தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு - அருண்குமார் வீரப்பன்
டொங் டொங் என்ற சத்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருக்கும். கல்லும் உளியும் மோதிக் கொள்ளும் ஓசை, இசையென மாறி என்னை மகிழ்வித்து கொண்டே இருந்தது. இருக்காதா பின்னே! இமயம் முதல் குமரி வரை பரவி இருந்த என் மக்கள் நீண்ட நெடிய போருக்கு பிறகு தென்னாட்டில் மட்டும் விரவி வாழ தொடங்கினர். என்னை கும்பிடுபவர்கள் அநாகரீகமானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். நான் நாகரீகமற்றவன் என்று மக்களிடையே பரப்பப்பட்டேன். இருந்தும் என் மக்கள் என்னை தொழுவதையோ, என் அடி பணிவதையோ விடவில்லை.
அறுபத்து மூன்று நாயன்மார்களும் அமுத தமிழில் என்னை பற்றி பாட்டியற்றி மக்களிடையே என்னை பற்றி பாடி கொண்டு தான் இருந்தார்கள். திருவாசகமும் திருத்தொண்ட தொகையும் பாரெங்கும் பாடப்பட்டது. ஓசையில் இருந்து தோன்றிய எனக்கு, தமிழோசையே தாலாட்டாக பாடப்பட்டது. என் செவி கேளும் தமிழ், என் சிந்தையில் அவர்களின் அன்பையும் என் மீதான பக்தியையும் எடுத்து கூறிக்கொண்டே இருந்தது.
இன்று என் மக்களின் பொற்காலமான சோழர்களின் காலம். எனக்கென பெரும் ஆலயத்தை எழுப்பும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் ஏற்படுத்திய ஓசைகள் தான் விடாமல் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.
“அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்”
என்று காலையில் பாடி விட்டு வேலையை தொடங்குபவர்கள் இரவில் எந்த நேரத்தில் முடிப்பார்கள் என்பது, நாளுக்கு நாள் வேறுபட்டு கொண்டிருந்தது.
அருள்மொழியின் திண்ணிய மேற்பார்வையில் தொய்வின்றி வேலை நடந்து கொண்டிருந்தது. மாபெரும் கோவில். இதுவரை யாரும் இப்படி கட்டியதில்லை என்ற பெருமையை தன்னகத்தே கொண்டு மேலெழும்பி கொண்டிருந்தது. பார்க்கப் பார்க்க எனக்கும் பூரிப்பும் கர்வமுமாக இருந்தது.
எல்லா வேலையும் முடிந்து விட்டது. எத்தனை எத்தனை சிற்பங்கள் எத்தனை எத்தனை கல்வெட்டுகள். என் பூதாகரணங்கள் அனைத்திற்கும் என் ஆலயத்தில் இடம் அளித்திருந்தனர். குடமுழுக்கு முடிவு செய்யப்பட்டது.
அதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த எல்லாம், அதன் பிறகு தான் தன்னால் மாறியது. என் மக்கள் இரவு பகலாக கண் துஞ்சாது இமை மூடாது கட்டிய கோவிலில் சமஸ்கிருதத்தை தூக்கி கொண்டு சிலர் நுழைந்து விட்டனர். அழகு தமிழுக்கு அனுமதி இல்லை என மறுத்து விட்டு புரியாத மொழியில், புரியாத மந்திரங்களில் என்னை அர்ச்சிக்க தொடங்கினர். என் மக்களை வாசலோடு நிறுத்தி விட்டு, இவர்கள் என் அருகில் வந்து நின்று ஏதேதோ செய்து கொண்டிருந்தனர்.
ஆனால் அது கூட புரியாத அளவுக்கு இவர்களின் அறிவுகளில் அறிவுக்கொப்பாத விசயங்கள் திணிக்கப்பட்டிருந்தன. இனி என்ன செய்வது என்று முடிவெடுத்து கைலாய மலையில் சென்று அமர்ந்தேன். தினமும் வந்து வந்து பார்த்து செல்வேன். எனக்கு தாலாட்டு மொழியான தமிழுக்கு அனுமதி இல்லா இடத்தில் எனக்கென்ன வேலை என்று என் மக்களை மட்டும் பார்த்து விட்டு சென்று விடுவேன்.
ஆயிரம் வருடங்களுக்கு பிறகு பல குடமுழுக்குகளை கண்டு விட்டேன். எதிலும் மாற்றம் ஏற்படவில்லை. இப்போது மீண்டும் குடமுழுக்கு என்றார்கள். அரைகுறை மனதோடு தான் சென்றேன். வாசலிலேயே நின்று கவனித்து விட்டு திரும்பிச் செல்லலாம் என்றெண்ணிய போது உள்ளே இருந்து,
“அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ”
என்று மீண்டும் என் காதுகளில் அமுதத்தமிழ் வந்து அரியணை ஏறியது. உள்ளே சென்று பார்த்த போது என் மக்களில் ஒருவன் என்னருகில் நின்று எனக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தான். பாய்ந்து சென்று என் ஆசனத்தில் அமர்ந்தேன். அவன் ஊற்றிய திருமுழுக்கு நீர் என் உச்சியில் விழ உச்சியும் உள்ளமும் ஒருசேர குளிர்ந்தேன்.
அவன் வாய் விடாமல் ஒலித்து கொண்டே இருந்தது.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி!
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் என் அகமும் புறமும் குளிர்ந்தது. தமிழோசை தாலாட்டாக மீண்டும் ஒலித்தது.
- அருண்குமார் வீரப்பன்
No comments:
Post a Comment