடமாக இருந்தது நிலைமை. 'இந்த நிலைமைதெளிவுபட, அதற்குப் பின் நான் அவரைச் சந்தித்தது அந்தமாநாட்டில்தான். திருவண்ணாமலையில் என்ன இரகசியம்பேசினீர்கள் என்று கேட்டேன். அதோடு நிற்கவில்லை. நடந்ததைச் சொல்லுவது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கெடுதி என்று தோன்றினால், சொல்லத் தேவையில்லை... சொல்ல வேண்டாம் என்றும் அன்று அங்குத் தெரிவித்திருக்கிறேன். சொல்லும்படி. வற்புறுத்தவில்லை என்றும் கூறினேன்.
கோவையில் பெரியார் பேசும்போது ஏதோ தீவிரத் திட்டத்தில் இறங்கப் போவதாகவும் தன்னைத் தானே முதலில் பலியாக்கிக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். இதைக்கேட்ட நான் பயந்தே போனேன்; ஏன் இவர் பலியாக வேண்டும், கூடாதே என்றுநினைத்தேன். ஆனால் சமீபத்தில் பெரியார் திருச்சியில் பேசியபோக்கைப் பார்த்தவுடன், எனக்கு அன்று இருந்த பயம் நீங்கிவிட்டது! பெரியார் கூறியிருக்கிறார்.
திருச்சியில், 'நான் இன்னும் 10 ஆண்டுகளாவது வாழவிரும்புகிறேன்; அதற்காகத்தான் நான் திருமணம் என்ற பேரில் ஒரு ஏற்பாடு, எனது வாழ்க்கைக்குத் துணை ஏற்படுத்திக் கொண்டேன், என்று பேசினார். அவர் நன்றாக வாழட்டும்! பத்துஆண்டுகள் அல்லது, இருபது ஆண்டுகள் வாழட்டும். சீனக் கிழவரைப்போல, பர்மிய நாட்டு வயோதிகரைப் போல, துருக்கிநாட்டுப் பெரியோரைப் போல வாழட்டும்! இன்னும் காந்தியார் வாழ விரும்பியபடி. 125 ஆண்டு - வயது வரையில் வாழட்டும்!
திராவிட முன்னேற்றக் கழகப் பெரும்பணியைக் கண்களால் காணட்டும்! அவர் கொள்கை, - திட்டம், நம்மால் நிறைவேற்றப் படுவதைக் கண்டு களிக்கட்டும்! தவறு இருந்தால் திருத்தட்டும்!
போகும் பாதை தவறு என்றால் சுட்டிக் காட்டட்டும்! திராவிடர் கழகமாகட்டும், திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படைவரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான், கோட்பாடுஒன்றுதான் திட்டமும் வேறு அல்ல என்ற நிலை இருந்தே தீரும். படை வரிசை இரண்டுபட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வடநாட்டு ஏகாதிபத்தியத்துக்கும் சம்மட்டியாகவிளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலிருந்தும் வடநாட்டு ஏகாதிபத்தியத்தை ஒழித்து, வைதீகக் காட்டைஅழித்துச் சமதர்மப் பூங்கா அமைத்தாலும் அதில் பூக்கும் புஷ்பங்கள், காய்கள், கனிகள் திராவிடத்தின் எழுச்சியை, மலர்ச்சியைத்தான் குறிக்கும். இரு பூங்காவும் தேவை. ஒன்றோடொன்று பகைக்கத் தேவையில்லை - அவசியமும் இல்லை. எது புஷ்பித்தாலும், மாலையாகப் போவதுதிராவிடத்துக்குத்தான் என்ற நல்ல எண்ணம் வேண்டும். அதைவிட்டு, நள்ளிரவிலே பூங்காவின் வேலி தாண்டிப் பாத்தியைஅழிக்கும் வேலி தாண்டிகள் வரக்கூடாது.
மழை பெய்து நின்று, கருத்த வானம் வெளுத்திருப்பது போல், இன்று புதுக்கழகம் அமைத்து, முன்னேற்ற வேகத்துடன், மோதல் இன்றிப் பணியாற்றப் புறப்பட்டு விட்டனர்.
கொள்கை பரப்புவதே நமது முதல் பணி. பகைமை உணர்ச்சியைஅடியோடு விட்டொழிக்க வேண்டும்.
இவ்வளவு பேசுகிறாயே பேதம் கூடாது, பிளவு கூடாது, மோதல் கூடாது என்று. ஏன் நீங்கள் அங்கிருந்தே பணியாற்றக் கூடாது? விலகுவானேன்? வேறு கட்சி அமைப்பானேன்? என்று கேட்கத் தோன்றும். கேள்வி சரியானதுதான். தவறு செய்தவர் தலைவரேயானாலும், தவறு தவறுதான் என்று எடுத்துரைத்தோம்.
அவரோடு இருந்து பணியாற்ற முடியாத நிலையிலிருக்கிறோம்.
எவரிடமும் நம்பிக்கையில்லை என்ற இழிச்சொல்லையும், உதவாக்கறைகள் என்ற பழியையும், தூற்றலையும், ஏசலையும் சுமக்கும் பெரும்பாரம் - பெரும் சுமை - ஏற்பட்டு விட்டது.
இவைகளைத் தாங்கிக் கொண்டு அவரோடு ஒத்து வேலைசெய்வது முடியாத காரியம். ஆகவே, விலகினோம் பெருந்தன்மையோடு. வேறு அமைப்பில் பணியாற்றுகிறோம், இலட்சியத்தை நிறைவேற்ற.
எந்த அளவுக்கு வேலையைக் குறைத்துக் கொள்ளலாமோ அந்தஅளவுக்குக் குறைத்துக் கொள்ளப் பிரியப்படுபவன் நான்; அதுவேஎனது சுபாவம். அப்படிப்பட்ட நான் விலகி, வேறு கட்சியில் தொண்டாற்றத் தொடங்கி இருக்கிறேன். காரணம்?
எனது நண்பர்கள், கழகத்தில் முக்கியப் பங்கு கொண்டுதொண்டாற்றும் பெரும்பாலோர் பொதுவாழ்வில் சலிப்புற்றுப், பொது வாழ்வையே விட்டு விலகும் அளவுக்குச் சென்றனர்.
திராவிடர் கழகம் தன்னாலே அழிந்துவிடும் என்று கேலிச்சித்திரம் தீட்டுமளவுக்குக் கொண்டு போய்விட்டது. இந்தநிலை வேண்டாம் என்றுதான் இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் தனியாய் - பெரியார் வகுத்துச் சென்ற அதே பாதையில் தீவிரமாய்ச் செல்லமுனைந்திருக்கிறது. இன்னும் அவருக்கும் எனக்கும் உள்ள பற்று, பாசம் அகலவில்லை - என்னை விடவில்லை. நான் கேட்கிறேன். தோழர்களே எது முக்கியம் நமக்கு? இலட்சியமா? பெரியாரா? இலட்சியம் தேவை; பெரியாரல்ல என்று முடிவு செய்தோம். பிரச்சினை முடிந்தது, அதோடு. இதோ நம் கண்முன் டில்லிஏகாதிபத்தியம் மக்களைப் பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாயநினைக்கும் பழைமை இவைகள்தான் ஒழிய வேண்டும்.
பழைமையையும் பாசிசத்தையும் முறியடிக்கும் வரைஓயமாட்டோம், உழைப்போம் உருவான பலனைக் காண்போம். அப்போது பெரியார் “பயல்கள் பரவாயில்லை! உருவானவேலைதான் செய்கிறார்கள்” என்று உள்ளம் மகிழும் நிலைவரத்தான் போகிறது.
தூத்துக்குடி. மாநாட்டிற்கு நான் போகவில்லை. ஒருகேள்வித்தாள் சென்றது, பெரியாருக்கு “அண்ணா ஏன் வரவில்லை?” என்று. அதற்குப் பெரியார் “முத்தன் ஏன் வரவில்லை, முருகன் ஏன் வரவில்லை? அப்புறம் எம். எஸ். சுப்புலட்சுமி ஏன் வரவில்லை. சுந்தராம்பாள் ஏன் வரவில்லைஎன்று கேட்பீர்கள் போலிருக்கிறதே?” என்று அலட்சியமாகப் பதிலளித்தார். அதற்குப் பிறகு ஈரோடு மாநாட்டிலே “அண்ணாவந்திருக்கிறார். அவரிடம் பெட்டிச் சாவியைக் கொடுத்துவிடுகிறேன்” என்று கூறும் நிலை வரத்தான் செய்தது. அவர் “சாவியைக் கொடுத்தேன்” என்று கூறினார். அந்தச் சாவி எந்தப் பூட்டுக்கும் பொருந்தாத சாவி. எனவே எந்தக் காரியத்துக்கும் உபயோகப்படவில்லை. ஆனாலும் தூத்துக்குடி. மாறி ஈரோடு
வந்ததுபோல இன்றுள்ள நிலை மாறத்தான் போகிறது என்றஉறுதியோடு - உற்சாகத்தோடு பணிபுரிவோம். நாட்டிலே ஆற்றிவந்த நல்லறிவுப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவோம்.
பாசீசத்தையும், பழமையையும், நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளையும் எதிர்த்துப் போராடுவோம். நாட்டிலே இன்று 144 ஏராளம்: புத்தகங்கள் பறிமுதல்; அச்சகங்களுக்கு ஜாமீன் தொகை ஓயவில்லை - குறையவில்லை. நேற்றுக்கூட நான் எழுதிய "இலட்சிய வரலாறு” என்ற புத்தகத்தைப் பற்றி போலீசார், அது என்ன? இது என்ன? என்று கேள்விமாரி பொழிந்தவண்ணம் இருந்தனர். டில்லி பாசிச ஆதிக்கத்தை ஒழிக்கப் பாடுபடும் திராவிட மக்களை - பழைமைப் பிடியினின்றும் விடுபட விரும்பும் பகுத்தறிவு வாதிகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்றுசர்க்கார் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு புத்தகமாகப் பறிமுதல் செய்து கொண்டே. இருக்கிறார்கள். அடக்குமுறையை வீசிக் கொண்டே. இருக்கிறார்கள்.
இவ்விஷயமாக வெகுசீக்கிரம் திராவிட முன்னேற்றக் கழகம் தக்கதொரு நடவடிக்கையிலே ஈடுபடப் போகிறது. சர்க்கார் காணத்தான் போகிறது. சர்க்கார் பறிமுதல் செய்த புத்தகம் பகிங்கரமாக விற்பனை செய்யப்படும் சைனாபஜாரில்,
"இலட்சிய வரலாறு” ஆறு அணா, 'இராவண காவியம்' ஆறுரூபாய், 'ஆரியமாயை' அறு அணா, ஆசைத்தம்பி புத்தகம் நாலணா என்று தொண்டர்கள் விலை கூறுவதைக் கேட்கத்தான் போகிறோம். சொற்கள் மேற்படி புத்தகம் இப்போதுகிடைதாங்கள் கருதும்பொழுதோ விற்றுத் தீர்த்து மீன் தொகை“இலட்சிய வரலாறு' என்று கடமாகாண முகப்பிலே மட்டும் “இலட்சிய வரிறோம்” என்று இருக்கலாம். உள்ளே, காகிதம் வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் விற்பது 'இலட்சிய வரலாறு” என்று கூறி பறிமுதல் செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் இப்படித்தான் விற்கப்படப் போகின்றன. நமது இயக்கநாடகங்கள், தடை செய்யப்படுகின்றன சர்க்காரால். தகாதசெயல்தான் இதுவும். தடை செய்யப்பட்ட நாடகங்களில் முதலாவது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இயற்றிய “இரண்யன் அல்லது இணையற்ற வீரன்” என்பது.
திராவிட முன்னேற்றக் கழக முக்கியஸ்தர்களைக் கேட்டுக் கொள்கிறேன், மன்றாடிக் கேட்கிறேன். அவர்களின் முக்கியவேலை, முதல் வேலை இந்த நாடகத்தை ஆங்காங்குபொதுமக்கள் முன் நடித்துக் காட்டும் திட்டம் வகுப்பதுதான்!
பகை உணர்ச்சியை வளர்த்து எதிரிகளுக்கு இடங்கொடுத்துஏமாளியாகத் தேவையில்லை; நான் முன்னர் குறிப்பிட்டபடி“கல்கி' பத்திரிகை என்ன தைரியமாக எவ்வளவு சந்தோஷமாகத் தீட்டியது, காங்கிரசுக்கு எதிராக ஒரு கட்சியுமில்லை என்று.இந்துமகா சபைக்கு ஒரு வேலையும் இல்லை; கம்யூனிஸ்டுகள் கலகக்காரர்கள்; சமதர்மிகள் வெற்றி பெறமாட்டார்கள்.
திராவிடக் கழகத்தினர் தன்னாலேயே அழிந்து விடுவர் என்றுஆரூடம் கூறியது. அப்பனே! இது ஆத்திரத்தின் மீது கட்டப்பட்டமுடிவு, ஆசையின் விளைவு, அதை விட்டுவிடு. மரம் அழியவில்லை. அதிலிருந்து ஒட்டுமாஞ்செடி. தோன்றியிருக்கிறது. இதைவெட்டிவிட முடியாது. நான் 'திராவிட நாடு' ஆரம்பித்த நேரத்திலேகுடந்தையிலே ஒரு கூட்டத்தில் பேசினேன். அப்போது எனக்குஒரு கேள்வித்தாள் தரப்பட்டது. கேள்வி என்ன தெரியுமா? “குடியரசு” இருக்க நீ ஏன் ‘திராவிடநாடு' ஆரம்பிக்கிறாய்? என்றுகேட்கப்பட்டது. நான் பதில் கூறினேன்.
“குடியரசு” இருக்கிறது; அதே கருத்தை எடுத்துக்கூற அதேகொள்கையைப் பரப்ப முளைத்திருக்கிறது, திராவிட நாடு' காஞ்சீபுரத்தில்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒட்டுமாஞ்செடிதான். மண்வளம் ஏராளம். அதே பூமி; நீர் பாய்ச்ச, பதப்படுத்த, பாத்திகட்டமுன்னிற்போர் பலர். ஒட்டு மாஞ்செடி பூத்துக் காய்த்துக் கனிகுலுங்கும் நாள் வந்தே தீரும்! இதனால் ஒட்டு மாஞ்செடிமாமரத்துக்கு விரோதமல்ல. திராவிடர்
கழகத்துக்கு முரணானது அல்ல, ஒத்த கருத்துக் கொண்டதேஒட்டு மாஞ்செடி.
நம்மிடம் பணமில்லை. “இந்தப் பயல்களிடம் பணம் ஏது, கொஞ்சநாட்களுக்குக் கூச்சல் போட்டு அடங்கி விடுவார்கள். பணமில்லாமல் என்ன செய்ய முடியும்” என்று பேசப்படுகிறதாம்.
அதே நேரத்தில் பணம் சம்பாதிக்கிறான். சினிமாவுக்குக் கதைஎழுதுகிறான், நாடகமாடுகிறான், நல்ல பணம் சம்பாதிக்கிறான் என்றும் தூற்றப்படுகிறேன், நான்! இந்த இருவகைப் பேச்சுக்களையும் காணும்போது, உண்மையிலேயே மகிழ்கிறேன், நம்மிடம் பணம் இல்லை, ஆனாலும் கட்சி நடத்த வழிவகைஇருக்கிறது. பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கைதோன்றுகிறது. நான் சம்பாதித்தது உண்மையோ, பொய்யோஅதுபற்றிக் கவலையின்றி அதை அப்படியே ஏற்று அந்த வழியைக் கடைப்பிடித்தேனும் பணம் சம்பாதித்துக் கட்சி நடத்தலாம் என்றதைரியம் பிறக்கிறது.
பணம் என்பது ஒரு சாதனமே ஒழிய, அது சகல காரியங்களுக்கும் அத்தியாவசியமான ஒன்றல்ல. இருந்தே தீர வேண்டும் எல்லாக் காரியங்களுக்கும் என்ற நிர்ப்பந்தம் தேவையில்லை. நமதுஉழைப்பின் மூலம் உறுதியின் மூலம் எவ்வளவோபணத்தேவையை நிறுத்தலாம்; குறைக்க முடியும்.
முக்கியமாக, முதல் வேலையாக, எழுத்துரிமை, பேச்சுரிமைஎதையும் அடக்கும் சர்க்கார் போக்கை எதிர்த்துப் போரிடத் திராவிட முன்னேற்றக் கழக முன்னணிப்படை. அமைய வேண்டும். அதில் பங்கு கொள்ள சமதர்மத் தோழர்களே, வாருங்கள் என்றுவரவேற்கிறேன்! கம்யூனிஸ்டுகளே ஒத்துழையுங்கள் என்றுகூப்பிடுகிறேன்!
“பேச்சுரிமையைப் பழிக்காதே, எழுத்துரிமையைத் தடுக்காதேபுத்தகங்களைப் பறிமுதல் செய்யாதே!” என்று போரிடுவோம்!
“பெரியாரே! நீங்களளித்த பயிற்சிப் பக்குவம் பெற்ற நாங்கள் உங்கள் வழியே சர்க்காரை எதிர்த்துச் சிறைச்சாலைசெல்லத்தான் வேண்டுகோள் விடுக்கிறோம். துவக்க நாளாகியஇன்றே! இன்றே” என்று கூறி முடித்தார்.
👌
ReplyDeleteஎன்றும் அண்ணா-வின் வழியில் அவர்களின் பேரன்கள்
ReplyDelete