தமிழ் நாடு: பெயர் மாற்றத் தீர்மானம்
நாள்: 18.07.1967
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை: சட்டமன்ற தலைவர் அவர்களே; இந்த மன்றத்தின் எல்லாக் கட்சியினரால் நல்லஅளவுக்கு ஒப்புக் கொள்ளப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றஇருக்கின்ற தமிழ்நாடு என்று பெயரிடுகின்ற இந்த நிகழ்ச்சி, இந்த அவையிலே இன்றைய தினம் உறுப்பினர்களாகஇருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ் நாளிலும் மிகுந்தமகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். இந்தத் திருநாளைக் காண்பதற்குப் பன்னெடுங்காலம் காத்துக் கொண்டிருக்க நேரிட்டதே என்பதுதான் மகிழ்ச்சியின் இடையே நமக்கு வருகின்ற ஒரு துயரமே தவிர, நெடுங்காலத்திற்கு முன்னாலே நடைபெற்றிருக்க வேண்டிய ஒருநிகழ்ச்சியை மிகுந்த காலம் தாழ்த்தி இன்றைய தினம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என்றாலும், இதிலே எல்லாக் கட்சியினரும் ஒன்றுபட்டு இந்தத் தீர்மானத்திற்கு அவர்கள் தங்களுடைய ஆதரவைத் தந்திருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும்.
நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு. கருத்திருமன்அவர்கள்கூட இந்தத் தீர்மானத்தை ஆதரித்தார்களே தவிரவேறில்லை. அதிலே சில ஆலோசனைகள் சொல்லியிருக்கிறோம்
என்று சொல்லியிருப்பது, எதிர்க்கட்சியில் இருப்பவர்களுடையகடமை என்ற வகையில் ஆலோசனைகள் சொல்ல வேண்டும்என்ற முறையிலேயே தவிர - எதிர்க்கிறார்கள் என்று இல்லை.
ஆகையினால் இந்தத் தீர்மானம் எல்லோருடைய ஆதரவையும்பெற்று இந்தியப் பேரரசுக்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.இந்தியப் பேரரசிலே மிகுந்த செல்வாக்கோடு இருக்கின்ற
இரண்டொரு தலைவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்புக் கிடைத்தபோது இதைப்பற்றி அவர்கள் சொல்லும்போது தமிழகச் சட்டமன்றத்தில் இது நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படுமானால் இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்துவதிலே தயக்கம் இருக்காது என்பதனை முன்கூட்டியே என்னிடத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அங்குள்ள பல
தலைவர்கள் அரசை நடத்துகிறவர்கள்கூட ஏற்றுக்கொள்கிறார்கள் என்று எண்ணத்தக்க விதத்தில் பத்துநாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் இந்த மாநிலத்தை பற்றிப்பேச வேண்டிய வாய்ப்புக் கிடைத்த நேரத்தில் அங்குள்ளஉள்துறை அமைச்சர் திரு சவான் அவர்கள் மெட்றாஸ் ஸ்டேட்என்று பழக்கப்பட்டவர் - மிகுந்த அக்கறையோடும், மிகுந்தகவனத்தோடும் 'TAMILNAD' என்றுதான் பேசியிருக்கிறார். ஆகஇதை அவர்களும் ஏற்றுக்கொண்டு அரசியல் சட்டத்தைத்திருத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை இன்றைய தினம் இந்தஅவையிலே நாம் பெற்றிருக்கிறோம்.
மதிப்புமிக்க திரு ம.பொ.சி. அவர்கள், இதிலே மிகுந்த மனஎழுச்சிப் பெற்றது இயற்கையானதாகும். அவர்கள் பலஆண்டுகளாகத் தமிழ்நாடு என்ற பெயர் இந்த நாட்டுக்கு
இடப்பட வேண்டுமென்பதில் மிகுந்த அக்கறையோடுபாடுபட்டவர்கள். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும்,திராவிட முன்னேற்றக் கழகம் என்பதிலே “திராவிட” என்பதை
இணைத்துக்கொண்டிருப்பதாலே தமிழ் நாடு என்பதிலேஅக்கறை இல்லாமல் போய்விடுமோ என்று சிலர் எண்ணியநேரத்தில் “தமிழ்நாடு' என்று பெயரிடுதல் வேண்டுமென்று
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த நாங்கள் பலஆண்டுகளாக வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களும், மற்றவர்களும் கொண்டுவருகிறார்களே என்பதனாலே முன்னாலே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறதாஎன்று கேட்டிருந்தாலும் இன்றைய தினம் அவர்களும் 'தமிழ்நாடு' என்று சொல்லிக் கொள்வதில் மிகுந்த பெருமைப்படுகிறார்கள். ஆகையால் இந்தத் தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்றுகருதுகிறேன். அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அதுஇன்று கழகத்திற்கு வெற்றியல்ல;
தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல; மற்ற கட்சிகளுக்குவெற்றியல்ல - இது தமிழுக்கு வெற்றி; தமிழருக்கு வெற்றி; தமிழ்வரலாற்றுக்கு வெற்றி; தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில்அனைவரும் இந்த வெற்றியிலே பங்கு கொள்ளவேண்டும்."தமிழ்நாடு" என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில்உள்ளவர்கள் அறிந்து கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பு இருந்த திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொருநாட்டுக்கும் இடையே செய்து கொள்ளக்கூடிய ஒப்பந்தம்எல்லாம் திருத்தி எழுதப்பட வேண்டிவரும். அதனாலே சிக்கல்கள்நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள்என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக
சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக்கவனப்படுத்துவதில்லை. மதிப்பிற்குரிய நண்பர்பாலசுப்பிரமணியம் அவர்கள் எடுத்துச்சொன்னபடி 'கோல்டுகோஸ்ட்' என்பது 'கனா'-ஆகிவிட்டது;
அதனால் எந்தவிதமான சர்வதேச சிக்கல்களும்ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாடு தனிநாடாகியிருந்தபெயரைவிடவில்லை; இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்துகொண்டிருந்த பெயரை இடுவதால் இதிலே சர்வதேச சிக்கல்கள்எழுவதற்கு நியாயம் இல்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தைஅனைவரும் தங்கள் தங்கள் கட்சியின் சார்பில் ஆதரிக்கவேண்டுமென்பதை ஒரு கடமை உணர்ச்சியாகக்கொண்டதற்காகக் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.
நண்பர் ஆதிமூலம் அவர்கள், "தமிழ்நாடு என்ற பெயர்மாற்றத்திற்காகத் தன்னைத்தானே தியாகம் செய்து கொண்டசங்கரலிங்கனார் அவர்களுக்கு நினைவுச் சின்னம்எழுப்பவேண்டும்" என்று குறிப்பிட்டார்கள். அதையும், அத்தனைபேரும் உள்ளத்திலே, கருத்திலே கொள்ளுவார்கள் என்றுநிச்சயமாக நம்புகிறேன். அவருடைய எண்ணங்கள் இன்றையதினம் ஈடேறத்தக்க நிலை கிடைத்திருப்பதும், அந்த நிலையைஉருவாக்குவதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றிருக்கிறோம்என்பதும் நமக்கெல்லாம், நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும். நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடையஇல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்கின்ற நேரத்தில், பெருமையோடு சொல்லிக்கொள்ள என்று இருக்கிறார்கள். “என்னுடைய பாட்டனார் காலத்திலேதான் நம்முடையநாட்டுக்குத் தமிழ்நாடு' என்ற பெயர் இடப்பட்டது; எதிர்க்கட்சியில் உட்கார்ந்து கொண்டிருந்த என்னுடைய பாட்டனார்கருத்திருமன் இதை ஆதரித்தார் திரு. கருத்திருமன் பேரப்பிள்ளைகளுக்கும், எங்களுடைய பேரப் பிள்ளைகளும்எதிர்காலத்திலே பேசக்கூடிய நல்ல நிலைமைகளை எல்லாம்அவர்கள் எண்ணிப் பார்ப்பார்களேயானால் நிச்சயமாக அந்தஆலோசனை கூடச் சொல்லாமல் இதை ஏற்றுக்கொள்வார்கள்என்பதில் ஒரு துளியும் ஐயப்பாடு கொள்ளவில்லை ஆகையினால்இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றிக்கொடுக்க வேண்டுமென்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு ஒருமனதாகநிறைவேற்றப்பட்டது.
சட்டமன்ற தலைவர் அவர்களே, வரலாற்றுச் சிறப்புமிக்கதீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில் "தமிழ்நாடு'என்று நான் சொன்னதும் “வாழ்க" என்று அவை உறுப்பினர்கள்சொல்லுவதற்குத் தங்களுடைய அனுமதியைக் கோருகிறேன்
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை: தமிழ்நாடு!
உறுப்பினர்கள்: வாழ்க!!
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை: தமிழ்நாடு!
உறுப்பினர்கள்: வாழ்க!!
மாண்புமிகு திரு சி. என். அண்ணாதுரை: தமிழ்நாடு!
உறுப்பினர்கள்: வாழ்க!!
No comments:
Post a Comment