திமுகவின் தீர்மானங்களும், போராட்டங்களும் - ராஜராஜன்ஆர். ஜெ
திமுகக் கட்சியை ஆரம்பித்தது 1949 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 17ம் தேதி. பெரியாரின் கொள்கைகளோடு, தமிழ்நாட்டு மாநில பிரச்சனைகளுக்கும் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்தும், தீர்மானங்கள் போட்டும் தனது போராட்டங்களை நடத்திய கட்சி திமுக. இப்படி எழுப்பிய குரல்கள், எழுதிய தீர்மானங்கள், நடத்திய போராட்டங்கள் தான் பின்னாளில் திமுக ஆட்சி அமைத்தவுடன் அரசாணைகளாக மாறியது.
அண்ணா 1967ல் முதலமைச்சர் ஆனவுடன் மூன்று முக்கிய அரசாணைகளை நிறைவேற்றினார் என்பது நமக்குத் தெரியும்.
1) மதராஸ் மாகாணம் என்றிருந்ததைத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது.
2) இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் வகையில் இருமொழிக்கொள்கை
3) சுயமரியாதை திருமணச் சட்டம்.
இம்மூன்று சட்டங்களுக்கும் ஒரு நெடிய போராட்ட வரலாறு இருக்கிறது. அண்ணா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் இந்தச் சட்டங்களை நிறைவேற்றினார்.
ஆனால், திமுக இந்த மூன்றை தாண்டி பல விஷயங்களுக்குப் போராடி இருக்கிறது, தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்று, திமுகவின் தொடக்கக் காலத்தில் நடந்த எல்லைப்போராட்டம். எல்லைப்போராட்டத்தில் திமுகவின் நிலைப்பாடும், போராட்டங்களும் அதிகமாக வெளியே பேசப்படவில்லை. திமுகவின் போராட்டத்திற்கான சான்றுகளாக இந்தக் கட்டுரை உதவும். அதேவேளையில், திமுகவின் தீர்மானங்கள் என்பது இவற்றைத் தாண்டி பல்வேறு மாநில உரிமைகள், மக்கள் பிரச்சனைகளைக் குறித்தும் பேசி இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையில் சில பிரச்சனைகளைக் குறித்து மட்டும் பார்ப்போம். திமுகத் தொடங்கி நடந்த அனைத்து மாநாடுகளிலும், பொதுக்குழு கூட்டங்களிலும் போடப்பட்ட தீர்மானங்களில் இருந்து இந்தி ஆதிக்க எதிர்ப்பு, எல்லைபோராட்டம், தமிழ்நாடு பெயர் மாற்றம், சுயமரியாதை திருமணச்சட்டம் ஆகியவை குறித்துப் போடப்பட்ட தீர்மானங்கள் குறித்து நாம் இந்தக் கட்டுரையில் பாப்போம்.
நேருவின் கூற்று
அவசியமற்ற - வேண்டாத வடநாட்டு இந்தியை, இந்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் அறிகுறியாகத் திராவிட நாட்டிலுள்ள புகைவண்டி நிலையங்களின் பெயர் பலகைகளிலும் புகுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்ற எதிர்ப்பின் காரணக் காரியங்கள் பல காட்டி, இறுதியாகத் தாமே அதனை அழிக்கும் செயலை மேற்கொண்ட அறப்போர் வீரர்கள் போக்கை, 'சிறுபிள்ளைத் தனமான அறிவீனம்' என்று சுட்டிக்காட்டிய பண்டித நேருவின் கூற்றைக் கேட்டு இக்க்கூட்டம் வருந்திக் கண்டனம் தெரிவித்துக்கொள்வதோடு, பொறுப்பு வாய்ந்த பதவியில் வீற்றிருக்கும் அவரைபோன்றவர்கள் இப்படிப்பட்ட இழிமுறையில் இறங்குவது அழகல்ல என்று அறிவுறுத்திக்கூறவும் விரும்புகிறோம்.
4.12.1952 தஞ்சை பொதுக்குழு தீர்மானம் - இந்தி
மொழி வழி அரசு அமைப்புக்காக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானப்படி, தமிழகத்துக்குச் சொந்தமான சித்தூர் மாவட்டத்தை அத்துடன் சேர்க்காது, வடநாட்டு ஆதிபத்திய அரசு ஒரவஞ்சனையாகவும், திராவிடத்திலே உட்பூசல் கிளப்பும் நோக்குடனும் நடந்து கொண்டதைக் கண்டிப்பதுடன், உரிமையை நிலைநாட்ட சித்தூர் மாவட்டத்துத் திருத்தணியில் நடத்தப்பட்ட அறப்போரில் வடார்க்காடு சித்தூர் மாவட்டத் தோழர்கள் தமது பங்கினைச் செலுத்தியது கண்டு மகிழ்ந்து பாராட்டுவதுடன், மேற்கொண்டு அறப்போர் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொள்வதற்கு முதற்படியாகச் சித்தூர், வடார்க்காடு, சென்னை, செங்கற்பட்டு மாவட்டத்து கிளைக் கழகங்களின் கருத்தை ஒட்டி, ஒரு தனிக்குழு அமைத்து அறப்போர்த் திட்டம் வகுத்துக்கொடுக்க, பொதுச்செயலாளருக்குப் பொதுக்குழு அனுமதி அளிக்கிறது." எனும் தீர்மானம் தோழர் கே. ஏ மதியழகன் பிரரேபிக்க, தோழர் எ.எல். சி. கிருஷ்ணசாமி ஆமோதிக்க நிறைவேற்றப்பட்டது.
அரக்கோணம் பொதுக்குழுத் தீர்மானம் 31.5.1953 - எல்லைப் போராட்டம்
தமிழகத்துக்கு உரிமைப்படி சேர வேண்டிய நிலப்பகுதிகளை ஆந்திரத்துடன் இணைந்திருப்பது காணத் திராவிட முன்னேற்றக்கழகம் வருந்துகிறது. சித்தூர் மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பகுதிகள், எந்த நியாயப்படி பார்த்தாலும், ஆந்திர இராஜ்யத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டியதாகும். அதுபோலவே, இன்றைய தினம் திருவிதாங்கூர் - கொச்சி இராஜ்யத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் தமிழ் பேசும் பகுதியாகிய நாஞ்சில் நாடு பிரிக்கப்பட்டுத் தமிழ் நாட்டுடன் இணைக்கப்படுத்தல் வேண்டும். அத்துடன்கூடச் சென்னை இராஜ்யத்தில் உள்ள பெரும்பான்மையாக மலையாள மொழி பேசும் பகுதிகளைக் கேரள நாட்டுடன் சேர அனுமதிப்படுதல் வேண்டும்.
13.5.1954 ல் இராஜ்யப் புனர் அமைப்புக் கமிஷனிடம் திமுக வின் இரா. நெடுஞ்செழியன், கே.ஏ. மதியழகன், ஈ.வெ.கி சம்பத், ஏ.கோவிந்தசாமி ஆகியோர் தந்த அறிக்கையில் இருந்து - எல்லைப் போராட்டம்
சித்தூர் தமிழ்ப்பகுதி தொடர்பாகத் திமுகவின் தீர்மானம்:
(அ) சித்தூர் பிரச்சனை சம்பந்தமாக வீணான மனமாச்சரியங்களும், தமிழர் - ஆந்திரர் குரோத உணர்ச்சியும் மூளாத வகையில் மொழிவழி அரசு கோட்பாட்டுக்கு மதிப்பளித்து ஒரு சமரசம் காண, சென்னை சர்க்கார் முதலமைச்சர் காமராசர் அவர்களும், ஆந்திர சர்க்கார் முதலமைச்சர் பிரகாசம் அவர்களும் சந்தித்துப் பேசுதல் வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(ஆ) தமிழர் - ஆந்திரர் பிரச்சனையை நியாயமான முறையில் தீர்த்து வைக்கும் வகையில், எல்லைக்கமிஷனை வாக்களித்தபடி தில்லி சர்க்கார் அனுப்பி வைக்க வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துவதுடன் மேற்படி கமிஷனை, அனுப்புவதில் தாமதம் ஏற்படுவது தான் வீணான தமிழர் - ஆந்திரர் துவேசத்தை வளர்கிறது என்பதை வருத்தத்துடன் தில்லி ஆட்சிப் பீடத்தினருக்கு இம்மாநாடு அறிவுறுத்திக் கூறுகிறது.
(இ) சித்தூர் மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகளை ஆந்திர நாட்டின் பிரிவினையின் போது, ஆந்திர அரசினருக்கு உரிமை யாக்கும் வகையில், டெல்லி ஆட்சிபீடத்தினர் செய்த சூழ்ச்சியை - இனத்தால் ஒன்றுபட்ட ஆந்திர நாட்டு மக்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையே வேண்டுமென்றே வீண் குழப்பத்தை உண்டாக்கி வைத்திருக்கும் அநீதியை, அரசியல் நெறியற்ற தன்மையை இம்மாநாடு மிக வன்மையாகக் கண்டிப்பதுடன் சித்தூர் மாநாட்ட தமிழ்ப்பகுதிகள் அனைத்தும் தமிழகத்தோடு சேர்க்கப்படுதல் வேண்டும் என்பதற்காகவும், அதற்கு ஆவன செய்யவும் திருச்சி பொதுக்குழுவில் தோழர் என்.வி. நடராஜன் அவர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தனிக்குழுவை இம்மாநாடு முழு மனத்தோடு வரவேற்பதுடன், அத்திட்டம் வெற்றிபெற சித்தூர் மாவட்டத்திலுள்ள கிளைக்கழகங்கள் அனைத்தும் தீவிர பணியில் ஈடுபடவும் தயாராயிருக்கிறது என்பதைப் பொதுக் குழுவுக்கும், பொதுச் செயலாளருக்கும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறது.
- கே. ஏ. மதியழகன்
- நாகர்கோவில் வி.எம்.ஜான்
- சித்தூர் என்.கேசவன்
குமரி மாவட்டம் பிறந்தது
தெற்கெல்லைப் போராட்டம் - திரு - கொச்சிப் பிரச்சனை
திமுக வடக்கெல்லைப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டியதை போலவே தெற்கு எல்லை போராட்டத்திலும் தன்னை இணைத்துக்கொண்டது. அதனையும் அறிஞர் அண்ணா அவர்கள் சித்தூர் மாவட்ட மாநாட்டுப் பேச்சில் குறிப்பிட்டிருப்பதைப் படித்திருப்பீர்கள். தெற்கெல்லை தொடர்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:
(அ) திரு - கொச்சியில் வாழும் 15 லட்சம் தமிழ் மக்கள், மொழி அடிப்படையில் தாய்த் தமிழகத்தோடு சேர வேண்டுமென்ற கிளர்ச்சியை இம்மாநாடு வரவேற்று ஆதரிக்கிறது.
(ஆ) மொழி அடிப்படையில் தாயகத்தோடு சேரவேண்டுமென்று அங்குக் கிளர்ச்சி செய்யும் (திரு. கொச்சி) தமிழ் மக்களைத் திரு - கொச்சி, ப்ரஜாசோசியலிஸ்டுக் கட்சி சர்க்கார் தனது கொடுமை மிக்க அடக்குமுறையால் தொல்லைப்படுத்தும் அநீதியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
திரு - கொச்சி 'தமிழ்நாட்டு'க் காங்கிரஸ் தலைவர்களான ஏ. நேசமணி எம்.பி., ஏ.அ. பஜார் எம்.பி., ஏ. சிதம்பரநாதன் எம். எல். ஏ (முன்னாள் அமைச்சர்) ஆகியோரையும் சிறைப்பட்டுள்ள இதர தோழர்களையும் சிறையிலிருந்து விடுவித்துத் தடையுத்தரவுகளை இரத்துச் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது.
- நாகர்கோவில் வி.என். ஜான்
அ. பொன்னம்பலனார்
11 ஜூலை 1954 சித்தூர் மாவட்ட மாநாட்டுத் தீர்மானம் - எல்லைப் போராட்டம்
தமிழ்ப்பகுதிகள் இணைப்பு
(அ) தமிழகத்தை ஒட்டித் தொடர்ந்தாற் போல் உள்ள சித்தூர் மாவட்டத்தின் தமிழ்ப்பகுதிகள், மொழிவழி மாநில அடிப்படையில், தமிழகத்தோடு இணைக்கப்படுத்தல் வேண்டும் என்ற கருத்து, நீதிக்கு ஏற்ற முறையாவதோடு, சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநில மாநாட்டுத் தீர்மானத்தாலும் வலியுறுத்தப்பட்டிருப்பதாகும். சித்தூர் தமிழ்ப் பகுதிகளை இப்பொழுது ஆந்திர மாநிலத்தோடு சேர்த்துக்கணக்கிட்டிருப்பது தமிழக மொழிவழி உரிமைக்கு இழைத்த அநீதியாகும். இந்த அநீதியைத் துடைப்பதற்கான முயற்சியிலும் கிளர்ச்சியிலும் ஈடுப்பட்டுக் கழகத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையில், தங்களாலான அளவு பாடுபட்ட - பாடுபட்டு வரும் கழகத் தோழர்களைப் பாராட்டுவதோடு, இணைப்பு முயற்சியை இன்னும் வலிவாக்கவும், அதற்கான நடவடிக்கைகளை அவ்வப்போது எடுக்கவும் தோழர் என்.வி.நடராசன் அவர்களைத் தலைவராகவும், தோழர்கள் சி. வி. எம். அண்ணாமலை, ஏ.எல்.சி. கிருஷ்ணசாமி, கே.எம். கண்ணபிரான் (மற்றும் இருவரை நியமித்துக் கொள்ள அதிகாரம்) ஆகியோரை உறுப்பினராகவும் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.
(ஆ) தமிழகத்தின் தெற்குப் பகுதியில், தமிழகத்தோடு ஒட்டித் திருவிதாங்கூர் - கொச்சி மாநிலத்தில் இருக்கும் நாஞ்சில் பகுதியும், பிற தமிழ்ப் பகுதிகளும் தமிழகத்தோடு இணையவேண்டும் என்ற கருத்தை, நாஞ்சில் மாவட்ட முதல் தி.மு.கழக மாநாட்டிலும், திராவிட முன்னேற்றக் கழகச் சென்னை மாநில மாநாடு தீர்மானத்தின் மூலமும் வலியுறுத்திக் கூறியிருப்பதாலும், திருவிதாங்கூர் - கொச்சித் தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைத்தல் வேண்டும் என்ற குறிக்கோளை முன்னிறுத்தி அண்மையில் அங்கு நடந்த தேர்தலில் போட்டியிட்ட தோழர்கள் பாராட்டத் தகுந்த வகையில் வெற்றிப் பெற்றிருப்பது, இணைப்புக் கொள்கையின் அவசியத்தைத் தெள்ளத் தெளியக் காட்டுவதாலும், இணைப்பு முயற்சியை வெற்றிகரமாக்குதல் வேண்டும் என்ற இந்திய ஆட்சியாளர்களையும், சென்னை ஆட்சியாளர்களையும் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, இணைப்பு முயற்சியில் ஈடுபடவும், அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் குழு ஒன்றை அமைப்பதற்குப் பொதுச் செயலாளருக்கு இப்பொதுக்குழு அனுமதி அளிக்கிறது.
(இ) இந்த இணைப்பு முயற்சிக் குழுக்கள் அவ்வப்போது கழகப் பொதுச் செயலாளரைக் கலந்துக்கொண்டு, திட்டங்கள் தீட்டவும், நடவடிக்கைகள் எடுக்கவும் ஆன செயல்களில் ஈடுபடுதல் வேண்டும் என்றும் இப்பொதுக்குழு முடிவு செய்கிறது.
7.3.1954 திருச்சி பொதுக்குழு தீர்மானம் - எல்லைப் போராட்டம்
கூட்டமைப்பில் பங்கு பெற்றோர், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - நம்நாடு 28.1.1956
எல்லைப் போராட்டம் மற்றும் தமிழ்நாடு பெயர்
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழரின் மொழி, கலை, வாழ்வு, வளம் ஆகியவற்றிற்கான பாதுகாப்பும் வளர்ச்சியும் மொழிவழி அரசு மூலமே கிடைக்கும் என்பது பெருவாரியான மக்களின் கருத்து, இது, ஜனநாயகக் கோட்பாடுகளின் படி ஏற்கனவே விளக்கமாகக் தெரிவிக்கப் பட்டிருப்பதோடு, தேர்தல் மூலமும், தீவிரப் போராட்டம் மூலமும் இந்தக்கருத்து நெடுங்காலமாக வற்புறுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் மாறாக மொழிவழி அரசு கோரிக்கைக்குக் கேடு நேரும் வகையில், தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, கொச்சின் சித்தூர், பாலக்காடு ஆகிய தாலுக்காக்களின் தமிழ்ப் பகுதிகளைத் தமிழகத்தோடு இணைக்காமல் விட்டது, அநீதி என்பதைத் தமிழகத்திலுள்ள எல்லாக் கட்சியினரும், சென்னை சட்டசபையும், அரசாங்கமும் தெளிவாகக்கூறியிருந்தும், அந்த அநீதியை மத்திய அரசாங்கம் அங்கீகரித்ததோடு, பசல் அலிக்குழு வழங்கிய செங்கோட்டைத் தாலுகாவின் பெரும்பகுதியைக் கேரளத்தில் சேர்ந்துவிட்ட செய்கையை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்துடன் சென்னை - ஆந்திரா எல்லோயோரத்திலுள்ள தமிழ்ப்பகுதிகளுக்கு எல்லைக்குழு அமைப்பதாக நியமிப்பதாக மத்திய அரசாங்கம் அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாததற்கு இக்கூட்டம் அதிருப்தி அடைகிறது. ஆகவே, கேரளத்தோடும், ஆந்திரத்தோடும் தமிழகத்திற்குள்ள எல்லைப்பிரச்னையைத் தீர்க்க ஒரு எல்லைக்குழு நியமித்து ஜனநாயக வழியில் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தை இக்கூட்டம் வற்புறுத்துகின்றது.
மத்திய அரசாங்கத்தார், மொழிவழி மாநிலக்கோரிக்கையைக் கொள்கை ரீதியாக ஏற்காததை எதிர்த்தும், எல்லைப் பிரச்சனையில் தமிழருக்கு நியாயம் வழங்காததைக் கண்டித்தும், தமிழர் விரும்பாத 'தட்சிண ராஜ்ய' யோசனையை நிராகரித்தும் பிப்ரவரி 20 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைக்கும் வேலை நிறுத்தமும் செய்யுமாறு பொது மக்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது. 'சென்னை ராஜ்யம்' என்ற பெயரை நீக்கி 'தமிழ்நாடு' என்று இந்த நாட்டிற்குப் பெயர் அமைக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
இந்திய ஆட்சி மொழி
10. இந்திய யூனியன் ஆட்சிமொழியும், மாநிலத்திற்கு மாநிலம் இருக்க வேண்டிய கடிதப் போக்குவரத்து மொழியும் எதுவாக இருக்கவேண்டும் என்று முடிவு எடுத்து, இந்திய அரசியலாரிடம், அதனை வற்புறுத்துவது.
1956 மார்ச் 28,29,31 ஆகிய தேதிகளில் சென்னை சட்டசபையில் விவாதத்திற்கு வரும் இராஜ்யப் புனரமைப்பு மசோதாவைச் சர்வ கட்சி கூட்டணி பரிசீலனை செய்தது:
(அ) சென்னை இராஜ்யம் தமிழ்நாடு எனப் பெயரிடப்பட வேண்டுமென்று பொதுமக்கள் தெரிவித்துள்ள கோரிக்கை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.
(ஆ) புதியதாக அமைக்கப்படவிருக்கும் தமிழ்நாட்டின் எல்லைகள் ஜனநாயகத்திற்குப் புறம்பான முறையில் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன.
(இ) மூன்று ஆண்டுகளாகச் சர்க்காரால் பல சமயங்களில் உறுதியளிக்கப்பட்ட ஆந்திரா - தமிழக எல்லை நிர்ணயம் குறித்தும் மசோதாவில் திட்டவட்டமான வழிவகைக் காணப்படவில்லை.
மேற்குறிப்பிட்டுள்ள குறைகள் நீங்கும் வகையில் புதியதாக அமையவிருக்கும் இராஜ்யத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிடவும், தமிழ்நாட்டின் எல்லைகள் தமிழகத்துடன் சேர்க்கப்படுவதற்கு ஜனநாயக முறையில் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகள் மசோதாவில் இடம்பெறச்செய்யவும் சென்னை சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு சர்வகட்சி கூட்டணி கேட்டுக்கொள்ளுகிறது.
1956 மார்ச் 27 ஆம் தேதி சென்னை நேப்பியர் பூங்காவில் நடந்த சர்வ கட்சி கூட்டம்:
"சென்னை இராஜ்யத்துக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் வைத்தும், கேரள மாநிலத்துடன் சேர்க்கப்பட்ட எல்லைத் தமிழ்ப்பகுதிகளைத் தமிழ்நாட்டோடு சேர்த்தும், மாநிலப் புது அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்று சட்டசபை உறுப்பினர்களையும், சர்க்காரையும் இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது."
திருச்சி தி.மு.க. 2 ஆவது மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!
மே தினவிடுமுறை
உலகப் பாட்டாளி மக்களின் உரிமைக்கு வித்திட்ட மகத்தான நாளாகிய மே தினத்தை, ஆண்டுதோறும் இந்தியத் துணைக்கண்டமெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் பொதுவிடுமுறையாக ஆக்குமாறு இந்திய அரசியலார் அதிகாரபூர்வமான உத்திரவிட வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தலைவர்
சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டமாக்குதல்
சுயமரியாதைக் கொள்கை அடிப்படையில் இதுவரை நடைபெறவுள்ள திருமணங்களையும், இனி நடைபெறவிருக்கும் திருமணங்களையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் வகையில், அரசியலார், சட்டத்தில் தக்க திருத்தம் செய்ய வேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
ஏ. எல். சி கிருஷ்ணசாமி, கே. எம். கண்ணபிரான், முல்லை வடிவேலு
தமிழ் மொழி ஆட்சி மொழியாகவேண்டும்
நீண்ட நாள்களாகத் தமிழக மக்கள் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டும் சரியான நடவடிக்கைகளை எடுக்காமல், தள்ளிப்போட்டுக் கொண்டு வருகிற நிலையைக் கண்டிப்பதுடன், உடனடியாகத் தமிழகத்தின் எல்லா மாவட்டங்கட்கும், ஆட்சி மொழியாகத் தமிழைத் துரிதமாக ஆக்கவேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
அ. பொன்னம்பலனார், குடவாசல் கிருஷ்ணமூர்த்தி
ஆங்கிலம் பொதுமொழி
இந்திய துணைக்கண்டத்தின் மத்திய ஆட்சிப் பீடத்தின் ஆட்சி மொழியாகவும், மாநில அரசுகளுக்கிடையே தொடர்பு கொள்ளும் பொது மொழியாகவும் வளர்ச்சியற்றதும், பெரும்பான்மை யோரால் பேசப்படாததுமான இந்தி மொழியை, டில்லி ஏகாதிபத்தியம் புகுத்திவருவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுகாறும் இந்தியாவின் பொதுமொழியாக இருந்து வருவதும், உலகப்பொதுமொழியாக விளங்குவதும், அறிவியல் மொழியாக வளர்வதுமான ஆங்கிலத்தையே தொடர்ந்து இந்திய அரசின் ஆட்சி மொழியாகவும் கைக்கொள்ள வேண்டுமென்று இம்மாநாடு வற்புறுத்துவதுடன், அதற்கேற்ப அரசியல் சட்டத்தையும் உடனே திருத்தி அமைக்க வேண்டுமென்று கோருகிறது.
பி. ஆர். கோகுலகிருஷ்ணன், பி. இராசமாணிக்கம்
மாநிலப் புனரமைப்பு
மாநிலப் புது அமைப்பில் தமிழகத்துக்கு உரித்தான தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சி (சித்தூர்) செங்கோட்டை பாலக்காடு வட்டத்திலுள்ள தமிழ்ப்பகுதிகள் ஆகியவையும், ஆந்திரா - சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ் பகுதிகளும் தமிழகத்தோடு இணைக்கப்படாமல், தமிழர்களுக்கு விரோதமாக மத்திய சர்க்கார் செய்துள்ள ஜனநாயகத்துக்குப் புறம்பான முடிவை இம்மாநாடு மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
(அ) இப்பிரச்சனையில் சென்னை மாநில சர்க்கார் கொண்டுள்ள காட்டிக்கொடுக்கும் போக்கினை இனியாகிலும் மாற்றிக்கொள்ள வேண்டுமென இம்மாநாடு எச்சரிக்கிறது.
(ஆ) மாநிலப் புது அமைப்புக் குழுவினரிடம் சென்னை சர்க்கார் தங்கள் தரப்பில் நின்று சாட்சியம் கூறியதற்கேற்பவும், பொதுவாகத் அனைவருமே ஒன்றுபட்டு வேண்டுகோளுக்கேற்பவும், சென்னை இராஜ்யத்துக்குத் 'தமிழ்நாடு' எனப்பெயரிடப்படும்கோரிக்கையை நிறைவேற்றம் அதிகாரம் சென்னை சர்க்காருக்கே இருந்தும்கூட அதற்கு மாறாகப் பிடிவாதம் காட்டும் சென்னை சர்க்காரின் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
(இ) சென்னை - ஆந்திரா எல்லைத் தகராறுள்ள தமிழ்ப் பகுதிகள் சம்பந்தமாக, ஆந்திரா, சென்னை இரு சர்க்கார்களுக்கும் பேச்சுவார்த்தை நடத்தி சரியான முடிவு காணாததால்,எல்லைக்கமிஷன் அமைத்துத்தான் தீர்க்க வேண்டுமென்று மத்திய சர்காருக்குத் தமது கோரிக்கையை அனுப்பியிருந்தும் வீண் காலதாமதம் செய்து வரும் மத்திய அரசினரின் போக்கை இம்மாநாடு கண்டிப்பதுடன், மாநிலப் புனரமைப்பு மசோதா சட்டமாக்கப்படுவதற்கு முன்னரே எல்லைக்கமிஷன் அமைக்கும் தீர்மானத்தையும் சேர்த்துச் சட்டமாக்க வேண்டுமென்றும் மத்திய சர்க்காரை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
(ஈ) புதுவை, காரைக்கால், பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்று இந்திய ஆசியலாரை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
- க. அன்பழகன் புதுவை சிவப்பிரகாசம்,
கலையழகன், சுப்பையா, வாணிதாசன்
தி.மு.க செயற்குழுக் கூட்டம் - 9.9.1956
தமிழர்களுக்குத் துரோகம்
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் - சித்தூர், பாலக்காடு ஆகிய தாலுக்காக்கலிலுள்ள தமிழ்ப் பகுதிகளையும், ஆந்திரச் சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப் பகுதிகளையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டுமென்றும்,சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டுமென்றும் பலவகைகளில் வற்புறுத்தி வந்தும், அவற்றிற்கான முயற்சி ஏதும் எடுக்காத சென்னை அரசியலாரின் போக்கை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்பிரச்சனையில் தமிழ் மக்களுக்குப் பெருந்துரோகம் விளைவித்துள்ள இந்திய அரசியலாரின் போக்கினையும் இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
பொதுக்குழு தீர்மானங்கள் - 30.12.1956
தமிழர்கள் வாழும் மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தி உண்ணா நோன்பு இருந்து உயிர்நீத்த விருதை மறத்தமிழர் சங்கரலிங்கனார் அவர்களும், இந்தியத் துணைக்கண்ட அரசியல் - பொருளாதாரப் பேரறிஞருள் ஒருவரும், தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு பெருந்தலைவரும், சமுதாயச் சீர்திருத்த பகுத்தறிவு வாதியும் ஆன டாக்டர் அம்பேத்கர் அவர்களும், இசைப் பெரும் புலவரும், தமிழகத்திற்கே தனிச்சிறப்பு அளித்துக்கொண்டிருக்கும் நாதசுர இசையுலகின் தனிப்பெரும் மன்னராய் விளங்கியவரும் ஆன திருவாவடுதுறை இராசரத்தினம் அவர்களும் மறைந்தது குறித்து இப்பொதுக்குழு மிக வருந்துவதோடு, அன்னார்களுடைய குடும்பத்தினருக்கும், உற்றார். உறவினர் நண்பர்களுக்கும் தன் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
தலைவர்
தமிழக எல்லைப்பிரச்சனை
தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, கொச்சி, சித்தூர், பாலக்காடு ஆகிய தாலுக்காக்களிலுள்ள தமிழ்ப்பகுதிகளையும், ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்திலுள்ள தமிழ்ப்பகுதிகளையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்றும், சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் என்றும் பல வகைகளிலும் வற்புறுத்தி வந்தும், அவற்றுக்கான முயற்சி ஏதும் எடுக்காத சென்னை அரசியலாரின் போக்கை வன்மையாகக் கண்டிப்பதுடன், இப்பிரச்சனையில் தமிழ் மக்களுக்குப் பெருந்துரோகம் விளைவித்துள்ள இந்திய அரசியலாரின் போக்கினையும் இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
1957 திமுகத் தேர்தல் அறிக்கையில்
தாய்மொழியில் போதனை
கல்வி பலகட்டங்களிலும் தாய்மொழியிலேயே அளிக்கப்படல் வேண்டும். கல்விப் பணிபுரியும் - ஆசிரியர்களின் அதிலும் ஆரம்ப ஆசிரியர்களின் நிலை உயர்த்தப்படாமல் கல்வியின் உயருமென்று எதிர்பார்ப்பது வெறும் பகற்கனவே ஆகும்.
இந்தித்திணிப்பு
கல்வித்துறையில் இந்தி மொழி வெறி புகுந்து அட்டகாசம் புரிந்து கொண்டிருக்கிறது. உலகத் தொடர்புக்கும் விஞ்ஞானத் தொழில் நுணுக்க வரலாற்றுப் பொருளாதார அறிவு பெறவும் ஆங்கிலம் இன்றியமையாததொன்று. ஆங்கில மொழி பயிற்றுவிப்பதில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்மொழி அறிவு மிகுந்து விளங்க அதற்கு உரிய இடம் ஒதுக்கப்படல் வேண்டும்.
மற்றபடி, இந்தித்திணிப்பு ஒரு சாராரின் அரசியல் ஆதிக்க வெறியினையே பிரதிபலிக்கிறது. அதற்கிடமளிப்பது பெருந்தீமையளிக்கும்.
திராவிட மக்களின் மொழி, கலை நாகரீகம் வரலாறு ஆகிய துறைகளில் ஆராய்ச்சி நடத்தி உண்மை நிலைகளைத் துவக்குவதற்கென்றே ஒரு தனித்திராவிட ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட வேண்டும்.
தமிழ்நாடு
தேவிகுளம், பீர்மேடு, திருத்தணி போன்ற தமிழ்ப்பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்படுவதற்கும், சென்னை மாநிலத்துக்குத் 'தமிழ்நாடு' எனப் பெயரிடப்படுவதற்கும் முயற்சிக்கப்படும். இருமொழி, மும்மொழி, மாநிலமைப்பு ஏற்பாட்டினை எதிர்த்துப் போராடும்.
- தலைமைக்கழகம் (திமுக)
'அறிவகம்' சென்னை - 13
10-2-1957
அறிஞர் அண்ணாவின் 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானமும் காங்கிரசின் நடவடிக்கையும்
அறிஞர் அண்ணா அவர்கள், 'இந்த மாநிலத்திற்குத் 'தமிழ்நாடு' என்று பெயரிடாததற்கு வருந்துகிறோம்' எனும் திருத்தத்தைத் தி.மு. கழகத்தினர் சார்பாகக் கொடுத்திருந்தார். மற்ற உறுப்பினர்கள் கொடுத்திருந்த தீர்மானங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அறிஞர் அண்ணா கொடுத்த தீர்மானத்தை அவர் வலியுறுத்தினார். வாக்கெடுப்புக்கு விடுமாறு கேட்டுக்கொண்டார்.
திராவிட முன்னேற்றக்கழகம் முதன் முதலாகச் சட்டமன்றத்தில் வற்புறுத்திய, வலியுறுத்திய தீர்மானம் தாயகமாம் தமிழகத்தைச் சென்னை மாகாணம் என்று அழைப்பதைத் 'தமிழ்நாடு' என்று மாற்றவேண்டும் என்பதுதான்! இதுமட்டுமன்றி இரண்டாவது பிரச்சனை கைத்தறி நெசவாளர்களுடைய பிரச்சனையைச் சட்டமன்றத்தில் அண்ணா தீர்மானமாக எடுத்துச்சென்றார்.
சென்னை மாகாண சட்டமன்றத்தில் 1957 மே 7 ஆம் தேதி திமுகழகம் கொடுத்த 'தமிழ்நாடு' பெயர் மாற்றத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. தமிழ்நாடு பெயர்மாற்றத் தீர்மானத்திற்கு ஆதரவாக 42 வாக்குகளும் தீர்மானத்திற்கு எதிராக 127 வாக்குகளும் கிடைத்தன. அறிஞர் அண்ணா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
வட ஆர்க்காடு மாவட்ட தி.மு.க. வின் 3-ஆவது மாநாடு
1957 ஆம் ஆண்டுச் செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் வட ஆர்க்காடு மாவட்ட தி.மு.க 3-ஆவது மாநாடு நடைபெற்றது. முதல்நாள் இந்தி எதிர்ப்பு மாநாடாகவும், இரண்டாவது நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றன.
இந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டில் ஒரேயொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானமாவது:
(அ) இந்தி அல்லாத மொழியினர் மீது - குறிப்பாகத் தென்னாட்டின் மீது தபால் - தந்தி, இரயில்வே புதிய நாணயமுறை, வானொலிசெய்தி போன்றவைகளில் நேர்முகமாகவும், மறைமுகமாகவும் இந்தியைத் திணித்து அரசியல் ஆதிக்கம் பெற எடுத்துக்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகளோடு கூடப் பிற மொழியினர் மீது அரசியல் ஆதிக்கம் செலுத்த இந்தி ஏகாதிபத்தியத்தை உருவாக்குவதற்குக் 'கேர் கமிட்டி' மூலம் மத்திய அரசாங்கமும், அதனை நடத்தும் காங்கிரசு கட்சியும் பயங்கரத் திட்டம் தீட்டியிருப்பது, தென்னாட்டுக்கு வரவிருக்கும் பேராபத்து என்பதை எடுத்துக் காட்டுவதுடன், அந்தப் பேராபத்தினின்றும் நம்நாடு தப்பி விடுதலை பெற எத்தகைய நியாயமான நடவடிக்கைகளில் ஈடுபடவும், எல்லாவிதமான தியாகங்கள் புரியவும், தமிழர்கள் இன்று முதலே தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமென்று இந்த மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(ஆ) மக்களின் கவனம் வேறு பக்கங்களில் ஈர்க்கப்பட்டிருந்த நேரத்தில் மக்களின் குறிக்கோளை எடுத்துக்காட்டத்தக்க முறையில் அல்லாமல், மக்களின் நேரடி வாக்குகளைப் பெறாமல், ஒரு கட்சியின் எதேச்சதிகார முறையுடன் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் ஆதரவில் ஒரே ஒரு வாக்கு முறையிலும் நிறைவேற்றப்பட்ட மொழி சம்பந்தமான விதி, மக்களின் உண்மையான குறிக்கோளைக் காட்டுவதாகாது என்பதாலும், அந்த விதி, இந்தியல்லாத பிற மொழியாளர்களை அடிமைப்படுத்தப் பயன்படும் ஆதிக்கக் கருவியாக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிட்டபடியாலும், உடனடியாக அரசியல் சட்டத்திலிருந்து மொழி சம்பத்தப்பட்ட அந்த விதி அகற்றப்பட வேண்டுமென்று இந்த மாநாடு மத்திய அரசை வற்புறுத்துகிறது.
(இ) தாய்மொழியில் ஆட்சித்துறை, நீதிமன்றத்துறை அலுவல்களை வெற்றிகரமாக்குவதுடன், பிற மாநிலங்களுடன், உலகுடமும் தொடர்பு கொள்ள ஆங்கிலத்தை இப்போது போலப் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்தை நீடிப்பது என்ற கருத்தினையும், இந்த மாநாடு ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்திக்கூறுகிறது.
(ஈ) இந்தி ஒழிப்பதற்காகத் தக்க திட்டம் தீட்டி, நடவடிக்கைகளை வகுத்திடப் பொதுச் செயலாளரை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
8. தமிழ்நாடு பெயரிடுதல்
தமிழ்மக்களின் தாயகமான தமிழகத்திற்குச் 'சென்னை ராஜ்யம்' என்று வழங்கும் பெயரை மாற்றித் 'தமிழ்நாடு' என்றே பெயரிட்டு வழங்க வேண்டுமென்று பல ஆண்டுக்காலமாகவே பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும், சென்னைச் சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்துங்க்கூட, ஆளும் கட்சியராகிய காங்கிரசார், பொதுமக்களின் விருப்பத்தை மதியாது மாறாக நடப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், மேலும் பொதுமக்களின் விருப்பத்தை அவமதித்துப் பொறுமையைச் சோதிப்பது பெரும்கேடு பயக்கும் என்று அரசியலார்க்கு இம்மாநாடு எச்சரிக்கை செய்கிறது.
முன்மொழிதல்: இரா. செழியன்
வழிமொழிதல்" சி.பி. சிற்றரசு, அரங்கண்ணல்
9. படாஸ்கர் தீர்ப்பு
படாஸ்கர் தீர்ப்பு மக்களுக்குத் தெளிவாக இதுவரை அறிவிக்கப்படாதிருக்கிற வருந்தத்தக்க நிலையில், ஓரளவு தெரிவிக்கப்பட்டு வரும் தகவல்களிலிருந்து தமிழ்நாட்டுக்குத் திருத்தணியும் அதை ஒட்டிய சில கிராமங்களும் கிடைக்க இருக்கிறது என்று அறிந்து இம்மாநாடு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
அதே போன்று, ஏற்கனவே தமிழ்நாட்டுடன் பல்வேறு வகையாலும் தொடர்பு கொண்டு இணைந்து வாழ்ந்து வரும் சில பகுதிகளிலும், வளமிக்க இடங்களும்,செல்வக் காடுகளும், நீர்ப்பாசன வசதிகளும், ஆரணியாறு தேக்கத் திட்டப் பகுதியும், படாஸ்கர் தீர்ப்புப்படி, அங்கு வாழும் மக்களுடைய விருப்பத்திற்கு அளிக்கப்பட இருப்பதறிந்து, இம்மாநாடு வருந்துகிறது. சென்னை அரசு, தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள இடங்களை இழந்து வருவது கண்டு வருந்துவதுடன், தமிழரின் உரிமைகளைப் பாதுகாத்திடத் தவறிவரும் சென்னை அரசினரின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறது.
படகாஸ்கர் அறிக்கையின் அடிப்படையில் திருத்தணிப் பகுதியைப் பெற்றுக்கொண்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து வேறு பகுதிகளை வெட்டாமலிருக்கும் முறையிலும், உரிமையை நிலைநாட்டத் தக்க வகையிலும், மக்களின் கருத்தை அறிந்து அதற்கேற்றபடி நடவடிக்கையில் ஈடுபடுமாறு சென்னை அரசினை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
முன்மொழிதல்: க. அன்பழகன்
வழிமொழிதல்: வி.பி. இராமன், டி.கே. பொன்னுவேலு
தி. மு. க 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி நடத்திய இந்திய எதிர்ப்பு நாள் தீர்மானங்கள்:
நேரடியாகவோ, மறைமுகமாகவோ திராவிட மக்களின் மீது இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது என்பது பகிரங்கமாகத் தென்னக மக்களை நிரந்தரமாக வடவரின் ஏகாதிபதியத்திற்குத் துணை நிற்கச் செய்வதாகும் என இக்கூட்டம் கருதுகிறது.
அரசியல் சட்டத்தின் ஆட்சி மொழிப்பிரிவு உடனடியாகத் நிறுத்தப்படவேண்டும். மக்களுடைய கவனமெல்லாம் பல்வேறு பிரச்சனைகளில் சிதறியிருந்த நிலையில் அரசியல் இயற்றப்பட்டதால், தென்னக மக்களின் பார்வையும், எதிரொலியும் அதில் இடம் பெறவில்லை என்பதை இக்கூட்டம் முன்வைக்கிறது.
வட்டார மொழிகள், அந்தந்த மாநிலங்களினுடைய பயன்பாட்டிருக்குப் பயன்படுத்த அரசு முன் வரவேண்டும். மேலும் நிர்வாகத்திற்கும், மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு, உலகத் தொடர்புகளுக்குமான பயன்பாட்டிற்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
நாஞ்சில் மாவட்ட தி.மு. க வின் 2 ஆவது மாநாடு - டிசம்பர் 27,28 1957 தீர்மானங்கள்
8. எல்லையை மீட்க முயற்சி தேவை
தமிழகத்துடன் இணைப்பட்ட திட்டத்தில் டெல்லி ஏகாதிபத்திய ஆட்சியரின் அதிகாரப் பலத்தாலும், தமிழ் மாநில அரசியலாரின் கவலையற்றப் விடுபட்டுப்போன பகுதிகளான நெய்யாற்றின் கரை, தேவிகுளம், பீர்மேடு சிற்றூர் வட்டங்களையும் செங்கோட்டை வட்டத்தின் பிற பகுதியையும் தமிழ்மாநிலத்துடன் முயற்சியில் தீவிரமாக இறங்குமாறு தமிழ்மாநில அரசினரை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
முன்மொழிதல்: தூத்துக்குடி ஜோசப்
வழிமொழிதல்: நாஞ்சில் அன்பெழில்
14. இந்தியை எதிர்த்து போராட வாரீர்!
இந்தியத் துணைக்கண்டத்தில் ஓர் பகுதியாக இன்று திராவிடம் பிணைப்பட்டிருப்பினும் திராவிடக் கூட்டாட்சி எனும் தனி அரசுக்காகப் பாடுபட்டு வரும் திராவிட முன்னேற்றக கழகம் இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி தேவை என்ற தத்துவத்தை மறுக்கிறது.
இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டும் என்ற போலித்துவத்தைக் காட்டி இந்தி ஆகவேண்டும் எனக்கூறிவரும் டெல்லி ஆதிக்கத்தின் போக்கை இம்மாநாடு வன்மையாகக்கண்டிக்கிறது.
இந்தி மொழியை ஆட்சிமொழியாக்கும் நோக்கத்தில் வானொலி, தபால்தந்தி, படக்காட்சி, நாணயமுறை, அரசாங்க அறிவிப்புகள், கல்வித்துறை போன்ற அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட எல்லா அமைப்புகளிலும் இந்தியை நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
திராவிடத்தில் அந்தந்தப் பகுதிகளில் தாய்மொழி ஆட்சி மொழியாகவும், ஆங்கிலம் தொடர்மொழியாகவும் இருந்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் ஏற்கனவே வலியுறுத்தியிருப்பதை மீண்டும் வலியுறுத்துகிறது.
1965 - ஆம் ஆண்டுக்குள் இந்தியை ஆட்சிமொழியாக்க முயற்சிக்கும் டெல்லி ஆட்சியாளரின் போக்கைக் கண்டித்துத் தென்னகத்திலுள்ள எல்லாக்கட்சிகளும், எல்லாத்தலைவர்களும், சென்னை அரசியலாரும் திட்ட வட்டமான கண்டனத்தைத் தெரிவித்திருந்தும் அவற்றையெல்லாம், அலட்சியப்படுத்தி, இந்தியைத் திணிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளைக் கண்டிப்பதுடன், இம்முயற்சி தொடர்ந்து நடைபெறுமேயானால் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக இறுதிவரைப் போராடத் தயாராகுமாறு தென்னக மக்களை இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.
முன்மொழிதல்: அண்ணா
வழிமொழிதல்: இரா. செழியன்
வி.பி. இராமன்
ஏ. கோவிந்தசாமி
பிப்ரவரி 15,16 1958 - சேலம் மாவட்ட தி.மு. க 3 - ஆவது மாநாட்டுத் தீர்மானங்கள்
6. இந்தியை ஒழிப்போம் வாரீர்!
இந்தியப் பேரரசில் பகுதியாக அடக்கி வைக்கப்பட்டுள்ள திராவிடம் விடுதலை பெற்று, திராவிடக் கூட்டாட்சி எனும் தனியரசாக மலரவேண்டும் எனப் பணியாற்றி வரும் திராவிட முன்னேற்றக்கழகம், இந்தியா முழுமைக்கும் ஒரு பொது மொழி தேவை என்ற தத்துவத்தின் அடிப்படையை மறுப்பதுடன், அந்தப் போலித்தனத்தைக் காரணமாகக் காட்டி இந்தியத் துணைக்கண்டம் முழுவதையும் இந்தி மொழி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர டெல்லி ஆதிக்கத்தினர் செய்யும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அரசாங்க நிர்வாகத்திற்குட்பட்ட பல்வேறு துறைகளிலும் குறிப்பாக வானொலி, செய்திப்படம், தபால் தந்தி, நாணயமுறை, ஆண்டுக்கணக்கு, அரசாங்க அறிவியல், கல்வித்துறை ஆகியவைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்தியைத் திணித்து வரும் முயற்சிகளை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
எந்த வகையிலேனும் இந்தியைத் தென்னாட்டின் மீது திணிக்கும் முயற்சியில் இந்தியப் பேரரசு ஈடுபடுமேயானால் அதை முறியடித்து, தென்னக மக்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவதற்குத் தயாராக இருக்கும்படி தென்னக மக்களை வேண்டிக்கேட்டுக்கொள்கிறது.
முன்: காஞ்சி கல்யாணசுந்தரம்
வழிமொழிதல்: என். எஸ். இளங்கோ, ஈ.வெ.கி. சம்பத்
தமிழ்நாடு எனப் பெயரிடத் தவறியது ஏன்? நாடாளுமன்றத்தில் தி. மு. க வின் குரல்
தி.மு. கழகச் சார்பில் ஈ.வெ.கி. சம்பத்தும் திருவண்ணாமலை இரா. தர்மலிங்கமும் நாடாளுமன்றத்தில் இடம் பெற்றதை முன்னர் நாம் குறிப்பிட்டு இருக்கின்றோம். 1958 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் இணைந்து கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றியதற்கு நன்றி தெரிவித்துப் பேசுகிறதுபோது இவர்கள் இருவரும் 16திருத்தங்களை முன் வைத்தனர். அதில் முதலாவது, சென்னை மாநிலத்தின் பெயரைத் 'தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் குறித்த தீர்மானம்.
1958 மார்ச் 8,9 - மதுரை மாவட்ட தி.மு.க. 3 - ஆவது மாநாட்டுத் தீர்மானங்கள்:
8. ஆதிக்க வெறிக்குக் கண்டனம்!
இந்தியா - பல மொழி - இன மக்களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்ற அதிகாரப்பூர்வமான உண்மையை ஒப்புக்கொள்ள மறுத்து இந்தியப் பேரரசு, ஜனநாயக விரோதமான முறையில் தென்னக மக்கள் மீது இந்தியைத் திணிக்கும் நடவடிக்கையில் மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் இறங்கியிருக்கும் ஆதிக்க வெறியை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏப்ரல் 26,27 பெங்களூரில் 1958 - கருநாடக மாநில தி.மு.க 2-ஆவது மாநில நாட்டின் தீர்மானங்கள்.
2. இந்தித் திணிப்புக்குக் கண்டனம்
இந்தியா,ஒரு 'துணைக்கண்டம்' என்பதை இன்னும் உணராமல், அது ஒரு 'நாடு' என்ற வாதத்தைத் கூறிக்கொண்டு, இந்தியாவின் பொதுமொழி என்ற பேரால் இந்தி மொழியைப் பிற மாநிலங்களின் மீது திணிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மொழியே ஆட்சி மொழியாகவும், ஆங்கிலமே தொடர்பு மொழியாகவும், தொடர்ந்து இருத்தல் வேண்டுமென இம்மாநாடு வற்புறுத்தித் தெரிவித்துக் கொள்கிறது.
5. பெயரை மாற்றுக! பகுதிகளை இணைக்க!
(அ) 'நியூ மைசூர்' என்று கருநாடகத்திற்குப் பெயர் வைத்திருப்பதைக் 'கருநாடகம்' என மாற்ற வேண்டுமென்று மத்திய சர்க்காரையும், அதற்காக ஆவன செய்ய வேண்டுமென இம்மாநில சர்க்காரையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
(ஆ) காசர்கோடு தாலூக்காவிலுள்ள கன்னட மொழி பேசப்படும் பகுதிகளைக் கேரளத்தோடு இணைத்திருப்பதைக் கண்டு இம்மாநாடு வருந்துவதோடு, உடனடியாக அப்பகுதிகளைக் கருநாடகப் பகுதியோடு இணைக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
(இ) மொழி - கலை - பண்பாட்டால், பொருளாதாரப் பிணைப்பால் தென்னகத்தோடு ஒன்றுபட்ட கருநாடகத்தை, ஐந்து மண்டலங்களின் ஒன்றான மேற்கு மண்டலத்தோடு சேர்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாகத் தென்மண்டலத்தோடு இணைக்க வேண்டுமென்று மத்திய அரசியலாரை இம்மாநாடு வற்புறுத்துகிறது.
முன்: கி. சோழன் (அக்கிப்பேட்டை)
வழி: சு. கண்ணன்
மே 10,11 1958 தேதிகளில் தஞ்சை மாவட்டத்துத் திராவிட முன்னேற்றக் கழக மாநாட்டுத் தீர்மானங்கள்:
1. இந்தியைத் திணிக்காதே!
இந்தியா, பல்வேறு மொழி கலாச்சாரம் இன வேறுபாடுகளைக் கொண்ட ஒரு துணைக்கண்டம் என்பதைப் பலமுறை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் காட்டியிருப்பினும், அந்த உயரிய எண்ணத்தை மதித்து நடக்கும் மனவளமற்ற இந்திய அரசியலார், இந்தி மொழியைப் பொதுமொழி என்ற பேரால் பிற மாநிலங்களின் மீது குறிப்பாகத் தமிழகத்தின் மீது நேரிடையாகவும் மறைமுகமாகவும் திணிப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்திமொழி ஆதிக்கத்திற்குத் தென்னகம் என்றைக்கும் அடிமைப்பட்டிருக்காது என்பதை இம்மாநாடு, இந்தியப் பேரரசுக்கு எச்சரிக்கை செய்து தெரிவித்துக்கொள்கிறது.
முன்: சி. வி. எம். அண்ணாமலை,
வழி: கரூர் குழந்தைவேல், என். வி. என். சோமு
ஜூன் 7,8 1958 தேதிகளில் நடந்த தென்னார்க்காடு மாவட்டத் தி.மு.க வின் 3- ஆவது மாநாட்டுத் தீர்மானங்கள்:
2. அநீதியை முறியடிப்போம்
இந்தியா, பல்வேறு மொழி - கலாச்சாரம் - இனவேறுபாடுகளைக் கொண்ட மக்களைக் கொண்ட ஓர் துணைக்கண்டம் என்பதைப் பலமுறை விளக்கியும்கூட, இந்தி ஏகாதிபத்திய வெறியர்களின் போக்கினைக் கண்டிப்பதைப் போன்று பேசிவரும் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள்,இரு தினங்களுக்கு முன், எவ்விதத்திலும் இந்தியைக் கட்டாயமாகத் திணிப்போம் என்று கூறியிருப்பது கண்டு இம்மாநாடு மிகவும் வருந்துவதுடன், இந்தியைக் தென்னகத்தில் எவ்வித கட்டாய முறைகளாலும் அல்லது சக்தியாலும் திணித்துவிட முடியாது - அந்த அநீதியைத் திராவிட முன்னேற்றக் கழகம் முறியடிக்கும் என்ற உறுதிப்பாட்டினை இந்திய அரசியலாருக்கு இம்மாநாடு அறிவிக்கிறது.
தலைவர்
ஜூலை 5 1958 கோவை மாவட்ட தி.மு. க 3 - வது மாநாட்டுத் தீர்மானங்கள்:
7. இந்தித்திணிப்பு நீடித்தால்.!
இந்தியைக் கட்டாயமாகத் திணிப்பதில்லை என்று கூறிக் கொண்டே வானொலி, அஞ்சல் போன்ற துறைகளில், இந்தியை மறைமுகமாகத் திணித்துவரும் அரசியலாரின் போக்கை இம்மாநாடு வன்மையாகக் கண்டிப்பதுடன், தொடர்ந்து இங்ஙனம் இந்தித் திணிப்பு நீடித்தால், தென்னகம் பொறுத்துக் கொண்டிருக்காது என்றும் தெரிகின்றது.
முன்: கோவை செழியன்
வழி: கு. முத்துரத்தினம் - திருப்பூர்
இவ்வாறாகத் தி.மு. கழகம் இயற்றிய தீர்மானங்கள் எப்படித் தமிழர் உரிமை சார்ந்த கொள்கைகளைப் பறைசாற்றியது என்பதையும், திமுக அந்தக் கொள்கைகளை நிறைவேற்றக் காட்டிய முனைப்பையும் நாம் அறியலாம்.
ஆதாரம்: திமுக வரலாறு பாகம் 1,2,3. க. திருநாவுக்கரசு
No comments:
Post a Comment